என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.

    ரிஷபம்

    வாங்கல், கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும் நாள். ஆதாயம் உண்டு. வாழ்க்கைத்தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    கடகம்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

    சிம்மம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கன்னி

    இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். வாகனத்தை மாற்றுவது பற்றி சிந்திப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    தனுசு

    திடீர் வரவு ஏற்பட்டு திகைப்படைவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    மகரம்

    யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்துமுடிப்பீர்கள். செல்வந்தர்களின் சந்திப்பால் தொழில் வளர்ச்சிக்கு வழிபிறக்கும்.

    கும்பம்

    முன்னேற்றம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு.

    மீனம்

    பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் ஏற்படும்.

    • மிதுனம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம்.
    • கடகம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இது மேஷ ராசிக்கு மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிகப்படியான ஆர்வத்தை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தொழில் திறமை பிரமிக்க வைக்கும்.

    படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்கு உயரும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். ஏழரைச் சனியால் கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கைகூடும். திருமணம், புத்திரம் போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும்.

    குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளின் திட்டங்கள் பலிதமாகும். தந்தை வழி உறவுகளுடன் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தை மாத செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அகலும்.

    ரிஷபம்

    தடைபட்ட பாக்கிய பலன்கள் கைகூடும் வாரம். ரிஷப ராசிக்கு 9-ம் மிடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். தன ஸ்தானத்தில் குரு நிற்பதால் எதையெதையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு தன்னம்பிக்கையோடு பிழைக்கும் வழி தென்படும்.

    பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். தந்தை விருப்ப ஓய்வு பெறலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். நீண்ட நாட்களாக தடையான காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    18.1.2026 அன்று மாலை 4.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக்கூடாது. தை வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாடு செய்யவும்.

    மிதுனம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பணம் சம்பாதிப்பதிலும் குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதிலும் கவனம் செலுத்துவீர்கள். வீடு வாகனம் சொத்து திருமணம் புத்திர பிரார்த்தம் போன்றவற்றில் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும்.

    உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூலி தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலை கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பண்டிகை கால விடுமுறை பயனுள்ளதாக அமையும். எதிர்பாராத பண வரவுகளால் கையிருப்பு சேமிப்பு உயரும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி நிச்சயம்.

    அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 18.1.2026 அன்று மாலை 4.41 முதல் 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை புறக்கணிக்கவும். அவல் பாயாசம் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.

    கடகம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் பார்வை உள்ளது. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் செய்ய நினைத்த காரியங்களை மறு நிமிடமே செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனையும் லாபமும் படு ஜோராக இருக்கும்.

    பணியாளர்களின் ஒத்துழைப்பால் வேலைபளு, மன பாரம் குறையும். சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழில் முயற்சி செய்யலாம். அதற்கு தேவையான நிதியும் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். அரசு வேலைக்கான நேர்காணலில் வெற்றி உறுதி. கவுரவப்பதவிகள் தேடி வரும். மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும்.

    தந்தை மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம் போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். 21.1.2026 அன்று நள்ளிரவு 1.35 முதல் 23.1.2026 அன்று காலை 8.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். அலைச்சல் மிகுதியாகும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.

    சிம்மம்

    கடனை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிரிகளை வெல்லக்கூடிய சாமர்த்தியம் அதிகரிக்கும். கடன் வாங்கி சொத்துக்கள் வாங்குவீர்கள். சிலர் வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் ஆபரில் மாற்றலாம். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

    வீட்டில் மங்களகரமான சுப காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போல் இருக்கும். அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் கை கால் மூட்டு வலி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

    23.1.2026 அன்று காலை 8.33 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தினமும் பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.

    கன்னி

    எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளின் முன்னேற்றம் தொடர்பான திட்டமிடுதலில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் விலகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். நினைத்ததை நிறைவேற்றுவதில் நிலவிய தடைகள் அகலும்.

    உபரி வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். சொத்து சேர்க்கை கூடும். சொத்துக்களின் மதிப்பு ஏறும். சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். அரசு வகையில் மேற்கொண்ட முயற்சிகள் சாதகமாகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். புத்திர பிரார்த்தம் உண்டாகும். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகமாகும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். தாய், தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடவும்.

