என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புரெவி புயல் எதிரொலியாக புதுவையில் நேற்று பரவலாக மழை பெய்தது.
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுவை அருகே கடந்த 26-ந் தேதி கரையை கடந்தது. இதனால் புதுச்சேரி மற்றும் வடதமிழகத்தில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது. இதற்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த புயல் நாளை (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுவை துறைமுகத்தில் நேற்றும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுவையில் நேற்று முன் தினம் இரவு லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மழை விட்டு விட்டு பெய்தபடி இருந்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாவாணர் நகர், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், விடுதலை நகர், புஸ்சி வீதி, ரோடியர் மில் திடல் உள்பட நகரின் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

    இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்களும், மார்க்கெட் மற்றும் கடை வீதிக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பியதை காண முடிந்தது. சிலர் குடைகள் பிடித்த படியும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 1.7 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து நேற்று இரவு வரையும் மழை நீடித்தது. புதுவை கடல் பகுதி நேற்று வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டது. வரிசைகட்டி வந்த அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்து வந்து கரையை மோதியது. இதனை கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்த மழை காரணமாக உழவர்கரை தொகுதி ஜவகர் நகரில் நேற்று இரவு மரம் ஒன்று திடீரென சாய்ந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. எம்.என்.ஆர். பாலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து, அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மின்துறையினர் விரைந்து வந்து மின் இணைப்பை சரிசெய்தனர்.

    இதேபோல் அஜந்தா சந்திப்பு அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே பொதுப்பணி, நகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ரவுடி படுகாயம் அடைந்தார்.
    காலாப்பட்டு:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உள்ள ரவுடிகள் செல்போன் மூலம் தங்கள் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு வெளியில் குற்ற சம்பவங்களை நிகழ்த்துவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறையில் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே முக்கிய கைதிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு மாற்ற கவர்னர் உத்தரவிட்டார்.

    உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரவி என்கிற பாம்ரவி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். நேற்று முன்தினம் அவர் தனது அறையில் படுத் திருந்தார். அப்போது பிரபல ரவுடிகளான தடி அய்யனார், அஜித்குமார், தாடி அய்யனார் என்கிற ராஜதுரை ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். அவர்கள் கையில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடுகளுடன் வந்து பாம் ரவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    பதிலுக்கு பாம் ரவியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாம் ரவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட உடன் சிறை வார்டன்கள் அங்கு விரைந்து சென்று பாம் ரவியை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்த உடன் சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறை வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ் பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று மாஜிஸ்திரேட்டு அனுமதி பெற்று சிறையில் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் பாம் ரவியும், தடி அய்யனாரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்து சென்றுள்ளனர். இதனால் அவர்கள் 2 கோஷ்டிகளாக செயல்பட்டுள் ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மோதல் சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. ரவுடிகளான தடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளும், அஜித்குமார் மீது கொலை முயற்சி வழக்கும், தாடி அய்யனார் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி மாவட்ட கலெக்டரை பார்த்துவிட்டு லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்த முதலமைச்சர் நாராயணசாமி உள்பட 3 பேர் லிப்டின் உள்ளே சிக்கிகொண்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆகியோர் கலெக்டர் அருணை பார்ப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றனர்.

    கலெக்டரை பார்த்துவிட்டு அங்கிருந்து லிப்ட் மூலம் கீழே இறங்கி வந்தனர். தரை தளத்திற்கு வந்ததும் லிப்டின் கதவு திறக்கவில்லை. இதனால் முதலமைச்சர் உள்பட 3 பேரும் லிப்டின் உள்ளேயே சிக்கி கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து 10 நிமிடம் போராடி கதவை திறந்தனர். அதன்பின்னர் 3 பேரையும் பத்திரமாக ‘லிப்டில்’ இருந்து வெளியே அழைத்து வந்தனர்.
    புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு அறிகுறி இல்லாமல் இருந்தால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண் சிறப்பாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பணியில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று கலெக்டர் அருணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது மனைவியிடம் பணத்தை வட்டியுடன் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பாகூர்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). இவர்கள் தவளக்குப்பத்தை அடுத்த ஸ்ரீ்நிவாசா கார்டன் வைஷ்ணவிபுரத்தில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர்.

    ஜெயக்குமார் சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த ஜெயக்குமார் கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனையடுத்து அவரது மனைவி தேன்மொழி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி தவளக்குப்பம் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, திருமலைவாசன் நகரை சேர்ந்த சிவா ஆகியோர் தேன்மொழி வீட்டிற்குச் சென்று ஜெயக்குமார் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மோட்டார் சைக்கிள், வெள்ளி குத்து விளக்குகள், 2 தங்க கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதனை தடுத்த தேன்மொழியை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் தேன்மொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, சிவா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறும் விவகாரத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் நீதிமன்ற உத்தரவினை ஏற்று செயல்படவேண்டும் என்று ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையை ஆளும் தி.மு.க. ஆதரவுபெற்ற காங்கிரஸ் அரசு பல வருடங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறாமல் இடைத்தரகராக செயல்பட்டு மருத்துவ இடங்களை குறைத்து வாங்கி மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வந்தது.

