என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார்.
    • 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.

    புல்லாங்குழலுடன் காட்சி தரும் கிருஷ்ணன், வேணுகோபாலனாக ஆலயம் கண்ட தலங்கள் பல உள்ளன. அவற்றில் அமர்ந்த, நின்ற, சயனம் என மூன்று கோலங்களிலும் இறைவன் காட்சி தரும் ஆலயமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ரங்கையா என்பவர், இந்தப் பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு கட்டி வந்தார்.

    ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப் பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல், அதை வைத்து இங்குள்ள 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.

    ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மேல்கோட்டில் உள்ள திரு நாராயணபுரத்திற்குச் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.


    கோவில் அமைப்பு

    இந்த கோவில் மூன்று நிலை மற்றும் ஐந்து கலசங்கள் கொண்ட ராஜ கோபுரத்துடன், கண்களை கவரும் வண்ணம் அழகாக காட்சி தருகிறது. மேலும் உயரமான சுற்றுச் சுவர்களையும் கொண்டுள்ளது.

    கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் பெரிய விசாலமான பரப்பைக் காணலாம். கோவிலை கடந்து உள்ளே சென்றவுடன் எதிரே 30 அடி உயரத்தில் செப்புக் கவசத்துடன் நீண்ட நெடிய கொடிக் கம்பம் ரம்யமாக காட்சி தருகிறது.

    அதனை அடுத்து அழகிய வேலைப்பாடுடன் கூடிய 108 கல் மண்டபங்கள் வரிசையாக அழகாக காட்சி தருகின்றன. இந்த மண்டபத்தின் முகப்பில் ருக்மணி, சத்தியபாமா உடனாய குழல் ஏந்திய கிருஷ்ணனின் சுதை வடிவ சிற்பம் இருக்கிறது.


    கல் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் வித்தியாசமாக கல்யாண விநாயகரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில் திப்புசுல்தானின் புடைப்பு சிற்பமும் இருக்கிறது.

    கொங்கு நாட்டை திப்பு சுல்தான் ஆட்சி செய்த போது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கு அடுத்ததாக 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார், சுதர்சன ஆழ்வார்.

    இவருக்கு சித்திரை நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதர்சன ஆழ்வாருக்கு மறுபுறம், யோக நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    இவருக்கு அடுத்ததாக விநய ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கல்விக் கடவுளான ஹயக்ரீவர், ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி பகவான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    இவர்களை வணங்கி தாயாரான கல்யாண மகாலட்சுமியை தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய - வரத முத்திரையோடும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதோடு, விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    தொடர்ச்சியாக 9 வாரங்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அடுத்ததாக மூலஸ்தானத்திற்கு துவாரபாலகர்களைக் கடந்து உள்ளே செல்கிறோம். மூலவரை நோக்கி கூப்பிய கரத்துடன் கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    கருவறையில் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக ஆனந்தமான முகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.


    இவரது சன்னிதிக்கு பின்புறம் ரங்கநாதர் சன்னிதி இருக்கிறது. அங்கு சிறிய மற்றும் அழகான வடிவத்தில் 'கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயரில் 7 தலை ஆதிசேஷனின் மேல் தூங்கும் புஜங்க சயன தோரணையில் அவர் உள்ளார்.

    அவருக்கு இரு பக்கமும் நிலமகளும், திருமகளும் நின்றபடி இருக்கின்றனர். திருவரங்கம் போன்ற மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிலை சிறியதாக இருந்தாலும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சன்னிதிக்கு முன்னால் பல நூற்றாண்டு பழமையான கல்வெட்டும் இருக்கிறது.

    பிரகாரத்தை சுற்றி வரும்போது சிவபெருமான் கோவில்களில் உள்ளது போல, மகாலட்சுமியின் அம்சமான வில்வ மரத்தை காண முடிகிறது. அதற்கு கீழே நாகர் சன்னிதி, அதற்கு பக்கத்தில் காளிங்க நர்த்தனர் மற்றும் வாமன அவதார பெருமாள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.

