என் மலர்
விளையாட்டு
மும்பை:
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ,பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து ஆண்டு தோறும் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.
13-வது ஐ.பி.எல் போட்டியை கடந்த மாதம் 29 ந் தேதி முதல் மே மாதம் 24-ந் தேதி வரை நடத்த திட்ட மிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு ஐ.பி.எல் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் நடத்தவும் முடிவு செய்து இருக்கிறது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலையே நிலவுகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ.3,700 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ஒளிபரப்பு உரிமை ரூ.3269 கோடியாகும். ஸ்பான் சர்ஷிப் மற்றும் விளம்பர வருவாய் போன்றவை அடங்கும். டைட்டில் ஸ்பான்சர் மூலம் ரூ 400 கோடியை இழக்கும். மேலும் வீரர்களின் ஹெல்மெட் விளம்பரம் செய்ய ரூ.1 கோடி, உடை முன் பக்கம் விளம்பரம் செய்ய ரூ.5 கோடி, தோள்பட்டையில் விளம்பரம் செய்ய ரூ.2.5 கோடியும் வருவாயாக கிடைக்கும். இவற்றையும் கிரிக்கெட் வாரியம் இழக்கும்.
போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கு பார்வையாளர் கட்டணம் கிடைக்காது என்பதால் ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். அவர் தற்போது கிழக்கு டெல்லி தொகுதி பா. ஜனதா எம்.பியாக இருக்கிறார்.
காம்பீரின் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சரஸ்வதி பத்ரா (வயது 49) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்தவர். காம்பீரின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக சரஸ்வதி வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 14-ந் தேதி டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காம்பீர் ஏற்றுக்கொண்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 21-ந் தேதி இறந்தார்.
இதையடுத்து ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு காம்பீர் தகவல் கொடுத்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவரது குடும்பத்தினரும் டெல்லிக்குவர முடியவில்லை. இதனால் காம்பீரே இறுதிச்சடங்கு செய்யுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்று காம்பீர் தனது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார்.
அவரது இந்த மனிதாபிமான செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானும் காம்பீரை பாராட்டியுள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி அவருடன் நடந்த ஒரு சம்பவத்தை பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் நேற்று நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-
1997-ம் ஆண்டு கனடாவில் நடந்த சஹாரா கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது புதிய யுக்தியின் ஒரு பகுதியாக சச்சின் தெண்டுல்கரை நான் வேண்டுமென்றே முதல்முறையாக சீண்டினேன். அதற்கு தெண்டுல்கர் என்னிடம் அமைதியாக வந்து, நான் உங்களிடம் ஒரு போதும் தவறாக நடந்ததில்லை. பிறகு ஏன் நீங்கள் என்னிடம் தேவையின்றி வம்பு செய்கிறீர்கள் என்று கேட்டார். அவர் அவ்வாறு கேட்டதும் எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மேலும் அவர், ஒரு மனிதராகவும், வீரராகவும் உங்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன் என்றும் கூறினார். அது எனது மனதை மேலும் உலுக்கியது. அதன் பிறகு நான் அவரை ஒரு போதும் வசைபாடியது இல்லை. அந்த ஆட்டம் முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்குடன் இன்ஸ்டாகிராமில் நடத்திய உரையாடலின் போது கூறியதாவது:-
அடுத்து 3 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை, அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் அரங்கேற உள்ள 50 ஓவர் உலக கோப்பை) நடைபெற இருக்கின்றன. இந்த 3 உலக கோப்பை போட்டிகளில் குறைந்தபட்சம் 2 உலக கோப்பை போட்டியிலாவது இந்திய அணி வெற்றி வாகை சூட வேண்டும். அது தான் எனது தனிப்பட்ட நோக்கமாகும்.
2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்தில் விக்கெட்டு களை இழக்காமல் இருந்து இருந்தால், நாம் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க முடியும். அந்த முதல் 10 ஓவர்கள் உண்மையிலேயே முக்கியமானதாக இருந்தது. நமது அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு தீர்வு காண சரியான வீரர்களை தேர்ந்தெடுப்பதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு மிகவும் நெருக்கடியான விஷயமாகும்.
வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். உங்களுக்கும் (ஹர்பஜன்சிங்), யுவராஜ்சிங்குக்கும், சவுரவ் கங்குலி எப்படி ஆதரவாக இருந்தார். அதனை பயன்படுத்தி கொண்டு நீங்கள் எப்படி செயல்பட்டீர்கள் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். அதேபோல் நாங்களும் செயல்பட வேண்டும். தற்போது யாருக்கெல்லாம் ஆதரவு அளிக்கப்படுகிறதோ? அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படாவிட்டால், அது உங்களுடைய நம்பிக்கையை பாதிக்க செய்யும். அது எனக்கும் நடந்து இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது. லோகேஷ் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவரது பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்க்க மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. இளம் வீரரான சுப்மான் கில் திறமையான வீரர். அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவருக்கு வாய்ப்பு கிடைத்து, தொடர்ச்சியாக ரன்கள் சேர்த்தால் நல்ல நம்பிக்கை கிடைக்கும்.
கிரிக்கெட் விளையாடாத சமயத்தில் டோனியை கண்டுபிடிப்பது கடினம். அவர் ரேடாரில் இருந்து மறைந்து விடுவார். யார், யாருக்கு அவரது எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ? அவர்கள் டோனி வசிக்கும் ராஞ்சிக்கு நேரில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள். உலக கோப்பை போட்டி தொடருக்கு பிறகு அவரை பற்றி எந்தவித செய்தியும் நான் கேள்விப்படவில்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.







