என் மலர்
கடலூர்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. எனவே வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. அதோடு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கம் போல் கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.
அதோடு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று (1-ந் தேதி) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஏற்பாடு நடந்தது.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டனர். ஏதேனும் கட்டிடம் பழுது, அமரும் நாற்காலி சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகளை செய்தனர்.
இது மட்டுமன்றி பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் 2,200 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அரசு உத்தரவுப்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர்ந்து இருந்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே செம்மேடு மாரியம்மன் கோவில் தெரு அருணாசலம்.தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வேல்முருகன் ( 30 ). இவர் நேற்று பிற்பகல் 1மணி அளவில் மோட்டார் சைக்கிளில் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது எதிரில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு பால், தேன், தயிர், பன்னீர், சந்தனம், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சரக்கொன்றை நாதர், பஞ்சமுகலிங்கம் உள்ளிட்ட லிங்கதிருமேனிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல், பூ சாற்றியபின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனுவாசன், உற்சவதாரர்கள், சிவனடியார்கள், சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வந்ததால் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பஸ், கார்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு 50 சதவீதம் மக்கள் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
தற்போது நாளுக்கு நாள் தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வழிபாட்டுத் தலங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. நாளை (1-ந் தேதி) முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஆனால் பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏதேனும் கட்டிடம் பழுது, அமரும் நாற்காலி சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது மட்டுமன்றி பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட மாணவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி அமர்த்தி பாடம் எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவின் பேரில் தற்போது ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 30). இவர் கடந்த 28-ந் தேதி கரும்பூர்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.
அப்போது அவியனூரை சேர்ந்த நிஜந்தன், வீரமணி ஆகியோர் அந்த வழியாக வந்தனர். இவர்கள் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய்? என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் நிஜந்தன், வீரமணி ஆகியோர் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை தகாதவார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்து, கையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சாமுண்டீஸ்வரி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.வீரசோழகன் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. கணவரை இழந்த அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது கொளஞ்சி வீட்டுக்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கொளஞ்சியிடம் நாங்கள் உங்களுக்கு முதியோர் உதவித் தொகை வாங்கி தருகிறோம். அதற்கு முன் பணமாக ரூ.4000 செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.
இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடம் இருந்த ரூ. 1000, முக்கால் பவுன் நகையை கொடுத்துள்ளார். நகை- பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் உடனடியாக வருகிறோம் என்று கூறி விட்டு அங்கிருந்துசென்றனர்.
ஆனால் 2 பேரும் கொளஞ்சியின் வீட்டுக்கு வரவில்லை. அப்போது மோசடி செய்திருப்பதை கொளஞ்சி உணர்ந்தார்.
இதனையடுத்து கொளஞ்சி சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
உயிரினங்களில் நீண்ட நாட்கள் வாழ்வது ஆமைகள். ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஒலிவ நிற சிற்றாமை என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை ஆமைகள் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் அதிக அளவில் காணப்படுகிறது. இவை இனப்பெருக்கத்திற்காக டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோரம் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
ஆனால் இந்த முட்டைகளை நாய், உடும்பு, காகம், கழுகுகள் சாப்பிட்டு விடும். இதனால் ஆமைகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தது. இதை தவிர்க்க கடலூர் மாவட்ட வனத்துறையினர், ஆமை முட்டைகளை கண்டறிந்து, அவற்றை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாத்து, குஞ்சு பொரித்தவுடன் முட்டைகள் எடுத்த இடத்திற்கு சென்று குஞ்சுகளை கடலில் விட்டு வருகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் வந்து முட்டையிட தொடங்கி உள்ளது. இதை மாவட்ட வன அலுவலர் செல்வம், வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வன காப்பாளர் ஆதவன், பாம்பு பிடி வீரர் செல்லா தலைமையிலான தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அதிகாலை நேரத்தில் கடற்கரையோரம் பயணம் செய்து அந்த முட்டைகளை சேகரித்து வருகின்றனர். அந்த முட்டைகளை தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டு உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்து வருகின்றனர். இது வரை 34 ஆமைகளில் இருந்து 4 ஆயிரத்து 16 முட்டைகளை சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்துள்ளனர்.
