search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்றது ஜெங்கா பயிற்சி.
    • உடலுக்கு உறுதியை கொடுக்கும்.

    மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்றது ஜெங்கா பயிற்சி. இந்த உடற்பயிற்சி முறையான ஜெங்கா (Zenga), வித்தியாசமான உடல் இயக்கங்களையும் நெகிழ்வுப் பயிற்சிகளையும் கொண்டுள்ளது.

    எதிர்ப்பு விசையை பயன்படுத்தி செய்வதால் உடலுக்கு உறுதியை கொடுக்கும். இந்த பயிற்சி இப்போது மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற பெருநகரவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    தசைகளின் சகிப்புத்தன்மை, வலிமை, இயக்கம் மற்றும் உறுதித்தன்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடற்பயிற்சிக்கு அப்பால் மேம்பட்ட விழிப்புணர்வை உடலினுள் வளர்க்கிறது.

    யோகா, தற்காப்பு கலைகளைப் போன்று சுவாச நுட்பங்களும் பில்லட்ஸ், ஸ்குவாட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளின் இயக்கங்களும் மற்றும் நடன அசைவுகள் என எல்லாம் சேர்ந்த கலவையாக இருப்பதால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உடற்பயிற்சியை விரும்பாதவர்களைக்கூட ஜெங்கா ஈர்த்துவிடும்.

    மொத்தத்தில் இந்த பயிற்சியை மனம், உடல் இரண்டிற்குமான சிறந்த சிகிச்சையாக உடற்பயிற்சி வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    உடலின் இயற்கையான ரிதங்களோடு இயைந்த ஒரு கவனமான பயிற்சியை ஜெங்கா பயிற்சிகள் வழங்குகிறது. தசைகளில், ஓய்வு மற்றும் தளர்ச்சி இரண்டும் ஒரே நேரத்தில் பெறுவதன் மூலம் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது.

    உடலில் உள்ள நரம்புத்திசுக்களின் வலைப்பின்னலை தூண்டிவிடுவதன் மூலம், திசுக்களில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் குறைகின்றன.

    இந்த ஜெங்கா பயிற்சிகளை பெரிய பந்துகளின் மீதோ, ரிஃபார்மர்கள் அல்லது குஷன்கள் மீதும் செய்யலாம். சம தரையிலும் செய்யலாம். ஒரு மணி நேரம் செய்தாலே அதிகபட்ச கலோரிகளை எரித்துவிட முடியும்.

    முழு உடலுக்குமான உறுதித்தன்மை, ஆரோக்கியமான சுவாசம் மற்றும் தசைகளின் சத்திவாய்ந்த இயக்கங்கள் என முழுமையான பலன் கிடைப்பதால், இந்த பயிற்சியை உற்சாகத்தோடு செய்யும் போது இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    ஜெங்கா பயிற்சிகள், மன அமைதி, உடல்வலிமை மற்றும் நெகிழ்திறன் மூன்றையும் ஒரே நேரத்தில் மேம்படுத்துவதால் மனம், உடல் இரண்டும் சமநிலை பெறுகிறது. அனைத்து அம்சங்களையும் கொண்ட ஜெங்கா பயிற்சிகள் இளைஞர்களை கவர்வது நிச்சயம்.

    • நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
    • இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.

    நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.

    100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளில் அவர்கள் என்ன ரகசியங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

    தாவர உணவுகள்

    உலகில் நீண்டகால வாழ்வதற்கு அவர்கள் தாவரங்கள் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். பீன்ஸ், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக கருதுகிறார்கள்.

    ஆட்டுப்பால்

    இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாட்டுப்பால் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக செம்மறி ஆட்டுப்பால் குடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    மீன்

    இங்குள்ள மக்கள் தினசரி உணவுகளில் மீன் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உணவுகளை உண்கின்றனர்.

    பால் பொருட்களை தவிர்த்தல்

    மேலும் அவர்கள் பாலை குடிப்பதில்லை. குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், கிரீம், வெண்ணை, வெண்ணை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை. தவிர்த்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீன்ஸ்

    தினமும் குறைந்தது அரை கப் அளவிற்காவது வேகவைத்த பீன்ஸை எடுத்துக்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் ஒரு மணிதன் தினமும் 20 கிராம் பீன்சையாவது எடுத்துக்கொள்வது, அவர்களை இறக்கும் அபாயங்களில் இருந்து 8 சதவீதம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    100 வயதை கடந்தவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் 90 சதவீதம் வரை அவர்களின் வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வளரும். இதனால் உணவு சமைப்பது எளிது. கிழங்குகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றனர். தானியங்களை அரைத்து பின்னர் சமைத்து சாப்பிடுகின்றனர்.

