search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shane watson"

    • வாட்சன் தலைமை பயிற்சியாளராக இருக்க இதுவரை யாருக்கும் வழங்காத தொகை கொடுக்க பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தது.
    • பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான குயட்டா கிளாடியட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாட்சன் இருக்கிறார்.

    கராச்சி:

    கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு அந்த அணிக்கு நிரந்தர தலைமை பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. முகமது ஹபீஸ் தற்காலிக பயிற்சியாளராக செயல்பட்டார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் புதிய தலைமை பயிற்சிளாராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

    வாட்சன் தலைமை பயிற்சியாளராக இருக்க இதுவரை யாருக்கும் வழங்காத தொகையாக ஆண்டுக்கு ரூ.16½ கோடி சம்பளமாக கேட்டதாகவும், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்து விட்டாலும் கூட இறுதி முடிவை எடுக்க வாட்சன் தயங்குவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியினருடன் அதிக நேரம் செலவிட வேண்டியது இருப்பதாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வதாலும், வாட்சன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் காலஅவகாசம் எடுத்து கொள்வதாக தெரிகிறது. தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கான குயட்டா கிளாடியட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாட்சன் இருக்கிறார்.

    • டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
    • டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    மேலும் 5 முறை சி.எஸ்.கே. 2-வது இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டுக்கான 16-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்கு கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட் டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.

    41 வயதான டோனி இந்த ஐ.பி.எல். போட்டி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டோனியால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாட முடியும். அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாக இருக்கிறார்.

    டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை நன்றாக உள்வாங்கி கொள்வது அவரை நல்ல கேப்டனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சி.எஸ்.கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு வாட்சன் கூறி உள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது.
    • இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

    கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.

    இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-

    இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • விராட் கோலிக்கு ஓய்வு கிடைத்தால் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்.
    • கோலி ஒரு தரமான வீரர். அவர் சிறந்த பார்முக்கு திரும்புவார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

    துபாய்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.

    அவர் சுமார் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

    இந்த நிலையில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலிக்கு ஓய்வு கிடைத்தால் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்.

    ஐ.பி.எல். போட்டியின் போது கூட அவரது ஆற்றல் சற்று குறைந்திருந்தது. அவர் எப்போதும் எழுச்சியுடன் காணப்படுபவர். ஆனால் அவரால் ரன் குவிக்க முடியவில்லை.

    நீங்கள் ஓய்வெடுக்க முடிந்ததால் குறிப்பாக இந்திய வீரர்கள் அதிக கிரிக்கெட் விளையாடும் சூழலில் கோலிக்கு ஓய்வு கிடைத்து இருக்கிறது. அது அவருக்கு தேவையான அனைத்தையும் மீண்டும் உருவாக்கி கொடுத்து இருக்கும்.

    மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற்று இருப்பார். கோலி ஒரு தரமான வீரர். அவர் சிறந்த பார்முக்கு திரும்புவார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

    ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது எனது கணிப்பு. அவர்கள் வலிமையான அணியாக உள்ளனர். சூழ்நிலையை எளிதாக கையாண்டு பொருந்தி விடுகிறார்கள்.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விசேஷமாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் முழு நம்பிக்கையில் உள்ளது.

    இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.

    இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அவர்களின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது.

    எனவே இந்திய அணியை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 28-ந்தேதி நடக்கிறது.

    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    சென்னை அணி தோற்றாலும் வாட்சன் கடைசி வரை தனி ஒருவராக போராடி சி.எஸ்.கே. ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் 59 பந்தில் 80 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சமூக வலைதளங்களில் அவரது ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    இந்த நிலையில் காலில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் வாட்சன் விளையாடியது தெரிய வந்தது. இதை வாட்சன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.


    அதில் வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஹர்பஜன் கூறியதாவது:-

    வாட்சன் ரன் எடுக்க ஓடும் போது டைவ் அடித்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதை யாரிடமும் தெரிவிக்காமல் கடைசி வரை ஆடினார். போட்டிக்கு பிறகு காலில் ஏற்பட்ட காயத்துக்கு 6 தையல் போடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சி.எஸ்.கே. ரசிகர்கள் வாட்சனை மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளனர். வாட்சனின் அர்ப்பணிப்பு நமக்கு கிடைத்த மகுடம் என்று சொல்லி சூப்பர் கிங் அணியும் பாராட்டி உள்ளது.
    ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டு விளையாட எந்தவொரு சர்வதேச அணியும் தற்போது இல்லை என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.
    ஸ்விங் பந்து வீச்சிற்கு சொர்க்கமாக விளங்கும் இங்கிலாந்து மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு அணிகளும் சிறப்பாக விளையாடுவது கடினம். அங்குள்ள சிதோஷண நிலைக்கு ஏற்றவாறு வீரர்கள் உடனடியாக அவர்களை தயார்படுத்துவது சிரமம் என்று முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘ஸ்விங் பந்தை விளையாடுவது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆஸ்திரேலியா அடுத்த வருடம் இங்கிலாந்து செல்கிறது. இது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சீதோஷண நிலைக்கு ஏற்பட்ட பந்து ஸ்விங் ஆகும் ஒரே நாடு இங்கிலாந்து மட்டுமே. ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒருமுறையும் இங்கிலாந்தில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தோடு அங்கு செல்ல முடியாது.