    தல விருட்சமாக மகிழம் மரம் உள்ளது. அடுத்ததாக அமர்ந்த நிலையில் லட்சுமி நாராயணர் அருள்கிறார். திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில், இறைவன் நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் அருள்வது போல, இங்கும் மூன்று கோலங்களில் இருக்கும் இறைவனை நாம் தரிசிக்கலாம். இந்த மூன்று மூலவர்களுக்கும் வழக்கமான அபிஷேகம் நடைபெறுகிறது.

    மேலும் இங்கு ஆண்டாள் சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. 108 கால் மண்டபத்தின் கடைசி கல் மண்டபத்தில், சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் இருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. இதேபோல கோவில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


    கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளதைப் போலவே, மோட்ச பல்லியின் சிற்பமும் இருக்கிறது. விஷ பூச்சியால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பல்லியை வணங்கிச் சென்றால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்கு முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை, 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் இருப்பது விசேஷமானது.

    புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.

    வேணுகோபாலனுக்கு ஆவணியில் நடைபெறும் ஜெயந்தி உற்சவம், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் விசேஷமான வழிபாடுகளாகும். இவ்வாலய இறைவனை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டரில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

    • மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • பைரவருக்கு மேற்கூரை கிடையாது.

    உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்'. இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.

    இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.


    கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும்.

    கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.


    ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.

    • இன்று சுபமுகூர்த்தம் தினம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சப்தமி பின்னிரவு 2.16 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.30 மணி வரை. பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்தம் தினம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. பரமக்குடி அன்னை ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். நெல்லை நெல்லையப்பர் ஸ்ரீவேணுவனலிங்கோபத்தியில் பவனி. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் பவனி. கனநாதநாயனார் குருபூஜை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். கரூர்தான் தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-வரவு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நலம்

    கன்னி-அன்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்- நட்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-லாபம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-இன்பம்

    • கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    • சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.

    நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

    • 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட முடிவு.
    • பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.

    தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து அமராவதியில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    • காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.

    சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மலையில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் பல்வேறு மீட்டனர்.

    இதை தொடர்ந்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி கோவில் பிரபலமடைய தொடங்கியது.

    இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு குவிந்து வருகின்றனர்.

    இதற்கிடையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பக்தர்களை தினமும் தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர விட்டதோடு சில வழிகாட்டு தல்களையும் வழங்கினர்.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நடை முறைப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகள், வனத்துறை யினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில் இன்று (3-ந் தேதி) முதல் நாள்தோறும் பக்தர்களை சதுரகிரிக்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சதுரகிரிக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனை சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். மாலை 4 மணிக்குள் லையில் இறங்கி திரும்பி வந்துவிட வேண்டும்.

    உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் கடுமு நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரிக்கு அனு மதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்பட்டி இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட னர். காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவார கேட் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் யாரும் வரவில்லை.

    நேற்று இரவு உத்தரவு வந்ததால் பொது மக்களுக்கு உடனடியாக விபரம் தெரியவில்லை. இதனால் இன்று பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவில்லை. இனிவரும் நாட்களில் பக்தர்கள் நாள்தோறும் வர ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.

    • யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.
    • நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 7-ம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (4-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. கோவிலில் பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.

    கோபுரங்களில் புதிய கலசங்கள் பொருத்துதல் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    நேற்று மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை (4-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடக்கிறது.

    முன்னதாக நாளை அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பா பிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது.

    டிரோன் உதவியுடன் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    படிப்பாதை வழியாக வரும் பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வழிதோறும் பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவை-மருதமலை சாலையில் நாளை முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

    • தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
    • சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார்.



    அயோத்தி சக்கரவர்த்தி தசரதனுக்கு மகனாக பிறந்த ராமபிரான், 14 ஆண்டு வனவாசம் மற்றும் ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்கும் போராட்டம் காரணமாக, இந்திய தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பயணப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி அவர் காலடிபட்ட சில முக்கிய இடங்களை இங்கே பார்க்கலாம்.


    அயோத்தி

    ராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இந்த இடம் தான், ராமர் பிறந்த ஊர். சிறு பிள்ளையாக அவர் விளையாடியதும், 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, அவர் அரியணையில் அமர்ந்து அரசாட்சி செய்ததும் இந்த இடம்தான்.

