என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 1  
    மோர் - 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:


    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதனுடன் கடலை மாவு, சோள மாவு, பெருஞ்சீரகம், மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் உதிரியாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

    சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.
    கர்நாடகத்தில் மங்களூர் பஜ்ஜி, மங்களூர் போண்டா போன்ற ஸ்நாக்ஸ் மிகவும் பிரபலமானது. இங்கு அவற்றில் இனிப்பான மங்களூர் போண்டாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    தயிர் - 1 1/2 கப்
    பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, அதில் பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர் சேர்த்து ஓரளவு போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பான மங்களூர் போண்டா ரெடி!!!
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பாசிப்பருப்பு போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    பாசிப்பருப்பு - 1 கப்,
    துருவிய சுரைக்காய் - அரை கப்,
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 4  
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:  


    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள்.

    அதனுடன் துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கொத்தமல்லித்தழை சேருங்கள்.

    சுரைக்காயை நன்கு பிழிந்து நீரை எடுத்து விட்டு பருப்போடு சேர்த்து, உப்பையும் போட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு போண்டாக்களாக கிள்ளிப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாசிப்பருப்பு போண்டா ரெடி.
    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் பிடித்தது. பலாச்சுளைகளை சாப்பிடும் போது அதிலிருக்கும் கொட்டையை தூக்கி எறியாமல் சுவையான வடை தயாரிக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பலாக்கொட்டை - 25
    அரிசி மாவு - 2 கப்
    வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
    கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
    இஞ்சி - 1 அங்குலம் ( பொடியாக நறுக்கியது)
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    ஓமம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் பலாக்கொட்கைளை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின்பு அவற்றை ஆறவைத்து மேலே இருக்கும் தோலை நீக்கி விட வேண்டும். பிறகு பலாக்கொட்கைளை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

    இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி தழை, மிளகாய்த்தூள், ஓமம், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு அந்த கலவையில் அரிசி மாவு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும்.

    அந்த மாவை சிறிது நேரம் மூடி வைத்து வடை போல தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    25 பலாக்கொட்டைகளில் 35 வடைகள் தயாரிக்கலாம்.

    சூப்பரான பலாக்கொட்டை வடை தயார்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று நூடுல்ஸ், சிக்கன் சேர்த்து சூப்பரான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - 100 கிராம்
    சிக்கன் - 300 கிராம்
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகு பொடி - தேவையான அளவு
    ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    ஸ்பிரிங் ஆனியன் - 3
    பூண்டு - 5 பற்கள்

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, பூண்டு, கேரட், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் எலும்புகள் கொண்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதோடு காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் இல்லாத சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    குக்கரை மூடி 15 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் விட்டு எடுத்து வைத்துள்ள எலும்புகள் இல்லா சிக்கினை அதில் போடவும். சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    அதில் மிளகு பொடி சேர்த்துக் கொண்டு 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

    சிக்கனின் உள்ள நீர் வற்றியதும் நூடுல்ஸை சேர்த்து அதோடு குக்கரின் வேக வைத்த நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வேக விடுங்கள். அளவுக்கு அதிகமாகவும் நூடுல்ஸ் வேகக் கூடாது. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கெட்டியான பதம் வரும்போது வேகவைத்த காய்கறிகள் மற்றும் எலும்பு சிக்கனை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறுங்கள்.

    இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.
    இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, பூரிக்கு இந்த குருமா தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 250 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பிரஷ் க்ரீம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு…

    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1

    அரைப்பதற்கு…

    துருவிய தேங்காய் - 1/2 கப்
    முந்திரி - 8
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5

    செய்முறை:

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

    பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 5-10 நிமிடம், எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!
    ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம். அந்த வகையில் சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லா சிக்கன் துண்டுகள் - 10
    மைதா - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று
    முட்டைகோஸ் - ஒரு கப்
    மயோனீஸ் - ஒரு கப்
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைசாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, தயிர், எண்ணெய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும். இதனை, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில், சிக்கன் துண்டுகள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தயிர், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் 45 நிவீடங்கள் ஊற வைக்கவும்.

    தற்போது, மாவை உருட்டி, திரட்டி எடுத்து சப்பாத்தி போல் சுட்டுக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து வேக வைத்து வறுத்தெடுக்கவும். சிக்கன் நன்றாக வேகும்வரை பிரட்டிக் கொண்டே இருக்கவும். சிக்கன் வெந்ததும் ஆறவைத்து, சிறிய துண்டுகளாக பீய்த்துக் கொள்ளவும்.

