என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.
    • குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக குரங்கு ஒன்று சுற்றி திரிகிறது.

    அதன் 2 கைகளிலும் வெட்டு காயங்கள் காணப்படுகிறது. இந்த குரங்கை அப்பகுதி மக்கள் அனுதாபத்துடன் பார்த்து உணவு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் குரங்குக்கு பழத்தில் மயக்க மருந்து கொடுத்து பிடிக்க முயற்சித்தனர்.

    ஆனால் குரங்கு மருந்து இருப்பதை அறிந்து பழத்தை தூக்கி எறிந்து விட்டது. குரங்கு அதே பகுதியில் சுற்றி திரிவதால் கூண்டு வைத்து பிடித்து சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

    • புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது.
    • பால் விலை உயா்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நீலநிற பாக்கெட்டில் விற்பனையாகும் டோண்ட் மில்க் லிட்டர் ரூ.42-ல் இருந்து ரூ.46 ஆகவும், ஸ்பெஷல் டோண்ட் மில்க் (பச்சை நிற பாக்கெட்) லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.48 ஆகவும், ஸ்டாண்டர்டு மில்க் (ஆரஞ்சு நிற பாக்கெட்) ரூ.48-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த பால் விலை உயா்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

    • சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.

    அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன்.
    • புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிராந்தியமான ஏனாமில் நலத்திட்டங்களை நிறைவேற்றக்கோரி பா.ஜனதா ஆதரவாளரான சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் கடந்த 6-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்குக்கு நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ஏனாம் பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதுடன், அவர் ஏனாம் வந்தால் அவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்கு நடைபெற்ற மக்கள் கலாசார நிறைவு விழாவில் ரங்கசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் கடந்த சட்டசபை தேர்தலில் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னால் உடனடியாக இங்கு வரமுடியவில்லை . ஏனாம் மக்கள் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்துகொண்டுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுவை அரசு சுற்றுலாவை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவையின் அனைத்து பிராந்திய பகுதிகளான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவை அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

    அரசின் ஒருசில திட்டங்களை நிறைவேற்ற தாமதம் ஆகலாம். அதற்கு நம்மிடம் முழு அதிகாரம் இல்லாதது தான் காரணம். எனவே எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

    நமது அரசு மத்திய அரசின் உதவியோடு சிறப்பான நிலையை அடைய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கும். மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு புதுவையில் ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. இது நமக்கு கிடைத்த பெருமை.

    புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாம் மக்கள் குறைகள் குறித்து மனுவாக அளித்துள்ளார். இதில் குறிப்பாக ஏனாமில் சூதாட்ட விடுதிகள் அமைக்க கூடாது என்பது தான். சூதாட்டம் மிகவும் மோசமானது. எந்த இடத்திலும் சூதாட்ட விடுதி இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணம். எனவே சூதாட்ட விடுதிகளுக்கு அரசு அனுமதி அளிக்காது. புதுவை மக்களின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை விரைவில் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே .டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கரன், லட்சுமிகாந்தன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
    • கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

    ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

    இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    • பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.
    • தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 38). இவரது கணவர் சிவராஜா. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  ஹேமாவதியின் தந்தை பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹேமாவதி சைக்கிளில் தனது தந்தையை பார்க்க சென்றார்.

    அப்போது, மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்களில் சென்று, ஹேமாவதியிடம் ஆபசமாக பேசி மோட்டார் சைக்களில் ஏறுமாறு கூறிய தாக தெரிகிறது. இது குறித்து, ஹேமாவதி நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹேமாவதி கூறிய மர்ம நபரின் அடையாளங்களை வைத்து திருவாரூர் மாவட்டம் பாவட்ட குடியைச்சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

    • யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
    • அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.

    நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    • கார்த்திகேசன் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

    புதுச்சேரி: 

    காரைக்கால் அருகே நெடுங்காடு கூழ் குடித்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கார்த்திகேசன். இவரது வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகிலுள்ள குடும்பத்தார்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி அசோக் குமார் தலைமையில், வீரர்கள் விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். இருந்தும் குடிசை வீடு முற்றிலுமாக எரிந்து சேதமானது. வீட்டிலிருந்த சுமார் 50,000 மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

    விவரம் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கார்த்திகேசன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கார்த்திகேசன் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், இரண்டொரு நாளில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 50,000 வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

    வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

    இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டியுள்ளது.
    • ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி

    புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாகவும், 2-வது பெரிய நகரமாகவும் பாகூர் விளங்குகிறது. பாகூரின் முக்கிய பகுதியான மேரி வீதியில் தாலுகா, கொம்யூன், வங்கி, கருவூலம், பதிவு என பல முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதே பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி குறுகிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 100 குழந்தைகள் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பள்ளியின் நுழைவாயில் பகுதியிலேயே 2 சிறிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு கழிவறையை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கசெய்வதும் வழக்கம். ஆனால் இப்பள்ளியில் மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. இதனால் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து சிறுநீர் கழிக்க வேண்டியது உள்ளது.

    ஒரு சிறிய கழிவறையில் ஒரேநேரத்தில் 5 மாணவிகள் சென்று வருவதால் சுகாதாரம் என்பது அங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    அங்குள்ள அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியிலும் இதேநிலைதான் இருப்பதாக பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி கூடுதல் கழிவறை கட்டித் தருவதுடன் மாற்று இடத்தில் அடிப்படை வசதிகளுடன் பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×