search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MP Assembly election"

    • தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை.

    போபால்:

    மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஒழுகும் மண் குடிசை வீட்டில் வசிக்கும் தொழிலாளி சுயேட்சையாக நின்று எம்.எல்.ஏ.வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான தொகுதிகளை பாரதிய ஜனதா வெற்றி பெற்றாலும், 2-வது இடத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அங்கீகாரத்தை பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கமலேஷ்வர் டோடியார் பெற்றுள்ளார். 33 வயதான இவர் தனது பள்ளி பருவ காலத்திலேயே கல்வி கற்க கடுமையான போராட்டங்களை சந்தித்தவர். அவரது தாயார் கூலி வேலைக்கு சென்றும், கோழி வளர்ப்பில் கிடைத்த முட்டைகளை விற்றும் அதில் கிடைத்த பணத்தில் படிக்க வைத்தார்.

    ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சேர்ந்த கமலேஷ்வருக்கு மக்கள் பணியாற்ற வேண்டும், பிற்படுத்தப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட பல்வேறு மக்களுக்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக பொது சேவையில் ஆர்வத்துடன் பணியாற்றினார். இதனுடன் டிபன் டெலிவரி செய்யும் தொழிலையும் மனம் கூசாமல் செய்தார். டெல்லியில் சட்டப்படி பண்பை படித்த போதும் அங்கும் டிபன் டெலிவரி தொழிலாளியாகவே வலம் வந்தார் கமலேஷ்வர்.

    ஆனாலும் அவரது உழைப்பு மற்றும் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. கடந்த இரண்டு முறை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் விடாமுயற்சியுடன் தனது சேவையை தொடர்ந்தார் கமலேஷ்வர் டோடியார்.

    இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்ட பாரத் ஆதிவாசி இயக்கத்தின் சார்பில் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் கமலேஷ்வர் டோடியார். இந்த தொகுதியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக செல்வாக்குடன் களத்தில் இறங்கி பணியாற்றினர். ஆனாலும் கமலேஷ்வர் மனம் தளராமல் தனது ஏழ்மையை எண்ணி ஒதுங்கி விடாமல் தேர்தலில் புதிய சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு 71 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 66 ஆயிரத்து 601 ஓட்டுகளும், பாரதிய ஜனதா வேட்பாளருக்கு 41 ஆயிரத்து 584 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

    இவர் சார்ந்துள்ள புதிய கட்சியான பாரத் ஆதிவாசி இயக்கம் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாக கொண்ட கட்சி. ஆனாலும் மத்திய பிரதேசத்தில் கமலேஷ்வரின் எளிமையான மக்கள் சேவையே அவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளது.

    மழை காலங்களில் ஒழுகும் தன்மையுள்ள மண் குடிசையில் வசித்து வரும் கமலேஷ்வருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை. தேர்தலின் போது மோட்டார் சைக்கிளிலேயே தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். பணம் இல்லாததால் சாப்பிடாமல் பசித்த வயிற்றுடனே பிரசாரம் செய்து மக்களை சந்தித்துள்ளார்.

    மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கூட கார் வசதி இல்லாததால் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சட்டமன்ற செயலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பிக்க மோட்டார் சைக்கிளிலேயே சென்றுள்ளார் கமலேஷ்வர் டோடியார். பழங்குடியின சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் அதற்கு தேவையான அர்ப்பணிப்புடன் பணியாற்ற இருப்பதாக கமலேஷ்வர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் சார்ந்துள்ள பாரத் ஆதிவாசி இயக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களை பொருளாதார ரீதியில் உயர்த்தவும், சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் நமது இயற்கை உலகத்தை பாதுகாக்கவும், தூய்மையான ஆற்றலை ஊக்குவிக்கவும் மாசுபாட்டை குறைக்கும் கொள்கைகளை எங்கள் இயக்கம் ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் என்றாலே கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த காலத்தில் கமலேஷ்வர் டோடியார் தனது ஏழ்மையையே மூலதனமாகக் கொண்டு சாதித்துள்ளார். ஆனால் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பணக்கார எம்.எல்.ஏ.வாக ஸ்பெக்ட்ரம் என்பவர் உள்ளார். அவருக்கு 223 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் எளிய சாமானியராக, எவ்வித பணபலமும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பிரதான அரசியல் கட்சிகளை வீழ்த்தி அம்மாநிலத்தில் ஒரே சுயேட்சை எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை எட்டிப்பிடித் துள்ளார் கமலேஷ்வர் டோடியார்.

    இவரது எளிமையான வாழ்க்கை, அவர் அரசியலில் சாதித்த வெற்றி, ஏழ்மையிலும் மக்கள் பணியாற்றினால் உரிய அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கு முக்கிய உதாரணமாக பேசப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.
    • வருகிற 22-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் வருகிறார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு சலுகைகளை அறிவிக்க தொடங்கி உள்ளன. இம்மாநிலத்தை பொறுத்தவரை பல சட்டசபை தொகுதிகளின் வெற்றி, தோல்வி பெண் வாக்காளர்கள் கையில் உள்ளது. இதனால் அவர்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க பாரதிய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

    காங்கிரசும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம் என தெரிவித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மத்தியபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் என அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சர்மா தெரிவித்து உள்ளார்.

