என் மலர்
புதுச்சேரி
- புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறியுள்ளனர்.
- எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர்.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூட்டணி ஆட்சி அமைந்து 1 1/2 ஆண்டாகியும் இதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு கூட வாரியதலைவர் பதவி வழங்கப்படவில்லை. இது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சி தொகுதிகளில் நடைபெறும் பணிகள்கூட தங்கள் தொகுதிகளில் நடைபெறவில்லை என பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். அதோடு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கட்சி தலைமையிடமும் ஒரு சிலர் நேரடியாக புகார் செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதுவைக்கு வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவு, நியமன எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறியுள்ளனர். ரங்கசாமி கூட்டணி கட்சியான பா.ஜனதாவை எந்த வகையிலும் ஆலோசனை செய்யாமல் பல முடிவுகளை எடுப்பதாகவும், தன்னிச்சையாக அவர் செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அளிப்பதில்லை என்றும் கூறினர். இதுகுறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, நேரம் பெற்று தருவதாக உறுதியளித்தார். அமித்ஷாவை சந்தித்து உங்கள் புகார்களை நேரடியாக தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.
- பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர்.
- மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் ராமே ஸ்வரம், மண்டபம், புது க்கோட்டை, நாகப்பட்டினம், காரை க்கால் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பி டிக்க செல்கின்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர், பல்வேறு காலகட்டங்களில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தொடர்ந்து மீனவ ர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனர். இந்நிலையில், மீனவர்க ளை விடுதலை செய்தா லும், கடந்த சில மாதங்க ளாக இலங்கை கடற்படை யால் பறிமுதல் செய்ய ப்பட்ட விசைப் படகு களை அந்நாட்டு கோர்ட்டு உத்தர வுப்படி யாழ்ப்பாணம், முல்லைதீவு, மயிலடி உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படகுகளில் பெரு ம்பாலானவை தற்பொழுது சேதம் அடைந்து நீரில் மூழ்கி காணப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. குறிப்பாக மாண்டஸ் புயல் காரணமாக, விசைப்படகு கள் சேதமானதாக வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைர லாகி வருவதால், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களை பார்த்த காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிலர், மீனவர்களின் வாழ்வா தாரமே பல லட்சம் செலவு செய்த படகுகளில் தான் உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இல ங்கையில் சிறைப் படுத்தப் பட்டுள்ள தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் படகுகளை விரைந்து மீட்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும்.
- 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் திராவிட மாடல் ஆட்சி மலரும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் புதுவையில் பங்கேற்ற திருமண விழாவில் பேசினார்.
இது தொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட மாடல் தற்போது இங்கு தேவையா? விமான நிலையம் விரிவாக்கத்துக்கு தமிழகத்திலிருந்து 300 ஏக்கர் நிலம் தான் தற்போது தேவை.
புதுவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த நிலத்தை முதலில் அவர் தரட்டும். திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு தேவையில்லை.
புதுவையில் கவர்னரின் தலையீடு என குற்றம் சாட்டுகிறார்கள். ஆளாளுக்கு தலையீடு இருக்கும் தமிழக அரசை விட கவர்னரின் தலையீடு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. அதிகாரப்பூர்வமாக ஆட்சி முறையில் கவர்னர் பங்கெடுக்க வேண்டும். அண்ணன் ஸ்டாலின் இங்கு பேசியது சரியில்லை. ஒற்றுமையாக ஆட்சி இங்கு நடக்கிறது.
கர்நாடகத்தில்தான் முதல்-மந்திரி பொம்மை தலைமையில் ஆட்சி நடக்கிறது. புதுவையில் அல்ல. திராவிட மாடல் என்பதற்கு, தமிழக முதலமைச்சர் முதலில் நல்ல தமிழ் பெயர் கண்டுபிடிக்கட்டும். அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பதுதான் திராவிட மாடலோ? 25 ஆண்டுகள் நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து மாநிலத் தலைவராக இருந்து தற்போது இங்கு ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். வாரிசுகளாக நாங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளோம்.
- அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கூறியுள்ளதாவது:
ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மீகத் தலமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மீகச் சுற்றுலா சிறப்பாக உள்ள இங்கு, சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுற்றுலா பயங்கரவாதப் போக்கை தடுக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக இருக்கிறது, மத்திய அரசின் முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா நகரமாக விளங்கும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- அருமை கண்ணு வயது 90 வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
- 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தாயார் அருமை கண்ணு (வயது 90). சம்பவத்தன்று இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), அவரது நண்பர் ராஜபாண்டியன் (37) ஆகிய 2 பேர், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை திருடியதாக கூறப்படுகிறது.
மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அன்பழகன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மூதாட்டி உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
- கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
புதுச்சேரி :
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மறு உத்தரவு வரும் வரைமீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கைபடி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள், கடந்த 5-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை அருகே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதேபோல், காரைக்கால்மேடு, அக்க ம்பேட்டை, கோட்டச்சேரி மேடு, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
- புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.
- நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில அவைத் தலைவருமான எஸ்.பி. சிவக்குமார்-சித்ரா சிவக்குமார் ஆகியோரின் மகன் ஆனந்தராஜிற்கும், திருப்பத்தூர் சாமிசெட்டி-சித்ராசாமிசெட்டி ஆகியோரின் மகள் மீனாட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் புதுவை-திண்டிவனம் சாலை பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (திங்கட்கிழமை) நடந்தது.
திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்தார். மணமகன் ஆனந்தராஜ் மனமகள் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-
தலைவர் கலைஞரை கல்லூரிக்கு சிறப்பு பேச்சாளராக பேச வைக்க எஸ்பி.சிவக்குமார் அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீண்டநேரம் பேச வேண்டும் என சிவக்குமார் கட்டளையிட்டார்.
இதற்கு கலைஞர் பேசும்போது, இளம்கன்று பயமறியாது. சிவக்குமார் போன்ற இளைஞர்கள் கட்டளையிட, அதை நிறைவேற்ற நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என பேசினார். எஸ்.பி.சிவக்குமார் துணிச்சல் மிக்கவர்.
40 ஆண்டு கட்சிப்பணியை நிறைவு செய்தபோது, கலைஞர், பேராசிரியர், புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என பாராட்டியிருந்தேன்.
புதுவை அமைச்சராக அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது. புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம்.
புதுவை இணைபிரியாத ஊர். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதால், திராவிட இயக்கத்தின் இலக்கிய தலைநகர் என சொல்லக்கூடிய ஊர் புதுவை. கலைஞரின் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுவை. சாந்தா என்ற பழனியப்பன் நாடகத்தில் சிவகுரு வேடம் ஏற்று கலைஞர் நடித்தார். அந்த நாடகம் பாதியிலேயே புதுவையில் நிறுத்தப்பட்டது. ஒரு கலக கும்பல் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். கலைஞர் பலமாக தாக்கப்பட்டார்.
அவரை சாக்கடையில் தூக்கி வீசி சென்றனர். அவர் இறந்துவிட்டார் என பலரும் நினைத்தனர். மறுநாள் காலை பெரியார் கேள்விப்பட்டு ஓடோடி வந்து மடியில் படுக்கவைத்து, மருந்து போட்டு ஈரோடு அழைத்து சென்றார்.
குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்ற கலைஞருக்கு உத்தரவிட்டார். பெரியாருடன் பழக புதிய பாதையை ஏற்படுத்திய ஊர் புதுவை. இதனால் புதுவை என்றால் கலைஞருக்கு தனி பாசம் வந்துவிடும்.
அவருக்கு மட்டுமல்ல, அவரின் மகனான எனக்கும் அந்த பாசம் வந்துவிடும். எனவே அந்த கொள்கை உணர்வோடுதான் சிவக்குமார் இல்ல விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.
25 ஆண்டாக சிவக்குமாரை நான் நன்கு அறிவேன். அப்போது எப்படி கொள்கை பிடிப்போடு பார்த்தேனோ? அதே கொள்கை பிடிப்போடு இன்றும் உள்ளார். அவர் பேசும்போது, எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். தேர்தல் சமயத்திலும் இதேபோல சொல்ல வேண்டும்.
அவர் சொல்வார், அவர் உரிமை. ஆனால் கட்சித்தலைமை சொன்னால் கட்டுப்பட்டு நடப்பார்.
நாஜிம் பேசும்போது, தெற்கு, மேற்கே, கிழக்கே அனுப்புவோம் என்றார். எதையும் பெரிதுபடுத்த விரும்பவில்லை. போட்டி இருந்தால்தான் கட்சி வளரும். கலைஞரே போட்டி நமக்குள் இருக்க வேண்டும், பொறாமையாக இருக்கக்கூடாது என சொல்வார்.
கலைஞர் உத்தரவிட்டால் அதை அப்படியே நிறைவேற்றுவார்கள். அதேபோல கலைஞரின் மகனான நான் உத்தரவிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற தொண்டர்கள் கழகத்தில் உள்ளார். இதுதான் கழகத்திற்கு பெருமை.
தலைமையின் கீழ் எந்தவித மாறுபாடும் இன்றி செயல்பட்டு வருபவர்களில் சிவக்குமாரும் ஒருவர். எனவே கட்சியின் தலைவர் என்ற முறையில் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் ஆட்சி மலர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என பெருமையோடு சொல்கிறோம்.
அப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது எளிதுதான். உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அந்த ஆசை உண்டு. கடந்த சட்டமன்ற தேர்தலில்கூட வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போய்விட்டது. புதுவையில் தற்போது ஒரு ஆட்சி நடந்து வருகிறது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். முதலமைச்சர் ஒருவர் உள்ளார், உயர்ந்த மனிதர்தான், உயரத்தில். ஆனால் அடிபணிந்து கிடக்கிறார்.
அவர் நல்லவர்தான், குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நல்லவர் வல்லவராக இருக்க வேண்டாமா? புதுவையில் கவர்னர் ஆட்டிப்படைக்கும் வகையில் ஆட்சி நடந்தால் வெட்கப்பட வேண்டாமா? வெகுண்டு எழ வேண்டாமா? அடங்கி, ஒடுங்கி ஒரு ஆட்சி நடப்பது புதுவை மாநிலத்துக்கு மிகப்பெரும் இழுக்காக உள்ளது.
ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளதா? இல்லை. இதனால்தான் நம் ஆட்சி வரவேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். புதுவையில் ஏற்கனவே ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி நடந்துள்ளது.
நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். வைத்திலிங்கம் காங்கிரஸ் முதலமைச்சராக கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? நாராயணசாமி நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? எந்த ஆட்சி நடந்தாலும் புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும்.
புதுவையில் விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியினை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சமயத்தில் யாரோடு கூட்டணி என்பதை முடிவு செய்வோம். வெற்றிக்கு அச்சாரமாக நாம் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும்.
அனைவரும் இது குடும்ப விழாவாக நடக்கிறது என கூறினர். இதைத்தான் அண்ணா, அனைவரையும் தம்பி, தம்பி என்றார். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை அனைவரையும் ஒன்று சேர்த்து உடன்பிறப்பே என கலைஞர் அழைத்தார். அவர்கள் வழியில் உங்களை வழிநடத்தும் பொறுப்பேற்றுள்ள நான் உங்களில் ஒருவனாக கடமையாற்றி வருகிறேன்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எந்த சூழலிலும் உங்களோடு ஒருவனாக இணைந்து நின்று பணியாற்ற காத்திருக்கிறேன். சிவக்குமார் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதது. அவரின் இல்ல விழா நம் விழாவாக கருதுகிறோம். உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன்.
புரட்சிக்கவிஞர் கூறியபடி, வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழுங்கள் என வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டுங்கள் என மணமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுவை மாநில எதிர்கட்சித்தலைவர் சிவா வரவேற்றார். திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மு.க.தமிழரசன், புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் மற்றும் தமிழக மாநகராட்சி, நகராட்சி மேயர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முடிவில் எஸ்பி.சிவக்குமார், மணமகன் ஆனந்தராஜ் ஆகியோர் நன்றி கூறினர். முன்னதாக திருமணத்திற்கு வந்தவர்களை எஸ்பி.சிவக்குமார், அவரின் மனைவி சித்ரா, மகள் காயத்ரி ஆகியோர் வரவேற்றனர்.
+2
- புதுவையின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமி இறந்தது பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
- அரசு அனுமதியின்றி தனிநபர் சேர்ந்து வைக்கப்பட்ட சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கடந்த மாதம் 30-ந் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது காமாட்சியம்மன் கோவில் வீதியில் திடீரென மயங்கி விழுந்துஉயிரிழந்தது.