    2002 முதல் அமெரிக்கர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிட்டவர்கள் என்று கணித்துள்ளது. 

    • யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
    • சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது.

    யோகா செய்வது ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் தோரணையை மேம்படுத்துதல், அத்துடன் மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தருகிறது.

    உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆகியவை உடற்தகுதியின் முக்கிய கூறுகளாகும். இதன் விளைவாக, யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

    அந்த வகையில் உங்கள் காலை உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் ஏதாவது சாப்பிடுவது அவசியம். அதே சமயம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய, அந்த உணவானது இலகுவாகவும் அதிக கனமாகவும் இருக்கக்கூடாது. நாம் நம் நாளைத் தொடங்குவதற்கு முன், நம் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுக்க வேண்டும்.

    உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய ஒரு பேரிச்சம் பழம் அல்லது பழங்கள் போதுமானதாக இருக்கும். மறுபுறம், உள்ளிருந்து நீங்கள் கட்டுப்படுத்தும் சுவாசத்தை சீர்குலைக்காமல் இருக்க, யோகாவை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது. யோகா செய்வதால் தன்னம்பிகை மற்றும் சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். மேலும் யோகா செய்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். யோகா செய்வதால் நியாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க முடியும். 

    • மனமும், உடலும் அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம்.
    • மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.

    எந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம் தான். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றியது தியான முறை யோகக் கலை.

    யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது. அனுதினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

    தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகா.

    தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். எனவே ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியமும் கூடும்.

    நரம்பு, ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    உடற்பயிற்சி

    தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

    தூக்கம்

    தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லையென்றால், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

     டயட் உணவு:

    கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

    சமூகத்துடன் இணைந்து இருங்கள்:

    எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

    எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். ஏதோ நினைத்துக்கொண்டு எதையோ செய்யக்கூடாது.

    கவுன்ஸ்லிங்:

    உங்களால் தாங்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணலாம்.

    • உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும்.
    • கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். ஆனால் அத்தகைய பயிற்சிமுறைகளை எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாதது.

    உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், உடற்பயிற்சிகளை சரியாக மேற்கொள்ள முடியாதவர்கள் எளிமையான பயிற்சி முறைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்றவையாக `ஜம்பிங் பயிற்சிகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் என்னென்ன பயிற்சிகள் எடை குறைப்புக்கு சிறந்த பலனை தரும் என்று பார்ப்போம். அதே போல உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற பயிற்சிகள் எவை என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

    ஸ்கிப்பிங்:

    உடல் பருமனை குறைப்பதற்கு எளிமையான பயிற்சியை தேடுபவர்களுக்கு `ஸ்கிப்பிங்' பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். இதனை பயிற்சியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் விளையாட்டாகவும் மேற்கொள்ளலாம். அவர்களுக்கும் ஸ்கிப்பிங் கயிற்றை கொடுத்து துள்ளி குதிக்கச் செய்து உற்சாகமாக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி உதவும். இதனை தவறாமல் செய்து வந்தால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்களுக்கு இந்த பயிற்சி உதவும். உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம்.

    ஜம்பிங் ஜாக்ஸ்:

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது நல்ல பலனை தரும். இந்த பயிற்சியும் எளிமையானதுதான். முதலில் கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும்.

    சில நிமிடங்கள் கழித்ததும் குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி துள்ளிக் குதிக்கும்போது கால் தரைக்கு வரும் சமயத்தில் மட்டும் வேகத்தை குறைக்க வேண்டும். அது கால்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும். இந்த பயிற்சி செய்யும்போது பொருத்தமான காலணிகள் அணிவதும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி செய்வது நல்லது. பின்பு சுயமாகவே பயிற்சியை தொடரலாம்.