இது பற்றி வனவர் குணசேகரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆமைகள் முட்டையிட்டு வருகிறது. இந்த முட்டைகளை பாதுகாத்து, அவை குஞ்சு பொரித்ததும் மீண்டும் கடலில் விட்டு விடுகிறோம். இந்த குஞ்சுகள் பொரிக்க 55 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும். தற்போது வரை 4 ஆயிரத்து 16 முட்டைகளை சேகரித்து உள்ளோம். இதற்காக அதிகாலை 3 மணிக்கே வனத்துறையினர், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் கடற்கரையோரம் உற்சாகத்துடன் பயணம் செய்வோம். அப்போது ஆமைகள் கடற்கரையோரம் வரும். அவை முட்டையிடும் வரை காத்திருந்து முட்டையிட்ட பிறகு அதை பாதுகாப்பாக எடுத்து வந்து, பொரிப்பகத்தில் வைத்து விடுவோம். சில நேரங்களில் ஆமைகள் முட்டையிட்டு சென்ற பிறகு அதை தேடி எடுப்போம்.
கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஆமை 164 முட்டைகள் இட்டது அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஆமை 155 முட்டைகள் இட்டு இருந்தது. ஒரே நாளில் 11 ஆமைகளிடம் இருந்து 1200 முட்டைகளை சேகரித் தோம். இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விட்டு விடுவோம். முட்டைகளை எங்கே எடுத்தோமோ அதே கடல் பகுதியில் தான் குஞ்சுகளை விடுவோம். இந்த குஞ்சுகளை தேடி கடலில் 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முட்டையிட்ட ஆமை காத்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூர் கிராமத்தில் சாலை ஓரம் காலனியில் ஸ்ரீ நல்லதங்காள் கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் அந்த கோவிலில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த போது கோவில் பூட்டு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் உள்புறம் வைத்திருந்த உண்டியல் காணவில்லை. இந்த கோவிலில் கடந்த 4 மாதத்துக்கு முன்புதான் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தினர்.
கோவில் உண்டியலில் ஒரு லட்சம் ரூபாய் மேல் பணம் இருக்கும் என கூறுகின்றனர். திருடர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். அப்பகுதியை சுற்றி பல இடங்களில் தேடியும் உண்டியல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களாக ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில்களை குறிவைத்து கொள்ளையடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நேற்று இரவு கோவில் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.
சிதம்பரம்:
தமிழக நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜன் சிதம்பரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு தொடர்பாக அரசாணை (நிலை) எண்.24 நாள் 22.2.21 அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையில் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு 14சதவீத அக விலைப்படி வழங்கப்படும் என்ற வாசகம் மட்டும்தான் உள்ளது. ஆகையால் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்கள் சுற்றறிக்கை ஏற்க இயலாது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் (மே. ஜீன், 2021) இடைநில்லா பயண செலவு தொகையும் ஊக்கத் தொகையும் வழங்க வில்லை இப்போது பொங்கல் ஊக்கத்தொகையும் வழங்கவில்லை.
இச்சூழ்நிலையில் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) சுற்றறிக்கையில் பணியாளர் மத்தியில் மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில் நிலவுகிறது.
உடனடியாக எங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 14 சதவீத அகவிலைப் படி வழங்க வேண்டும். மேலும் அரசாணை (நிலை) எண்.24 22.02.2021 அரசாணை வெளியிடப்படும்போது அரசு பணியாளர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படியாக இருந்தது.
ஆனால் புதிய அரசாணையில் 14 சதவீத மட்டுமே அக விலைப்படியாக வழங்க வேண்டும் என்று உள்ளதால். ஆகையால் விடுபட்ட 3 சதவீத அகவிலைப்படி சேர்த்து மொத்தம் 31 சதவீத அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி காலை 11 மணிக்கு மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆகையால் இப்போராட்டத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டு 31.01.2022 அன்று 31 சதவீத அகவிலைப்படி வழங்க செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






