என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wild elephant"
- யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை காட்டுயானை நேற்று காலை தண்ணீர் தேடி வந்தது.
அப்போது அந்த யானை ஏரியில் உள்ள நீரில் குளியல் போட்டு கும்மாளம் போடுவதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் வனத்து றையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஏரியில் குளியல் போட்ட காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்து றையினர் அறிவு றுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும் நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (70) என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த காட்டு யானை கிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்து றையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
சமீப காலமாக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதால் விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், கிராம மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது, கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக ரித்ததால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் புகுந்து, ஏரியில் யானை முகாமிட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவ்வாறு வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்னூர் பகுதியில் மீண்டும் 3 யானைகள் முகாமிட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இந்த சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் தாமஸ். இவர்கள் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவரை பார்க்க சென்றனர்.
அவர்கள் தாங்கள் வந்த காரை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவர்களது காரை சேதப்படுத்தியது. இதில் அவர்களது கார் உடைந்து சேதமானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊருக்குள் புகுந்திருந்த காட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரவித்தனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கியிருப்பது, சுற்றுலா பயணிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
- அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.
மேட்டுப்பாளையம்:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
- காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றது.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பவானிசாகர் அணையில் தினந்தோறும் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாகரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.
பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல், தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது. அருகே குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும் காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிகள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
- திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.
பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.
- வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
- ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.
தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.
அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.
மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.
இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
- காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
அவ்வாறு புகும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டம் வானந்தவாடி பகுதியில் கடந்த மாதம் அஜி என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு புகுந்த காட்டு யானை, அஜியை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வயநாடு மாவட்டத்தில் குர்வா தீவு அருகே வனத்துறை வழிகாட்டி பால் என்பவரும் காட்டு யானை தாக்கி பலியானார். வயநாடு மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காட்டு யானை தாக்கி 3 பேர் பலியாகி விட்டனர்.
இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் சில இடங்களில் புலி மற்றும் சிறுத்தையும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க, யானைகள் புகும் பகுதிகளில் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-
மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 36 வனப்பிரிவுகளில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும். இந்த தேனீக்கள் கரடிகளை ஈர்ப்பதால், அவை கரடி இல்லாத பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
வனவிலங்குகள் தாக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஊராட்சி அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 900 தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக வயநாடு வனப்பகுதியில் 341 குளங்களும், இடுக்கியில் 249 குளங்களும் பராமரிக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணியும் பரிசீலனையில் உள்ளது.
வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13.70 கோடியில் ரூ.6.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.26 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
- மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.
இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.
அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
- யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.
அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.
வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
- சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.
பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
- வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.
- மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதனால் வன விலங்குகள் கிராமத்துக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் காப்பு காட்டில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது அங்கிருந்து ஒரு பகுதியில் துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது 13 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று பாறைகளுக்கு இடையில் விழுந்து இறந்துள்ளதை கண்டனர்.
பின்னர் வனத்துறை சார்பில் மருத்துவக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது குடல் புழு நோயால் ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு யானை இறந்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த யானையை அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக விட்டு சென்று விட்டனர்.
- கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந்தது. பின்னர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
நள்ளிரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் விழித்து தெருவுக்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடிக்கொண்டு இருந்தன. தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகளை வராமல் தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்