என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கலகத் தலைவன்'.
    • இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    நிதி அகர்வால்

    இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "அவர் இயற்கையான ஒரு நடிகர். இந்த படத்தின் திரு கதாபாத்திரத்திற்கு அவர் தான் பர்ஃபெக்ட். மிகவும் நல்ல நடித்திருக்கிறார். ரசிகர்கள் இந்த படத்தில் உதயநிதி சாரின் புதிய தோற்றத்தை பார்ப்பார்கள். இந்த படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்" என்று கூறினார். 

    • ஜீவா தற்போது நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம்.
    • இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    வரலாறு முக்கியம்

    சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    அதன்படி, வரலாறு முக்கியம் திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 



    • இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்த திரைப்படம் ‘யசோதா’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    யசோதா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் வெளியான பத்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    • சசிகுமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காரி'.
    • இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


    காரி

    இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் இயக்குனர் ஹேமந்த் பேசியதாவது, "இந்த படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமாரை மேன் ஆப் தி ஆக்சன் என்று கூறினால், ஹீரோ சசிகுமாரை மேன் ஆஃப் ட்ரூ வேர்ட்ஸ் என்று சொல்வேன். படத்தின் கதையை கேட்ட சசிகுமார் நீங்க கதை சொன்ன மாதிரியே படமும் எடுத்துட்டா வெற்றிதான் என்று உற்சாகப்படுத்தினார்.


    காரி படக்குழு

    லோக்கல் என்ற வார்த்தையை மோசமான வார்த்தையாக நினைக்கவேண்டாம் லோக்கல் என்றால் நேட்டிவிட்டியை குறிக்கும். எவ்வளவு நேட்டிவிட்டியாக இருக்கிறோமோ அந்த அளவிற்கு மதிப்பு இருக்கும். ஆனால். இப்போது அந்த நேட்டிவிட்டியை தகர்க்கும் விதமாக தான் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்கு தடை விதிக்க முயற்சிப்பது.


    காரி படக்குழு

    ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு என்றால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் இளைஞர்கள் இன்னும் கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை திசை திருப்புவதற்காகத்தான் ஜல்லிக்கட்டு தடை போன்ற விஷயங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த படத்தில் மனிதர்களின் நம்பிக்கை, உறவு சிக்கல்கள் ஆகியவற்றை கூறியுள்ளோம். மொத்தத்தில் இந்த படம் எமோசனல் ஆக்சன் டிராமாவாக இருக்கும்" என்றார்.

    • இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் ‘பட்டத்து அரசன்’.
    • ’பட்டத்து அரசன்’ திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    2010-ஆம் ஆண்டு வெளியான 'பானா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த 'பரதேசி', 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 'குறுதி ஆட்டம்', 'டிரிக்கர்' போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பட்டத்து அரசன்

    இவர் தற்போது 'களவாணி', 'வாகை சூடவா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    பட்டத்து அரசன்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகை ராதிகா, விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'பட்டத்து அரசன்' திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.
    • இவர் வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த அப்பாஸ் 1996-ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து,'விஐபி', 'பூச்சூடவா', 'படையப்பா', 'திருட்டுப் பயலே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.


    அப்பாஸ்

    இந்நிலையில், நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    • பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.
    • இருவரும் பொது நிகழ்ச்சியிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபகாலமாக இவர் பாடகியும் நடிகையுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.


    ஹிருத்திக் ரோஷன் - ஷபா ஆசாத்

    இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்தே கலந்து கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷனும் ஷபா ஆசாத்தும் மும்பையில் மூன்று மாடிகள் கொண்ட ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற முடிவு செய்துள்ளதாகவும் இந்த வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.


    ஹிருத்திக் ரோஷன் - ஷபா ஆசாத்

    இந்நிலையில், இந்த தகவலை மறுத்துள்ள நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இதில் எந்த உண்மையும் இல்லை. ஒரு பொது நபராக நான் ஆர்வத்தின் கீழ் இருப்பேன் என்று புரிந்து கொள்கிறேன். ஆனால், நாம் தவறான தகவல்களை தள்ளி வைப்பது நல்லது. இது ஒரு பொறுப்பான வேலை" என்று குறிப்பிட்டுள்ளார்.



    • அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
    • நேற்று நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    காரி படக்குழு

    காரி படக்குழு

     

    இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் சசிகுமார் பேசியதாவது, "இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

    காரி படக்குழு

    காரி படக்குழு

     

    படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

    ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும்.

    சசிகுமார்

    சசிகுமார்

     

    அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்டநாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன். ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை.

    இது மக்களுக்காக எடுத்த படம். ஜல்லிக்கட்டு பற்றிய படம். அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன். அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்" என்று கூறினார்.

    • சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது.
    • இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இதன் தொடக்க விழாவில் இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.


