என் மலர்
வழிபாடு
- சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
- அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வருகிற 23-ந்தேதி முதல் மே மாதம் 2-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
10 நாட்கள் இவ்விழாவை நடத்த கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்து உள்ளது. 22-ந்தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை துலா லக்னம் அங்குரார்ப்பணம் சேனை முதன்மையாள் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி காலை 8 மணி முதல் 8.45 மணிக்குள் சுவாமிக்கு ரிஷப லக்னத்தில் துவஜா ரோகனம் நடக்கிறது.
அதிகாலை 5.30 மணிக்கு தர்மாதி பீடம் இரவு 7.45 மணிக்கு புன்னைமர வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி காலை 6.15 மணிக்கு சேஷ வாகனம்- பரமபதநாதன் திருக்கோலம் இரவு 7.45 மணிக்கு சிம்ம வாகன ஊர்வலம் நடக்கிறது.
25-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு சாமி கருட சேவை-கோபுர வாசல் தரிசனமும் பகல் 12 மணிக்கு ஏகாந்த சேவையும் இரவு 7.45 மணிக்கு அம்ச வாகன ஊர்வலம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 6.15 மணிக்கு சூரிய பிரவை வாகனம், இரவு 8 மணிக்கு சந்திர பிரவை வாகனம்.
27-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு ஊர்வலம், இரவு 8.15 மணிக்கு அனுமந்த வாகனம் 28-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம், காலை 6.15 மணிக்கு ஆனந்த விமானம் இரவு 8 மணிக்கு யானை வாகன ஊர்வலம் நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணிக்கு கும்ப லக்னத்தில் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் காலை 7 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் இரவு 9 மணிக்கு தோட்டத்திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
30-ந் தேதி காலை 6.15 மணிக்கு பல்லக்கு வெண்ணெய் தாழி, கண்ணன் திருக்கோலம், இரவு 8.15 மணிக்கு குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது.
மே 1-ந் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு- தீர்த்தவாரி, இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு 10-ம் நாள் மே 2-ம் தேதி சப்தவர்ணம்- சிறிய திருத்தேர் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
3-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இது தவிர தினமும் மாலை 5.30 மணிக்கு பக்தி உலாத்தல் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் நித்யா செய்து வருகிறார்.
- காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
- பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.
நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.
அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.
21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.
22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.
26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- கைப்பிடி அளவு சாதம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம்.
- சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.
இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.
நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு வேளைக்கு, ஒரு கைப்பிடி அளவு சாதம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் ஏராளம்.
ஆனால் அந்த சாதத்தை, அந்த அரிசி நம்மிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தேவைக்கு அதிகமாக சமைத்து அதை கீழே கொட்டுவது என்பது மிகப்பெரிய தவறு. நீங்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, உங்களிடம் பணம் காசு நிறைய இருந்தாலும் சரி, சாப்பிடும் சாப்பாட்டை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும்.
நாம் இன்றைக்கு செய்யக்கூடிய தவறு, ஒரு பருக்கை அரிசி என்பது, ஒருநாளைக்கு நம்முடைய வீட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த ஒரு காரணமாக அமைந்து விடக்கூடாது அல்லவா? சரி, நம்முடைய வீட்டில் உணவுக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்றால், அரிசியை நாம் எப்படி நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த காலத்தில் உணவு சம்பந்தப்பட்ட நெல் அரிசி கம்பு கேழ்வரகு கோதுமை இப்படிப்பட்ட தானியங்களை எல்லாம் மண்ணால் செய்யப்பட்ட குதிர் என்று சொல்லப்படும் பெரிய அளவிலான ஒரு மண்பானையில் தான் வீட்டில் வைத்து பாதுகாத்து, சேமித்து வந்தனர். காசு பணம் குறைவாக இருந்தாலும் அப்போது நம்முடைய வாழ்க்கை நிறைவாக இருந்தது.
