என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் தொடரில் இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
    ஐபிஎல் டி20 கிரிகெட் லீக் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

    இதுவரை 21 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, இரண்டு தோல்விகளுடனும், டெல்லி அணி ஐந்து போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடனும் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி (+1.488) முதல் இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (+1.060 ரன்ரேட்) 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (+0.002 ரன்ரேட்) 5 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (-1.355) 3 வெற்றிகள் பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் (-0.371) 6 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுட்ன் 5-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதாராபாத் (-0.417) 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (-0.826) 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மும்பை, டெல்லிக்கு அடுத்தப்படியாக அதிக ரன்ரேட் (+0.178) வைத்துள்ளது.

    கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டால் ரன்ரேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
    ஐபிஎல் போட்டியில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆடுகளத்தின் தன்மையை பெரிதாக கருதாமல் டாஸ் வெல்லும் அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்யும்.

    துபாயில் பல போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 180 ரன்களுக்கு மேல் ரன்கள் அடித்ததால் டாஸ் வென்ற அணிகளால் சேஸிங் செய்ய இயலாமல் போனது.

    அபு தாபியில் 170 ரன்கள் அடித்தாலே சேஸிங் செய்ய கடினம் என்பதால் டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங்கை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். 

    இதில் சுவராஸ்யமான கதை என்னவென்றால், பொதுவாக கொல்கத்தா அணி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்வது கிடையாது. சேஸிங் செய்யவே விரும்பும்.

    இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்திருந்தது. அதன்பின் தற்போது நேற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 69 போட்டிகளுக்குப் பிறகு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    இந்த ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
    வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    துபாய்:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், பஞ்சாப் அணி ஒரு வெற்றி , 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளன.

    ஐதராபாத் அணி பஞ்சாப்பை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.

    ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர், பேர்ஸ்டோவ், வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ரஷீத்கான், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங் அகர்வால், நிக்கோலஸ் பூரன், முகமது ‌ஷமி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டத்திலும் தோற்றது. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் ஐதாராபாத் 10-ல், பஞ்சாப் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.

    கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஏற்கனவே விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார். அவர் எதற்காக சென்னை அணியில் இருக்கிறார் என்று ரசிகர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.

    ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஏற்றவாறு அவரது பேட்டிங் நேற்றும் மிகவும் மோசமாக இருந்தது. டோனி ஆட்டம் இழந்த பிறகு 6-வது வீரராக களம் இறங்கிய அவர் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்களை எடுத்தார். சென்னை அணியின் தோல்விக்கு அவரது மந்தமான ஆட்டமே காரணம். அவர் இடத்தில் பிராவோவை களம் இறக்கி இருந்தால் சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும்.

    இந்த சொதப்பலான ஆட்டத்தால் கேதர் ஜாதவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளனர். இனிவரும் ஆட்டங்களில் அவரை சேர்க்காமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

    சென்னை அணியின் பேட்டிங் வரிசை முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதே நேரத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் சிறப்பான முடிவுகளை கையாண்டார். திரிபாதியை தொடக்க வீரராக அனுப்பியதற்கு நல்ல பலன் கிடைத்தது. சுனில் நரீன் மிடில் ஓவரிலும், ரசல் கடைசி கட்டத்திலும் பந்து வீசியது அபாரமான முடிவாகும்.

    இங்கிலாந்து அணியின் கேப்டனான மார்கன் எல்லா வகையிலும் தினேஷ் கார்த்திக்குக்கு உதவியாக செயல்பட்டு, வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் நாளை நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- சிட்சி பாஸ் மோதுகின்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 17-வது வரிசையில் உள்ள பேப்லோ கரன்னோ பஸ்டா (ஸ்பெயின்) மோதினார்கள்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 10-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 10 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    2016-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச் அரை இறுதியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை சந்திக்கிறார்.

    5-ம் நிலை வீரரான அவர் கால் இறுதியில் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆண்ட்ரூ ருப்லேவை (ரஷியா) தோற்கடித்தார். சிட்சிபாஸ் முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச்-சிட்சி பாஸ், நடால் -டியாகோ ஸ்வார்ட்ஸ் மேன் மோதுகிறார்கள்.

