என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீரா
    X
    மீரா

    குழந்தை பிறந்த 20 நாளில் இளம்பெண் திடீர் மரணம்- போலீசார் தீவிர விசாரணை

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் குழந்தை பிறந்த 20 நாளில் இளம்பெண் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ரோஜா நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் மீரா (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபினேசன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் மீரா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடத்தி அவரது தந்தை தணிகாசலம் வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி மீராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அப்போது மீராவிற்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்பு வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த மீரா நேற்று மாலை 5 மணியளவில் மூச்சு திணறல் ஏற்படுவதாக தனது தந்தை தணிகாசலத்திடம் கூறினார்.

    அதற்கு தணிகாசலம் மருத்துவமனைக்கு செல்லலாம் என மீராவை அழைத்துள்ளார். அதற்கு அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு படுத்துக் கொண்டார்.

    பின்னர் இரவு 7 மணி அளவில் தணிகாசலமும் அவரது மனைவி செண்பகவள்ளியும் சென்று மகள் மீராவை பார்த்தனர். அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக மீராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தணிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை பிறந்து 20 நாட்களில் தாய் இறந்ததால் மருத்துவத்துறையினரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×