என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    பொடித்த சர்க்கரை - 1/2 கப்
    கஸ்டர்ட் பவுடர் - 1/4 கப்
    டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கப்
    முந்திரிப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    வெண்ணெய் - 6 மேசைக்கரண்டி
    பால் - 1/4 கப்
    பேகிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
    பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
    உப்பு - ஒரு சிட்டிகை
    ரோஸ் எசன்ஸ் -1/4 தே.க

    செய்முறை

    பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, வெண்ணெய் சேர்த்துக் கரண்டி வைத்து கிரீம் பதத்திற்கு இரண்டும் ஒன்று சேர்த்து வரும் வரை நன்றாக கலக்கவும்.

    பிறகு அதில் மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.

    அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கரண்டி வைத்து நன்றாக கலந்து விடவும்.

    பிறகு டூட்டி ஃப்ரூட்டி, முந்திரி பருப்பு, ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

    சிறிது சிறிதாக பால் சேர்த்து ஒன்று சேர பிசையவும். (அழுத்தி பிசைய கூடாது)

    நீளவாக்கில் உருட்டி பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து (சிறிது அழுத்தமாக இருக்கும்) கவரை பிரித்து வட்ட வடிவில் வெட்டவும்.

    பிறகு அதை தட்டில் அடுக்கி மைக்ரோவேவ் ஓவனில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.(அவனை 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடு படுத்திக் கொள்ளவும்.)

    சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட் தயார்.
    ரவை பயன்படுத்தி கேசரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து எளிய முறையில் பத்தே நிமிடத்தில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான அளவு

    அவல் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    கேசரி பவுடர் - 2 சிட்டிகை
    முந்திரி - 15
    நெய் - 1/2 கப்
    ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை

    அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

    முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.

    அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.

    கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் கமகம அவல் கேசரி ரெடி.
    அவலில் சிச்சடி, உப்புமா, லட்டு என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அவல் - ஒரு கப்
    சர்க்கரை - ஒரு கப்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    வெதுவெதுப்பான பால் - மாவு பிசையத் தேவையான அளவு
    சர்க்கரை இல்லாத கோவா - ஒரு கப் (உதிர்த்துக்கொள்ளவும்)
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
    பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) - 15
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

    செய்முறை:

    வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு சர்க்கரை கரைந்ததும் அடுப்பை நிறுத்தி சர்க்கரைப் பாகை ஆறவிடவும்.

    அதில் குங்குமப்பூ சேர்க்கவும்.

    வாய் அகன்ற பாத்திரத்தில் அவல் மாவு, சர்க்கரை இல்லாத கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, பால் தெளித்து மிருதுவாகப் பிசையவும்.

    பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    ஓர் உருண்டையை எடுத்து அதன் நடுவே பாதி பேரீச்சை வைத்து மூடி உருட்டிக்கொள்ளவும். இப்படி எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அவல் - கோவா உருண்டைகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.

    அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.

    சூப்பரான அவல் குலாப் ஜாமூன் ரெடி.
    குழந்தைகளுக்கு தந்தூரி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டலில் செய்வது போன்று வீட்டிலேயே எளிய முறையில் தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
    தந்தூரி மசாலா - சிறிதளவு
    தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
    எலுமிச்சம்பழம் - ஒன்று
    வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
    மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.

    வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.

    பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.

    சூப்பரான தந்தூரி சிக்கன் ரெடி.

    குழந்தைகளுக்கு தேங்காய் பிஸ்கட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கடைகளில் கிடைக்கும் தேங்காய் பிஸ்கட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 100 கிராம்
    வெண்ணெய் - 80 கிராம்
    சர்க்கரை - 40 கிராம்
    வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
    வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
    பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
    உப்பு - சிட்டிகை

    செய்முறை

    முதலில் உருக்கிய வெண்ணெயுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும்.

    அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பி

    ன் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.

    பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.
    கத்திரிக்காயில் சட்னி, குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்திரிக்காயை வைத்து சூப்பரான தம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 250 கிராம்,   
    வெங்காயம் - ஒன்று,
    கத்திரிக்காய் - 3 (சுமாரான அளவு, கசப்பில்லாதது),
    தக்காளி - 3,
    மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன்,
    தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - ஒரு டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்திரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி… மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.
    (அல்லது தோசைக்கல்லில் போட்டு வறுத்தெடுக்கவும் செய்யலாம்).

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்…

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும்.

    இப்போது இதில் அரை வேக்காடாக வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி, அதில் பாதியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, பாத்திரத்தில் உள்ள கலவையில் கத்திரிக்காயை பரப்பி, எடுத்து வைத்துள்ள சாதத்தை அதன்மேல் பரப்பி, அதன்மேல் நெய் ஊற்றி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் சிறு தீயில் வைத்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

    சூப்பரான சூப்பரான கத்திரிக்காய் தம் பிரியாணி ரெடி.
    நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இன்று ஜவ்வரிசியில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்,
    புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 5,
    இஞ்சி - சிறிய துண்டு,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:


    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும்.

    புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும்.

    அரிசி நன்கு அரைபட்டவுடன்… ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

    மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.

    தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

    புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

    சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - ஒரு கப்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுந்து - அரை டீஸ்பூன்
    கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    வெங்காயம் - ஒன்று
    பூண்டு - 10 பல்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை- சிறிதளவு
    நெய், உப்பு - தேவைக்கு

    செய்முறை:


    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

    இந்நிலையில், சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இறுதியாக, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சுடச்சுட பரிமாறவும்.

    சுவையான பூண்டு மிளகு சாதம் ரெடி..!
    தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஆலு மசாலாவை இன்று எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக் கிழங்கு - அரை கிலோ,
    பெரிய வெங்காயம் - 1,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்,
    தனியா தூள், சீரகத் தூள் - தலா 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா அரை டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள்.

    உருளைக்கிகிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!
    ஒரு முறை சாப்பிட்டால் மறக்க முடியாத சுவையை நாவிற்கு தரும் வட்டலப்பத்தை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 10
    சர்க்கரை - 2 ஆழாக்கு
    தேங்காய் - 1
    ஏலக்காய் - 3
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை

    முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டி வைக்கவும்.

    சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்பு தேங்காயை அரைத்து சாறை பிழிந்தெடுத்து வடிகட்டிகொள்ளளவும். இதில் முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்தி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.

    வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும்.

    கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

    ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    குறிப்பு

    வட்டலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்.
    தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை பட்டாணி - 1 கப்,
    பெரிய வெங்காயம் - 2.

    தாளிக்க:

    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா - 1 கட்டு,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்,
    பச்சை மிளகாய் - 5,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    முந்திரிப் பருப்பு - 6,
    பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள்.

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.

    சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!
    ஆட்டுக் குடலில் கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 100 கிராம்
    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்
    மஞ்சள்த்தூள் - சிறிதளவு
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி.
    ×