என் மலர்
டெல்லி
- சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
டெல்லியின் யமுனா கதர் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீதா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அந்த நபரை போலீசார் மற்றும் டெல்லி தீயணைப்பு துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு வீரர் ஒருவர், "உயர் அழுத்த கம்பி தூணில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர், பிரதமர், முதல்வர், தலைமை நீதிபதியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்," என்றார்.
அந்த நபர் வங்காளம் அல்லது பீகாரைச் சேர்ந்தவர் என்றும், ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 நிர்ணயம்.
- நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்வு.
டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காற்று மாசை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம், ரூ. 150ல் இருந்து ரூ.300ஆக உயர்த்தப்படுகிறது.
- தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
- 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
புதுடெல்லி:
தொழில்துறை ஆல்கஹால் உற்பத்தியில் மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இருப்பதாக கடந்த 1997-ம் ஆண்டு 7 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு 2010-ம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொழில்துறை ஆல்கஹால் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்தனர். தொழில்துறை மதுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என்று 8 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள், மத்திய அரசுக்கு ஒழுங்குமுறை அதிகாரம் இல்லை. தொழில்துறை மதுபானம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும் மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்க முடியாது என்று தெரிவித்தனர். பெரும்பான்மையான தீர்ப்பை நீதிபதி பி.வி. நாகரத்னா ஏற்கவில்லை.
- தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
- இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் அமித் கத்யாலின் ரூ.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவர் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரெயில்வே நிலம் தொடர்பான வழக்கில் கத்யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளிநாடுகளில் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தது தெரியவந்தது.
குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரீஸ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் கத்யால், அவரது குடும்ப உறுப்பினர்கள் என இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.
- இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
- பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் தகுதி இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும்.
இறந்த ஊழியர்களுக்கு ஒரு மனைவி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே 2-வது மனைவியும் குடும்ப ஓய்வூதியம் உரிமை கோரும் போது பிரச்சனை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதே போல் ஒவ்வொரு வழக்குகளிலும் ஒவ்வொரு விதமான தீர்ப்புகள் வருகின்றன. முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் மனைவியை திருமணம் செய்யக்கூடாது என்று திருமணச் சட்டம் சொல்கிறது. இதே சட்டத்தை மத்திய அரசின் ஓய்வூதிய விதிகள் 2021-ம் ஆண்டும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் ஓய்வூதிய துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 மனைவிகள் இருந்தால், இரண்டாம் திருமணம் சட்டபூர்வமானதா? என்று சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்ட அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இரண்டாம் திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை தீர்மானிக்கப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்குவது முடிவு செய்யப்படும்.
இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2-வது திருமணம் எப்படி சட்டப்பூர்வமானதாக இருக்கும். இது ஏற்கனவே உள்ள குடும்ப ஓய்வூதிய சட்டத்தின் விதிகளை மீறுவது போல் உள்ளது. முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவருக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வது முற்றிலும் குற்றம். எனவே இந்த விவகாரத்தில் 2-ம் திருமணத்தை சட்டப்பூர்வமானதா என அலசி ஆராய்வது தேவையற்ற செய்ய செயல் என்றனர்.
தற்போது மத்திய அரசு ஊழியரின் இறுதி சம்பளத்தின் 30 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தற்போது குறைந்தபட்சமாக ரூ.3,500-ம், அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரையும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உள்ளன. இது ஊழியர்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.
பெற்றோர்கள் தாய், தந்தை என இருவரும் உயிருடன் இருந்தால் குடும்ப ஓய்வூதியம் இறுதி சம்பளத்தின் 75 சதவீதம் வரை வழங்கப்படும். பெற்றோரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் 60 சதவீதம் வரை வழங்கப்படும். ஊழியர்கள் பணி நேரத்தில் இறந்தால், 10 ஆண்டுகள் 50 சதவீதம் இறுதி சம்பளத்துடன் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு பின்னர் அது 30 சதவீதம் குறைக்கப்படும்.
- 11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
- இதில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஜெய்ப்பூர் அணி அதிரடியாக ஆடியது. இறுதியில் இந்தப் போட்டியில் 52-22 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைடன்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.
- வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
- அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷியலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை. எனவே 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி 1949 இல் கொண்டுவரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்று இருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.
எனவே அதை நீக்க உத்தரவிட விடமுடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்றக்கோரிய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
- தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.
