197 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்க தடை

ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும்.மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
197 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்க தடை
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

ஆய்வின்போது வாகனங்களில் குறைபாடு இருப்பின் இயக்க தடைவிதித்து அவற்றை சரிய செய்ய கால அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் சரி செய்யாமல் பள்ளி மாணவ- மாணவிகளை வாகனத்தில் அழைத்து சென்றால் நிரந்தரமாக அந்த வாகனத்தை இயக்க தடைவிதிக்கப்படும்.இந்த நிலையில் நடப்பு ஆண்டு போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும், சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 10 வாகனங்களும், சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 10 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 6 வாகனங்களும், மேட்டூர் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 12 வாகனங்களும் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த 50 வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் குறைபாட்டை சீர் செய்த பிறகு ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதி பெற்ற பிறகே இயக்க வேண்டும். அதுபோல் நடப்பு ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தாத 147 வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகள் மீறி வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிரைவர்கள் மற்றும் பள்ளி வாகனத்தில் வரும் உதவியாளர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். கண்காணிப்பு காமிரா பொருத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com