இன்றைய கால சூழ்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மாற்றங்களினால் நமக்கு கிடைக்கக்கூடிய பல நல்ல பலன்களில், சில கெடுதல்களும் சேர்ந்தே தான் இருக்கின்றது.
அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் உங்களது சமையலுக்கு பயன்படுத்தி வரும் அரிசியை உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் சில்வர் பாத்திரத்தில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் கவரில் கொட்டி வைத்து இருந்தாலும் சரி, அல்லது அரிசி மூட்டையாக வைத்து இருந்தாலும் சரி, அதன் உள்ளே எப்போதுமே ஒரு சிறிய மண்பானையை வைத்து, அந்த மண் பானை நிரம்ப அரிசியை வைக்க வேண்டும்.
மண் டம்ளர் இருந்தால் கூட போதும். இப்போதெல்லாம் மண் டம்ளர்கள் கிடைக்கின்றது. அதை வாங்கி அரிசியை அளக்க ஆழாக்காக பயன்படுத்தினாலும், அது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.
உங்கள் வீட்டு அரிசி டப்பாவில், அரிசி மூட்டையில் அரிசி தீர்ந்து போனாலும் எப்போதும் இந்த சிறிய மண் குடுவையில் அரிசி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிச்சயம் பல நல்ல மாற்றங்களை உங்களுக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம் தேடித் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.
ஒரு மண் பானையை வைத்து விட்டால் நம்முடைய வாழ்க்கையில், கஷ்ட நஷ்டங்கள் மாறிவிடுமோ என்ற கேள்விகளை எழுப்பும் சிலரும் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள்.
கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்து வைத்திருந்தும், தன்னுடைய வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை அடுக்கி வைத்து இருந்தும் ஒரு வாய் சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாதவர்களும் இந்த பூலோகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பிடி அளவு அரிசியை காசுகொடுத்து வாங்க முடியாமல் பசியால் வாடுபவர்களும் இந்த உலகத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு ஆண்டவன் உங்களுக்கு சக்தியை கொடுத்து இருக்கின்றாரா? மண்பானையில் வைத்திருக்கும் அந்த அரிசியோடு சேர்த்து, உங்களால் முடிந்த அரிசியை வாங்க இயலாதவர்களுக்கு, இயன்ற போது தானம் கொடுத்து வரும் பட்சத்தில், உங்களுக்கும் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும், அரிசி வாங்க கூட காசு இல்லை என்ற கஷ்டம் வராது.
- வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
- செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள். லட்சுமி, வழிபாட்டின்போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
- சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.
ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.
பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு.
- மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன்.
முருகனின் வாகனம் என்றாலே, மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு. அவை மயில், யானை, ஆட்டுக்கிடா ஆகும்.

* தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும், ராஜகம்பீரம் கொண்டவர் என்பதாலும் அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது.
* ஒருசமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது. யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்கச் செய்து தனது வாகனமாக ஆக்கிக்கொண்டார்.

* சூரபதுமனுடன் முருகப்பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபதுமன். ஆனாலும் அவன் தோல்வியையே தழுவினான். ஒரு முறை சக்கரவாகப் பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான். பின்னர் சூரன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார். அதில் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் மாறியது.
மயில் `ஆணவம்' என்றும், யானை `கன்மம்' என்றும், ஆடு `மாயை' என்றும், மும்மலங்களை அடக்கி அருள்பவன் முருகன் என்பதே இதன் சான்று.
- சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில்.
- மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில்.
கோவில் தோற்றம்
இந்த ஆலயத்தின் கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதன் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இந்த கருடாழ்வார் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடை மீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வக் கோலம் ஆகும்.

நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை என மூன்று நிலைகளில் திருமால் காட்சி தரும் கோவில், அமர்ந்த நிலையில் வணங்கி நிற்கும் கருடாழ்வார் அருளும் தலம், விஜயநகர மன்னர் காலத்துக் கோவில், செஞ்சி நாயக்கர்கள் திருப்பணி செய்த ஆலயம், சூரியனும் சந்திரனும் தன் ஒளிக்கதிர்களால் வழிபடும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோவிலாகும்.

