என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பீட்ரூட்டில் அல்வா, பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பீட்ரூட் வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - ஒன்று
    அரிசி - ஒரு கப்
    கொத்தமல்லி இலை, புதினா இலை (சேர்த்து) - ஒரு கப்
    பச்சை மிளகாய் - ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - ஒன்று
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - ஒரு இஞ்ச் நீளத் துண்டு
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 3
    நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாகக் கழுவி வைக்கவும்.

    பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும்.

    அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கப் வருமாறு கலந்து வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் (அ) நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இலைகள் வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

    சுவையான பீட்ரூட் பிரியாணியை லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுக்கவும்.

    இந்தப் பிரியாணியின் கலர் வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்; சுவையும் பிரமாதமாக இருக்கும்.

    சப்பாத்தி, நாண், தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த தக்காளி தால். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மசூர் தால் - 1 கப்,
    தக்காளி - 4,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 5 பல்,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள்.

    தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள்.

    இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    கடைசியாக, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

    சூப்பரான தக்காளி தால் ரெடி.

    குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.

    இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபமானது. சுவை நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 10
    சர்க்கரை - 2 ஆழாக்கு
    தேங்காய் - 1
    ஏலக்காய் - 3
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை

    முட்டையை நுரைபொங்கும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கி வடிகட்டி வைக்கவும்.

    சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பின்பு தேங்காயை அரைத்து பிழிந்தெடுத்து வடிகட்டிகொள்ளளவும். இதில் முதல் பாலை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    தேங்காய் பாலில் பொடித்த சர்க்கரையையும் அடித்து வைத்த முட்டையையும் நன்றாக கலந்து கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    ஏலக்காயை வாணலியில் வறுத்துக்பொடித்து முட்டை கலவையில் 1 சிட்டிகை உப்புடன் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறிது நெய், தடவி அதில் இந்த கலவையை ஊற்றி மூடி வைக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கலவை வேக ஆரம்பித்தவுடன் மீதமுள்ள நறுக்கிய முந்திரி பருப்பை மேலே தூவி மூடியை கொண்டு மூடி விடவும்.

    வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சுத்தமான குச்சியை கலவைக்குள் விட்டு பார்க்கவும்.

    கலவை வெந்து இருந்தால் குச்சியில் ஒட்டாது. பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

    ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    குறிப்பு

    வட்டலப்பத்தில் தண்ணீர் இறங்கி விடாமல் கவனமாக மூடியை திறக்கவும்.
    பெண்கள் தங்கள் வீடுகளில் மாம்பழ பர்பி தயாரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறி அசத்தலாம். இந்த பர்பி தயாரிக்கும் முறை விவரம் வருமாறு:
    தேவையான பொருட்கள்:

    மாம்பழ துண்டுகள் - 2 கப்
    பால் - 2 கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    ரவை - 1.5 கப்
    சர்க்கரை - 2 கப்
    நெய் - 1 கப்
    ஏலக்காய் தூள் - 1.5 தேக்கரண்டி

    செய்முறை:


    ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

    தேங்காய் துருவலுடன் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் ரவை சேர்த்து அடுப்பில் வேக வைக்கவும்.

    இதனுடன் மாம்பழம், சர்க்கரை சேர்த்து கிளறவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகள் ஆக்கவும்.

    இப்போது மாம்பழ பர்ஃபி ரெடியாகி விட்டது.

    பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.
    தேவையான பொருட்கள்

    பட்டர் பீன்ஸ் - 150 கிராம்
    உருளைக்கிழங்கு - 1
    பெரிய வெங்காயம் - 2
    மீடியம் சைஸ் தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு
    கொத்தமல்லி இலை, புதினா இலை - 1 கைப்பிடி
    நெய் - ஒரு ஸ்பூன்

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் போட்டு நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    பின்னர் அதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவி வைத்துள்ள பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் நாம் ஏற்கனவே 10 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியை உள்ளே சேர்த்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். இறுதியாக உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு குக்கரை மூடவும்

    இப்போது சத்தான சுவையான பட்டர் பீன்ஸ் புலாவ் ரெடி
    பால் போளி, தேங்காய்ப் போளி, பருப்புப் போளி தான் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. நெல்லிக்காய் கிடைக்கும் சீஸனில் இந்தப் போளியை செய்து சுவைக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா மாவு - 50 கிராம்,
    பெரிய நெல்லிக்காய் - 5,
    நெய் - 75 மில்லி,
    கடலைப்பருப்பு - 50 கிராம்,
    வெல்லம் - 100 கிராம் (பொடித்துக்கொள்ளவும்),
    தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை,
    நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும்.

    நெல்லிக்காயை வேகவைத்து உதிர்த்து கொட்டை எடுக்கவும்.

    கடலைப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து தண்ணீர் வடிக்கவும்.

    வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

    வேக வைத்த கடலைப்பருப்பு, நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு வெல்லத் தண்ணீரை விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    வாணலியில் மீதம் உள்ள வெல்லத் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஆறிய உடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    ஒரு வாழையிலையில் சிறிதளவு நெய் தடவி, மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து லேசாக குழவியால் உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி கைகளால் போளி வடிவில் தட்டவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தீயைக் குறைத்து, தட்டிவைத்து இருக்கும் போளியை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் நெய் தடவி வாட்டி எடுக்கவும்.

    தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. தேங்காய் பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் அருமையாக இருக்கும். இன்று ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை பட்டாணி - அரை கப்,
    பச்சரிசி - 2 கப்,
    தேங்காய்ப் பால் - 2 கப்,
    வெங்காயம் - 1
    தக்காளி - 6,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள்.

    தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

    சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

    புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

    சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் ரெடி.
    ஆயுத பூஜையை முன்னிட்டு அனைவரின் வீட்டிலும் பொரி இருக்கும். அந்த பொரியை அப்படியே சாப்பிடாமல் அதில் மசாலா சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    பொரி - 2 கப்
    பொட்டுக்கடலை - 1/2 கப்
    கறிவேப்பிலை - 20
    மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
    பூண்டு பல் - 6
    உப்பு - தேவையான அளவு
    வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, தட்டிய பூண்டு, வேர்க்கடலை, மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை வதக்கி கொள்ளவும்.

    பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதில் பொரி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு அந்த கடாய் சூட்டிலேயே நன்கு கலந்துவிட வேண்டும். அவ்வளவு தான் எளிய முறையில் சுவையான மசாலா பொரி தயார்.
    உங்கள் வீட்டில் இரவு செய்த சப்பாத்தி மீதம் இருந்தால், அதனைக் கொண்டு காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு அருமையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சப்பாத்தி - 4
    முட்டைக்கோஸ் - 1/4 கப்
    கேரட் - 2
    குடைமிளகாய் - 1 சிறியது
    பூண்டு - 5 பற்கள்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் சப்பாத்தியை கத்தரிக்கோல் பயன்படுத்தி நூடுல்ஸ் போன்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்பு அதில் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

    பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    பின் வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சப்பாத்தி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி!!!
    எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணைக்கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.
    தேவையான பொருட்கள்:

    கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்
    பிரெட் தூள் - தேவையான அளவு
    தனியா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
    புளி - சிறிதளவு
    புதினா - தேவையான அளவு
    சோள மாவு - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    முதலில் கருணைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்த கருணைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

    தனியா தூள், கரம் மசாலா தூள் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    பிறகு இவற்றை நன்றாக வதக்கிவிட்டு இதில் மசித்த கருணைக்கிழங்கை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் புதினா, புளி கரைச்சல், உப்பு, சோள மாவு, பிரெட் தூள் சேர்த்து கருணைக்கிழங்குடன் மசாலா நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

    கருணைக்கிழங்கு மசாலாவை கபாப் குச்சியில் சொருகி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த கபாப்பை வைத்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு கபாப் ரெடி.
    வீட்டில் ரசம் மீந்து விட்டால் கவலைப்படாதீங்க. சூடான வடை செய்து அதை ரசத்தில் ஊற வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 2 கப்
    உளுந்தம் பருப்பு - 1 கப்
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 1

    ரசத்திற்கு :

    நீர் - தேவையான அளவு
    மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    புளி - 3 தேக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    கொத்தமல்லிதழை - சிறிதளவு

    செய்முறை :

    வடை செய்ய :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

    அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை உருண்டைகளாக பிடித்து போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    ரசம் செய்ய :

    பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

    கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு, மல்லித் தூள், நசுக்கிய பூண்டு, புளி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு புளியை தண்ணீரில் கரைக்கவும். நன்றாக கரைத்த பின்னர் புளி கோதல் மற்றும் பூண்டின் தோலை வெளியேற்றி விடவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

    பின்பு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க வேண்டிய அவசியமில்லை.

    பின்பு வடையை அதில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    மழைக்கு சூப்பரான ரச வடை ரெடி.

    பழைய ரசம் இருந்தாலும் அதையும் பயன்படுத்தலாம்.
    பல்வேறு வகையான குருமாவை சுவைத்து இருப்பீங்க. இன்று தக்காளியை வைத்து சூப்பரான தக்காளி குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெ. வெங்காயம் - 3,
    தக்காளி - 8,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கறிவேப்பிலை - சிறிது.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 4 பல்,
    பச்சை மிளகாய் - 6,
    பட்டை, லவங்கம் - தலா 1,
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு.

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்து கொள்ளுங்கள்.

    பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    மணமணக்கும் தக்காளி குருமா ரெடி.
    ×