search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோம்நாத்"

    • பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
    • நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) காமகோடி வரவேற்று பேசினார். பல்கலைக் கழக வேந்தர் அண்ணாமலை பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    விழாவில் 2020-21, 2021-2022, 2022-2023 ஆகிய 3 ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் பட்டயம், சான்றிதழ் படித்து முடித்த 4230 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. முடித்த 175 பேருக்கும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 172 பேருக்கு தங்க பதக்கத்தையும், கணித ஆராய்ச்சிப் பணியில் அளப்பரிய சாதனை புரிந்த பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கி பேசியதாவது:-

    60 ஆண்டுகளில் இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி தற்போது சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு சாதித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

    சந்திராயன்-2-ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் தான், தற்போது சந்திராயன்-3ன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

    சந்திராயன்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் காந்திகிராம பல்கலைக்கழகம் இது கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.

    பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும். கடுமையாக உழைப்பது மூலம் நாட்டிற்கு நம்மை அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பதிவாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சோம்நாத் அறிவிப்பு.
    • சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு சிசிச்சை.

    ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்படுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதாக தெரிவித்துள்ளார்.

    சந்தியான்- 3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்த நாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்ததாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    தற்போது, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்றும் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

    சோம்நாத் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயக்கு மருத்துவமனையில் தங்கி 4 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்து 5ம் நாளிலேயே சோம்நாத் வழக்கமான பணிக்கு திரும்பியுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மகேந்திரகிரியில் நடைபெற்ற இஸ்ரோ மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், சோம்நாத் பங்கேற்றிருந்தார்.

    • கவுகாத்தி பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.

    நீங்கள் யார், உங்களுக்கு பிடித்தது என்ன என்பது அதற்கு நன்றாக தெரியும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கே தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணிணிக்கு தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என தெரிவித்தார்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.
    • ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும்.

    இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறியிருப்பதாவது:-

    சந்திரயான்-3 பயணத்தின் வெற்றிக்கு பிறகு அனைத்து சாத்திய கூறுகளையும் நாங்கள் பார்த்து வருகிறோம். என்ன வகையான அறிவியல் மேம்பாடுகளை செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். விண்வெளி நிலையத்தை உருவாக்குவது போன்ற பெரிய திட்டங்களும் உள்ளது. விண்வெளி நிலையம் இந்திய விண்வெளி பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயன் அளிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

    எதிர்காலத்தில் ஒரு விண்வெளி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதனை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை மனித விண்வெளி பயண திறனை நோக்கியதாகும். அது நடந்த உடன் அடுத்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்குள் விண்வெளி நிலைய கட்டிட பணிகளை நாம் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    • நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது பணிகளை திட்டமிட்டபடி செய்து அந்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

    பின்னர் நிலவில் இரவுகாலம் தொடங்கியதால் லேண்டர், ரோவர் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பகல் பொழுது தொடங்கிய நிலையில் அவற்றை உறக்க நிலையில் இருந்து விழிக்க செய்யும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சமிக்ஞையும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.

    ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும். வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம்.

    அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை. 2 கருவிகளும் மீண்டும் செயல்படுவதால் பல நன்மைகள் ஏற்படும். ஏற்கனவே நாங்கள் செய்த பல சோதனைகள் எங்களுக்கு தரவை வழங்கியுள்ளன, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

    இதனிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

    இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

    நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், நிலவின் மண் தூசி நிறைந்ததாக இல்லை, ஆனால் கட்டியாக உள்ளது. மண்ணை ஏதோ பிணைக்கிறது, மண்ணை என்ன பிணைக்கிறது என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

    • புகைப்படம் ‘எக்ஸ்’ தளத்தில் வைரலாகி வருகிறது.
    • சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது.

    சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை ஒரு சிறுவன் பரிசளித்துள்ளான்.

    இதுகுறித்த புகைப்படம் 'எக்ஸ்' தளத்தில் வைரலாகி வருகிறது. சந்திரயான்-3 பயணத்தின் போது சந்திரனுக்கு எடுத்து செல்லப்பட்ட விக்ரம் லேண்டரின் மாதிரியை அந்த சிறுவன் மிக நுணுக்கமாக வடிவமைத்து சோம்நாத்திடம் வழங்கி உள்ளான். சிறுவனின் சிந்தனைமிக்க இந்த செயல் இளம் மனங்களின் இஸ்ரோ ஏற்படுத்திய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விண்வெளி ஆய்வில் ஏற்படுத்தி ஆழமான தாக்கத்துக்கு இது ஒரு சான்றாக இருப்பதாக பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    • ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.

    இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இதைதொடர்ந்து, ஆதித்யா எல் 1 புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இது மிகவும் துல்லியமாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் 235 க்கு 19,500 கிமீ நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்டது. இங்கே மிகவும் தனித்துவமான பணி முறை, பிஎஸ்எல்வி-ன் மேல் நிலை முதல் முறையாக முதன்மை செயற்கைக்கோளை உட்செலுத்துவதற்கு இரண்டு எரிப்பு காட்சிகளை எடுக்கும். எனவே இன்று மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறைக்காக பிஎஸ்எல்வியை நான் வாழ்த்த விரும்புகிறேன்.

    இப்போதிலிருந்து, ஆதித்யா-எல்1 அதன் பயணத்தை மேற்கொள்ளும். சில புவி சூழ்ச்சிகளுக்குப் பிறகு, அது எல்1 புள்ளிக்கு அதன் பயணத்தைத் தொடங்கும். இது மிக நீண்ட பயணம். கிட்டத்தட்ட 125 நாட்கள். எனவே ஆதித்யா விண்கலத்தின் நீண்ட பயணத்திற்கும் எல் 1 இன் ஒளிவட்ட சுற்றுப்பாதையைச் சுற்றி வருவதற்கும் வாழ்த்துகள்.

    ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ரோவர் லேண்டரில் இருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் நகர்ந்துவிட்டது, மேலும் அது (சந்திர) இரவைத் தாங்கும் என்பதால், வரும் ஓரிரு நாட்களில் இருவரையும் தூங்கச் செய்யும் பணியைத் தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன.
    • லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    பெங்களூரு:

    நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணி அளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் லுனார் ஆர்பிட் இன்ஞக்சன் மூலம் நுழைந்தது.

    சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியை யும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திராயன்-3 நிலவில் அதன் ஆராய்ச்சி தொடங்கியை தகவல்களை வழங்கும்.

    இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    தற்போது விண்கலம் நிலவை நெருங்க 3 டி-ஆர்பிட்டிங் நிகழ்வுகள் உள்ளன. இன்றும், வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதன் சுற்றுப்பாதை சந்திரனில் இருந்து 100 கி.மீ. வரை குறைக்கப்படும். லேண்டர் ப்ரொபல்ஷன் மாட்யூல் பிரிப்புப் பயிற்சியானது, லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்.

    இந்த முறையும் விக்ரமில் உள்ள 2 என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அது இன்னும் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனவே இவை சரியாகச் செயல்படும் பட்சத்தில் விக்ரம் லேண்டர் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

    விக்ரம் லேண்டரை சந்திரனில் செங்குத்தாக தரை இறக்குவது இஸ்ரோ குழுவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்ததும், அது கிடைமட்டமாக நகரும். தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம், அது சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கு வதற்காக செங்குத்து நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    சந்திராயன்-2 பணியின் போது, இஸ்ரோ தனது லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறக்க தவறியது. எனவே இந்தமுறை இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது. கிடைமட்டத்தில் இருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் மிக நுட்பமானது. இங்குதான் கடந்த முறை பிரச்சினை ஏற்பட்டது.

    பயன்படுத்தப்படும் எரிபொருள் குறைவாக உள்ளதா, தொலைவு கணக்கீடுகள் சரியாக உள்ளதா மற்றும் அனைத்து வழிமுறைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது. எப்படி என்றாலும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ குழு இந்த முறை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
    • மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன் என்று கூறினார்.

    சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

    முதல் கட்டமாக சந்திரயான் -3ன் ஏவப்பட்டதை மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் அவர் முழு தரவுகளையும் ஆராய்ந்து ராக்கெட் எவ்வளவு அழகாக இருந்தது.

    பொறியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற முறையில் எனக்கு ராக்கெட்டுகள் மீது பிரியம் உண்டு. ராக்கெட்டின் பிறப்பு, வளர்ச்சி, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, ராக்கெட்டை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன். வளர்ச்சி, அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் இயக்கவியல் மற்றும் அதன் வாழ்க்கைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது ஆகும்.

    கடந்த சந்திரயான் ராக்கெட்டில், கிட்டத்தட்ட 2,000 அளவீடுகள் இருந்தன. இறுதியாக அவை வரைபடங்கள் மற்றும் வளைவுகளாக நம்மிடம் வந்தன. ஒரு மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    அந்த வளைவுகளுடன் நாங்கள் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம். வரைபடங்கள், மற்றும் ஏற்ற தாழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அதன் வேகம் என்ன... எப்படிப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது.
    • மனிதர்கள் போன்ற பொம்மைகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றன. அதில் ஒருபகுதியாக விண்வெளி குறித்து அறியப்படாத பல தகவல்களை சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கன்னியாகுமரியில் ஸ்பேஸ் சயன்ஸ் அன்டு டெக்னாலஜி பார்க் என்ற விண்வெளி ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    கன்னியாகுமரி கோவளம் கடற்கரை சாலையில் சன்செட் பாயிண்ட் அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இஸ்ரோ உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும். விண்வெளி பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
    • சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.

    இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: 


    இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


    தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×