    துலாம்

    தடை தாமதங்கள் விலகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுணங்கி கிடந்த பணிகள் விறுவிறுப்படையும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். அடமான நகைகள் மீண்டு வரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட நிரந்தர வருமானத்திற்கான வழி பிறக்கும்.

    தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலைப் பளு குறையும். பத்திரிக்கை எழுத்து துறை,ஜோதிடம், ஆடிட்டிங் கமிஷன் வணிகம், கூட்டுத் தொழில், வங்கி போன்றவற்றில் பணிபுரிபவர்களின் வாழ்வாதாரம் உயரும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும்.

    பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். தை வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கவும்.

    விருச்சிகம்

    எண்ணத்தில் தெளிவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் உப ஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் உச்சம் பெறுகிறார். வீடு மாற்றம் வேலை மாற்றம் வரலாம். மாமனாரால் மைத்துனரால் ஏற்பட்ட மனச் சங்கடம் தீரும். வேற்று மதத்தினர், இனத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் இலக்கை அடைய முடியும்.

    பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். மறுமண முயற்சி நிறைவேறும். மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.

    குடும்பத் தேவையை நிறை வேற்றுவீர்கள். நிம்மதியாக உறங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இருந்த சங்கடங்கள் குறையத் துவங்கும். தை மாத செவ்வாய்க்கிழமை சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெறவும்.

    தனுசு

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. இரண்டாம் இடத்தில் அதிக கிரகச் சேர்க்கை உள்ளதால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். பொருள் கடனும், பிறவிக் கடனும் தீரும். ஆன்ம பலம் பெருகும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட சங்கடங்கள், விரயங்கள் சீராகும்.

    புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் உண்டாகும். புதிய நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சுப விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தாரின் அன்பும் அனுசரணையும் கிடைக்கும். சிலருக்கு வெளியூருக்கு வேலை மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள்.

    பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. முன்னோர்களின் சொத்துகளை வம்சாவளியாக பயன்படுத்துவதில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். தை மாதம் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பாகும்.

    மகரம்

    கவனமாக செயல்பட வேண்டிய காலம். ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வேலையில் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மன உளைச்சல் அதிகமாகும். வேலைப்பளு மிகுதியாக இருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பிறருக்கு கிடைக்கலாம்.

    தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கணிசமான பணப் புழக்கம் கைகளில் புரளும். சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். சிலருக்கு நிர்பந்த ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும்.

    குறுக்கு வழியில் வருமானம் ஈட்டுவது, தவறான நட்பு போன்றவற்றைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்கு பிரயோகத்தை தவிர்க்க வேண்டும். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும். புதிய முயற்சிகளையும் கொடுக்கல், வாங்கல்களையும் தவிர்க்கவும். ஏற்கனவே தொடங்கிய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம். ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.

    கும்பம்

    விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் கவனத்தை தொழிலில் மட்டும் செலுத்தினால் தேவையற்ற சங்கடங்களிலிருந்து தப்ப முடியும். புதியதாக சொந்த தொழில் செய்யும் முயற்சியை ஒத்தி வைக்கவும்.

    வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.

    சிலரின் கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும். வாழ்க்கைத் துணைக்கு தாய் வழி பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும்.

    நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி நாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தேடும் மாற்றங்கள் உண்டு. தை மாத பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபடவும்.

    மீனம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். மீன ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் 2,9ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். இது இழந்த அனைத்து வித இன்பங்களையும் மீட்டுத் தரக்கூடிய அமைப்பாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் துலங்கும். முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும்.

    சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த தந்தை மீண்டும் குடும்பத்துடன் இணைவார். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தீராத கடனைத் தீர்க்கும் வழி தென்படும்.

    எதிரி தொல்லைகள் குறையும். திருமண முயற்சிகள் கைகூடும். நிலுவையில் உள்ள தொகைகள் கைக்கு வந்து சேரும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தேங்கி கிடந்த பொருட்கள் விற்பனையாகும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க முடியும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. ஞாயிற்றுகிழமை சிவ வழிபாடு செய்ய நன்மைகள் இரட்டிப்பாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.
    • தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அந்த வகையில் தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    இதே போல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர்.

    நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    அதேபோல், நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

    • திருமொச்சியூர், சூரிய நயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.
    • காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-4 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை பின்னிரவு 2.30 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : பூராடம் காலை 11.31 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று தை அமாவாசை, காஞ்சி காமாட்சியம்மன் உள்பட அம்மன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சர்வ தை அமாவாசை. திருமொச்சியூர், சூரிய நயினார் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், சங்கரன் கோவில் ஸ்ரீ சங்கரலிங்கப் பெருமாள் கோவில்களில் லட்ச தீபக்காட்சி. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-சுகம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-நன்மை

    துலாம்- விவேகம்

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- தனம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-ஆர்வம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்பு சொல்வதால் பிரச்சனைகள் உண்டு. தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.

    மிதுனம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர் பகை உருவாகும். வாங்கல், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு.

    கடகம்

    இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

    சிம்மம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடர முயற்சிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை.

    கன்னி

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பயணங்களால் பலன்உண்டு. உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    துலாம்

    செல்வ நிலை உயரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும்.

    விருச்சிகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    தனுசு

    யோகமான நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மகரம்

    விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள்

    கும்பம்

    நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற எடுத்த முயற்சி பலன் தரும். எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

    மீனம்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் செய்ய நேரிடும்.

    • அமாவாசை நாளில் பிறர் பசி போக்குவது கூடுதல் பலனை தரும்.
    • எறும்புகள் இரையை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் பழக்கம் உடையது.

    அமாவாசைக்கு வீட்டில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுபவர்கள் தங்கள் படையலை காகத்திற்கு உணவளித்த பின்னே விரதத்தை முடிப்பார்கள்.

    குறிப்பாக தை அமாவாசை அன்று காகத்திற்கு உணவளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாம் வைக்கும் உணவை காகம் சாப்பிட்டால் முன்னோர்களே ஆசிர்வதித்ததாக ஐதீகம்.

    காகம் மட்டுமல்ல ஏதாவது உயிர்களுக்கு தானம் அளிப்பது சிறந்தது. பொதுவாகவே பிறரின் பசி போக்க அன்னதானம் செய்வதற்கு பலன் அதிகம். அமாவாசை நாளில் பிறர் பசி போக்குவது கூடுதல் பலனை தரும்.

    ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான உயிர்களின் பசியாற்றும் செயல்தான் எறும்புகளுக்கு உணவளிப்பது.

    ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை இரவில் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எறும்புகளுக்கு அதை இரையாக போட வேண்டும்.

    பொதுவாக எறும்புகள் இரையை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் பழக்கம் உடையது.

    எனவே நீங்கள் வழங்கும் ஒரு அரிசி கூட பல உயிர்களுக்கு பசிபோக்குகிறது. ஒரு கைப்பிடி அரிசி ஓராயிரம் எறும்புகளின் பசிபோக்கும்.

    • தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
    • தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோ கத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.

    புண்ணிய காலமாகிய உத்திராயணத்தின் முதல் மாதமாக இருப்பது தையின் சிறப்புகளில் ஒன்று. தை மாதம் சிறப்புடையது என்றால் தையில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்புடையது. தையில் வரும் பூச நட்சத்திரம் சிறப்புடையது.

    மேலும் தையில் வரும் சப்தமி (ரத சப்தமி) அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) திதியும் சிறப்புடையது. அந்த வகையில் தையில் வரும் அமாவாசை மிக மிகச் சிறப்புடையது. தட்சணாயன காலத்தில் முதல் மாதமான ஆடி மாத அமாவாசை எத்தனை சிறப்புடையதோ, அதே போன்று உத்தராயன காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும் சிறப்புடையது.

    பொதுவாக திதிகள் 15 இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் தோஷம் அடையும். ஆனால் அமாவாசை அன்று எந்த கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.