    அன்று ஒருநாள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தலைநகர் போபாலில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் அவர் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறார்.

    10 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட இருக்கிறார். அப்போது தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அவர் ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்ட பா.ஜனதா தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மத்தியபிரதேசத்தில் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி 27-ந்தேதி ஜபல்பூர்-இந்தூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் தர் பகுதியில் ரத்தசோகை நோயை தடுப்பது தொடர்பான நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கடந்த 2½ மாதங்களில் பிரதமர் மோடி 3-வது முறையாக மத்தியபிரதேசம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக வருகிற 22-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் வருகிறார். அவர் பலாகத் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 5 மாதம் இருக்கும் நிலையில் தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரம் செய்ய உள்ளதால் மத்தியபிரதேச அரசியல் களம் இப்போதே பரபரப்பாகி இருக்கிறது.

    ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநில முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். #RahulGandhi #congress
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவுகிறது.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லாததால் எம்.பி.யான தாம்ரத்வாஜ் தேர்தலில் களம் இறக்கப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ்பாகேல், மூத்த தலைவர் டி.எஸ்.சிங்தேவ் பெயர்களும் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளது.

    நேற்று 3 மாநிலங்களிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அந்தந்த மாநில தலைநகரங்களில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியால் நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்- மந்திரியை ஒருமனதாக தேர்வு செய்ய முடியாததால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரம் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனால் ராகுல்காந்தி இதில் முடிவு எடுத்து முதல்- மந்திரியை அறிவிப்பார். இந்த வி‌ஷயத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கருத்து ஒருபுறம் இருக்க, மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கருத்தை கேட்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார்.


    இந்த 3 மாநிலங்களில் 7 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடம் ராகுல்காந்தி ‘செல்போன் ஆப்’ மூலம் கருத்து கேட்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ‘சக்தி’ என்ற பெயரில் ‘செல்போன் ஆப்’ செயல்படுகிறது.

    இதன் மூலம் நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள். இதை ராகுல்காந்தி 3 மாநில முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்கு பயன்படுத்துகிறார்.

    இந்த ‘ஆப்’க்குள் சென்றதும் முதலில் ராகுல்காந்தி உரை இடம் பெறுகிறது. அவர் முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்யலாம் என்று தொண்டர்களிடம் கருத்து கூறுமாறு வேண்டுகோள் விடுத்து பேசுகிறார்.

    யாரை தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவரது பெயரை ‘டிக்’ செய்தால் போதும். இதில் மெஜாரிட்டி அடிப்படையில் முதல்- மந்திரி தேர்வு செய்யப்படுவார். முடிவை ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகி விரைவில் முதல்-மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்- மந்திரி தேர்வில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், ராஜஸ்தானில் மட்டும் போட்டி நிலவுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார். ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு துணை முதல்- மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் முதல்- மந்திரியை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏ.க்களுடன் 6 மணி நேரம் ஆலோசனை நீடித்தது. இதில் இறுதி முடிவு எட்டப்படாததால் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரை டெல்லி வருமாறு மேலிடம் அழைத்தது. அதை ஏற்று இருவரும் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    இருவரும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியதாகவும் இதில் முடிவு எட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். #RahulGandhi #congress
    பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
    இந்தூர்:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இந்தூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நமது நாட்டின் பாராளுமன்றம், சி.பி.ஐ. போன்றவை நம்பிக்கைக்குரிய அமைப்புகளாக உள்ளன. ஆனால் அவற்றை திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல்கள் நடந்து வருகின்றன.

    ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்றவற்றை மோடி அரசு பணிய வைக்க பார்க்கிறது. இது இந்திய ஜனநாயகத்தை சீர்குலைத்துவிடும். நாடு சட்டத்தின் மூலம் ஆளப்படுகிறது. அதையும் நாசமாக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


    இந்த செயல்களை செய்யும் பா.ஜ.க. அரசை நாம் மீண்டும் தொடர அனுமதித்தால் வரலாறு நம்மை மன்னிக்காது. ஒவ்வொரு வி‌ஷயத்திலும் திட்டமிட்டு ஜனநாயகத்தை பலவீனமாக்க பார்க்கிறார்கள்.

    பிரதமர் நரேந்திரமோடி எதிர்க்கட்சியினரை பயன்படுத்தக்கூடாத கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சிக்கிறார். இது தவறான போக்கு. ரிசர்வ் வங்கிக்கும், நிதித்துறைக்கும் இடையே மோதல்போக்கு நடந்து வருகிறது.