    தமிழில் ராமாயணத்தை எழுதிய கம்பர். வட நாட்டில் ராமாயணத்தை எழுதிய துளசிதாசர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த, ராம நாமத்தின் ஊற்றுக்கண் இந்த இடமாகும்.

    வாரணாசியில் இருந்து 189 கிலோமீட்டர் தூரத்தி லும், லக்னோவில் இருந்து 128 கிலோமீட்டர் தொலை விலும் இருக்கிறது. அயோத்தி, வாரணாசி யில் இருந்து லக்னோ செல்லும் ரெயில் மார்க்கத் தில் இருக்கிறது அயோத்தி ரெயில் நிலையம்.


    பக்ஸர்

    விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு இடையூறாக இருக்கும் தாடகையை அழிப்பதற்காக ராமரையும், லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர்கள் இருவருக்கும் பலை, அதிபலை என்ற முக்கியமான இரண்டு மந்திரங்களை உபதேசித்த இடம் இதுவாகும்.

    சித்தாசிரமம்', 'வேத சிரா', 'வேத கர்ப்பா', 'க்ருஷ்' என்று வேறு பெயர்களாலும் இந்த இடம் அழைக்கப்படுகிறது. பாட்னாவில் இருந்து மொகல்சராய் செல்லும் ரெயில் மார்க்கத்தில் முக்கியமான ரெயில்நிலையம், பக்ஸர்.


    அகல்யா குண்ட்

    பல நூறு ஆண்டுகளாக கல்லாகக் கிடந்த அகல்யை, காட்டிற்குள் வனவாசம் வந்த ராமரின் காலடிபட்டு, சாப விமோசனம் பெற்றார். அந்த இடம் 'அகல்யா குண்ட்' என்று வழங்கப்படுகிறது.

    சீதாமடி-தர்பங்கா ரெயில் மார்க்கத்தில், கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்கி, மேற்கே 15 மைல் தொலைவு சென்றால் அஹியா என்ற இடம் உள்ளது. இங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அகல்யா குண்ட் உள்ளது.


    ஜனக்பூர்

    மிதிலை நாட்டை ஆண்ட ஜனகரின், அரசாட்சி நடை பெற்ற இடம் இந்த ஜனக்பூர். இங்கிருந்த பெரிய மைதா னத்தில்தான். சீதையை மணப்பதற்காக சிவ தனுசை ராமர் முறித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சீதாமடி என்ற இடத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் ஜனக்பூர் உள்ளது.


    வால்மீகி ஆசிரமம்

    பெரும் வழிப்பறி கொள்ளையனாக இருந்து, பின் மனம் மாறி ராமபிரானின் காவியத்தை எழுதிய வால்மீகி முனி வர் வாழ்ந்த இடம் இதுவாகும். பிரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் உள்ளது.

    மேலும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடுரில் உள்ள கங்கை கரையிலும், சீதாமடி அருகேயும் வால்மீகி முனிவர் வசித்ததாக சொல்லப்படுகிறது.


    சித்திரக்கூடம்

    ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது.ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது, சீதை மற்றும் லட்சுமணனுடன் இந்த சித்திரக்கூடம் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷி பெருமக்களுடன் ராமரும் தவம் இயற்றியதாக ராமாணயம் சொல்கிறது.

    அலகாபாத்தில் இருந்து ஜபல்பூர் செல்லும் ரெயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சித்திரக்கூடம் ரெயில் நிலையத்தில் இறங்கி, இந்த பகுதிக்குச் செல்லலாம்.


    பஞ்சவடி

    அயோத்தியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்தராமபிரான், சில முனிவர்களின் வேண்டுகோள்படி ஓரிடத்தில் தங்க சம்மதிக்கிறார். அது ஐந்து ஆலமரக்கூட்டம் இருக்கும் இடம். எனவே அது பஞ்சவடி என்று அழைக்கப்பட்டது.

    இங்கிருந்துதான் சீதையை, ராவணன் கடத்திச் சென்றான் என்று ராமாயணம் சொல்கிறது. மும்பையில் இருந்து புசாவல் செல்லும் = ரெயில் தடத்தில், நாசிக் ரோட் என்ற பெரிய ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது.


    கிஷ்கிந்தா

    வாலியும், அவன் இறந்த பிறகு சுக்ரீவனும் அரசாட்சி செய்த வானர நகரம் இதுவாகும். கர்நாடகத்தில் இருந்து ஹூப்ளி - கதக் - பெல்லாரி ரெயில் வழித்தடத்தில் அமைந்த முக்கியமான ரெயில் நிலையம், ஹான்ஸ்பேட். இந்த இடத்தின் அருகேதான். கிஷ்கிந்தா ராஜ்யம் அமைந்திருந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


    ராமேஸ்வரம்

    ராமபிரான் இங்கிருந்துதான், இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்தார். பின்னர் வெற்றிக்கொடி நாட்டி திரும் பியதும், இங்குள்ள மணலில் சிவலிங்கம் ஒன்றை செய்து வழிபட்டார். அந்த மணல் லிங்கம்தான் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவிலின் மூலவராக இன்றளவும் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

    • இன்று விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
    • மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

    சென்னை:

    திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.

    விழா நாட்களில் யாகசாலையில் விசேஷ ஹோமங்கள் மற்றும் ஏழு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் இன்று (வியாழக்கிழமை) காலை விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.

    அக்னிமதனம் என்று அழைக்கப்படும் அக்னியை உருவாக்கி உரிய பூஜைகளுக்குப் பின் யாகம் வளர்க்கப்படுகிறது.

    தொடர்ந்து, ராமநவமியையொட்டி 6-ந்தேதி காலை 8.45 மணிக்கு சீதா சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அன விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.

    7-ம் கால பூஜைகளுக்கு பிறகு திருமஞ்சனமும், புஷ்பங்களால் அபிஷேகமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர்கள் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் கோவில் அமைந்துள்ளது.
    • ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தான், சேதுக்கு வாய்த்தான் என்னும் மிகப் பழமையான கிராமம். தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான தோற்றத்தில் காணப்படும் அற்புதமான ஊர்.

    ராம காவியத்தில் ராமபிரானும் வானர வீரர்களும், சீதா தேவியை தேடி இலங்கைக்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் குரங்கணி, குரங்கன் தட்டு மற்றும் அதன் சுற்றுப்பகுதியான சேதுக்கு வாய்த்தான் உள்பட பல தாமிரபரணி கரை கிராமத்தில்தான் அணிவகுத்து நின்றுள்ளனர்.

    அதன் பிறகு 'சற்று தெற்கே வந்து விட்டோம்' என ராமேஸ்வரம் நோக்கிச் சென்றதாகவும், ராமேஸ்வரத்தில் இருந்து சேது சமுத்திரத்தில் ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

    அப்படி ராமபிரானும், வானர வீரர்களும் தங்கி இருந்த இந்த கிராமம் 'சேது பூமி' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் சேதுக்குவாய்த்தான் என்று மருவியது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சேதுக்குவாய்த்தான் ஊரில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார், சூலுகாத்த சூலுடைய அய்யனார் சாஸ்தா.

    கி.பி. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், சேதுபதி நாதன் என்னும் குறுநில மன்னன். இவர் சேதுக்கு வாய்த்தான் பகுதிகளை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நீதி தவறாமல் நடந்து வந்த இவரது ஆட்சி காலத்தில், மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.

    மாதம் மும்மாரி மழையும் பெய்தது. வருடம் முழுவதும் மூன்று வேளை விவசாயம் செழிப்பாக விளைந்தது. மக்களும் மன்னனின் ஆணைக்கு கட்டுப்பட்டு மிகவும் மகிழ்ச்சியாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர்.

    சேதுபதிநாத மன்னனின் ஆட்சிக்குட்பட்ட சேதுக்கு வாய்த்தான் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அழகான சோலை ஒன்றில் தர்ம சாஸ்தாவான அய்யனார் அருள்பாலித்து வந்தார்.