    தற்போதைய நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அணியும் இங்கிலாந்தில் ஸ்விங் பந்தை சிறப்பாக விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. இந்திய அணி தற்போது அங்கு தோல்வியடைவது வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாட முடியாது என்பதை பிரதிபலிப்பதாகும்.

    இந்திய பேட்ஸ்மேன் சாதனைகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால், ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடியிருப்பார்கள். விராட் கோலி ஏராளமான ரன்கள் அடித்துள்ள நிலையில், கே எல் ராகுல், ரகானே சதங்கள் அடித்துள்ளனர்.
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர், ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு ஷேன் வாட்சன் அதிரடி முக்கிய காரணமாக அமைந்தது. அவர் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரத்தில் இவருக்கு 9 மாதம் தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் இதற்கு துணையாக இருந்த கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது.



    மூன்று பேரின் தண்டனை மிகவும் அதிகபட்சமானது என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தடையை ஒப்பிடும்போது அவர்கள் மீதான் தண்டனை மிகவும் அதிகபட்சமானது. கடந்த காலங்களில் இதுபோன்று நடைபெற்ற தவறுகளுக்கு இப்படி தண்டனை கொடுக்கப்படவில்லை.

    மூன்று பேரும் அதிப்படியான விலையை கொடுத்துள்ளனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீண்டும் அணிக்கு திரும்பும்போது, மக்களின் நல்ல பெயர் எடுக்க எல்லாவகை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்’’ என்றார்.
    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகவும் சிறப்பானது என்று இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

    179 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவரிலேயே சேஸிங் செய்ய ஷேன் வாட்சன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 57 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், கடந்த சீசனை விட இந்த சீசன் எனக்கு ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பான சீசன். முந்தைய 2017 சீசனோடு இந்த சீசனில் அதிக வாய்ப்பு கிடைத்தது நம்ப முடியாததாக இருந்தது.

    விஷயங்கள் அனைத்தும் என் வழியில் சரியாக அமைந்தது. ஆனாலும், இது மிகவும் பெரிய ஆட்டமான இறுதிப் போட்டியில் அமைந்தது மிகவும் சிறப்பானது. முதல் 10 பந்துகளை சந்தித்த பிறகு, பெரிய ஹிட் ஷாட் அடிப்பதற்கு முன் பந்திற்கு பந்து ரன்கள் அடிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.



    புவனேஸ்வர் குமார் முதலில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் நாங்கள் முதல் சிக்ஸ் ஓவரில் மோசமான விளைவை சந்தித்து விடக்கூடாது (விக்கெட்டை மளமளவென இழப்பது) என்பதில் கவனமாக இருந்தோம். பந்து ஸ்விங் தன்மையை இழந்த பிறகு, பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது’’ என்றார்.

    கடந்த ஆண்டு ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த ஷேன் வாட்சன், 8 போட்டியில் 71 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த முறை 15 போட்டியில் 2 சதம், 2 அரைசதத்துடன் 555 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 39.64 ஆகும்.
    ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பான ஃபார்முக்கு வந்ததற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனிக்கு ஷேன் வாட்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 ஆட்டத்தில் 9-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அனுபவ வீரரான ஷேன் வாட்சன் 13 ஆட்டத்தில் 438 ரன்கள் குவித்தார். அதேபோல் முக்கியமான ஆட்டத்தில் பந்து வீசி அணியின் வெற்றிக்கு தேவையான விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கடந்த வரும் ஆர்சிபிக்காக விளையாடிய இவரை சென்னை அணி ஏலம் எடுத்தது. 36 வயதான வாட்சன் மீது கேப்டன் டோனி நம்பிக்கை வைத்து தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கினார். டோனியின் நம்பிக்கையை வீணடிக்காமல் வாட்சன் அசத்தினார்.



    தனது ஃபார்முக்கு எம்எஸ் டோனிதான காரணம் என்று கூறிய வாட்சன், அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாட்சன் கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். என்னுடைய ரோல் போலவோ தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் எப்போதெல்லாம் டோனிக்கு தேவையோ அப்பதெல்லாம் எனக்கு குறிப்பிட்ட ஓவர்கள் வீசும் வாய்ப்பை அளித்தார். டி20 கிரிக்கெட் என்பது அனுபவம் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை’’ என்றார்.
    அம்பதி ராயுடு, வாட்சனின் அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை துவம்சம் செய்து 2-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvSRH
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார்.



    அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட அம்பதி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.



    18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோரை சமன் செய்தது. அடுத்த பந்தில் டோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 12 ஆட்டத்தில் 8-ல் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
    ×