    பெண்கள் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது. இதில் போடோரோஸ்கா (அர் ஜென்டினா)-இகா (போலந்து), சோபியா கெனின் (அமெரிக்கா)- கிவிடோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

    ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
    வேலன்சியா:

    ஸ்பெயின் நாட்டின் வேலன்சியா நகரில் துரியா ஸ்டேடியத்தில் நடந்த தடகள போட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்த அளவிலான நபர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இவற்றில் விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர்

    இந்த தடகள போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜோசுவா செப்டெகி (வயது 24) கலந்து கொண்டு 26 நிமிடங்கள் 11.02 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்துள்ளார்.

    கடந்த 2005ம் ஆண்டு எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் கெனெனிசா பெகெலே 26 நிமிடங்கள் 17.53 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்திருந்தது உலக சாதனையாக இருந்தது.  இதனை ஜோசுவா முறியடித்து உள்ளார்.

    அவர் கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த உலக சாம்பியன்சிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.  கடந்த ஆகஸ்டில் மொனாக்கோ நகரில் நடந்த டையமண்ட் லீக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

    இவை தவிர்த்து, கடந்த டிசம்பரில் வேலன்சியா நகரில் நடந்த 10 கிலோ மீட்டர் ரேசிங் பிரிவில் கலந்து கொண்டு இலக்கை அடைந்து, 6 வினாடிகள் வித்தியாசத்தில் 10 ஆண்டு கால சாதனையை ஜோசுவா முறியடித்திருக்கிறார்.

    இதேபோன்று மகளிர் பிரிவு 5 ஆயிரம் மீட்டர் தடகள போட்டியில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை லெடிசென்பெட் கிடி (வயது 22) பந்தய தொலைவை 14 நிமிடங்கள் 6.62 வினாடிகளில் கடந்து உலக சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பு, அவரது நாட்டை சேர்ந்த மற்றொரு தடகள வீராங்கனையான திருனேஷ் திபாபா கடந்த 2008ம் ஆண்டு ஓஸ்லோவில் நடந்த போட்டியில் 14 நிமிடங்கள் 11.15 வினாடிகளில் பந்தய இலக்கை அடைந்திருந்தது உலக சாதனையாக இருந்தது.  இதனை கிடி முறியடித்து உள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 10 ரன்களில் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

    முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. 

    தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி கூறியதாவது:-

    எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் 1 ரன்கள் மற்றும் பவுண்டரி எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு நெருக்கடியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போட்டியின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டிய நிலையில் 12 பந்தை சந்தித்து 7 ரன்னை மட்டுமே எடுத்த ஜாதவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.
    13-வது ஓவரின் முதல் பந்தில் வாட்சன் ஆட்டமிழந்ததும், மிடில் ஆர்டர் சொதப்பலாலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.
    ஐபிஎல் 21-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 3-வது வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தின. அபு தாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற அணிகளின் சராசரி 175 ரன்களுக்கு கீழேதான். இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 175 ரன்களை தாண்டினால் சேஸிங் செய்வது கடினம் எனக் கருதப்பட்டது.

    டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். சுனில் நரைனை பின்னக்குத் தள்ளி ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்கியது, மோர்கனை 5-வது வீரராக களம் இறக்கியது, தினேஷ் கார்த்திக் 7-வது வீரராக களம் இறக்கியது என பேட்டிங்கில் பல மாற்றங்கள் செய்தது கொல்கத்தா.

    ராகுல் திரிபாதியைத் தவிர மற்ற எந்த மாற்றமும் ஒர்க்காகவில்லை. திரிபாதி 51 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பவர் ஹிட்டர்களுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர்கள் அட்டகாசமான பந்து வீச்சை வெளிப்படுத்த மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 17 ரன்களை தாண்டவில்லை. இதனால் கொல்கத்தா அணி 167 ரன்கள் மட்டுமே அடித்தது.

    பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிசிஸ், வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரியில் ஒரு பவுண்டரி, அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் என விளாசினர்.

    சரி... கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அட்டகாசம் செய்ததுபோல், இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 10 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போதே நங்கூரம் அறுந்த கப்பலானது சென்னை.

    அடுத்து வாசனுடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். டு பிளிஸ்சிஸ் இல்லை என்றால் என்ன... நான் உங்களுடன் இருக்கிறேன் என அம்பத்தி ராயுடு வாட்சன் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் சென்னைக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டே இருந்தது. பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 4 ஓவரில் 36 ரன்கள் அடித்து 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இருவரும் கப்பலை தரை தட்ட விடமாட்டார்கள் என ரசிகர்கள் எண்ணினர்.

    ரசிகர்கள்

    கடைசி 10 ஓவரில் அதாவது  60 பந்தில் 78 ரன்களே தேவைப்பட்டது. எளிதான இலக்கை சென்னை எட்டிவிடும் என நினைத்த நிலையில், யார் கண்பட்டதோ.... வாட்சன், அம்பதி ராயுடு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது. 11-வது ஓவரில் 4 ரன்களும், 12-வது ஓவரில் 5 ரன்களுமே அடித்தனர். அப்போது நங்கூரம் இல்லாத கப்பல் தரைதட்டும் என்ற நிலைக்கு வந்தது.

    13-வது ஒவரை நாகர்கோட்டி வீசினார். முதல் பந்தில் அம்பதி ராயுடு 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவர் ஏன் முன் வரிசையில் களம் இறங்க யோசிக்கிறார் என்ற தொடர் கேள்வி எழும்பியதால் என்னவோ? நாம் இறங்கினால் என்ன? என நினைத்த டோனி 4-வது வீரராக களம் இறங்கினார்.

    13-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரில் சென்னைக்கு பேரிடி காத்திருந்தது. முதல் பந்தில் வாட்சன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 11-வது ஓவரில் இருந்து தடுமாறிய கப்பல், 13-வது ஓவரில் முதல் பந்தோடு சிஎஸ்கே கப்பல் தரைதட்டியது.

    வாட்சன் ஆட்டமிழந்த போது எடுத்த படம்.


    அடுத்து சாம் கர்ரன் களம் இங்கினார். 16-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடிக்க ரசிகர்கள் சற்று உற்சாகமடைந்தனர். கடைசி 24 பந்தில் 48 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் உள்ளது. டோனி, சாம் கர்ரன் ஒரு ஓவரை டார்கெட் செய்தால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு, டோனி 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட சற்று நம்பிக்கை அதிகரித்தது.

    ஆனால், அடுத்த பந்தில் டோனி ஸ்டம்பை பறிகொடுத்தார். அவரால் 12 பந்தில் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அத்துடன் சென்னை கப்பல் தரைதட்டி இழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 11 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, வழக்கம்போல் கேஜர் ஜாதவ் வந்து நிற்க, ரசிகர்களின் கைத்தட்டலுக்கு ஜடேஜா கடைசி மூன்று பந்தில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    வாட்சன் ஆட்டமிழந்தது, அதன்பின் மிடில் ஆர்டர் சொதப்பலால் சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பறிகொடுத்துள்ளது.



    ‘மன்கட்’ விவகாரம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் சொன்னது என்ன என்பது குறித்து அஸ்வின் பதில் அளித்துள்ளார்.
    துபாய்:

    பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்சை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்வது போல் எச்சரிக்கையோடு விட்டார். இனி பந்து வீசுவதற்கு முன்பே எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் காலி தான் என்று இறுதி எச்சரிக்கையும் விடுத்தார். இந்த விவகாரம் குறித்து அஸ்வின் நேற்று அளித்த பேட்டியில்,

    ‘போட்டி முடிந்து அன்றிரவு தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கிடம் விவாதித்தேன். அப்போது பாண்டிங், ‘பிஞ்ச் எவ்வளவு தூரம் நகர்ந்து சென்று விட்டார். நானே எழுந்து அவரை ரன்-அவுட் செய்து விடு என்று சொல்லலாம் என்று நினைத்தேன்’ என்று கூறினார். அதற்கு நான், உங்கள் சகநாட்டு வீரர் பற்றி ஏன்இப்படி சொல்கிறீர்கள் என்றேன். அதற்கு பாண்டிங், ‘தவறு யார் செய்தாலும் தவறு தான். இது பற்றி ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் பேசி வருகிறேன். இந்த தவறுக்கு ரன் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன் என்று கூறினார்.