புராண வரலாறு
கலியுகத்தின் தொடர்ச்சியில் சடமர்ஷனர் என்ற மகரிஷி, வடநாட்டில் தவமிருந்து வந்தார். ஆனால், அப்பகுதி முழுவதும் அமைதி குலைந்து, போர்ச்சூழலும், அதர்மமும் தலைதூக்கியதால் அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதிக்கு வந்தார்.
அப்போது இப்பகுதி பஞ்சகிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப்பகுதியாக இருந்தது. வனத்திற்குள் சடமர்ஷனர் அலைந்து திரிந்தபோது, வெப்பம் தாளாமல் தவித்தார். அப்போது அங்கே தென்கரை ஓரமாக ஓடிய நீரூற்று தென்பட்டது. அதில் தன் கால்களை நனைத்து வெப்பத்தை தணித்தார்.
பின்னர் அந்த நீரூற்று ஓடிய பாதையில் பயணம் செய்தார். அந்த நீரூற்று பாதை, வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார்.
அந்த மகரிஷியின் தவத்தால் மகிழ்ந்த திருமால், தாயாரோடு அவருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த மகரிஷி, "இறைவா.. தாங்கள் இந்த உலகத்தைக் காக்க மேற்கொண்ட அனைத்து அவதாரங்களையும் காட்டி அருள வேண்டும்" என்று கேட்டார். அதன்படியே அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.
பின்னர் மகரிஷி, "இந்த இடத்தில் நின்ற கோலத்திலும், கிடந்த கோலத்திலும் நிரந்தரமாய் தங்கியிருந்து அடியவர்களுக்கு அருளாசி வழங்க வேண்டும்" என்றும் கேட்டார். அதன்படியே நின்ற கோலத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபாலராகவும், கிடந்த கோலத்தில் ஆதிசேஷனின் பாம்பணையில் பள்ளிகொண்ட ராமராகவும் காட்சி அருளினார்.
தொன்மைச் சிறப்பு
தமிழகக் கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் மெக்கன்சி வரலாற்றுக் குறிப்புகளும், கி.பி. 1464-ல் எழுதப்பட்ட செப்புப் பட்டயமும், புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பேடும் இத்தலத்தின் தொன்மையையும், வரலாற்றினையும் அறிய உதவுகிறது.
செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் காலத்தில் (கி.பி. 1464-1478), இத்திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு, செழிப்புடன் விளங்கியது. தெலுங்கு மன்னனின் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட்டம்மாள் என்ற பெண்மணியின் நினைவாக இவ்வூர் `வெங்கட்டம்மாள்பேட்டை' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி, தற்போது 'வெங்கடாம்பேட்டை' என அழைக்கப்படுகிறது.
கி.பி.1464-ல் இருந்து சுமார் 12 ஆண்டுகள் செஞ்சி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்ததை, செப்புப் பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது. புதுச்சேரியை ஆண்ட பிரஞ்சுக் காரர்களின் ஆட்சியில் துபாஷி எனும் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இவ்வூர் மானியமாக வழங்கப்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது.
மேலும், புதுச்சேரியின் வரலாற்று ஆவணமாகத் திகழும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் இவ்வூர் வெங்கட்டம்மாள் பேட்டை என்றே குறிப்பிடப்படுகிறது.
ஆலய அமைப்பு
ஊரின் கிழக்கே பெரிய மதில்சுவர்களைக் கொண்டு சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் சிதிலம் அடைந்த ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் திருக்கோவில் அமைந்துள்ளது. வாசலின் முன்பாக கருட மண்டபம் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கி.பி.1884-ம் ஆண்டின் கல்வெட்டு விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது.
மகாமண்டபத்திற்குள் தெற்கு நோக்கி, வைகுந்த வாசன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவருக்கு ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து நிற்கிறார். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சி கொடுத்த வேணுகோபாலரை தரிசிக்கலாம்.
கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி, மற்ற இரு கரங்களில் புல்லாங்குழல் பிடித்து ஊதும் பாவனையில் வலது காலை சற்றே மடித்து, பெருவிரலால் தரையில் ஊன்றியுள்ளார். நின்ற நிலையிலான இந்த எழிலான கோலத்தைக் காண கண்கோடி வேண்டும். வேணுகோபால சுவாமியின் இருபுறமும் ருக்மணி மற்றும் சத்யபாமா காட்சி தருகின்றனர்.
மூலவரைத் தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார், தனிச் சன்னிதியில் உள்ளார். பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
வடக்கே ஆண்டாள் சன்னிதி உள்ளது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் ராமபிரான் அருளும் சயனக்கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. இவரது மார்பில் திருமகளும், திருவடியில் சீதாதேவியும், வீர ஆஞ்சநேயரும் உள்ளனர்.
இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் 25-ந் தேதியில் இருந்து 6 நாட் களுக்கு காலை 6 மணிக்கு சூரியன் தன் கதிர்களால் மூலவரை வணங்குகிறார். அதேபோல புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும், தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களை செங்கமலவல்லி தாயார் மீது பாய்ச்சுகிறார்.
ஊஞ்சல் மண்டபத்தில் அருகே அழகிய திருக்குளம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கோவிலின் எதிரே சுமார் ஐம்பதடி உயர பதினாறு கற்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் குதிரை வீரர்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் திருமால் தன் சக்கரத்தை ஏவி உருவாக்கிய சக்கரத் தீர்த்தம் கிணறு வடிவில் அமைந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.
இவ்வாலயத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதி பண்டிகை, கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள் ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் வெங்கடாம்பேட்டை உள்ளது. சென்னைக்குத் தெற்கே 215 கிலோமீட்டர் தொலைவிலும், வடலூருக்கு வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும், கடலூருக்கு தெற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.
- பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
- அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
- ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
- சைத்ர மாத சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி.
பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். இந்த உடல் யந்திரத்தை கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் என்னும் 10 இந்திரியங்கள் இயக்குகின்றன. உடல் இயக்கமான கை, கால், உள்ளுறுப்புகள் போன்றவை கர்மேந்திரியங்கள்.
ஒரு பொருளின் தன்மையை நமக்கு விளக்கும் கண், காது, மூக்கு போன்றவை ஞானேந்திரியங்கள். இவற்றோடு மனம் என்னும் கண்ணுக்குத் தெரியாத இந்திரியம் நம்மை வழிநடத்துகிறது. இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்துக்கு ஓய்வு கொடுப்பதுபோல 11 என்கிற எண்ணிக்கை அடிப்படையில் அமையும் இந்த திதி ஓய்வுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
காமதா ஏகாதசி என்றால் எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி என்று பொருள்.
ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர். பெயர் மட்டுமல்ல ஒவ்வோர் ஏகாதசியும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை. ஏகாதசி புராணம் என்னும் நூல் ஒவ்வோர் ஏகாதசியின் சிறப்பையும் பட்டியலிடுகிறது. அவ்வாறு சைத்ர மாத (சித்திரை அல்ல) சுக்ல பட்ச ஏகாதசி காமதா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.
இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.
முன்னொருகாலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை பரம உத்தமமான மன்னன் புண்டரீகன் ஆண்டுவந்தான். அவன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருப்பார்கள். அவன் அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான்.
லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். தங்களின் சாபம் எப்போது நீங்கும் என்று தவித்திருந்தவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார். இதைக் கேட்ட லலித், லலிதா ஆகிய இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப் பின்பற்றினர்.
அந்த நாளில் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்
காமதா ஏகாதசி சிறப்புகள்
1. ஏழு ஜன்மப் பாவம் தீரும்
2. ஆன்மா சுத்தமாகும்
3. சாபங்கள் தீரும்
4. மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை
5. எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்
6. தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்.
7. தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்.
- மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு சித்திரை-6 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 10.28 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: மகம் நண்பகல் 1.18 மணி வரை பிறகு பூரம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் நீ ஆயிரத்தொன்று விநாயகர் உருகு சட்ட சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ சிவபெருமான் புலி வசந்த உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குஜாம்பிகை புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-பொறுமை
மிதுனம்-ஓய்வு
கடகம்-உற்சாகம்
சிம்மம்-நன்மை
கன்னி-விருத்தி
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- ஆதாயம்
மகரம்-உண்மை
கும்பம்-போட்டி
மீனம்-ஆக்கம்
- மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
- ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது.
தலவரலாறு
பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டார். பின்னர் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர்.
அப்போது அசரீரி தோன்றி, "இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்" என்று கூறியது.
அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாக கன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்கம் வழியாகப் பாதாளம் சென்றாள். பின்னர் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான்.
இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாக கன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார்.
ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்" எனக் கூறினார்.
அதற்கு ஆதிசேடன், "இறைவா, இந்நகர் என் பெயரால் வழங்க வேண்டும். நான் பிரதிஷ்டை செய்த லிங்கம் என் பெயர் கொண்டு விளங்கவும், தாங்கள் இதில் இருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டிய பலன்களை தந்தருள வேண்டும். மேலும் இவ்வூர் வளம்பெற்று விளங்க ஆறு ஒன்று இப்பகுதியில் ஓடிக் கடலில் கலக்க வேண்டும். இவ்வாறு காவிரி தோன்றுவதற்கு முன்னே தோன்றுவதால், `விருத்த காவிரி' எனப் பெயர் பெற வேண்டும்" என்றார்.
நாகனது வேண்டுகோளுக்கு இணங்கிய இறைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று வரமளித்தார். தங்கள் தலைவனாகிய நாகன் வந்து நகர் உண்டாக்கி, நாகநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுபெற்ற பெருமையை அறிந்து, வாசுகி, குளிகன், சங்கபாலன் ஆகியோர் இக்கோயில் வந்து நாகநாதரை வழிபட்டு, தங்கள் பெயரால் மேலத்திருச்சுற்றில் அருள்குறிகள் நிறுவிப் பூஜித்து பேறு பெற்றுப்போயினர்.
வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவில் அமைப்பு
நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு, "ராமநாத சுவாமி" என்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு.
கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் ராமபிரான் திருமுடி துறந்து, சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்து வரும்போது ராமன் மனைவியை ராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி, தம்பியும் தானுமாகக் காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார்.
கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு, அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார். இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக் கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார்.
வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி, வெண்ணீறு அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார்.
சிவபெருமானைக் கண்ட ராமன் அவரை வலம் வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் "உனது குறைகளை கூறுவாய்" என்றார்.
"என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த லிங்கம் ராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்" என்றார். அதன் காரணமாக இப்போது ராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் கூறியவாறே ராமன், ராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார்; சீதையுடன் கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய ராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார். இது கிருத்திகை நட்சத்திர பரிகார தலம் ஆகும். இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.
இங்கு விநாயகர், பஞ்ச லிங்கங்கங்கள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் வலஞ்சுழி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், ராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு. ராமநாதர் சன்னதியில் ராமரின் பாதம் உள்ளது. இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே "நாகப்பட்டினம்" என்ற பெயர் வந்தது.
- 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டி உள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
விழாவின் 6-வது நாளான நேற்று இரவு தங்க-வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
7-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தரு ளிய சுவாமி-அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவ கங்கை ராஜா மண்டகப்படி யில் எழுந்தருளினார். இன்று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்ம னும் எழுந்தருளுகின்றனர்.
ஒவ்வொரு நாள் விழாவும் வாழ்க்கையின் தத்துவத்தையும், பலனையும் எடுத்துகூறும் வகையில் நடந்து வருகிறது.
8-ம் நாளான நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நாளை இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.
மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.