     

    அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும். ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

    அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மறைந்த நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஒன்று சேர்ந்து தங்களின் சந்ததிகளை பார்க்க பூமிக்கு வருவதாக ஐதீகம். அப்படி பூமிக்கும் வரும் முன்னோர்கள் தங்களின் குடும்பத்தினர் அளிக்கும் தர்ப்பணம், தானம் ஆகியவற்றை ஏற்று தங்களின் பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்வார்கள். இதனால் அமைதி அடையும் முன்னோர்களின் ஆத்மாக்கள், தங்களின் சந்ததிகளை மனதார வாழ்த்தும் என நம்பப்படுகிறது. இதனாலேயே அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு, பித்ரு கடன் நிறைவேற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பித்ருகர்ம காரியங்கள் செய்யாதவர்களுக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் ஏற்படும். இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிட்ட சில அமாவாசைகள் சொல்லப்படுகிறது.

    அப்படி மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தான் தை அமாவாசை. உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும். படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும்.

    தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது.

    தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.

    அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய தினம் வீட்டின் வாசலில் கோலமிடுதல் கூடாது.

    தை அமாவாசை நீத்தார் வழிபாட்டின் பலன்கள் மிக மிக அதிகம். நீத்தார் வழிபாட்டை அமாவாசை அன்று முறையாக நிறைவேற்றினால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கும், சுப காரியத் தடைகள் விலகும், சந்தான விருத்தி ஏற்படும், தொழில் அபிவிருத்தி அடையும், சொத்து சுகங்கள் அதிகரிக்கும், வாகன யோகம் ஏற்படும்.

    நோய் நொடிகள் அகலும். அமானுஷ்யமான சக்திகள் அண்டாது. கெட்ட சக்திகள் விலகும். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும். இதுவரை செய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட கிரக சாபங்கள் நீங்கி, அவை வரங்களாக மாறி வற்றாத நற்பலன்களை அள்ளி அள்ளி வழங்கும்.

    பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்தில் இருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள் ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும்.

    நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவ புண்ணியங்கள் மட்டுமே. பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும்.

    • ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    • அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாகச் செயல் புரியும்.

    இந்த ஆண்டு தை அமாவாசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானது. ஞாயிறு என்றால் சூரியன். சூரிய பகவான் தான் தந்தை வழி உறவுகளுக்கு காரணமானவர். அவர் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும் தை மாதத்தில், அவருக்குரிய ஞாயிற்றுக்கி ழமையில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

    ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரனான ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அமாவா சையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

    அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாகச் செயல் புரியும். ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.

    • ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும்.
    • முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம்.

    இந்து மதத்தில், அமாவாசை தினம் என்பது மிகவும் 'முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபடுவதற்கு அனைத்து மாதங்களில் வரும் அமாவாசையும் முக்கியமானது என்றாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

    மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறி இருந்தாலும், இந்த மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். அதிலும் தை அமாவாசைக்கு, மற்ற இரண்டு அமாவாசைகளை காட்டிலும் கூடுதல் சிறப்பு உண்டு.

    தமிழ் மாதங்களில் பத்தாவதாக தை மாதம் வருகிறது. இந்த மாதத்தில் வரும் தை அமாவாசையானது, தை தொடங்கி ஆனி மாதம் வரையிலான உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும். முன்னோர்களின் சாபங்கள், தோஷங்கள் போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழ்க்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை உள்ளது. தை அமாவாசை தினத்தில் புனித நதியில் நீராடுவதும், வழிபாடுகளை மேற்கொள்வதும், தான தர்மங்கள் செய்வதும் சிறந்த பலன்களை தரும்.

    ஒருவர் இறந்த பிறகு, அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து முன்னோர்களின் உலகமான பித்ருலோகத்தை சென்றடையும். அவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப அடுத்த பிறவி எடுக்கும் வரை ஆன்மா அங்கேயே தங்கி இருக்கும். பித்ருலோகத்தில் இருக்கும்போது, ஆன்மாவுக்கு பசி, தாகம் ஏற்பட்டால், அவர்கள் முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருவார்கள். அப்போது இங்கு இருக்கும் அவர்களது சந்ததியினர், முறையாக மந்திரங்களை உச்சரித்து, சடங்குகளை செய்து, தண்ணீர், எள் ஆகியவற்றை தெளித்து தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு தேவையான உணவும், தண்ணீரும் கிடைத்து, பசி நீங்கப் பெறுவார்கள். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து, தங்க ளது சந்ததியினரை வாழ்த்தி செல்வதாக நம்பிக்கை.

