என் மலர்tooltip icon

    சென்னை

    • உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன்.
    • பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன்.

    இன்று பிறந்தநாளை கொண்டாடும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ச்சியான ஞானம் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வி.பி.சிங் அவர்களின் மண்ணில் சமூகநீதியின் ஜோதியை முன்னெடுத்துச் சென்று, முற்போக்கான அரசியலுக்கு வழிவகுத்து, உங்கள் தந்தை முலாயம் சிங் அவர்களின் பெருமைமிக்க மரபில், பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுக்கு எதிராக எப்போதும் வலுவாக நிற்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

    சென்னை :

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், நெல்லை, தென்காசி, குமரி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 57 ரூபாய் 5௦காசுகள் குறைந்து ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868-க்கு விற்பனையாகிறது. 

    • மின்சார ஒழுங்கு வாரியம் ஆணையம் நிர்ணயத்துள்ள 3.16 சதவீதம் மிகாமல் கட்டண உயர்வு.
    • 2.83 கோடி மின்நுகர்வோருக்கு எந்தவிதமான கட்டண உயர்வும் இல்லை.

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு மின்இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும் தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்.

    மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின்கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது.

    அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜூலை-1ஆம் தேதி முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அனைத்து, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத்தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று உத்தரவிட்டதை ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சரால் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

    மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது.

    வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.

    தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்:-

    * இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை (Energy charges) தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 34 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்

    * 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு (sanctioned load) கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு (LT (III) B Industries) உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

    * குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு (LT (III) A(1)– Cottage and Micro Industries) உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.

    * விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள்.

    எனவே 2025-26 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும்.

    இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

    2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ 297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க. கடந்த மாதத்தில் எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைச் சார்ந்த 5,920 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி கரும்பு கிரயத் தொகை வழங்கப்பட்டது. மேலும், கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/-

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல், தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முன்எப்போதும் இல்லாத அளவிற்கு. 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 16 தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.349/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    தற்போது, கரும்பிற்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349/- வழங்கிடும் வகையில், ரூ.297/-கோடி நிதியினை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, 2024-25 அரவைப் பருவத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஊக்கத்தொகை தகுதி வாய்ந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16/-கோடி வழங்கப்பட்டுள்ளது.

    2024-25 அரவைப்பருவத்திற்கு கரும்பு வழங்கிய சுமார் 1,30,000 விவசாயிகளுடன் சேர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1.145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், வரலாற்றில் முதன்முறையாக சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரய நிலுவைத் தொகை வழங்க சுமார் 1,945.25/- கோடி வழங்கப்பட்டுள்ளது.

    • குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்.
    • போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்.

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

    "போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்" என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

    • கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை.
    • காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்,

    அப்போது, முதலமைச்சர் காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருவதையும், இவ்வரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு, அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றால் அதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாய் விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.

    மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    மேலும், கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களை சந்தித்து அந்த பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும் என்றும் சுட்டிக்காட்டினார்.

    சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திட அறிவுறுத்தினார்.

    பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச்செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
    • காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டதால் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் குமார் என்ற வாலிபரை, நகை திருட்டு புகார் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் கடுமையாக அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிற. லாக்-அப் டெத் காரணமாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில் அஜித் மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    • புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள், விரிவுரையாளர்கள் (நிலை-II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    மேலும் புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி திருத்திய கொள்கை முடிவானது அரசாணை வெளியிடப்பட்ட 12.6.2025 நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தின்படி 2011-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 8,533 காவலர்களில், 12.6.2025 அன்று 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணிநிறைவு செய்து பணியாற்றுபவர்கள் 1.7.2025 முதல் உடனடி பயனடைந்து தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெறுவர்.



    மேலும், 2026-ம் ஆண்டில், முதல் நிலை காவலர்களாக பணியாற்றும் 11,488 காவலர்கள் இப்புதிய பதவி நிலை உயர்வின்படி தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெற உள்ளனர். இந்த புதிய காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் ஆணையினை செயல்படுத்திடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் ஒவ்வொரு காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இருந்து 11 முதல் நிலை காவலர்களுக்கும், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவல் துறை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
    • பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.

    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.

    கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.

    பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.

    இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.

    இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.

    • வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    இன்று முதல் 2-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் 4-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×