    அப்போது அவர் ஓலைக்குடிசலில் தான் அமர்ந்திருந்தார். இவ்வூரில் நல்லதாய் என்ற பெண் வசித்து வந்தாள். ஏழைப்பெண்ணான இவளது கணவன் சின்னத்துரை.

    கணவன்- மனைவி இருவரும் தினமும் சேதுக்குவாய்த்தானில் இருந்து குரங்கணி வரை தாமிரபரணி கரையோரமாகச் சென்று விறகு பொறுக்கி வருவார்கள். பணி முடிந்து வீடு திரும்பும்போது, அய்யனாரை வணங்கத் தவறுவது இல்லை. விறகை விற்று அதன் மூலம் பொருளாதாரம் ஈட்டி வந்தனர்.

    இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கள் மனக்குறையைப் போக்க தினமும் குழந்தை வரம் வேண்டும் என ஓலைக்குடிசையில் இருந்த அய்யனாரை வணங்கி நின்றார்கள். அய்யன் இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தார்.

    நல்லதாய் கர்ப்பமானாள். நல்லதாய்க்கு கணவனைத் தவிர சொந்தம் என்று யாரும் இல்லாததால், முன்பு போலவே, கணவன் தன்னுடனேயே மனைவியையும் விறகு பொறுக்கும் பணிக்கு அழைத்துச் சென்று விடுவான். 10 மாதம் கடந்த நிலையில், வயிறு பெருத்து நடக்க முடியாமல் தவித்தாள், நல்லத்தாய். இன்றோ, நாளையோ அவளுக்கு பிரசவம் ஏற்படும் என்ற நிலை.

    ஆதரவாக யாரும் இல்லாததால் கணவனுடன் பணிக்குச் சென்றாள். பணி முடிந்து தலையில் பாரம் சுமந்தபடி வந்தபோது, பாதி வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் துடிதுடித்துப் போனாள். சின்னத்துரை மனைவியின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

    அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அய்யனார்கோவில் அருகில் மனைவியை அமர வைத்தான். "அய்யனே என் மனைவியை பார்த்துக்கொள்" என அய்யனாரிடம் ஒப்படைத்தான்.

    பின்னர் மனைவியிடம், "ஊருக்குள் போய் உதவிக்கு மருத்துவச்சியை கூட்டி வருகிறேன்" என கூறிவிட்டு அவசர அவசரமாக ஊருக்குள் ஓடினான். அங்கே இருந்த மருத்துவச்சியிடம் தனது மனைவிக்கு பேறு காலம் பார்க்க வரும்படி கோரினான்.

    அந்த நேரம் பார்த்து பெருங்காற்றும், தொடர் மழையும் பெய்யத் தொடங்கியது. மருத்துவச்சி வயதானவர் என்பதால், அவரால் அந்த புயல் மழையில் வெளியே வர முடியவில்லை. இதனால் மனம் வருந்திய சின்னத்துரை, "அய்யோ மனைவியை தனியாக விட்டு விட்டு வந்து விட்டோமே" என மீண்டும் கோவிலை நோக்கி ஓடினான்.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. அந்த வெள்ளம் இவனையும் சூழ்ந்தது. எனவே மனைவியை காணச் செல்ல முடியாமல் பாதி வழியில் பறிதவித்து நின்றிருந்தான். அப்படி நின்ற இடத்தில் இருந்து அய்யனை நோக்கி கை கூப்பி வணங்கினான். "அய்யனே என் மனைவியையும், குழந்தையையும் காப்பாற்று" என்று மன்றாடினான்.

    இவனின் குரல் அய்யனாரின் காதுகளில் விழுந்தது. தனது கோட்டைக்குள் மனைவியை கொண்டு வந்து விட்டுச் சென்ற கணவனின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அய்யனார், மருத்துவச்சி வடிவத்தில் அங்கு தோன்றி, நல்லதாய்க்கு பிரசவம் பார்த்து, அவள் நல்ல சுகப் பிரசவத்துடன் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.

    வீசி அடிக்கும் காற்றையும், பேய் மழையையும் தன் கண் அசைவில் நிறுத்தினார் அய்யனார். அதன் பின் அய்யனாக சென்று கோவிலுக்குள் ஐக்கிய மானார்.