    சிரஞ்சீவி

    இதைத்தொடர்ந்து நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார். ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார் என மத்திய மந்திரி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சிரஞ்சீவி மாறுபட்ட நடிப்புத் திறனால் பல பாத்திரங்களில் நடித்து  சில தலைமுறை பார்வையாளர்களின் பாராட்டையும் மரியாதையையும் பெற்றுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.



    • 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது.
    • இந்த விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

    மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். கோவாவில் நேற்று தொடங்கியிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன.

     

    ஜெய்பீம்

    ஜெய்பீம்

    குறிப்பாக இந்திய அளவில் சிறந்த கதை அம்சம் கொண்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் ஒளிபரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 20 ஆவணப்படங்கள் மற்றும் குறும் படங்கள் ஆகும். இந்த விழாவில் தமிழில் த.செ.ஞானவேல் இயக்கி, சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படமும், கமலகண்ணன் இயக்கிய குரங்குபெடல் திரைப்படமும், ரா.வெங்கட் இயக்கிய கிடா என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

    • ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’.
    • இப்படம் புதிய கோணத்தில் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2002- ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பாபா'. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக 'பாபா' படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.


    பாபா

    மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.


    பாபா

    'பாபா'வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி அடிக்கடி பயன்படுத்தும் 'பாபா' முத்திரை தற்போது வரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'பாபா' திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது.


    பாபா

    இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தபடம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'பாபா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் வயது மூப்பு காரணமாக காலமானார்.
    • சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபலமான வசனகர்த்தவாக அறியப்பட்ட ஆரூர்தாஸ் சென்னையில் மரணமடைந்தார் (வயது 91). வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது உடல் தி.நகரில் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு பேபி என்ற மனைவியும், ரவிசந்திரன், தாராதேவி, ஆஷாதேவி ஆகிய மகன், மகள்களும் இருக்கிறார்கள்.

    1955-ம் ஆண்டு நாட்டிய தாரா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பிறகு வசனகர்த்தா தஞ்சை ராமையாதாஸிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்படங்களுக்கு பணியாற்றி வந்தார். திருவாரூர் ஜேசுதாஸ் என்ற இவரது பெயரை தஞ்சை ராமையாதாஸ் ஆரூர் தாஸ் என்று மாற்றி வைத்தார். இதன் பிறகு வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராக சவுபாக்யவதி என்ற படத்தில் சேர்ந்தார்.

    பிசியாக பணியாற்றிக் கொண்டிருந்த நாராயணன், தான் வசனம் எழுத வேண்டிய ஒரு காட்சியை ஆரூர் தாஸிடம் கொடுத்து எழுதச்சொல்ல, அவருக்குப் பிடித்துப்போனது. பிறகு தேவரின் வாழ வைத்த தெய்வம் படத்தின் மூலம் தனியாக வசனம் எழுதத்தொடங்கினார். ஜெமினி கணேசனும், சாவித்ரியும் பாசமலர் பட வாய்ப்பை தாசுக்குப் பெற்றுத்தர திரையுலகில் ஆரூர் தாஸின் சகாப்தம் ஆரம்பித்தது.

    திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரின் படங்களுக்கு ஒரே நேரத்தில் வசனம் எழுதி அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதோடு பாசமலர் படத்தில் இவர் எழுதிய ஆனந்தா என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக் கண்ணீரைத்தன் பார்க்க வேண்டும் என்ற வசனம் இன்றளவுக்கும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான வசனமாக இருந்து வருகிறது.

     

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இந்த வசனத்தை எழுதி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனின் படங்களுக்கு பெரும்பாலும் ஆரூதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். எம்;ஜி.ஆர். நடித்த வேட்டைக்காரன், அன்பே வா, தாய் சொல்லை தட்டாதே, தாயைக் காத்த தனையன், தொழிலாளி, தனிப்பிறவி, ஆசைமுகம், நீதிக்கு தலைவணங்கு என்று பல்வேறு படங்களில் எழுதி அசாத்திய சாதனை புரிந்தார்.

    திரையுலகில் 850க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியிருக்கும் இவர் பெண் என்றால் பெண் என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கியிருக்கிறார். இவர் 100-க்கும் அதிகமான மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்திற்கு எழுதியிருந்தார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்திருக்கிறது. சத்யபாமா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் தன்னுடைய முத்திரையை பதித்து என்.டி.ஆர். போன்ற கதாநாயகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

    அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆரூர் தாஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை மந்தைவெளி கல்லறை செயிண்ட் மேரீஸ் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    மேலும் ஆரூர்தாஸ் உடலுக்கு கவிஞர் வைரமுத்து, கவிஞர் முத்துலிங்கம், கே.பாக்யராஜ், சிவகுமார், இயக்குனர் எழில், மனோபாலா, ஆ.ராசா, அமைச்சர் ஏ.வ. வேலு, பூச்சி முருகன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×