    பர்பீஸ் பயிற்சி:

    இதுவும் கூட எளிமையான பயிற்சி முறைதான். சமதள தரையில் நேர் நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை தரையில் ஊன்றியபடி இடுப்பு பகுதி வரை உடலை நிமிர்த்த வேண்டும். பின்பு கைகளை நன்றாக அழுத்தி கால்களுக்கும் அழுத்தம் கொடுத்து குதித்த வாக்கில் எழுந்து நிற்க வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 50 முறை செய்து வரலாம். அதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் எடையும் குறைய தொடங்கிவிடும்.

    முழங்கால் பயிற்சி:

    `ஹை க்னீ' என்று அழைக்கப்படும் இந்த முழங்கால் பயிற்சியையும் எளிமையாகவே செய்து விடலாம். நேர் நிலையில் நின்றபடி இரு கைகளையும் இடுப்பு பகுதியை ஒட்டி வைத்தபடி நேராக நீட்ட வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தொடைப்பகுதி மேல் நோக்கி வந்து கைகளை தொட்டுவிட்டு செல்லுமாறு பயிற்சி முறை அமைய வேண்டும்.

    கைகளை மேலும், கீழும் அசைக்காமல் நேர் நிலையில் வைத்தபடியே தொடைப்பகுதியை தொட்டுச் செல்வதுதான் சரியான பயிற்சி முறை. அதனை கவனமாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தொடைப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தியும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது பயிற்சி செய்து வருவது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

    • கலோரிகள் தான் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.
    • மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது.

    கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.

    வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.

    மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும்.

    ஆண்களுக்கு

    26-45 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,600 கலோரிகள் தேவைப்படுகிறது. சுறுசுறுப்பான ஆண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,800 முதல் 3,000 கலோரிகள் தேவை.

    பெண்களுக்கு

    26-50 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

    சுறுசுறுப்பான பெண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் தேவைப்படும்.

    20 வயதின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அதிக கலோரிகள் தேவை, ஒரு நாளைக்கு சுமார் 2,200 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக தேவைப்படலாம்.

    50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.

    அதிக உடலுழைப்பைச் செலுத்தும், 55 கிலோ எடை கொண்ட ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2,210 கலோரிகள் தேவைப்படும் அதேநேரம் மிதமான உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கு 2,130 கலோரிகள் தேவைப்படும்.

    உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு 1,660 கலோரிகள் தேவைப்படும். இதுவே அந்த பெண் கருத்தரித்தால் 300-500 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். பாலுாட்டும் பெண் என்றால் கூடுதலாக 500 - 600 கலோரிகள் தேவைப்படும்.

    • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
    • பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால் மே மாதம் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி உடலை துர்நாற்றம் வீச செய்கிறது.

    வெயிலின் தாக்கத்தினால் வியர்வை வெளியேறுவது, நீர் இழப்பு, உடல் துர்நாற்றம், அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்சனை, சிறுநீரகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

    குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வரை அதிகமாக வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்

    1. கோடை காலத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

    2. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    3. உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாகுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.

    4. அதிக வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.

    5. காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    6. அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் டியோ ட்ரெண்ட், கிரீம்கள், லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் உடலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    • ஆரோக்கியமான கொழுப்புகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.

    தொப்பை கொழுப்பைக் குறைப்பது ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியது, இதில் சீரான உணவுப்பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும்.

    நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அதிகப்படியான வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும்.

    கீரை மற்றும் காலே போன்ற இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்சல்ஸ் முளைகள் போன்ற க்ரூசிஃபெரஸ் காய்கறிகளுடன் சேர்த்து உண்பது, மனநிறைவை மேம்படுத்தவும், எடை இழப்புக்கும் உதவும்.

    கூடுதலாக, கோழியின் மார்பக இறைச்சி, மீன் மற்றும் டோஃபு போன்ற புரதத்தில் குறைவானகலோரிகள் உள்ளதால் இது தசை வளர்ச்சியை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். வெண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு வகைகளை கொடுக்கின்றன.

    மேலும், குயினோவா, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுப்பத்தினால் ஒல்லியான இடுப்பை அடைவதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் உதவும்.

    வழக்கமான உடல் செயல்பாடு, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான உணவு ஆகியவை எடை மேலாண்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன.

    • குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
    • அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.

    குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

    உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.

    உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

    கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.

    மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.

    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.

    • தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் கிடைக்கும்.
    • மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும்.

    நமது அன்றாட வேலைகளில் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைப்பதே மிக அரிதாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் எப்போது உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது என்ற கேள்வி பலருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பது ஒவ்வொரு நபருக்கு உள்ள நேர வாய்ப்புகள் மற்றும் அவர்கள் வேலைகளை பொறுத்து மாறுபடுகிறது.

    சிலர் காலை நேர பயிற்சி சிறந்தது என்றும், ஒரு சிலர் மாலை நேர பயிற்சியே சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். இதில் மாலை நேர உடற்பயிற்சி மூலமாக கூடுதல் பலன் கிடைக்கிறது. மாலை நேர உடற்பயிற்சி பலன்களை இங்கு காணலாம். 

    * மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும். மாலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.

    * அலுவலகப் பணியாளர்களாக இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சோர்வு நீங்குகிறது. மேலும் இரவில் தடையற்ற நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    * தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் கிடைக்கும்.

    * காலை நேர உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மாலையில் இன்னும் சிறப்பாக உடற்பயிற்சி செயல்பட முடியும். மாலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மன நெருக்கடி ஏற்படாமல் பயிற்சிகளை செய்ய முடியும்.

    * மாலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி பலன் கொடுக்கும்.

    • வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.
    • தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

    இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து தனது பங்குக்கு உக்கிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. வெப்ப அலையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

    இதனால் ஏற்படும் உடல் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். வெப்பத்திடம் இருந்து உடலை தற்காத்து குளிர்ச்சி தன்மை நிலவச்செய்ய ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். ஏர்கூலரையும் பயன்படுத்துவார்கள். வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.

    நாடி சோதன பிரணாயாமம், சிதாலி பிரணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் உடலுக்கு குளிர்ச்சி சூழலை தரும் தன்மை கொண்டவை. இதில் சிதாலி பிரணாயாமம் எளிமையானது. நாக்கின் பக்கவாட்டு பகுதிகளை லேசாக மடக்கிக்கொள்ள வேண்டும்.


    வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி...பின்பு நாக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக சுவாசக்காற்று தொண்டை பகுதியை அடையும்போது குளிர்ச்சி தன்மையை உணரலாம்.

    அதன்பிறகு நாக்கு வழியாக நன்றாக மூச்சை இழுத்து உதட்டை மூடிவிட்டு மூக்கு வழியாக சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து ஐந்தாறு முறை இவ்வாறு செய்து வரலாம்.

    நாக்கை மடக்கி மூச்சை உள் இழுக்க முடியாதவர்கள் வாயை லேசாக திறந்து கொண்டு பற்களின் வழியாக மூச்சுக்காற்றை உள் இழுக்கலாம். பின்னர் மூக்கு வழியாக சுவாசக்காற்றை வெளியேற்றலாம்.

    இவ்வாறு செய்யும்போது வாய், தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

    • கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது.
    • சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    டீன் ஏஜ் வயதினர் அனைவருக்குமே, ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்ன தெரியுமா..? சிக்ஸ் பேக் வைப்பது.

    இது சிலருக்கு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல், இயற்கையாகவே அமைந்துவிடும். ஆனால் பலருக்கு, அது வெறும் கனவாகவே இருக்கும்.

    சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால்மட்டும் போதாது. சிக்ஸ் பேக் வைக்க, பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம். அந்த உணவு பழக்கத்தை தெரிந்து கொள்வோமா..?


    * கார்போஹைட்ரேட் அளவு

    பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது, அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், உங்களின் தசைகள் தொடர்ந்து சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை. அவை கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது.

    * அதிக புரோட்டின்

    உங்கள் தசைகளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

    * ஆரோக்கியமான கொழுப்புகள்

    உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டையாக வைத்திருக்க வேண்டும். சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    * அடிக்கடி சாப்பிட வேண்டும்

    பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுவது எடை குறைப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.


    * உடலுக்கான எரிபொருள்

    உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் நீர்ச்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

    * சாப்பிடும் பழக்கம்

    உங்கள் நாளை எப்பொழுதும் சிறந்த உணவுகளான தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

    ×