    ஆடி அமாவாசை அன்று நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வருவார்கள். புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையில் நாம் படைக்கும் உணவுகளையும், தர்ப்பணங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். பின்னர், தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்வதாக ஐதீகம்.

    அதன்படி, தை அமாவாசை அன்று பித்ருலோகத்துக்கு புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். அதனால், அன்றைய தினம் புனித நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, நமக்கும், நமது சந்ததியினருக்கும் ஆசி வழங்குவார்கள்.

    இந்த ஆண்டு தை அமாவாசை 18-1-2026 ஞாயிற்றுக்கிழமை நாளை வருகிறது. அன்றைய தினம் காசி, கயா, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற புனித தீர்த்தங்களில் தர்ப்பணம் கொடுத்து சூரிய பகவானை வழிபட வேண்டும். முடியாதவர்கள், வீட்டின் அருகே உள்ள புனித நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். பின்னர், வீட்டில் முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் அணிவித்து, பூமாலை சாற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள், பழங்கள் போன்றவற்றை படையல் இட்டு வழிபடலாம். முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். எனவே, அன்றைய தினம் காகத்துக்கு உணவு அளிப்பது அவசியம்.

    தை அமாவாசை தினத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்துகொண்டு இறைவனை மனதார வழிபட வேண்டும். தை அமாவாசையில் முன்னோர் வழிபாடு செய்வதன் மூலம், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும், நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம், முன்னோர்களின் ஆசியுடன் வீட்டில் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

    • சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார்.
    • சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த பகுதியில் அமைந்துள்ளது, பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். இது, சூரிய பகவான் வழிபட்ட தலம் என்பதால், சிவபெருமான் எதிரில் சிவ தரிசனம் செய்யும் நிலையில் சூரிய பகவான் சிலை உள்ளது. இது மிகவும் அரிய அமைப்பாகும். இத்தல இறைவன், பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவி, மங்களநாயகி, மங்களாம்பிகை என்று போற்றப்படுகிறார்.

    ஒரு சமயம் தட்சன் யாகம் நடத்தியபோது, சிவபெருமானின் அனுமதியின்றி சூரிய பகவான் அந்த யாகத்தில் கலந்து கொண்டான். இதனால், சூரிய பகவானுக்கு தோஷம் ஏற்பட்டது. இதையடுத்து, சூரியன் தன் தோஷம் போக்க பல சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டார். அந்த சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.

    இக்கோவில் இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும், கொடிமரம், விநாயகர், நந்தி, பலி பீடம் ஆகியவற்றை தரிசிக் கலாம். வெளிப்பிரகாரத்தில் அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது.

    இரண்டாம் கோபுர வாசலை கடந்து உள்ளே சென்றால் உள் பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன. நடராஜ சபை அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் காணப்படுகின்றனர். கருவறையில் மூலவர் சதுர வடிவ ஆவுடையுடன் உயர்ந்த பாணத்துடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவர் எதிரே நந்தி, பலிபீடத்தை அடுத்து சிவனை வழிபடும் நிலையில் சூரியன் காணப்படுகிறார். பிரகாரத்தில் 3 சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். சிவனின் பின்புற கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்ச நேயரும் அருகருகே காட்சி தருவது சிறப்பாகும்.

    பங்குனி மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள், இத்தல இறைவன் மீது விழும் என்பது அற்புத நிகழ்வாகும். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் மேல உளூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பொங்கல் பண்டிகை, சங்கராந்தி தொடர் விடுமுறையால் கடந்த சில நாட்களாக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    திருப்பதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,733 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான டீ , காபி, பால், உணவு, தண்ணீர் ஆகியவை தன்னார்வல்கள் மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

    • அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது.
    • ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருக்கிறது.

    அன்றைய தினம் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். அதனைத்தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் மறைந்த ஆதி நாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது.


    ×