என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • காசாவை கைப்பற்றுவதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.
    • பாலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல டிரம்ப் வலியுறுத்தல்.

    காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிபர் டிரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

    பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்த பிறகு பேசிய அதிபர் டிரம்ப், "அமெரிக்கா காசா பகுதியை எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்ய உள்ளது. நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்."

    "இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்று கூறினார்.

    போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

    • அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது.
    • வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DODGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

    விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DODGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DODGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

     டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.

    "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மேலும் எலான் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

    திறமையற்றவர்கள் எனக் கூறி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை  பணிநீக்கம் செய்யும் ஆலோசனையை அரசுக்கு DODGE வழங்கியுள்ளது.

     அரசின் வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பரவலான அச்சம் மக்களை தொற்றியது.

    'அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்' என ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை மீறி மஸ்க் எதுவும் செய்யமுடியாது என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

     

    நேற்று இதுகுறித்து பேசிய அவர், "எலோனால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். பொருத்தமான விஷயங்களில் நாங்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்போம்; அப்படி இல்லாத விஷயங்களில் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே என் தோலில் சொறி ஏற்பட்டது, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.
    • இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

    அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது தொழிலதிபர் பிரையன் ஜான்சன். மூளை செயல்பாட்டைக் கண்காணித்து பதிவு செய்யும் சாதனங்களை உருவாக்கும் கெர்னல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    வயதை குறைக்கும் [de -ageing] முயற்சியில் கோடிகளை செலவழித்து கவனம் பெற்றவர். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்த நிலையில் டெல்லியில் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் டெல்லி காற்று மாசுபாடு தாங்காமல் ஆளை விட்டால் போதும் என்று நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றார். இந்நிலையில் அதுகுறித்து நீண்டதொரு எக்ஸ் பதிவை அவர் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் இருந்தபோது, மோசமான காற்றின் தரம் காரணமாக இந்த பாட்காஸ்டை சீக்கிரமாகவே முடித்துவிட்டேன். நிகில் காமத் ஒரு அன்பான தொகுப்பாளராக இருந்தார். நான் அங்கு மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். பிரச்சனை என்னவென்றால், நாங்கள் இருந்த அறைக்குள் வெளிப்புறக் காற்று உள்ளே வந்தது. அதை நான் கொண்டு வந்த காற்று சுத்திகரிப்பானால் சுத்திகரிக்க முடியவில்லை.

    உள்ளே, காற்றின் தரம் AQI 130 ஆகவும், PM2.5 75 µg/m³ ஆகவும் இருந்தது, இது 24 மணி நேரத்தில் 3.4 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம்.

    இந்தியாவில் நான் இருந்த மூன்றாவது நாளே, காற்று மாசுபாடு என் தோலில் சொறி ஏற்படுத்தி, என் கண்கள் மற்றும் தொண்டையை எரியச் செய்தது.

    காற்று மாசுபாடு இந்தியாவில் மிகவும் இயல்பாக பார்க்கப்படுகிறது. அதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அறிவு இருந்தாலும், யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. இந்த காற்றால் பிறப்பிலிருந்தே குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். யாரும் முகமூடியையும் அணிவதில்லை. அது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது.

    புற்றுநோய்களை குணப்படுத்துவதை விட காற்றின் தரத்தை சுத்தம் செய்வதன் மூலம் இந்தியா அதன் மக்களின் ஆரோக்கியத்தை பேண முடியும் என்பதை சான்றுகள் காட்டுகின்றன.

    இந்தியாவின் தலைவர்கள் காற்றின் தரத்தை ஒரு தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது முழு நாட்டிற்கும் மிகவும் மோசமானது.

    நான் அமெரிக்காவுக்குத் திரும்பியபோது எல்லா இடங்களிலும் உடல் பருமனானவர்களைக் கண்டேன். 42.4% அமெரிக்கர்கள் உடல் பருமனாக உள்ளனர். நான் எப்போதும் அவர்களை சுற்றி இருந்ததால், நான் பெரும்பாலும் அதைப் பற்றி மறந்துவிட்டேன். ஆனால் இந்தியா சென்று திரும்பியதும் அது எனக்கு உறைத்தது.

    உடல் பருமன் நீண்ட கால காற்று மாசுபாட்டை விட மோசமானது. அமெரிக்கத் தலைவர்கள் உடல் பருமனை தேசிய அவசரநிலையாக ஏன் அறிவிக்கவில்லை? என்றும் தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். 