    ஒரு தட்டில் ரொட்டியை வைத்து அதன் மீது மயோனீஸ் தடவி, அதன் நடுவில் சிறிதளவு சிக்கனை வைக்கவும்.

    பின்னர் அதன்மீது, பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் வைத்து ரோல் செய்யவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான சிக்கன் ஷவர்மா ரெடி..!.
    பருப்பு, தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமாக பலாப்பழத்தை வைத்து அருமையான பலாப்பழ போளி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கொட்டை நீக்கிய பலாச்சுளை - 20,
    கோதுமை மாவு - 100 கிராம்,
    பொடித்த வெல்லம் - 200 கிராம்,
    கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு கப்,
    ஏலக்காய்த் தூள் - சிறிதளவு,
    நெய் - 50 மி.லி,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்.

    செய்முறை :

    கோதுமை மாவைச் சிறிது தண்ணீர், எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  

    கடலைப் பருப்பை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வேகவைத்து கொள்ளவும்.

    பலாச்சுளைகளை வேகவைத்து கொள்ளவும்.

    மிக்சியில் வேக வைத்த கடலைப்பருப்பு, பலாச்சுளையுடன் தேங்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.

    வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து அதில் அரைத்த தேங்காய்ப் பருப்புடன் சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

    கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி பூரணமாக உருட்டிக்கொள்ளவும்.

    பிசைந்த மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

    இலையில் சிறிது நெய் தடவி அதில் கோதுமை மாவை அப்பள வடிவில் திரட்டி அதன் நடுவில் பலாச்சுளை பூர்ணத்தை வைத்து மூடி, போளியாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள போளியை போட்டு மிதமான தீயில், இருபுறமும் நெய் தடவி, வாட்டி எடுக்கவும்.

    சூப்பரான பலாப்பழ போளி ரெடி.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் லாலிபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 6
    வெங்காயம் - 1
    பிரெட் தூள் - 5 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 5 டீஸ்பூன்
    கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், இடித்து வைத்த இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

    அத்துடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

    பிறகு, கரம் மசாலா, தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பின்னர், சிறிய துண்டுகளாக எடுத்து பெரிய நெல்லிக்காய் அளவில் உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சோள மாவில் முக்கி எடுத்து பிறகு, பிரெட் தூளில் உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்துவைத்த உருளைக்கிழங்கு உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இறுதியாக, ஒவ்வொரு உருண்டைகளிலும் குச்சி சொறுகினால், சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி..
    தயிர் சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த ஊறுகாய் அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சை மிளகாய் - 20,
    எள் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
    கடுகு - 4 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும்.

    பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும்.

    பிறகு சீரகம் எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும்.

    எண்ணெயில் கடுகு தாளித்து ஸ்டஃப்டு பச்சை மிளகாயை கொட்டவும்.

    2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும்.

    பிறகு பயன்படுத்தவும்.

    சூப்பரான ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய் ரெடி.
    நாளை விநாயகர் சதுர்த்திக்கு சத்தான கொழுக்கட்டைகளை படைத்து விநாயகரை வழிபாடு செய்யலாம். அந்த வகையில் இன்று சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - ஒரு கப்,
    தினை - ஒரு கப்,
    கேழ்வரகு - ஒரு கப்,
    ஏலக்காய் - 4,
    கருப்பட்டி - 2 கப்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்

    செய்முறை

    கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை கொழுக்கட்டையாக பிடிக்க வேண்டும்.

    பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லித் தட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை ரெடி.
    கோதுமை மாவில் சப்பாத்தி, தோசை, பூரி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை மாவை வைத்து இந்த விநாயகர் சதுர்த்திக்கு சூப்பரான கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்
    வெல்லம் - 1/2 கப்
    தண்ணீர் - 1 கப்
    வறுத்த தேங்காய் துருவல் - அரை கப்
    ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
    சுக்கு தூள் - 1/4 ஸ்பூன்
    நெய் - 1 ஸ்பூன்

    செய்முறை

    கோதுமை மாவை ஒரு வெள்ளை துணியில் கட்டி இட்லி தட்டில் வைத்து 8 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

    வெல்லத்தை தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

    தேங்காய் துருவலை நெய் விட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஆவியில் வேகவைத்து எடுத்த மாவை ஆற வைத்து அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள், வறுத்து வைத்த தேங்காய் துருவல் சேர்த்து சூடான வெல்ல தண்ணீர்

    ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

    மாவை நன்கு பிசைந்ததும் கையால் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.

    உடலுக்கு நலம் தரும் கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை தயார்.

    ×