புதுவையின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமி இறந்தது பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுமக்கள் தினமும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே யானை லட்சுமியின் நினைவாக அது உயிரிழந்த இடமான மிஷின்வீதி கலவை கல்லூரியையொட்டி உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியில் கடந்த 2-ந் தேதி சிலை வைக்கப்பட்டது. அரசு அனுமதியின்றி தனிநபர் சேர்ந்து வைக்கப்பட்ட அந்த சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.
தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொது இடத்தில் அனுமதியின்றி சிலை வைக்க கூடாது. இங்கு சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை என போலீசார் கூறினர்.
அப்போது விரைவில் சிலையை எடுத்து விடுவதாக சிலையை வைத்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சிலை எடுக்கபடாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதறகாக வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சிலையை அங்கிருந்து அகற்றகூடாது என நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிலையை அகற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட பொக்லைன் எந்திரம் மீது சிலர் கற்களை வீசினர். இதையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் யானை சிலையை அகற்றி நகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
அப்போது பெண் ஒருவர் யானை சிலையை கட்டிப்பிடித்து அங்கிருந்து எடுத்து செல்ல வேண்டாம் என்று கதறி அழுதார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- காரைக்காலில் டெங்கு பரவும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில், டெங்கு நோய் பரவும் பகுதிகளில், மாவட்ட நலவழித்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்கியதிலிருந்து, ஒரு சில நகர் பகுதிகளில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காரைக்கால் ராம்நகர், நேரு நகர் விரிவாக்கத்தில் இருவருக்கு நேற்று டெங்கு நோய் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமையில், நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதர ஆய்வாளர் சிவவடிவேல், சுகாதார உதவியாளர் மரிய ஜோசப் மற்றும் கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, டெங்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதி மக்களுக்கு, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து, அதனை தடுக்கும் முறைகள், சிகிச்சை முறை, டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, அப்பகுதி முழுவதும், கொசுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, நோய்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் பொதுமக்களிடம் பேசியதாவது:-மழை காலங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்க கூடும். அவற்றில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் முட்டையிட்டு கொசு உற்பத்தியை பெருக்கும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் இந்த மழைக்கால, பேரிடர் காலங்களில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருந்தால், மருந்துகளை உட்கொள்ளா மல், அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். என்றார்.
- கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
- கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர்:
மாண்டஸ் புயல் காரணமாக புதுவை கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் உருவாகி கரையையே ஆக்கிரமித்து உள்ளது.
இதே நிலையே கிருமாம்பாக்கத்தையடுத்த பனித்திட்டு, நரம்பை, மு.புதுகுப்பம், தவளக்குப்பம் அருகே நல்லவாடு, சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் பகுதியிலும் நிலவுகிறது.
புயல் கடந்த நிலையிலும் இன்று காலை கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டு (வயது 62). இவர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று காலை இவர் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் கடற்கரையை அலை சீற்றத்தை காண சென்றார்.
இந்த நிலையில் கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மயங்கிய நிலையில் மீட்டனர். மீட்கப்பட்ட பாண்டுவை கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாண்டு வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடற்கரைக்கு உடற்பயிற்சி செய்ய சென்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கடல் அலை சீற்றத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் உள்ளது. இதன் ஒரு பகுதி புதுவையைச் சேர்ந்ததாகவும் மற்றொரு பகுதி தமிழக பகுதியை சேர்ந்ததாகவும் உள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன. 3-க்கும் மேற்பட்ட படகுகளையும் அலைகள் இழுத்து சென்றது. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அலைகளில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று மதியம் பலத்த சூறை காற்றினால் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து அவ்வழியே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இன்று காலை மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
- திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம்
சேதராப்பட்டு.
மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகள் மேடான பாதுகாப்பாக இடங்களில் கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் புதுவை பிள்ளைச்சாவடி மீனவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பொம்மையார் பாளையத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் மோகன் 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் புதுவை பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஊருக்குள் வந்த கடல் நீரால் அங்கு வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ராட்சத அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததையடுத்து ஊர் மக்கள் மற்றும் மீனவ குப்பத்து மக்கள் இணைந்து புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுவைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே கடல் சீற்றத்திலிருந்து கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்தனர்.
காலாப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






