என் மலர்
விளையாட்டு
மாட்ரிட்:
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் 6 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டு தனது 13-வது வயதில் அவர் அந்த கிளப்பில் இளம் வீரராக கால் பதித்தார். அவரது ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்தார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் தன்னை விடுவிக்கும்படி அவர் பார்சிலோனா கிளப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் தற்போது அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே மெஸ்சியை விடுவிக்க முடியும் என்று அந்த கிளப் நிர்வாகம் அறிவித்து விட்டது.
அவரது தந்தை பார்சிலோனா கிளப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து மெஸ்சி மேலும் ஒரு சீசனில் (2020-2021) அந்த கிளப்புக்காக விளையாடுகிறார். ஆனாலும் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று மெஸ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை. இதனால்தான் அந்த கிளப்பிலிருந்து விலக விரும்பினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அணித் தலைவர் ஜோசப் மரியாவுடன் இதை தெரிவித்தேன். விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் போகலாம் என்றார்.
ஆனால் தற்போது அவர் வேறு மாதிரி பேசுகிறார். நானும் வேறு வழியில்லாமல் சட்ட சிக்கல்களை தவிர்க்க பார்சிலோனா அணியில் நீடிக்கிறேன்.
பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த அணியை நான் நேசிக்கிறேன். இங்குதான் என் வாழ்க்கை உருவானது. எனக்கு தேவையான அனைத்தையும் இங்குதான் பெற்றேன்.
இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.
33 வயதான மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 731 போட்டிகளில் 634 கோல்களை அடித்துள்ளார். அந்த அணி 10 லாலிகா பட்டம், 4 சாம்பியன்ஸ் லீக் உள்பட 34 கோப்பைகளை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான ஐ.பி.எல். அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் துபாயில் இருந்து நாடு திரும்பினார்.
அவருக்கும் கேப்டன் டோனிக்கும் மோதல் இருந்ததாகவும், மேலும் சி.எஸ்.கே. நிர்வாகத்துடன் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விலகியதாக தகவல் வெளியானது.
இதை ரெய்னா மறுத்திருந்தார். தனது சொந்த காரணத்துக்காகவே போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.
ரெய்னா ஆடாததால் சி.எஸ்.கே.அணியில் அவரது இடமான 3-வது வரிசையில் யார் களம் இறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் டோனி இந்த வரிசைக்கு பொறுத்தமானவர் என்று முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என்று ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
3-வது வரிசையில் அசாத்திய திறமை படைத்த பேட்ஸ்மேன்களால் மட்டுமே விளையாட முடியும். அந்த வரிசை அணிக்கு அஸ்திவாரம் போன்றது. இதனால் டோனி 3-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டும்.
சர்வதேச போட்டிகளில் 3-வது வீரராக ஆடிய அனுபவம் டோனிக்கு இருக்கிறது. 2005-ல் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக டோனி அபாரமாக ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா?
இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.
இதற்கிடையே ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருசில ஆட்டங்களில் மட்டுமே அவர் ஆடாமல் இருப்பார். போட்டியின் இடையே அவர் சி.எஸ்.கே. அணியுடன் இணைந்து கொள்வார் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி (இங்கிலாந்து) காயம் காரணமாக விலகினார். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சொந்த விஷயம் காரணமாக ஒதுங்கினார்.
இதனை அடுத்து இந்த இரு அணிகளும் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை தங்கள் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து அணுகி இருந்தன. ஆனால் அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் அக்ரம்கான் கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு அழைப்பு வந்து இருந்தது.
வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை’ என்றார். 24 வயதான முஸ்தாபிஜூர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக 2018-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜான் லினர்ட் ஸ்ரப்பை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிடமே தேவைப்பட்டது.
இந்த ஆண்டில் தோல்வியையே தொடாமல் தொடர்ச்சியாக 26-வது வெற்றியை பெற்ற ஜோகோவிச் கடின தரை போட்டியில் பதிவு செய்த 600-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்திக்கிறார்.

மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), டேவினோவிச் போகினா (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்கள் தடையை வெற்றிகரமாக கடந்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அன் லியை வீழ்த்தினார்.
பெட்ரா மார்டிச் (குரோஷியா), புதின்சேவா (கஜகஸ்தான்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி வைக்க கூடும் என கூறப்படுகிறது.
இதற்காக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல கூடும். மற்ற வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்டு அணியில் இணைந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.