    மழை நின்றவுடன் மருத்துவச்சியை அழைத்துக்கொண்டு ஓடியே வந்தான் சின்னத்துரை. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த நல்லதாய் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். "இந்த மருத்துவச்சித் தான் எனக்கு பேறுகாலம் பார்த்தாள்" என்று மருத்துவச்சிக்கு நன்றி கூறினாள்.

    மருத்துவச்சியும், அவளது கணவரும் அதிர்ச்சி அடைந்தனர். "என்னம்மா சொல்கிறாய்.. நான் இப்போது தானே வருகிறேன்" என்றாள் மருத்துவச்சி. அப்போதுதான் அவர்கள் மூவருக்கும் ஒரு உண்மை புரிந்தது, அந்த அய்யனாரே, மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்துச் சென்றிருக்கிறார். இதனால் அவர்கள் மனம் நிறைந்து அய்யனுக்கு நன்றி செலுத்தினர்.

    நிறைமாத கர்ப்பிணியான நல்லதாய், பிள்ளைபெற மருத்துவச்சியாக உதவி செய்ததால், இத்தல அய்யனாரை 'சூலுடையார் அய்யனார்' என்று அழைத்தனர். இவர் தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு, அருளை அள்ளித்தந்து மகிழ்கிறார்.

    இவரின் அருள் பரவிய காரணத்தால், இங்கு வழிபட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஓலை குடிசையில் இருந்த அவர், பின்னர் பெரிய கல் கட்டிடத்திற்கு மாறினார்.

    இந்த ஆலயத்தில் அரசு வேலை கிடைக்கவும், இழந்த பொருளை மீட்கவும், கடன்தொல்லை நீங்கவும் நேரில் வந்து தரிசனம் செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்களும், சுகப் பிரசவம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.

    இந்த திருக்கோவில் வெளிப் பிரகாரத்தில் சங்கிலி பூதத்தாரும், பேச்சியம்மன், சுடலைமாடசாமி என பரிவார தெய்வங்களும், உள் பிரகாரத்தில் விநாயகரும், வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியரும் காட்சியளிக்கின்றனர். வெளிப் பிரகாரத்தில் வன்னிய ராஜா கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருநாள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டவர்கள் தேடிவந்து வணங்கி நிற்கிறார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

    இந்த ஆலயம் ஏரலுக்கு மறுகரையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து ஏரலுக்கு பேருந்து வசதி உண்டு.

    • பங்குனி உத்திரம் அன்று மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று அழைப்பார்கள்.
    • பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு.

    பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில், பல்வேறு சிறப்புமிகு நிகழ்வுகள் நடைபெற்றிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்பான நாளில்தான், பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

    மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் 'பங்குனி உத்திரம்' என்று சிறப்பித்து கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்கநாதர் திருமணம், ராமர்- சீதை திருமணம் உள்ளிட்ட பல தெய்வங்களின் திருமணங்கள் இந்நாளில் நடந்தேறி இருக்கின்றன. எனவே பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளும் விரதத்தை 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பார்கள்.


    இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைப்படுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான்.

    தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான்.

    இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.

    பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள்.

    ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.

    தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார்.

    திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும். பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.


    விரதம் இருக்கும் முறை

    பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் அன்று விரதம் இருப்பவர்கள் காலை எழுந்து நீராடி விட்டு, சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக, ஆராதனை செய்து தூப - தீபம் காட்டி, நைவேத்தியங்களை படைத்து வழிபட வேண்டும்.

    அந்த பூஜை நேரத்தில் ஒரு தம்பதியினரை அழைத்து வந்து, அவர்களை வணங்கி தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும்.

    பின்னர் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.

    அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும்.

    துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.

    தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-20 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி பின்னிரவு 3.46 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 12.32 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரதோற்சவம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் உற்சவம் ஆரம்பம். தோளுக்கினியா னில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தேர்ச்சி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-செலவு

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-வரவு

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- கவனம்

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-பயணம்

    மீனம்-உயர்வு

    ×