என் மலர்
சென்னை
- நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.
- எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.
போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்.
- மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆட்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை இடமாற்றம் செய்து பிற மருத்துவமனை களில் பணி நிரவல் முறை யில் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.
தேவையில் பாதியளவு, அதாவது 12,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை உறை விட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள் குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு கட்டப்பட்ட புதிய மருத்துவ மனைகளுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி அந்த பணியிடங்களில் தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேசிய மருத்துவ ஆணை யத்தின் சிறப்பு அனுமதி பெற்று புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம்.
நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
- குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்தின் அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதே போல, கோவையில் பெண் ஒருவரிடம் நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் காவல்துறை டி.எஸ்.பி.யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
காவல்துறை டி.ஜி.பி. அலுவலகம் அருகேயே துணிந்து கொள்ளையன் கைவரிசை காட்டியிருப்பது, பொம்மை முதல்வர் காவல்துறையை எந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்கிறார் என்பதற்கு சாட்சி!
முழுநேர டி.ஜி.பி. கூட இல்லாத ஒரு காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
வேலியே பயிரை மேய்ந்தாற்போல், POCSO வழக்கு முதல் கொள்ளை வரை காவல்துறையினர் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவது, காவல்துறை நிர்வாகம் என்பது முற்றிலுமாக சீரழிந்து உள்ளதையே காட்டுகிறது.
காரணம்? இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாத வெற்று பொம்மை முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்
தொலைந்த இரும்புக்கரத்தை நீங்கள் இனிமேல் கண்டுபிடித்து, துரு நீக்கி..... எந்தப் பயனும் இல்லை!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க. அரசை 2026-ல் புரட்சித் தமிழர் தலைமையில் வீட்டுக்கு அனுப்பி, #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் !
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
- தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
- பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்!
சென்னை:
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார். இதையொட்டி தோட்டா தரணிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே" அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்! என்று கூறியுள்ளார்.
- கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்தது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியது. தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி இருப்பதால் அதன் விலை உயர ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,600-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,800 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
09-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
08-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,400
07-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169
09-11-2025- ஒரு கிராம் ரூ.165
08-11-2025- ஒரு கிராம் ரூ.165
07-11-2025- ஒரு கிராம் ரூ.165
- சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தொடர்பான அரசாணையை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் சனி, ஞாயிறு உட்பட 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் வருமாறு:-
| எண் | விடுமுறை நாட்கள் | தேதி | கிழமை |
| 1 | ஆங்கில புத்தாண்டு | 1.1.2026 | வியாழன் |
| 2 | பொங்கல் | 15.1.2026 | வியாழன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16.1.2026 | வெள்ளி |
| 4 | உழவர் திருநாள் | 17.1.2026 | சனி |
| 5 | குடியரசு தினம் | 26.1.2026 | திங்கள் |
| 6 | தைப்பூசம் | 1.2.2026 | ஞாயிறு |
| 7 | தெலுங்கு வருட பிறப்பு | 19.3.2026 | வியாழன் |
| 8 | ரம்ஜான் | 21.3.2026 | சனி |
| 9 | மகாவீர் ஜெயந்தி | 31.3.2026 | செவ்வாய் |
| 10 | ஆண்டு வருட கணக்கு | 1.4.2026 | புதன் |
| 11 | புனித வெள்ளி | 3.4.2026 | வெள்ளி |
| 12 | தமிழ் புத்தாண்டு /அம்பேத்கர் பிறந்தநாள் | 14.4.2026 | செவ்வாய் |
| 13 | மே தினம் | 1.5.2026 | வெள்ளி |
| 14 | பக்ரீத் | 28.5.2026 | வியாழன் |
| 15 | முகரம் பண்டிகை | 26.6.2026 | வெள்ளி |
| 16 | சுதந்திர தினம் | 15.8.2026 | சனி |
| 17 | மிலாது நபி | 26.8.2026 | புதன் |
| 18 | கிருஷ்ண ஜெயந்தி | 4.9.2026 | வெள்ளி |
| 19 | விநாயகர் சதுர்த்தி | 14.9.2026 | திங்கள் |
| 20 | காந்தி ஜெயந்தி | 2.10.2026 | வெள்ளி |
| 21 | ஆயுத பூஜை | 19.10.2026 | திங்கள் |
| 22 | விஜய தசமி | 20.10.2026 | செவ்வாய் |
| 23 | தீபாவளி | 8.11.2026 | ஞாயிறு |
| 24 | கிறிஸ்துமஸ் | 25.12.2026 | வெள்ளி |
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயகா நகர், கோரிமேடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.11.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் சாலை.
மாத்தூர்: எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு.
- தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது.
- இவ்விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான 'செவாலியே' விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார்.
இந்த நிலையில், 'செவாலியே' விருது பெறும் தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் க்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
Oxford-இல் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி அவர்களுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான Chevalier விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்! என்று கூறியுள்ளார்.
செவாலியே விருதை இதற்கு முன் சத்யஜித் ரே, சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
- இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது, மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
அதேபோல், திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில், மக்களின் பல்வேறு அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் என, தமிழ்நாட்டின் வரலாற்றில் திமுக-வின் ஆட்சிக் காலம் ஒரு கரும்புள்ளி என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும் மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .






