என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தானில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் தடம் புரண்டது.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளது என வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ராஜஸ்தானில் வேகமாகச் சென்ற சொகுசு கார் லாரி மீது மோதிய விபத்து ஏற்பட்டது.
- இதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் சோமு நகரைச் சேர்ந்த சிலர் சொகுசு காரில் கண்டேலா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அந்த சொகுசு கார் பல்சானா - கண்டேலா சாலையில் மாஜி சாஹப் கி தானி என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது அங்கு சென்ற பைக் மீதும், எதிரே வந்த லாரி மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற தம்பதி மற்றும் சொகுசு காரில் சென்ற ஒன்றரை வயது குழந்தை உள்பட 8 பேர் என மொத்தம் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனே மீட்புப் பணிகளில் இறங்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது.
- ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார்.
உதய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக அதற்கான வினாத்தாள் வெளியானது. அதையடுத்து ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 37 தேர்வர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.
மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியானதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் தாக்கா என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. உமேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
- பா.ஜனதா தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.
- பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள்.
அல்வார் :
ராஜஸ்தானில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று அல்வாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பா.ஜனதா தலைவர்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுவதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதாவில் எங்களை எதிர்க்கும் தலைவர்கள், எங்கே சென்றாலும் ஆங்கிலத்துக்கு எதிராக பேசுகிறார்கள். பள்ளிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்கிறார்கள். பெங்காலி இருக்கலாம், இந்தி இருக்கலாம், ஆனால் ஆங்கிலம் இருக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்' என குற்றம் சாட்டினார்.
இந்த தலைவர்களிடம் அவர்களின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? என கேட்டுப்பாருங்கள் எனக்கூறிய ராகுல் காந்தி, அமித்ஷா முதல் பா.ஜனதா முதல்-மந்திரிகள், எம்.பி-எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் படிப்பதாகவும், அவர்கள் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டும் என அந்த தலைவர்கள் விரும்புவதாகவும் சாடினார்.
மேலும் அவர், 'மாணவர்கள் இந்தி படிக்க வேண்டாம் என நான் கூறவில்லை. நீங்கள் இந்தி, தமிழ் என அனைத்து இந்திய மொழிகளையும் படிக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா, ஜப்பான் அல்லது இங்கிலாந்து என வெளிநாட்டினருடன் நீங்கள் பேசவேண்டுமென்றால் இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும். எனவே ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்று அமெரிக்கா சென்று அங்குள்ளவர்களுடன் போட்டிபோட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்' என்றும் தெரிவித்தார்.
- சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம்.
- காங்கிரஸ் கட்சி எப்போதும் நாட்டுக்காக நின்றிருக்கிறது என்றார் காங்கிரஸ் தலைவர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் அல்வாரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி அரசு மிகுந்த வலிமையானது. யாரும் அவர்களது கண்களைக்கூட நேரடியாக பார்க்க முடியாது என மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் எல்லைகளில் மோதலும், சர்ச்சைகளும் எழுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்த பிறகு, அந்த நாட்டு அதிபரை பல முறை மோடி சந்தித்து பேசியிருக்கிறார். சந்திப்புகளை நடத்தியிருக்கிறார், அவருடன் ஊஞ்சல் ஆடியிருக்கிறார். இதெல்லாம் நடந்த பிறகும், சீன எல்லையில் இந்த மோதல் நீடிக்கிறது? வெளியே அவர்கள் சிங்கம் போல பேசுவார்கள், ஆனால் அவர்களது செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால், ஒரு எலியைப் போலத்தான் இருக்கும்.
சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அதற்காக நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவர்கள் இன்னும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு தயாராக இல்லை. எல்லையில் என்ன நடக்கிறது? அரசு என்ன செய்கிறது? நமது எல்லை மற்றும் வீரர்களின் நிலை என்ன என்று விவாதிக்க விரும்புகிறோம். ஆனால் இந்த விவாதம் நடத்தாமல் ஏன் ஒளிந்து கொண்டு ஓடுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
- மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை சிலிண்டர் ரூ.410க்கு விற்கப்பட்டடதாக அசோக் கெலாட் பேச்சு
- ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை 500 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளது. வறுமைக் கோட்டுககு கீழ் உள்ளவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் அசோக் கெலாட் பேசுகையில், 'ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வகைப்படுத்தப்படும். பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் 500 ரூபாய்க்கு அவர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும். மேலும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்படும்' என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு வரை ரூ.410க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், இப்பாது ரூ.1,040க்கு விற்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியையும் அசோக் கெலாட் விமர்சனம் செய்தார்.
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஏழைகளுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கெலாட் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
- சரோஜ் சர்மா உடலை வெட்டிய என்ஜினீயர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
ஜெய்ப்பூர்:
டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவங்களை போலவே ராஜஸ்தானிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வித்யா நகரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா. இவரது கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர்.
இதனால் சரோஜ் சர்மாவுடன் அவரது கணவரின் அண்ணனும், அவரது மகனான அனுஜ் சர்மா (வயது 32) என்ற வாலிபரும் வசித்து வந்தனர். அனுஜ் சர்மா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 11-ந் தேதி அனுஜ் சர்மாவின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.
அப்போது சரோஜ் சர்மா கோவிலுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அனுஜ் சர்மா போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் சரோஜ் சர்மாவை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அவர் சரோஜ் சர்மாவின் மகள் பூஜாவிடமும் கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு அனுஜ், சமையல் அறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பூஜா எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தம் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பூஜா இதுபற்றி தனது சகோதரியிடம் கூறினார்.
பின்னர் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
அதன் மூலம் நடந்த விசாரணையில் சரோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், சம்பவத்தன்று அனுஜ் சர்மா, தான் டெல்லி செல்ல விரும்பியதாகவும், அதற்கு பெரியம்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சமையல் அறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மார்பிள் கட்டர் மூலம் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.
மேலும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் கூறினார்.
மொத்தம் 10 துண்டுகளாக சரோஜ் சர்மா உடலை வெட்டிய அவர் சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி எடுத்து சென்று சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரோஜ் சர்மாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி பயன்படுத்திய வார்த்தைக்கு கடும் கண்டனம்.
- இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள்.
அஜ்மீர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் மோடி என அவர் குறிப்பிட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி ஒட்டு மொத்த தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார்:
பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்.
பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் வைத்துதான், அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கர் துணைப்பிரிவில் உள்ள புங்ராவில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கி இதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக, காங்கிரஸ் அரசை அம்மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங் ரத்தோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாதயாத்திரையின் 100 நாட்களை குறிக்கும் வகையில் ஜெய்ப்பூரில் இசைக் கச்சேரிக்கு அம்மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் கெலாட், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவித்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, மாநில அரசு கொண்டாட்டதில் ஈடுபட்டு மேலும் காயத்தை சேர்க்கிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ரூ. 20 கோடி தொகுப்பை மாநில அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது, அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
- வெளியுறவுத்துறை அமைச்சர், சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும்
ஜெய்ப்பூர்:
இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியதாவது:-
சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு ஏற்கவில்லை. இந்திய அரசாங்கம் நிகழ்வுகளில் செயல்படுகிறது, கொள்கையில் அல்ல. நமது நிலத்தை சீனா கைப்பற்றியுள்ளது. அவர்கள் வீரர்கள் நமது வீரர்களை அடிக்கிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. ஆனால் அதை நமது அரசு புறக்கணித்து மறைத்து வருகிறது.
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கைகள், அவர் சீனா தொடர்பான தனது அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தியுடன் மாநில முதல்வர் அசோக் கெலாட் உடனிருந்தார்.
- குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கியப் பங்காற்றியது.
ஜெய்ப்பூர்:
குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பை பறித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மி தான் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
குஜராத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியில், ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றியது. ஆம் ஆத்மி இல்லாவிட்டால், ஆளும் பாஜகவை தோற்கடித்திருப்போம்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி பினாமியாக செயல்பட்டது. அந்த கட்சி பாஜகவின் பி டீம், காங்கிரசை வீழ்த்த பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது. அவர்கள் (பாஜக) இந்தியாவைப் பிளவுபடுத்துகிறார்கள், வெறுப்புணர்வை பரப்புகிறார்கள். அவர்கள் கொள்கையில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதை காங்கிரஸ் புரிந்துகொள்ளும்போது ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும்
- ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது.
ஜெய்ப்பூர்
வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது.
நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை இன்று (வெள்ளிக்கிழமை) 100-வது நாளை எட்டுகிறது.
இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளை எட்டும் நிலையில், ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர்.
மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் இந்த சலசலப்புகளையும் தாண்டி இந்த யாத்திரையால் கட்சிக்கு நீண்டகால நன்மை விளையும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.
கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது, 'முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது' என கூறினார்.
இந்த யாத்திரையின் தாக்கம் அடித்தட்டு மக்களிடம் நிச்சயமாகப் பரவும் என்று குறிப்பிட்ட சஞ்சய் ஜா, காங்கிரசுக்கு ஊக்கமளிக்கும் அதன் தொண்டர்கள் மூலம் அணிதிரட்டலைத் தக்கவைத்துக் கொள்வதே இனி உள்ள முக்கியப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த யாத்திரை கட்சிக்கு நம்பிக்கையின் ஒளியை அளித்துள்ளதாகவும், சாதாரண தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சஞ்சய் பாண்டே, எனினும் அது தேர்தல் ஆதாயமாக மாறுமா? என்பதை காலம்தான் சொல்லும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.






