என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28) என்பவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்தது.
இதனால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் உறவினர்களிடம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாக்டர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் டாக்டர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 21 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்த முதியவர்கள் என ஏராளமானோர் டாக்டர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- மண்ணடியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலகார பொருட்களோடு பொட்டலமாக கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் உயர்ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாங்காங், டெல்லி, சென்னை விமான நிலையங்களின் பாதுகாப்பை மீறி கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு 100 கிராம் ரூ.1 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாங்காங்கில் இருந்து டெல்லி வந்து விமானம் மூலம் சென்னைக்கு பலகார பொருட்களோடு பொட்டலமாக கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ரக கஞ்சா சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அரியலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்து முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக நாளை மறுநாள்(14-ந்தேதி) மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கோண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் (15-ந்தேதி) காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 131 ஏக்கர் பரப்பளவில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தினை தமிழ்நாட்டில் முதன் முதலாக இங்கு தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு செந்துறை சாலை கொல்லாபுரம் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன் பின்னர் மாலை 4 மணி அளவில் துரை மங்கலம் சாலை வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள பூமனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக பெரம்பலூர் வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் மேலமாத்தூர் பகுதியிலும், வேப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குன்னம் பகுதியிலும், பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் நான்கு ரோடு ஆகிய பகுதிகளிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் ஆகியோர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விழா மேடை அமைப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து பெரம்பலூர் பூமணம் திருமண மண்டபம் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அரியலூர் செல்வராஜ், பெரம்பலூர் ஆதர்ஷ் பசேராவுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
அரியலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பெர்ம்பலூரில் முதலமைச்சர் வரவேற்பு மற்றும் கலந்தாய்வு கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ராசா தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது. மாநாட்டில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகளை விளக்கி அதிரடியாக விஜய் பேசினார்.
லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்படைய செய்தது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் விஜய் கட்சி மாநாடு உற்று நோக்க வைத்தது.
மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக, அதிமுகவை குறி வைத்து ஊழல் பட்டியலை தவெகவினர் தயார் செய்து வருகின்றனர். வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.
ஆதாரப்பூர்வமாக, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஊழல் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக்கி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் பட்டியலை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முடிந்தால் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்கவும் தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை.
- 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்க பா.ஜ.க.வினர் பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். மூன்று மாதங்களாக அங்கு தங்கி படித்து வரும் அண்ணாமலையின் படிப்பு காலம் இந்த மாதம் நிறைவடைகிறது. வருகிற 29-ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
3 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்க பா.ஜ.க.வினர் பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அண்ணாமலை 29-ந்தேதி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி எச். ராஜா தலைமையில் விரைவில் நிர்வாகிகள் கூடி ஆலோசிப்போம். இன்னும் நாட்கள் இருப்பதால் ஆலோசனை கூட்டம் மெதுவாக நடைபெறும் என்றார்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது.
- பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு இன்று காலை முதல் 3151 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 65 அடியை கடந்த நிலையில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், மழை முற்றிலும் நின்று விட்ட காரணத்தாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர் வரத்து 1125 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.20 அடியாக உள்ளது. நீர் வரத்து 648 கன அடி. திறப்பு 1107 கன அடி. இருப்பு 3460 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 76 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 42.14 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
சண்முகாநதி அணை நீர் மட்டம் 52.50 அடி. இருப்பு 79.57 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 31 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை.
- தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று இரவு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.
இதையொட்டி நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
துணை முதலமைச்சர் ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மழையை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 329 முகாம்கள் தனியார் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
* அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.
* மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.
- நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 15 பெரிய அணைகள் உள்பட 90 நீர் தேக்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்) இதில் நேற்றைய நிலவரப்படி 165.637 டி.எம்.சி. இருப்பு, அதாவது 73.85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
நீர்தேக்கங்களுக்கு பருவமழையால் ஆண்டு தோறும் வரும் நீரால் மண் அடித்து வரப்படுவதால் ஏரியின் கொள்ளளவு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
அந்தவகையில் 2020-2021-ம் ஆண்டு நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின்போது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், தேனி மாவட்டத்திலுள்ள வைகை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூர்வாரும் பணிகளுக்கு சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற, தனியார் நிறுவனங்களை நியமிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.15.55 கோடியில் 4 அணைகள் தூர்வார முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக சட்டரீதியான அனுமதி, ஆலோசனைக் கட்டணம், தகுந்த முகமைகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை தொடங்குவதற்காக அரசு முதல் கட்டமாக நீர்வளத்துறைக்கு ரூ.3.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அந்தவகையில், வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது. அதேபோல், மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு நீர்வளத்துறையின் பரீசிலனையில் உள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு 4 அணைகளுக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 4 அணைகளும் தூர்வாரப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் தேங்கியுள்ள மணலை 3 ஆண்டுகள் எடுத்து விற்பதன் மூலம் ரூ.315 கோடியும், பேச்சிப்பாறை அணை மூலம் ரூ.140 கோடியும், அமராவதி அணை மூலம் ரூ.250 கோடியும், மேட்டூர் அணை மூலம் ஓராண்டுக்கு ரூ.112 கோடியும் தோராயமாக வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தேனீ வளர்ப்பினை சுயஉதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதி வழங்கி, தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 லட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் எந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 லட்சமும், இந்த எந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் தேர்வு செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள் அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அல்லது வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில், அனைத்து பயனாளிகளுக்கும் தேவையான தேனீப் பெட்டிகளை தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைப்புடன் தரமான நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் 1480 சுயஉதவிக் குழு மகளிர் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்தின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பருத்தி, சூரிய காந்தி, தென்னை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற இயலும்.
மேலும், தேனீ வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை சுயஉதவிக் குழு மகளிர் நன்கு தெரிந்து கொண்டு, அதன் மூலம் தேன் மட்டுமல்லாது, தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணைப் பொருட்களையும் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.58,200-க்கும் தங்கம் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்றும் குறைந்தது.
முந்தைய நாளை காட்டிலும் கிராமுக்கு ரூ.55 சரிந்து ரூ.7,220-க்கும், சவரனுக்கு ரூ.440 சரிந்து ரூ.57,760-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.
எப்போதெல்லாம் தங்கம் விலை குறையுமோ, அப்போதெல்லாம் வெள்ளியின் விலையும் குறையும். அந்தவகையில் நேற்று வெள்ளியின் விலையும் குறைந்தது. முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760
10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-11-2024- ஒரு கிராம் ரூ. 102
10-11-2024- ஒரு கிராம் ரூ. 103
09-11-2024- ஒரு கிராம் ரூ. 103
08-11-2024- ஒரு கிராம் ரூ. 103
07-11-2024- ஒரு கிராம் ரூ. 102
தங்கத்தின் மீதான முதலீடு திடீரென குறைந்திருப்பதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதுமே தங்கம் விலை சரிவுக்கு காரணம், என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள்.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் அழைத்து சென்றார். அங்கு முதல் நாள் போட்டி முடியாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவ-மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் இரவில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது, பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது குடியுங்கள் என்று வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி சிதம்பரநாதன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் பாலசுந்தரம், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பள்ளி நிர்வாகம், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, பெற்றோர் கூறுகையில், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்ய வேண்டும். பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக துணை சூப்பிரண்டிடம், பெற்றோர்கள் புகார் செய்தனா். அதன்பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கோவையில் பதுங்கிய இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் நேற்று இரவில் கைது செய்து திருச்செந்துர் அழைத்து வந்ததனர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