    இரு அமைப்புகளும் ஒன்றாக இணைந்து முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் செயல்பாடுகள் முடங்குகிறது. இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் நாட்டை முன்னேற்ற முடியும்.

    பணமதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவை மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அமைப்பு சாரா தொழில்களை நாசமாக்கி விட்டது. மக்களை கடுமையான பாதிப்புக்கு ஆளாக்கிய இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

    இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார். #Congress #ManmohanSingh #MPAssemblyElection #Modi
    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியானது. #BJPreleaseparty #MPAssemblyelections
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில்  நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தனர்.


    இந்நிலையில், பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியானது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
    #BJPreleaseparty #MPAssemblyelections
    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சூறாவளி பிரசாரம் செய்கின்றனர். #Modicampaign #AmitShahcampaign #RahulGandhicampaign
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது.  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.


    இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில்  இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.

    நேற்று பட்நகர், ஷாஜாபூர், பார்வானி மாவட்டங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ஷாடோல் டாமோஹ், சாகர், டிக்காமார்ஹ், கஜுராஹோ ஆகிய மாவட்டங்களில்  இன்று பேசவுள்ளார்.

    இன்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி ஷாடோல், குவாலியர் மாவட்டங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றுகிறார். இரண்டாவது கட்டமாக வரும் 18,20,25 தேதிகளிலும் பல மாவட்டங்களில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சாகர் மாவட்டத்தில் உள்ள டேவ்ரி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், சிவ்னி, மன்டாலா, ஷாடோல் மற்றும் பன்டேல்கன்ட் பகுதியில் நடைபெறும் கூட்டங்களில் பிரசார உரையாற்றுகிறார். #Modicampaign #AmitShahcampaign #RahulGandhicampaign #MPassemblyelections  #MPaelectionscampaign
    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபை வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த வேட்பு மனுவில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என்பது தெரிய வந்துள்ளது. #MPAssemblyElection
    போபால்:

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. 4041 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த வேட்பு மனுவில் 16 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.700 கோடி என்பது தெரிய வந்துள்ளது.

    இதில் பெரும்பாலானவர்கள் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரசை சேர்ந்தவர்கள். மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், கோடீசுவர வேட்பாளர்களாக உள்ளனர்.

    பா.ஜனதா மந்திரிகளான சஞ்சய் பதக்குக்கு ரூ.121 கோடியும், பூபேந்திரசிங்குக்கு ரூ.47 கோடியும், கோபால் பார்கவ்வுக்கு ரூ.3½ கோடியும் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்களான சேட்டன் காஷ்யப்புக்கு ரூ.120 கோடியும், சுரேந்திரா பட்வாவுக்கு ரூ.38 கோடியும், காயத்ரி ராஜுவுக்கு ரூ.27 கோடியும், மோகன் யாதவுக்கு ரூ.16 கோடியும், சைலேந்திர ஜெயினுக்கு ரூ.13 கோடியும் சொந்தமாக சொத்துக்கள் இருக்கின்றன.

    காங்கிரசை சேர்ந்த விஷால்படேல் (ரூ.69 கோடி), சஞ்சய்சர்மா (ரூ.65 கோடி), கே.பி.சிங் (ரூ.60 கோடி), அலோக்சதுர்வேதி (ரூ.26 கோடி), அஜய்சிங் (ரூ.25 கோடி), சச்சின் யாதவ் (ரூ.23 கோடி), அருண்தோயாசவுபே (ரூ.11 கோடி), துல்சி சில்வாத் (ரூ.5.68 கோடி) ஆகியோர் கோடீசுவர வேட்பாளர்கள் ஆவார்கள்.

    மிகவும் பின் தங்கிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் அரசியல்வாதிகள் மட்டும் கோடீசுவரர்களாக இருக்கிறார்கள். #MPAssemblyElection
    மத்திய பிரதேசத்தில் 160 இடங்களிலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 52 முதல் 60 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. #BJP
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந்தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந்தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந்தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இது நடப்பதால் 5 மாநில தேர்தல் அதற்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது.

    கடந்த மாதம் நடந்த கருத்து கணிப்புகளில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த புதிய கருத்துக்கணிப்பை ஏ.பி.பி.நியூ- லோக்நிதி சி.எஸ்.டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றி வாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. #BJP #Congress
    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 177 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்டது. #BJPreleases #MPassemblypolls
    புதுடெல்லி:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும்  177 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை இன்று வெளியிட்டது.

    இதேபோல், 119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான 38 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

    இன்று மேலும் 28 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு பின்னர் 53 வேட்பாளர்களை கொண்ட மூன்றாவது பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    40 இடங்களை கொண்ட மிஜோரம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், இங்குள்ள 24 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. #BJPreleases #MPassemblypolls
    மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மகா காளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    உஜ்ஜைன்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனன.


    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைன் நகருக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற மகா காளீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோரும் உடன் சென்றனர்.


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மற்றும் தாபுவா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரச்சார பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    ×