    என்னை பொறுத்தவரை ‘ரமணா’ பட பாணியில் தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். பந்து வீசப்படுவதற்கு முன்பே பேட்ஸ்மேன் கிரீசை விட்டு தாண்டினால் 10 ரன்களை அணியின் ஸ்கோரில் இருந்து கழிக்க வேண்டும். இதன் பிறகு யாரும் கிரீசை விட்டு வெளியேறமாட்டார்கள்’ என்றார்.
    உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் அறிவுறுத்தலால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடிவு செய்தேன் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஜெரார்டுவை பார்க்க கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்துக்கு சென்றார். ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடினாலும் அவரது பூர்விகம் நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    குடும்பத்தினருடன் 5 வாரங்கள் தங்கியிருந்து தந்தையை கவனித்துக் கொண்ட ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடந்த வாரம் துபாய் சென்றார். ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஸ்டோக்ஸ் 6 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்ததும் களம் இறங்குவார். 29 வயதான ஸ்டோக்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘கிறைஸ்ட்சர்ச் நகரில் எனது தந்தை, தாய், சகோதரரிடம் இருந்து விடைபெற்றது கடினமாக இருந்தது. ஒரு குடும்பமாக இது எங்கள் எல்லோருக்கும் கடினமான காலக்கட்டமாகும். முடிந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்.

    மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப ஊக்கப்படுத்தியது எனது தந்தை தான். ‘உனக்கு என்று கடமைகள் (விளையாடுவது) உள்ளன. அதை சரியாக செய்ய வேண்டும்’ என்று தந்தை என்னிடம் கூறினார். எனது பெற்றோரின் அன்பும், ஆசியுடனும் அங்கிருந்து கிளம்பினேன்’ என்றார்.
    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மெக் லானிங், ஆல்-ரவுண்டர் எலிசி பெர்ரி காயம் காரணமாக ஆடாத நிலையிலும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. பொறுப்பு கேப்டன் ராச்செல் ஹெய்ன்ஸ் 96 ரன்னும், அலிசா ஹீலே 87 ரன்னும் விளாசினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 27 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை சுவைத்ததுடன், தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த அணி தொடர்ச்சியாக வென்ற 7-வது தொடர் இதுவாகும்.

    ஆஸ்திரேலிய பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு அந்த அணி தோல்வியையே சந்திக்கவில்லை. இதன் மூலம் 2003-ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய ஆண்கள் அணி தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்று இருந்த சாதனையை சமன் செய்து அசத்தியது. சாதனையை சமன் செய்த ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
    பாரீஸ்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங் கனை லாரா சீஜ்மன்டை விரட்டியடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 20 நிமிடம் தேவைப்பட்டது.

    இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை டேனியலி காலின்சை வெளியேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். சோபியா கெனின் அரைஇறுதியில் கிவிடோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மற்றொரு அரைஇறுதியில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா)-இகா ஸ்வியாடெக் (போலந்து) சந்திக்கிறார்கள்.

    முன்னதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 19 வயதான இத்தாலியின் ஜானிக் சின்னெரை தோற்கடித்து 13-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் 100-வது ஆட்டத்தில் ஆடிய நடால் ருசித்த 98-வது வெற்றி இதுவாகும்.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வாட்ஸ்மேன் 7-6 (7-1), 5-7, 6-7 (6-8), 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான டொமினிக் திம்முக்கு (ஆஸ்திரியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி 8 நிமிடம் நீடித்தது. அரைஇறுதியில் நடால்-ஸ்வாட்ஸ்மேன் மோதுகிறார்கள்.
    ×