என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
    • மக்கள் கடும் பாதிப்பு

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பயோ டீசல் உற்பத்தி செய்யப்படும் ஆலையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலையில் இருந்து தினமும் அடர்ந்த கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், தும்மல், அலர்ஜி ஏற்படு வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    கடந்த ஒரு மாதமாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிக்கு தகவல் அளித்தும் கண்டு கொள்ள வில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் ஏழு திங்கள்பட்டி, வாய்ப்பாடி, ஈங்கூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்படைத்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மிக அதிக அளவாக அடர் கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அளிப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சுவிட்ச் ஆப் என்று வந்து உள்ளது.

    இதனால் கொதிப்படைந்த மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.

    ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆலையை மூடி புகை வெளியேற்று வதை தடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் கூறும் போது, புதிதாக தொடங்கப்பட்டு உள்ள இந்த பயோ டீசல் ஆலையில் இருந்து வெளி யேறும் கரும்புகையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். ஏற்கனவே இங்குள்ள ஆலைகளால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதித்துள்ளன.

    தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் பயோடீசல் ஆலையால் காற்றும் மாசுபடுகிறது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் பெருந்துறை சுற்று வட்டார மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகையை பில்டர் செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் தான் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நேற்று இரவில் இருந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையி ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலை நிர்வாகத்தினர் இப்போதைக்கு ஆலையை மூடி விடுவதாகவும் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திய பிறகே ஆலையை இயக்குவதாகவும் மக்களுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, பாம்புகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது தாளவாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் தாளவாடியில் உள்ள அடர்ந்த வனப்பகுதி பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இதனால் வனவிலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த செசன் நகர் அருகே டி.எம்.எஸ். தோட்டம் பகுதி யில் சுமார் 10 அடி நீள முள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது. இந்த மலைப்பாம்பு கோழிகள், ஆட்டை மிகவும் சுலமாக விழுங்கி விடும் அளவிற்கு பெரிதாக இருந்தது.

    சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்குள் அந்த மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்று அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பு நடமாட்டத்தால் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்து உள்ளனர்.

    • பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
    • தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம் பாளையம் குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது.

    இதனால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியூர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    மேலும் இரவு கனமழை பெய்தால் சேதம் ஏற்படாமல் இருக்க நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இதனால் கொடிவேரி தடுப்பணை ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது.

    இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வெளி மாநில பயணிகளும் வந்து செல்கிறார்கள். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணைக்கு வருவது வழக்கம். இதனால் இங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான நம்பியூர், சத்தி, கொடிவேரி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவில் சென்று வருகிறது.

    இதே போல் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கும் கணிசமான தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

    இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் 860 கன தண்ணீர் அடி வெளியேறி வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்கு இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் நுங்கும், நுரையுமாக செல்கிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்படுகிறது என நீர்வளத்துறை அதி காரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து இன்று குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அங்கு தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.09 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,222 கன அடியாக நீர் வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம், காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் போன்ற பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 41.75 அடி யில் நீடிக்கிறது. இதேபோல் வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.65 அடியை நெருங்கியுள்ளது.

    தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.
    • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, 23-ந்தேதி, 'டானா' புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு, இந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 24-ந்தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை.

    இந்த சூழலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரோட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஈரோட்டில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் கன்கரா அறிவித்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது.
    • சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளி கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டுக்கு 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது. ஆனால் வேட்டி கரைக்கான நூல், பாபின் கட்டை போதிய அளவு வராததால் குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

    சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால் உற்பத்தி பணி தொடங்கவில்லை.

    இதுகுறித்து விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை வருகின்ற டிசம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆனால் தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களை உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும்.

    இது தவிர கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய ரூ.123 கோடி நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும்.

    இலவச வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க செய்வதுடன் பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இவர் அவர்கள் கூறினர்.

    • நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும்
    • எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

    தமிழகத்தில் காவிரி நதி பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வது ஈரோடு மாவட்டத்தில் தான். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடைபெறுகிறது.

    நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மைக் காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு பேசி விற்பனை செய்வதும், வேளாண் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட 3 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    நெல் கொள்முதல் மையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை தேவைக்கேற்ப மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அனுப்பி அரிசி உற்பத்தி செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர்.

    இருப்பினும் பெரும்பகுதி நெல், அரசு கொள்முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 223 ஏக்கரிலும், 2022-23ம் ஆண்டில் 75 ஆயிரத்து 608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி குறைந்திருந்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டில் நெல் சாகுபடி மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து 60 ஆயிரத்து 198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி ஆனதாக வேளாண் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேசமயம் கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் இருந்து மொத்தம் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் 2022-23ம் ஆண்டில் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 71 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதலானதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் மெட்டரிக் டன் நெல் கொள்முதல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டில் தற்போது தான் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலும் நெல் நடவு கடந்த ஆண்டை விட குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய தொழில்களை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

    விவசாய குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பலரும் நன்கு படித்து தொழிலதிபர்கள் ஆகவும் ஐ.டி., அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். விவசாயத் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காததும் விவசாய தொழிலை கைவிட காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர் மற்றும் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கிறது.

    இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணைக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. மழையால் மக்கள் கொடிவேரி அணைக்கு மக்கள் வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டகளில் கடந்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பி உள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் தொடர்ந்து கொடிவேரி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன் கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தடை விதிக்கப்படு கிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறிம் போது, தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடிவேரி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்கள் யாரும் கொடிவேரிக்கு வர வேண்டாம் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.

    இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.

    தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.

    பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

    பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

    தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    • வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து திருவிழா வந்து கொண்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் ஆதலால் குழைந்தைகளுடன் வந்த பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது தார் சாலை பணி நடப்பதால் பக்தர்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. தற்போது குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் மட்டும் செல்கிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும், வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பிரகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது. இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடுதாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.
    • சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர்.

    ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×