    இந்த ஏமாற்று வேலைக்கு புதுவை மாணவர்கள் நீதிமன்ற படியேறியதால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. புதுவை கவர்னரும் 50 சதவீத இடஒதுக்கீடு பெற தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் புதுவை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை என்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசிடம் தரவேண்டும் என்று விதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    எனவே மாணவர்கள் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் நீதிமன்ற உத்தரவினை ஏற்று செயல்பட வேண்டும். இல்லையெனில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க.வை தூக்கி எறிவார்கள். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தனியார் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுத்தரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா வரியை ரத்து செய்யும் வரை மதுபான கொள்முதல் இல்லை என்று புதுவை மது வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த மே மாத இறுதியில் கவர்னர் கிரண் பேடி மதுகடைகளை திறக்க அனுமதி அளித்தார்.

    அப்போது மதுவுக்கு 25 சதவீதமும், சாராயத்துக்கு 20 சதவீதமும் கொரோனா வரி நிர்ணயிக்கப்பட்டது. மேலும், தமிழகத்திலும், புதுவையிலும் விற்பனையாகும் 154 வகையான மதுவுக்கு தமிழகத்திற்கு இணையான விலை உயர்த்தப்பட்டது.

    இதையடுத்து புதுவையில் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை கடுமையாக உயர்ந்தது, முதலில் மே இறுதி முதல் ஆகஸ்டு வரையும், அதையடுத்து 2-வது முறையாக செப்டம்பர் முதல் நவம்பர் 30-ந் தேதி வரையும் கொரோனா வரி மதுவுக்கு நீட்டிக்கப்பட்டது.

    இதனால் மது விற்பனை புதுவையில் கடுமையாக வீழ்ந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும், விடுமுறை காலம் என்பதாலும் மதுவுக்கான கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என மதுபான வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு அரசும் மதுவுக்கான கொரோனா வரியை நீக்க கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பியது. ஆனால், கவர்னர், கொரோனா வரியை நீக்க அனுமதிக்க வில்லை.

    இதனால், தற்போது டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை இவ்வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கின் போது கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த சில கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் புதுவை மாநில எப்.எல். 2 மதுபான வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், மதுபானங்களின் விலை உயர்வு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், மதுபானங்களின் விற்பனையும் பெருமளவில் சரிந்துள்ளதால் அரசு நீட்டிப்பு செய்துள்ள கொரோனா வரியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து மதுபான வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா வரி 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை ரத்து செய்யும் வரை மதுபான வகைகளை கொள்முதல் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். தற்போதுள்ள இருப்பு 10 நாட்களுக்குதான் வரும்.

    அதன்பிறகு கடைகளை திறந்தாலும் மது விற்பனைக்கு இருக்காது. கலால்துறை துணை ஆணையருக்கு தமிழ் தெரியாததால் எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியவில்லை. தமிழ் தெரிந்த அதிகாரியை நியமிக்கவும் கோரியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரியில் வீட்டில் சோலார் பேனல் அமைத்தால் 40 சதவீத மானியம் வழங்கப்படும் என மின்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் கூரையின் மீது மின்கம்பி கட்டமைப்போடு இணைந்த சூரிய ஒளி மின் உற்பத்தி கலன் (சோலார் பேனல்) அமைத்து சுய தேவைக்கோ அல்லது விற்பதற்கோ மின் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான தொழிற்நுட்ப உதவியை புதுவை மாநில அரசும், மத்திய அரசும் வழங்க தயாராக உள்ளது.

    1 கிலோ வாட் முதல் 110 கிலோ வாட் வரை உள்ள திறன் கொண்ட கூரை மீதான சோலார் பேனல்களை அமைக்கலாம். 1 கிலோ வாட் மின் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்பதற்கு 10 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிழல் படியாத இடம் தேவைப்படுகிறது. இதன் மூலம் மாதம் சராசரியாக 135 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து, மாதம் ரூ.300 சேமிக்கலாம்.

