search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வாகனங்கள் ஆய்வு"

    • ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும்.
    • மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

    ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் சரி செய்யாமல் பள்ளி மாணவ- மாணவிகளை வாகனத்தில் அழைத்து சென்றால் நிரந்தரமாக அந்த வாகனத்தை இயக்க தடைவிதிக்கப்படும்.இந்த நிலையில் நடப்பு ஆண்டு போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 10 வாகனங்களும், சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 10 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதேபோல் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 6 வாகனங்களும், மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த 50 வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் குறைபாட்டை சீர் செய்த பிறகு ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதி பெற்ற பிறகே இயக்க வேண்டும். அதுபோல் நடப்பு ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தாத 147 வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகள் மீறி வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிரைவர்கள் மற்றும் பள்ளி வாகனத்தில் வரும் உதவியாளர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். கண்காணிப்பு காமிரா பொருத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • 250 வாகனங்கள் பரிேசாதனை.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டையில் உள்ள 250 தனியார் பள்ளி வாகனங்களை வருடாந்திர தணிக்கை ஆய்வு இன்று ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் தேசிய நெஞ்சாலையொட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த ஆய்விற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-

    கடந்த ஆண்டு பள்ளி வாகனங்கள் விபத்து ஏதுமில்லை. அதேபோன்று இந்த ஆண்டும் ஓட்டுனர்கள் கண்ணும் கருத்துமாக விபத்துக்கள் ஏதுமின்றி வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவர்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வபோது கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளுங்கள், வாகனங்கள் இயக்கும் போது செல்போன் பயன்படுத்த கூடாது.

    ஆய்வு

    டிரைவர் ஆகிய உங்களை நம்பி தான் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புகின்றனர். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த வருடாந்திர ஆய்வில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ஸ்டேயரிங், வாகன படிகட்டு, அவசர வழி, ஜன்னல் உள்ளிட்ட பல்வேறு நிலை குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்குட்டவேல் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பள்ளிகளில் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
    • வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    கோவை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் அதாவது பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பள்ளி வாகனங்கள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்யப்பட்ட உள்ளன.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளை அழைத்து செல்லும் பஸ்கள், வேன்கள் என மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா?,

    மேலும் வாகனங்களில் இருக்கைகள் உள்ளிட்டவை முறையாக இடம்பெற்று ள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? எனவும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வாகன ஆய்வு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    ×