என் மலர்
விளையாட்டு


டோக்கியோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக் கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடை பெறுகிறது.
இதற்கிடையே அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு செல்ல பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜப்பான், இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை 4-ம் நிலை பயண கட்டுப்பாட்டு ஆலோசனையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் நடைபெற இன்னும் 2 மாதத்துக்கு குறைவாக உள்ள நிலையில் இந்த கட்டுப்பாட்டால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பலரும் ஒலிம்பிக் போட்டியை விரும்பவில்லை.
இந்தநிலையில் அமெரிக்காவின் பயண கட்டுப்பாட்டால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று போட்டி அமைப்பு குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை அதிகாரி சிய்கோ கூறியதாவது:-
அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எந்த விதத்திலும் பாதிக்காது. போட்டியை நடத்த தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் நிபுணர்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் கடந்த வாரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழு ஒலிம்பிக் போட்டி நடத்தும் முயற்சியை இப்போதே கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பி.எஸ்.பி.பி. பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல் 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளை கழித்தேன். தற்போது ராஜகோபாலன் பெயர் வெளியே வந்து விட்டது. இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் அவசியம்.
இவ்வாறு அஸ்வின் கூறி உள்ளார்.
துபாய்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.
இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 18-ந்தேதி சவுத்தம்டனில் தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 17-ந்தேதிவரை நடக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இதுவரை விதிமுறைகளை அறிவிக்கவில்லை.
இந்த போட்டி டிராவில் முடிந்தால் சாம்பியன் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுமா அல்லது அதில் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் அதுகுறித்தான விதிமுறைகள்? என்பது குறித்து ஐ.சி.சி. இன்னும் தெளிவுபடுத்தாமல் இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆட்ட விதிமுறைகளை ஐ.சி.சி. விரைவில் வெளியிடும் என்று நம்புகிறோம். ஆனால் தேதியை உறுதியாக கூறமுடியாது. அப்படி அறிவிக்கும்பட்சத்தில் போட்டிக்கான தெளிவான முடிவுக்கு வர முடியும்.
இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதி முறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த வாரம் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் போட்டி பாதிக்கப்படும் போது மாற்றுநாள் ஆட்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
5 நாட்களுக்கும் சேர்த்து எத்தனை மணிநேரம் போட்டியை நடத்துவது என்பது குறித்தும் இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்படும்.
ஐ.சி.சி.யின் கூட்டம் வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்தும் விவாதிக்கப்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
லண்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹேட்லி. அந்நாட்டுக்கு பெருமை சேர்த்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து கூறியதாவது:-

இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது. இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும். எனவே கிரிக்கெட்டுக்கு இந்தியா தேவை.
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பங்களிப்பை அளித்துள்ளது. இந்தியாவால்தான் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய பயணத்தில் 36 ரன்களுக்கு சுருண்டு பின்னர் அபாரமாக விளையாடிய விதம் அற்புதமானது.
தோல்வியில் இருந்து மீண்டு வந்தார்கள். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
அதிகமான இளைஞர்கள் இந்திய அணிக்கு தேர்வாகி நன்றாக விளையாடி வருகிறார்கள். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு நிறைய வீரர்கள் உள்ளார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சொல்வது கடினமானது.
இவ்வாறு ரிச்சர்ட் ஹேட்லி கூறி உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடக்கிறது.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூன் 13-ந்தேதி வரை பாரீஸ் நகரில் அரங்கேறுகிறது. இதையொட்டி தற்போது அங்கேயே தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் மைக்கேல் மோவை எதிர்கொண்டார். முதல் செட்டை பறிகொடுத்து 2-வது செட்டிலும் பின்தங்கிய ராம்குமார், அதன் பிறகு சுதாரித்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி 2-வது செட்டை வசப்படுத்தினார். கடைசி செட்டில் எதிராளியை எளிதில் அடக்கிய ராம்குமார் முடிவில் 2-6, 7-6 (7-4),6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. ராம்குமார் இன்னும் 2 சுற்றில் வெற்றி பெற்றால் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்றுக்குள் கால்பதிக்க முடியும். உலக தரவரிசையில் 215-வது இடம் வகிக்கும் ராம்குமார், அடுத்து 203-ம் நிலை வீரரான டெனிஸ் இஸ்தோமினுடன் (உஸ்பெகிஸ்தான்) பலப்பரீட்சை நடத்துகிறார்.
மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியிடம் (ஜெர்மனி) தோற்று ஏமாற்றம் அளித்தார்.
முன்னதாக நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 182-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தனது முதல்தடையை வெற்றிகரமாக கடந்தார். 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அரினா ரோடியானோவை (ஆஸ்திரேலியா) போராடி சாய்த்த அங்கிதா அடுத்து 125-ம் நிலை வீராங்கனையான பெல்ஜியத்தின் கிரீத் மினெனை இன்று சந்திக்கிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் தள்ளிவைக்கப்பட்ட 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு அபுதாபி செல்கிறார்கள். அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு செல்வதற்காக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட அபுதாபி செல்ல முடியாது. முன்னதாக கிளாடியட்டர்ஸ் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாததால் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். முல்தான் சுல்தான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அதிரடி வீரர் அப்ரிடி முதுகுவலி காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது. இதனை அடுத்து அங்கு இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்த தொடர் ஆகஸ்டு 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதேபோல் இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் பயணித்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி பிரிஸ்டலில் ஜூன் 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணிகள் மும்பையில் இருந்து வருகிற 2-ந்தேதி தனிவிமானத்தில் புறப்பட்டு இங்கிலாந்துக்கு செல்கிறது.
இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்திய அணியினரின் தனிமைப்படுத்துதல் நடைமுறை மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. இதற்காக வீரர், வீராங்கனைகள் தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டலில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் பெரும்பாலான வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே இணைந்து விட்டனர். இதில் பங்கேற்பதில் இருந்து 6 நாட்கள் சிறப்பு சலுகை பெற்று இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் நேற்று பாதுகாப்பு வளையத்தில் இணைந்தனர்.
இங்கிலாந்துக்கு கிளம்பும் முன்னதாக அனைவருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வர வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.