இஸ்லாமிய மத பள்ளிகளான மதரஸாக்களை மூடி அங்கு பயிலும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸா பள்ளி மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நடத்தும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், உ.பி., திரிபுரா அரசுகளின் உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர். மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கனவே செயல்படுத்திய உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
- மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
- முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காசா பகுதியில் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது. 30 டன் மருந்துகள், உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.
இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
- வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
- காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்தும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்.பி.யை ராஜினாமா செய்தார்.
இதனால் நவம்பர் 13-ந்தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் வயநாட்டிற்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பார்க்க முடியாது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "வயநாட்டு மக்களுக்கு என் இதயத்தில் சிறந்த இடம் வைத்துள்ளேன். என்னுடைய சகோதரியை விட அவர்களுக்கு சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அவர் நாடாளுமன்றத்தில் வயநாட்டின் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- கனடாவுடனான மோதல்களுக்கு மத்தியில் இந்தியா தனது அணுசக்தி தடுப்பை வலுப்படுத்தியுள்ளது.
- இந்தியாவின் அடுத்தகட்ட எஸ்.எஸ்.பி.என்.கள் 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை அணுகுண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும்.
புதுடெல்லி:
இந்தியாவின் 2-வது எஸ்.எஸ்.பி.என்., ஐ.என்.எஸ். அரிகாட்டை கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இயக்கி வைத்தார்.
3-வது எஸ்.எஸ்.பி.என்., ஐ.என்.எஸ். அரிதாமான் அடுத்த ஆண்டு இயக்கப்படும்.
இந்நிலையில் இந்தியா தனது எதிரிகளுக்கு எதிரான அணுசக்தி தடுப்பை வலுப்படுத்த இந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் (எஸ்.பி.சி.) 4-வது அணுசக்தி ஏவுகணை (எஸ்.எஸ்.பி.என்.) நீர்மூழ்கிக் கப்பலை அமைதியாக ஏவியுள்ளது. கனடாவுடனான மோதல்களுக்கு மத்தியில் இந்தியா தனது அணுசக்தி தடுப்பை வலுப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 9-ந் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்திய-பசிபிக் பகுதியில் எதிரிகளை தடுக்கும் வகையில் 2 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான இந்திய கடற்படையின் திட்டங்களை அனுமதித்தது.
மோடி அரசு அணு ஆயுத தடுப்பு நடவடிக்கையில் வாய் திறக்கவில்லை என்றாலும் அக்டோபர் 16-ந் தேதி பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் தெலுங்கானாவில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தாமகுண்டம் வனப்பகுதியில் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட கடற்படைத் தளத்தைத் திறந்து வைத்த மறுநாளே இந்த புதிய 4-வது அணு சக்தி ஏவுகணை நீர்மூழ்கி கப்பலை இந்தியா ஏவியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.4 (எஸ்.எஸ்.பி.என்.) அணுசக்தி ஏவுகணை ஏறக்குறைய 75 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மற்றும் 3,500கி.மீ. தூரம் கொண்ட கே-4 அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது. இவை செங்குத்து ஏவுதல் அமைப்புகள் மூலம் ஏவப்படும்.
ஐ.என்.எஸ். அரிஹந்த் மற்றும் ஐ.என்.எஸ். அரிகாத் ஆகிய இரண்டும் ஏற்கனவே ஆழ்கடல் ரோந்துப் பணியில் உள்ளன. மேலும் ரஷ்ய அகுலா வகுப்பின் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் 2028-ல் குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அணு ஆயுதத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சக்ராவை தேசிய பாதுகாப்புத் திட்டமிடுபவர்கள் எஸ்.1 என்று பெயரிட்டதால், ஐ.என்.எஸ். அரிஹந்த் எஸ்.2, ஐ.என்.எஸ். அரிகாத் எஸ்.3, ஐ.என்.எஸ். அரிதாமன் எஸ்.4 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எனவே புதிதாக ஏவப்பட்ட அணுசக்தி ஏவுகணை எஸ்.4 என்ற பெயருடன் முறையாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவின் அடுத்தகட்ட எஸ்.எஸ்.பி.என்.கள் 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை அணுகுண்டு ஏவுகணைகளை சுமந்து செல்லும்.
சீனா போன்ற பலம் வாய்ந்த எதிரி நாடுகளுக்கு எதிராக கடல் அடிப்படையிலான அணு ஏவுகணைகளை தடுப்பதில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது.
எனவே அணுசக்தி தாக்குதல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
நீர்மூழ்கி கப்பலின் 6-வது ஐ.என்.எஸ். வாக்ஷிர் இந்த ஆண்டு டிசம்பரில் இயக்கப்படவுள்ளதால் வழக்கமான நீழ்மூழ்கி கப்பல் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.






