என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து மளிகைக்கடைகாரர் வீட்டில் தங்க நாணயங்களை திருடி சென்ற மர்ம நபர்கள்
மளிகை வியாபாி வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா? உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள சவுண்டப்பூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 66). இவர் அந்த பகுதியில் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மளிகை கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு உங்கள் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே கடையில் சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.
இதையடுத்து அவர்கள் மளிகை கடையில் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனை செய்தனர். அப்போது பீரோவில் சோதனை செய்து அதில் இருந்த துணிகளை களைத்து பார்த்தனர். ஆனால் அங்கும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த 2 பேர் அங்கு இருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் சரஸ்வதியின் மகள் தேவகி தாய் வீட்டுக்கு வந்து தான் கொடுத்து வைத்திருந்த 4 பவுன் மதிப்புள்ள தங்க நாணயங்களை தருமாறு கேட்டார். இதையடுத்து சரஸ்வதி பீரோவை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்து இருந்த 4 தங்க நாணயங்கள் மாயமானதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் மற்ற இடங்களில் தேடி பார்த்தும் தங்க நாணயங்கள் கிடைக்கவில்லை. வீட்டில் சோதனை செய்ய வந்த 2 மர்ம நபர்கள் தங்க நாணயங்களை திருடி சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.
இதுகுறித்து சரஸ்வதி கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் 2 பேர் எங்கள் மளிகை கடைக்கு வந்தனர். அவர்கள் தங்களை அதிகாரிகள் என கூறி கொண்டு சோதனை செய்ய வேண்டும் என கூறி வீடு மற்றும் மளிகை கடையில் சோதனை செய்து விட்டு சென்றனர். இந்த நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நாணயங்கள் காணவில்லை.
எனவே அவர்கள் அந்த தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்று இருக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்க நாணயங்களை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






