என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு-வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு-வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டது.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் 21  பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு  விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஈரோட்டில் இன்று கருப்பணன் வீதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலை விநியோகிக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். 

    பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இன்று தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை  7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர்களின் ரேஷன் கார்டு, ஆயிரத்து 381 என 7 லட்சத்து, 41 ஆயிரத்து, 153 கார்டுதாரர்களுக்கு, 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு 1,159 ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

    இத்துடன் இலவச வேட்டி-சேலைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 7 கோடியே 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று பெண்கள்  ஆர்வத்துடன் வந்திருந்தனர். துணிப்பை உடன் அவர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி-சேலைகள் விநியோகிக்கப்பட்டன. 

    ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் கோடு  போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுச்சென்றனர். வரும் 31-ந் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது.

    நாளொன்றுக்கு டோக்கன் அடிப்படையில் 150 முதல் 200 பேர் வரை விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 1159  ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் பணி தொடங்கியது.


    ஈரோடு கீழ்பவானி பாசன பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி விவசாயிகள் நெல்லை கொட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு கீழ்பவானி பாசன பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி விவசாயிகள் நெல்லை கொட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்ட பிரதான பாசன பகுதியான கீழ்பவானி கால்வாய் பாசனப்பகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

    தற்போது நெல் அறுவடைப்பணி தொடங்கி உள்ளது. அறுவடை செய்த நெல்லை வியாபாரிகள் கிலோ 14 முதல் 15 ரூபாய்க்குள் மட்டுமே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்வதாலும், கடும் பனியால் நெல்லை வைத்திருக்கவும் முடியவில்லை. 

    ஆனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கிலோவுக்கு 20.60 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்க வாய்ப்பாகும்.

    நேற்று வரை அரசின் நெல் கொள்முதல் மையங்கள் கீழ்பவானி பாசனப்பகுதியில் திறக்கப்படாததால், விவசாயிகளிடம் நெல்லை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    கடந்தாண்டுகளில் டிசம்பர் மாதமே கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி முதல் வாரமாகியும் மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.

    விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல் கொள்முதல் மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் திறக்காவிட்டால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொட்டி அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். 

    அதன்படி  நடப்பாண்டு ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் நடந்தது. 

    இதில், ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை பகுதியில் என மொத்தம் 666 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது.

    ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா வாகனங்களை ஆய்வு செய்தார். வாகன ங்களில் தரமான டயர் மாட்டப்பட்டுள்ளதா? டிரைவர் லைசன்ஸ் சரியாக உள்ளதா? ஆர்.சி.புக் முறையாக உள்ளதா? வாகனங்களில் மருத்துவ  உபகரணங்கள் உள்ளதா? ஜி.பி.எஸ் கருவி சரியாக செயல்படுகிறதா? வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா? அவசரகால வழிகள் முறையான வேலை செய்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து சான்றிதழ் வழங்கப்பட்டது. 

    குருபரகுண்டி கல்குவாரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 10 நாட்கள் முன்பு கூண்டு வைத்தனர். இதனையடுத்து இன்று காலை வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட ஜீர்கள்ளி வனச்சரத்தில் ஏராளமான புலி, சிறுத்தை, மான், யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.

    இந்நிலையில் புலி, சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக அருள்வாடி, சொத்தன்புரம், குருபர குண்டி பகுதியில் கடந்த 1 வருடமாக ஆடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

    இந்நிலையில் குருபரகுண்டி கல்குவாரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 10 நாட்கள் முன்பு கூண்டு வைத்தனர். இதனையடுத்து இன்று காலை வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தை 4 வயதுள்ள ஆண் சிறுத்தை என்றும், பிடிபட்ட சிறுத்தை அதிகாரிகள் ஆலோசனைபடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கடந்த 1 வருடமாக பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு போக்குகாட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஈரோட்டில் ரெயில்வே பெண் போலீசை பலாத்காரம் செய்ய முன்றது தொடர்பாக சேலம் டி.எஸ்.பி.யின் ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). இவர் சேலம் ரூரல் டி.எஸ்.பி. ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வேயில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் அதே குடியிருப்பு பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 29 வயதான பெண் ஒருவர் ரெயில்வே போலீசில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குழந்தை இல்லை.

    பெண் போலீசிடம் செல்வன் நட்பாக பழகி வந்தார். சம்பவத்தன்று செல்வன் அந்த பெண் போலீஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் செல்வன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் கூலி தொழிலாளியின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கடம்பூர் மலை குன்ற கிராம பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆம்புலன்ஸ் குன்றி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றபோது பரமேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமானது. நிலைமையை புரிந்த கொண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பரமேஸ்வரிக்கு வாகனத்திலேயே பிரசவம் பார்த்தனர். இதில் பரமேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் - சேயும் கடம்பூர் அரசு துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இக்கட்டான சூழ்நிலையில் சமயோசிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விஜய் மற்றும் வாகன ஓட்டுநர் அரப்புலி சாமி ஆகியோரை கிராம மக்கள் பாராட்டினர்.

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது
     அந்தியூர்:

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது.

    திருமணம் மற்றும் விசேஷங்களில் மங்கள பொருளாக வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் வெற்றிலை விற்பனை அதிக அளவில் இருக்கும். இதனால் விலையும் உயர்ந்து இருக்கும்.
     
    ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வெற்றிலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்தியூர் பகுதியில் தவிட்டுப்பாளையம், புதுக்காடு, காந்திநகர், கள்ளிமடைக்குட்டை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு சாகுபடியாகும் வெற்றிலை விற்பனைக்காக வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்தியூர் சந்தைக்கு கொண்டு வரப்படும். இந்த வெற்றிலையை ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள்.

    தற்போது அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது.

    இதனால் விலையும் உயர்ந்து விட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டின் (கவலி) ரூ.15 முதல் 25 வரை விற்பனையானது. தற்போது ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. 

    இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறும்போது, திருமணம் மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் மட்டுமே வெற்றிலை அதிகவிலைக்கு விற்கப்படும். மற்ற நேரங்களில் விலை குறைவாகத்தான் விற்கப்படும். 

    தற்போது பனியின் காரணமாக வெற்றிலை விளைச்சல் குறைந்து விட்டதால் விலை உயர்ந்து விட்டது என்றனர்.

    இன்று திங்கட்கிழமை அந்தியூர் சந்தைக்கு குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வெற்றிலை கொண்டு வரப்பட்டது.

    ஈரோட்டில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்ததால் பாரம் தாங்காமல் சாய்ந்து வந்த பஸ் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
     ஈரோடு:

    ஈரோடு பஸ்நிலையத்தில்  திங்கட்கிழமை என்பதால்  இன்று காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியது.

    பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டுசென்ற அனைத்து பஸ்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. ஒரு சில பஸ்களில் மாணவர்கள் படிகளில் தொங்கி கொண்டு சென்றனர்.

    இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு டவுண் பஸ்நிலையத்தில் இருந்து 11-ம் நெம்பர் டவுண் பஸ் சென்னிமலை நோக்கி புறப்பட்டது. 

    பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள்,  வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஏறினர். பஸ்சில் கட்டுக்கடங்காத வகையில் பயணிகள் கூட்டம் இருந்ததால் டிரைவர் மெதுவாக பஸ்சை ஓட்டி சென்றார். 

    அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் ஒருபக்கமாக சாய்ந்த படி சென்றது.பஸ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க ஆக்ஷில் கட்டானது. 

    இதையடுத்து பஸ் ஒரு புறமாக கவிழ்வது போல் சென்றது. இதையடுத்து டிரைவர் சாமர்த்தியதாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். 

    பின்னர் பயணிகள் அனைவரும் வேறு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.   இதையடுத்து பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக பன்னீர்செல்வம் பார்க் அருகே பரபரப்பாக காணப்பட்டது.
    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு கரும்பு உள்பட 21 வகையான பொங்கல் தொகுப்பு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் ரேஷன் கார்டுகள் 1381 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21  பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

    இதற்காக கடந்த சில நாட்களாக ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகித்து வருகின்றனர். அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு கட்டுகளும் வந்துள்ளது. 

    கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடாத வகையில் டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன. 

    வரும் 31-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
     ஈரோடு:

    கொரோனா பரவலை குறைக்கும் வகையில்  15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இன்று தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்திலும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு  தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   

    ஈரோடு மாவட்டத்தில் 23,77,315 மக்கள் வசிக்கின்றனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9,100 பேர் உள்ளனர். இதுவரை 15 லட்சத்து 88 ஆயிரத்து 357 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். 

    இரண்டாம் தவணை தடுப்பூசியை 11 லட்சத்து 31 ஆயிரத்து 802 பேர் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 126 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு கலைமகள் மேல்நிலைப்பள்ளி 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  தலைமை தாங்கினார்.  சுகாதாரபணிகள் இணைஇயக்குனர்  சோமசுந்தரம், நகர் நல அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார். 

    அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் முதல் தடுப்பூசியை 87.8 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 67.56 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 

    தடுப்பூசிகள் அதிகம் செலுத்தி கொண்டதில் ஈரோடு மாவட்டமும் ஒன்று. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 

    இதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி  கொள்ளாதவர்களும் செலுத்திக் கொள்ளவேண்டும். 15 வயது முதல் 18 வயது வரை  சிறுவர்களுக்கு இன்று முதற்கட்டமாக 92 பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. 

    இதற்காக 452 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 60 வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.  இன்னும் 5 நாட்களுக்குள் 15 முதல் 18 வயதுடைய அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். 

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 3,500  படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. நமது மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மொடக்குறிச்சி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். வாலிபர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பசலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது75).  இவர்  கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலையோரமாக நடந்து சென்றார். 

    அப்போது கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. 

    இதில் மூதாட்டி முத்தம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த வேல்முருகனுக்கும் காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்தார். வேல்முருகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் முழுவதுமாக முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

    இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. இது மற்ற வைரசை விட பரவும் தன்மை அதிகம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதற்கு ஏற்றது போல் ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து மாவட்ட கலெக்டர்களும், சுகாதாரத்துறையினரும் உஷார்படுத்தப்பட்டு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் அவர்களுக்கு இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் பாதிப்பு இல்லை என முடிவு வந்தால் தான் அவர்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வருபவர்கள் அவரவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு ஒரு வாரம் கழித்து மீண்டும் இரண்டாம் கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு இல்லை என்று முடிவு வருபவர்கள் மட்டுமே வெளியே நடமாட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் நேற்று வரை 360 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

    இதில் 324 பேருக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும் 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டாவது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    ×