    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
    • அமெரிக்க இராணுவ விமானங்களின் தொலைதூர இலக்கு இந்தியா.

    அமெரிக்காவில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

    அந்த வகையில் தனது கடுமையான நிலைப்பாட்டை செயல்படுத்தும் வகையில், அமெரிக்க இராணுவ விமானம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்களை நாடு கடத்தத் தொடங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பெயர் தெரிக்க முடியாத அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் பேசும் போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுடன் C-17 விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

    குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க இராணுவ விமானங்களின் மிகத் தொலைதூர இலக்கு இந்தியா தான். டெக்சாஸ், எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட குடியேறிகளை நாடு கடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுவரை, இராணுவ விமானங்கள் குவாத்தமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸுக்கு குடியேறிகளை அனுப்பி வைத்துள்ளன.

    குடியேற்றம் குறித்த அவசர அறிவிப்பின் ஒரு பகுதியாக டிரம்ப் கடந்த வாரம் நாடுகடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதுவரை லத்தீன் அமெரிக்காவிற்கு ஆறு விமானங்கள் புறப்படுள்ளன. இதில் நான்கு மட்டுமே குவாத்தமாலாவில் தரையிறங்கியது. இரண்டு அமெரிக்க C-17 சரக்கு விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்க மறுத்தது. பிறகு, டிரம்புடனான மோதலைத் தொடர்ந்து குடியேறிகளை அழைத்துச் செல்ல அதன் சொந்த விமானங்களை அனுப்பியது.

    "வரலாற்றில் முதல் முறையாக, சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து, இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புகிறோம்," என்று டிரம்ப் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது. இந்த நிலையில், மெக்சிகோ பிரதிநிதி கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

    அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.

    மிகவும் நட்புரீதியான உரையாடலுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரிகளை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் எனும் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.

    தற்போதைக்கு ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையில் ஒப்பந்தம் எட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    "எங்கள் உறவு மற்றும் இறையாண்மைக்கு மிகுந்த மரியாதையுடன் அதிபர் டிரம்புடன் நல்ல உரையாடல்" என்று ஷீன்பாம் கூறினார்.

    • சென்னையில் உள்ள MCC கல்லூரியில் தான் சந்திரிகா டன்டன் படித்துள்ளார்.
    • தற்போது சந்திரிகா டன்டன் அமெரிக்காவில் தொழிலதிபராகவும் உள்ளார்

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன்டன் (70) கிராமி விருதை வென்றார்

    'த்ருவேனி' என்ற பாடலுக்காக Best New Age Album என்ற பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள MCC கல்லூரியில் பயின்ற இவர், தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.
    • இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.

    இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.

    அப்போது மிகவும் மெல்லிதாக உடல் பாகங்கள் முழுவதுமாக வெளியே தெரிய கூடிய உடையை பியான்கா சென்சோரி அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பியான்கா சென்சோரி கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததற்காக பியான்கா சென்சோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    • விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

    அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.

    டிரம்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

    இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

    அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

    அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.

    நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.

    கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
    • விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.

    விமானம் புறப்பட தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.

    "விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    • தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
    • செலினா கோம்ஸ்-க்கு துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான்

    கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவற்றை நாடு கடத்தி வருகிறார். கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதற்கட்டமாக நாடுகடத்தப்பட்டனர்.

    கைவிலங்கிட்டு, குடிக்க தண்ணீர் இல்லாமல், விமானத்தில் ஏசி இல்லாமல் அவர்களை அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியதாக பிரேசில் குற்றம்சாட்டியது. இதற்கிடையே நாடு முழுவதும் குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாதோரை தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் மெக்சிகோ மற்றும் இத்தாலி வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.

    சில மணி நேரங்களிலேயே அதை அவர் நீக்கினார். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.

    சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது. கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் பிள்ளைகள் சட்டவிரோத 'ஏலியன்'களால் கொல்லப்பட்டனர்.

    செலினா கோம்ஸ்-க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.

    அதில் பேசும் அவர்கள், 'நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில். அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே' என்று தெரிவித்தனர்.

    மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.

    • அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது என் கடமை.

    கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."

    "நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது.
    • ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    அமெரிக்கா-வெனிசுலா நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது.

    இதில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை தென் அமெரிக்க நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புப் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் 6 அமெரிக்க பிணைக்கைதிகளை வெனிசுலா அரசு விடுதலை செய்துள்ளது. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    ×