    1 கிலோ வாட் மின்திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க ரூ.42 ஆயிரம் செலவாகும். இதில் 40 சதவீத மானியம் தோராயமாக ரூ.16,800 மத்திய அரசு வழங்குகிறது. இதனால் பயனாளர்கள் ரூ.25,200 செலுத்தி முறையாக பராமரித்தால் சோலார் பேனல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்தரும். இதில் செய்யப்படும் முதலீடு 7 வருடத்தில் திரும்பப்பெறும்பட்சத்தில் மீதமுள்ள பயனீட்டு காலங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முதலீடு இல்லா மின்சாரமாக கிடைக்கும்.

    சோலார் பேனல்கள் அனுமதிக்க பெற்ற தொழில்நுட்பத்துடனும் தரத்துடனும் அமைக்க வேண்டி மற்றும் குறைந்த விலையில் நிர்ணயிக்கும் பொருட்டு மின்துறையால் மின் அமைப்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைத்து அதனை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தபிறகே மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தொகை நேரடியாக ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுவையில் மதுபானங்களுக்கு கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனோ தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 24-ந்தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது.

    அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி காலம் முதலில் ஆகஸ்டு மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30-ந் தேதி வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது.

    தற்போது இந்த வரியை நீக்கக்கோரி கடந்த 29-ந் தேதி கோப்பு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை.

    அதே நேரத்தில் கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.

    அதன்படி இந்த உத்தரவு வரும் ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி கவர்னர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றில் இருந்து புதுவை தற்போது மீண்டு வருகிறது. விரைவில் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகியவை தொடர்ந்து வருகிறது.

    அதனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு மீண்டும் இக்கோப்பை தாக்கல் செய்யலாம். அத்துடன் புதுவை அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவில் நிலவும் தொற்றின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
    புறங்களில் தொடர் மழையால் குண்டும், குழியுமாக சாலைகள் மாறியுள்ளன. இதில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    புதுச்சேரி:

    வடகிழக்கு பருவமழையால் புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் புதுவையில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தன. இதனால் புதுச்சேரி - கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மரப்பாலம் வரை, காராமணிக்குப்பத்தில் இருந்து மரப்பாலம் வரை, ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை உள்பட நகர் முழுவதும் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

    இந்த சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள் சென்று வருவதால் சிறிய ஜல்லி கற்கள் பெயர்ந்து புழுதி பறக்கிறது. சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகளை நகராட்சி, பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து சாலைகள் சேதமடைந்துள்ளன.

    இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையாலும் சாலைகள் மேலும் சேதமடைந்து பல்லாங்குழிகளாக காட்சியளிக்கின்றன. ஜல்லி கற்கள் மீது வாகனங்கள் செல்வதால் அவை நொறுங்கி புழுதி காற்றாக பறக்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது முன்னாள் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பல இடங்களில் புழுதி கிளம்புகிறது.

    இது வாகன ஓட்டிகளின் கண்ணில் படுவதாலும், குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் செல்லும் போதும் விபத்துகள் ஏற்படுகிறது. இதே நிலைதான் கிராமப்புறங்களிலும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும்.

    புதுவையில் தற்போது சாலைகள் அமைக்கும் போது சில இடங்களில் கருப்பு மண் (கிரஷர் பொடி) வீசுகின்றனர். மழை காலங்களில் அந்த சாலைகள் சேதம் அடையும் போது அந்த பகுதி முழுவதும் புழுதி பறக்கிறது. எனவே இனிவரும் காலங்களில் புதிய சாலைகள் அமைக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதனை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாகூரில் இருந்து மாஞ்சாலை செல்லும் சாலையில் சித்தேரி வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு 2 இடங்களில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் பாகூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை செய்யும் வகையில் பள்ளத்தின் அருகே பேரிகார்டு வைத்து, அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

    இது குறித்து பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டு, பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது. இதில் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் ஒரு இடம் கூட புதுச்சேரிக்கு ஒதுக்கீடு செய்வதில்லை.

    இந்தநிலையில் மத்திய அரசின் 2019-ம் ஆண்டு மருத்துவ சட்ட மசோதாவை அமல் படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் உள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசிடம் உள்ள சட்ட முன்வரைவை நிர்வாகத்துறை முறையாக பின்பற்றவில்லை. இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். தலைமை செயலர் இதை கவனிக்க வேண்டும்.

    புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அத்தியாவசியமான சான்று வழங்கும்போது நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசுக்கு தர வேண்டும் என்ற விதி உள்ளது. இதனை சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் ஆகியவை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக தெளிவான வழிமுறை அரசிடம் உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை 4 லட்சத்தை தாண்டியது. நேற்று புதிதாக 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. அதன்படி கடந்த 2 மாதமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

    புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று இறப்பு எதுவும் இல்லை. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 323 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 129 பேருக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    480 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 178 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 302 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 609 பேர் பலியாகி உள்ளனர். இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 97.05 சதவீதமாகவும் உள்ளது.

    இந்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
    ×