search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Friday"

    • சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன.

    ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார்கள்.

    சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் முண்டக கண்ணி அம்மன் கோவில், கோலவிழி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்களில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் ராயபுரம் உச்சிகாளி அம்மன், எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன், கன்னிகாபுரம் முத்து மாரியம்மன், செங்குன்றம் கங்கையம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் அம்மன் கோவில்களில் கூழ்வார்த்து வழிபாடு நடத்தப்பட்டது. சில பகுதிகளில் பக்தர்கள் அலகு குத்திவந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சென்னை சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி கடைசி வெள்ளியில் நோன்பிருந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டனர்.

    • ஆடி முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.
    • பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர்.

    திருப்பூர்:

    ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான். ஒவ்வொரு வெள்ளியன்றும் வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.

    வீட்டு முற்றத்திலும், பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு, மாவிலை, தென்னை தோரணங்கள் சூட்டினர். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை, தேங்காய், புளி, தயிர் சாதங்களை தயாரித்து, அம்பாளுக்கு படைத்தனர்.

    அம்பாளை துதித்து போற்றி, மாலைகளை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, முப்பெரும் தேவியரை துதித்து, வீடுகளுக்கு சுமங்கலிப்பெண்களை அழைத்து விருந்து பரிமாறி, வளையல், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இப்படி ஆடிப்பண்டிகையை சுமங்கலிப்பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடினர்.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் குறைந்திருந்த பூக்கள் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.

    திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்து 450 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 250 ரூபாயில் இருந்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவில்கள் தான் பிரசித்தம். கோவிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி பூ விலையும் உயர்ந்துள்ளது.

    ஒரு வாரமாக கிலோ 80 முதல் 120 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி நேற்று 200 முதல் 240 ரூபாய்க்கு விற்றது. துளசி ஒரு கட்டு 20 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரு சில வியாபாரிகளிடம் மட்டும் அரளி பூ இருந்ததால், அதனை வாங்க சில்லறை வியாபாரிகள் பலர் போட்டி போட்டனர். வரத்து குறைவால், மக்களுக்கு அரளி கிடைக்கவில்லை; வியாபாரிகள் மொத்தமாக விற்பனைக்கு அள்ளிச்சென்றனர்.

    பூ வியாபாரிகள் கூறுகையில், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பூக்கள் உதிர்ந்து வருகிறது. வரத்து குறைந்து வரும் இவ்வேளையில் ஆடி வெள்ளி விற்பனை சற்று அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் ஓரிரு நாளில் விலை குறைந்து விடும். ஆவணி முகூர்த்தம் வரை மல்லிகை பூ விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றனர்.

    ×