என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ருட்டி வட்டார சுகாதாரதுறை சார்பாக பண்ருட்டி நகராட்சியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார சுகாதாரதுறை சார்பாக பண்ருட்டி நகராட்சியில் பொது இடங்களில் புகைப்பிடித்தவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், செந்தில்வளவன், பாரதி முருகன், அரிகிருஷ்ணன், ராஜ்குமார், குணபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு புகை பிடிப்பதினால் ஏற்படும் உடல்நல குறைபாடு பற்றியும் கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படுவது குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
    காசிவிஸ்வநாதர் கோவிலில் மூலவர் லிங்கதிருமேனி மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நாளையும், நாளை மறுநாளும் இந்த அதிசயம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கடை வீதியில் அமைந்துள்ளது காசிவிஸ்வநாதர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மூலவர் லிங்கதிருமேனி மீது சூரிய ஒளி நேரிடையாக விழும்.

    அதேபோல இந்தாண்டு மூலவர் லிங்க திருமேனி மீது சூரியஒளி கதிர்கள் நேரிடையாக விழும் அற்புத நிகழ்வு இன்று காலை நிகழ்ந்தது.

    இந்த அற்புத காட்சியை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் அதிகாலை முதல் குவிந்து இருந்தனர். இந்த அற்புத நிகழ்வு இன்று அதிகாலை 6.40 க்கு நிகழ்ந்தது. சூரியன் உதித்ததும் சூரிய கதிர்கள் கோவில் கருவறை உள்ளே படர ஆரம்பித்ததும் கூடியிருந்த சிவ பக்தர்கள் ஹரஹர மகாதேவா ஹர ஹர சம்போ மகாதேவா ஓம் நமசிவாய ஓம் சிவாயநம என விண்ணதிர கோ‌ஷம் முழங்கி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த அற்புத நிகழ்வு சிறிது நேரம் நீடித்தது. நாளையும், நாளை மறுநாளும் இந்த சூரிய ஒளிக்கதிர் லிங்கத் திருமேனி மீது படரும் அதிசயம் நடைபெறும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள பணிக்காலியிடங்கள் அடங்கிய தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    தேர்வாணைய இணையதளம் வாயிலாக 07.03.2022 வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 23.02.2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே திருநகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தயாமணி (வயது 23). காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். வளைகாப்புக்காக தாய் வீட்டிற்கு சென்ற தயாமணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று நடராஜன் தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

    இதேபோல வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் அபிஷா. பாலிடெக்னிக் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். 23 ந்தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் தந்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
    கடலூர் அருகே பொது வழியில் சாமி கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே செம்மங்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியிலிருந்து கடந்த மாசி மகத்தன்று சாமி ஊர்வலம் பொது வழியில் செல்வதற்கு தயாரானார்கள். அப்போது மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுவழியில் சாமி ஊர்வலம் கொண்டு செல்லக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்

    இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பொது வழியில் சாமி கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் திருமேனி மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

    அப்போது இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இன்று காலை கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினர் நேரில் வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கலந்துகொண்டு இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    மேலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டுக்கொண்டார். அப்போது தாசில்தார் பூபாலச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் திருப்பணாம்பாக்கம் மாரியம்மன் கோவில் குளத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020 2021 கீழ் கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 25 லிட்டர் இலக்கில் ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம் செலவு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக 50 கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 55 ஊராட்சி குளங்கள் தெரிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பணாம்பாக்கம் மாரியம்மன் கோவில் குளத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் முருகன் குமரேசன் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    கடலூர் அருகே மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் மாணவி வீட்டு முன்பு ஐஸ்கிரீம் கடை இருந்து வந்தது. அந்த ஐஸ்கிரீம் கடைக்கு புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். இதன்காரணமாக குமார் மற்றும் பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நேற்று இரவு குமார் திடீரென்று மாணவி வீட்டிற்கு நேரில் வந்து மகளை காதலிப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.

    இதனால் பதட்டம் அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் அவர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்தும் முடியவில்லை.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது ‌‌.
    கடலூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அப்துல் கலாம் (வயது 45) ஜெய்த்தூர். (48). இவர்கள் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்தனர்.

    சம்பவத்தன்று காராமணிக்குப்பம் பகுதியில் ஜெய்தூர் என்பவர் டீ குடிக்க சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் சோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே அரசு ஊழியர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே கோண்டூர் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வாணி (வயது 38).

    சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் தனது வேலையை முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் சமையலறையில் புடவையால் வாணி தூக்கு மாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் கோபாலகிருஷ்ணன், மகள் காவியா ஸ்ரீ ஆகியோர் உடனடியாக வாணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

    அப்போது வாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே தி.மு.க. கவுன்சிலர் வெற்றி பெற்றவுடன் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வெற்றியை கொண்டாட சென்றதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொரப்பாடி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் தி.மு.க. 8இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.

    அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் பத்மநாபன் என்பவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் காணாமல் போனார். இவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அவர் எங்கு இருக்கிறார் என தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    இதற்கிடையில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பத்மநாபன் வெற்றி பெற்றவுடன் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வெற்றியை கொண்டாட சென்றதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 கோவில்களில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஆடூர் பூங்குடி கிராமம். இங்கு கருமாரியம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம்போல் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

    இந்த கோவிலின் அருகே உள்ள செல்வமுத்துக்குமரன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதேபோல பக்கத்து ஊரான செங்கல்மேட்டில் உள்ள மரியம்மன் கோவிலிலும் கதவின் பூட்டை உடைத்து அங்கும் அம்மன் சிலையிலிருந்து தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

    மேலும் இந்த கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது. அதே போல பண்ணப்பட்டு மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது.

    இதுகுறித்து கோவிலின் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். 4 கோவில்களில் தொடர்ந்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    புவனகிரி:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.

    அதன்படி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    1,170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 814 பேர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 927 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

    பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்திலேயே இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் வி.சி.க. வேட்பாளரை தவிர அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

    மற்ற வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க.- 4, காங்கிரஸ் -3, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மறுவாக்குப்பதிவில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணி புவனகிரி பேரூராட்சியை கைப்பற்றியது.
    ×