search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்

    • சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன.

    ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டார்கள்.

    சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் முண்டக கண்ணி அம்மன் கோவில், கோலவிழி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன், திருமுல்லைவாயல் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடை அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்களில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் ராயபுரம் உச்சிகாளி அம்மன், எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன், கன்னிகாபுரம் முத்து மாரியம்மன், செங்குன்றம் கங்கையம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து அம்மன் கோவில்களிலும் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டனர். மதியம் அம்மன் கோவில்களில் கூழ்வார்த்து வழிபாடு நடத்தப்பட்டது. சில பகுதிகளில் பக்தர்கள் அலகு குத்திவந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சென்னை சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு ஆடி கடைசி வெள்ளியில் நோன்பிருந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது வழக்கம்.

    அதன்படி பெருமாள் கோவில்களில் உள்ள மகாலட்சுமி தாயார் சன்னதிகளிலும் இன்று வழிபாடுகள் நடைபெற்றன. சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    சூளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கலிட்டனர்.

    Next Story
    ×