என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை  அடுத்து தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
     
    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று  முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை  ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை.

    எனினும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அதன்படி இரவு நேர பஸ் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் பஸ் பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இதேபோல் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

    மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிக ளுக்கு நேரடி வகுப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வழக்கம் போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    இரவு நேர ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரவு நேர ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 800--க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேர  ஊரடங்கை மீறி வெளியே சுற்றிபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை குறைந்தது. 

    ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும்.

    இந்த மாட்டுச்சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம். இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். 
     
    இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்தே சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். 

    மேலும் மாடுகளை வாங்குவதற்காக வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் சீசன் விற்பனை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது.
     
    அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தவாரம் அதிக அளவில் மாடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால் கொரோனா ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டது. 
     
    கடந்த வாரம் போல 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக மாட்டுசந்தை வியாபாரிகள் கூறினர்.
    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
    ஈரோடு:

    பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர அடைக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். 

    ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட மூலப்பாளையம், ஜீவானந்தம் வீதி, ஸ்டாலின்வீதி, ராஜீவ்வீதி, சீனிவாசராவ்வீதி உள்ளிட்ட பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிக்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டன. அதன் பின்னர் குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டன. அவை சரிவர மூடப்படாததால் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    மேலும் ரோடுகள் புதர் மண்டியும் காணப்படுகிறது. இதன் காரணமாக பாம்பு, தேள் உள்ளிட்ட விஷபூச்சிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த ரோட்டை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். 

    ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும்  4-ம் மண்டல உதவி ஆணையாளர் வடிவுக்கரசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் குழந்தை பிறந்த 20 நாளில் இளம்பெண் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ரோஜா நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் மீரா (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபினேசன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மீரா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடத்தி அவரது தந்தை தணிகாசலம் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி மீராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது மீராவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மீரா நேற்று மாலை 5 மணியளவில் மூச்சு திணறல் ஏற்படுவதாக தனது தந்தை தணிகாசலத்திடம் கூறினார்.

    அதற்கு தணிகாசலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என மீராவை அழைத்துள்ளார். அதற்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டார்.

    பின்னர் இரவு 7 மணி அளவில் தணிகாசலமும் அவரது மனைவி செண்பகவள்ளியும் சென்று மகள் மீராவை பார்த்தனர். அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக மீராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை பிறந்து 20 நாட்களில் தாய் இறந்ததால் மருத்துவத்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர் அருகே ஒற்றை யானை கரும்பு, நெல் வயலை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
     அந்தியூர்:

    அந்தியூர் அருகே ஒற்றை யானை கரும்பு, நெல் வயலை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர்  மலைப்பகுதியையொட்டி வட்டக்காடு, காக்காயனூர், வரட்டுப்பள்ளம் அணை, சோதனைசாவடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியில் மயில்சாமி என்பவர் தனது தோட்டத்தில் நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளார். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து நெல் மணிகள் விட தயாராக இருந்தது. இதேபோல் கிழங்கு குளி என்ற பகுதியில் சூரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். 

    நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த ஒற்றைகாட்டுயானை நெல்வயல், கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தியது.

    நீண்ட நேரம் கரும்பு, நெற்பயிர்களை ருசித்த யானை மீண்டும் அதிகாலை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இன்று காலை விவசாயிகள் வழக்கம்போல் கரும்பு, நெல் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது யானை சேதப்படுத்தியதை கண்டு சோகம் அடைந்தனர். யானைகள் வயல்வெளியில் நுழைந்ததால் அதன் கால் தடங்கள் வயல்வெளிகளில் பதிந்து காணப்பட்டது. 

    இந்நிலையில் இரவில் ஒற்றை யானை சுற்ற ஆரம்பித்துள்ளதால் தோட்டகாவலுக்காக யாரும் இரவில் தனியாக வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தாக்கம் இருந்து வருகிறது. 

    இந்நிலையில் கொரோனா அவ்வப்போது உருமாற்றம் அடைந்து மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரதுறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும்.பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. முககவசம் அணியாமல் வந்தால் ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 

    சுகாதாரத்துறையினர், மாநகராட்சிஅலுவலர்கள், வருவாய்த் துறையினர், போலீசார் ஆகியோர் ஒன்றிணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இயல்பு திரும்பியதும் மக்கள் மீண்டும் முககவசம் அணியும் பழக்கத்தை மறந்தனர்.

    இந்நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

    தமிழகத்தில் இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா தினசரி பாதிப்பும் உயர்ந்து வருகிறது. 

    இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முககவசம் கண்டிப்பாக அணிந்துவர வலியுறுத்தப்பட்டது. 

    ஆனால் இதை பெரும்பாலானோர் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. பொது இடங்களிலும் சமூக இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளது. 

    இதையடுத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மீண்டும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை  தீவிரப்படுத்தி  வருகின்றனர். 

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாமல் வந்த 1000 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, ஈரோடு மாநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாமல் வந்த 1000 பேருக்கு  தலா ரூ.200 அபராதம் விதித்தனர். 

    இதன் மூலம் ரூ.2 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக பவானி அருகே தனியார் பள்ளியில் 220 படுக்கை வசதியுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக பவானி அருகே தனியார் பள்ளியில் 220 படுக்கை வசதியுடன் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலை மற்றும் 2-ம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுநேர கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் தாக்கம் அதிகரித்து கொரோனா பாதித்தவர்கள்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் தனியார் பள்ளிகள், கல்லூரி வளாகங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதன்படி பவானி அடுத்த பருவாச்சியில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு அங்கு கொரோனா முதல் மற்றும் 2-ம் அலையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் சிகிச்சை மையம் மூடப்பட்டது. 

    இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

    அதன் ஒரு பகுதியாக பவானி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் மீண்டும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

    இதைதொடர்ந்து 220 படுக்கைகள் தயார் செய்யும் பணி நடைபெற உள்ளது. ஜம்பை வட்டார மருத்துவ குழுவினர் மேற்பார்வையில் பள்ளியில் மீண்டும் சிகிச்சை முகாம் தொடங்கப்பட உள்ளது. 

    நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது அதிகரிக்கும் போது இங்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு  மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 1-ந் தேதி வாக்காளராகும் தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 2 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும், ஏற்கனவே பதிவு செய்திருந்த வாக்காளர்கள் தங்கள் பெயரில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும் முகவரி  மாற்றியவர்கள் அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.  

    இந்நிலையில் வாக்காளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்  நிகழ்ச்சி நடந்தது. 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தலைமை தாங்கி  அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  அதனை ஆர்.டி.ஓ. பிரேமலதா பெற்றுக்கொண்டார்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    மாவட்டம் முழுவதும் 1.11.2021-படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 66 ஆயிரத்து 546 ஆகும்.   புதிதாக 31 ஆயிரத்து 170 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 472 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    5.1.2022-ன் படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 19 லட்சத்து 87 ஆயிரத்து 244 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 616 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 499 பேர் உள்ளனர். பிற வாக்காளர்கள் 129 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

    வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
    சித்தோடு பகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி, வேன் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த டிரைவர் பலியானார்.
    சித்தோடு:

    சித்தோடு பகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி, வேன் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த டிரைவர் பலியானார்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலூக்கா பாலிகாடு காலனியை சேர்ந்தவர் முருகேசன் (40). வேன் டிரைவர். இவர் இன்று காலை திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி லோடு ஏற்றிக்கொண்டு வந்தார்.

    காலை 6 மணி அளவில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். பின்னர் வேனை எடுத்து கொண்டு சேலம் நோக்கி புறப்பட்டார். 

    அப்போது ஒரு கண்டெய்னர் லாரி ஈரோட்டுக்கு செல்ல சாலையை கடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி-வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்து டிரைவர் முருகேசனின் இரண்டு கால்களும் லாரிக்குள் சிக்கிக் கொண்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக டிரைவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே வேன் டிரைவர் முருகேசன் இறந்து விட்டார்.

    இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவர் யூசப் (36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நிலத்தை அபகரித்ததாக தம்பதி மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). இவரது மனைவி சசிகலா (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    ராமசாமி மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு தாண்டாம்பாளையத்தில் 8 சென்ட் நிலம் வாங்கி உள்ளனர். இந்த நிலம் அருகே அதே ஊரை சேர்ந்த ஒருவர் விவசாயத்தோட்டம் அமைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ராமசாமி தான் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட தொடங்கினார். 2017-ம் ஆண்டு வீடு கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது பக்கத்து நிலத்தை சேர்ந்தவர் இது என்னுடைய நிலம். உங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டை இடித்து விடுவேன் என்று கூறி தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

    ஆனால் எந்த ஒரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்காததால் விரக்தியில் இருந்த ராமசாமி, சசிகலா தம்பதியினர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் பாட்டிலில் மண்எண்ணை ஊற்றி கொண்டு வந்திருந்தனர். அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, ஆர்.டி.ஓ பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ராமசாமி, சிவகாமி தம்பதியினர் தாங்கள் வைத்திருந்த பாட்டிலை எடுத்து தங்கள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரும் அவருடன் வந்திருந்த பாதுகாவலர்களும் அவர்களிடம் இருந்து மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.

    உடனடியாக அவர்களிடம் நடந்த விவரத்தை கலெக்டர் கேட்டறிந்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை என்னிடம் கூற வேண்டும். இதுபோல் தீக்குளிக்க முயற்சி செய்வது தவறாகும் என்று அவர்களிடம் அறிவுரை கூறினார். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து அந்த தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீட்டை கட்டி உள்ளோம். அந்த வீட்டையும், நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் நாங்கள் வாழ்வதைவிட சாவதே மேல் என முடிவு செய்து தீக்குளிக்க வந்தோம். சம்பந்தப்பட்ட மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
    பண்ணாரி சோதனை சாவடியில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கியது. 2 வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பண்ணாரியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இன்று அதிகாலை சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மைசூர் பகுதியில் இருந்து 2 பிக்அப் வேன்கள் சத்தியமங்கலம் நோக்கி வந்தது. போலீசார் அந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு பிக்அப் வாகனத்தின் டிரைவர் வாகனத்தை அப்படியே விட்டு தப்பி ஓடினார்.

    தொடர்ந்து போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது 2 பிக்அப் வாகனங்களிலும் 65 மூட்டைகளில் போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

    போலீசார் பிடிபட்ட பிக்அப் வாகனத்தின் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும், மைசூரில் 2 பிக்அப் வேன்களில் இருந்து 65 மூட்டைகளில் போதைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வேன் டிரைவர் செம்புலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் 2 பிக்அப் வேன்கள், ஹான்ஸ், பான்பராக், மாணிக்சந்த், சுவாகத் போன்ற போதை பொருள்கள் கொண்ட 65 மூட்டைகளை கைப்பற்றி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடிய பிக்அப் வேனின் டிரைவர் பெயர் குமாரா என்று தெரிய வந்தது. மேலும் இந்த போதை பொருட்கள் யாருக்கு கடத்தி செல்லப்பட்டது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் முதற்கட்டமாக 10 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் முதற்கட்டமாக 10 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வருகிறது. 

    இதனை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. 

    சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பணியை தொடங்கி வைத்தார். 

    இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். 

    ஈரோடு மாவட்டத்தில் 523 பள்ளிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 260 சிறுவர்கள் உள்ளனர். 

    நேற்று முதல் கட்டமாக 92 பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. சிறுவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 915 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக பள்ளிகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    ×