என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது.

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்தது. அடுத்த 6 கட்ட தேர்தல் பல்வேறு கட்டங்களாக மற்ற மாநிலங்களில் நடந்தது. இதனால் 7-வது கட்டமாக இறுதி கட்ட தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10- ந் தேதி (அடுத்த மாதம்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜூன் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 26-ந் தேதி (புதன்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 10-ந் தேதி வாக்குப்பதிவு என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜூலை 15-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நின்ற முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


    அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. நீடித்து தேர்தலை சந்தித்தது.

    இந்த கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டியிடுவது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே பா.ம.க.வும் இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்க உள்ளது. எனவே விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிக்கும், இமாச்சலப்பிரதேசம்-3, உத்தரகாண்ட்-2, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்த இறுதிக் கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் பூசாரிகள் அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு அதிகாலை கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும் தங்ககவச அலங்காரமும் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு எழிலரசி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு 11.45மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழு ப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையிலும் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர்.

    • இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
    • டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ். இவர் நீட் தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இதில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர். சிறுவயதிலிருந்து ரஜநீஷ் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், பிளஸ்-2 தேர்வில் 490 மதிப்பெண்கள் எடுத்தார். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று முழு மதிப்பெண்ணை ரஜநீஷ் எடுத்துள்ளார்,

    மாணவன் ரஜநீஷ் கூறுகையில், டெல்லியில் உள்ள எய்ம்சில் பயின்று, இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு. இதற்காக அதிகமாக பயிற்சி மேற்கொண்டதில், அதற்கான பலன் கிடைத்துள்ளது. டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், தாய் விமலா தேவி, தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும், உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்குமென அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், மாணவன் ரஜநீஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்து.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று பெரம்பலூருக்கு சென்று கொண்டிருந்தது. இதை பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது35) என்பவர் ஓட்டி சென்றார்.

    திண்டிவனம் சென்னை புறவழிச்சாலை மரக்காணம் மேம்பாலம் மேல் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள தடுப்பு கட்டை மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் லாரி உடைந்து சாலையில் சிதறியது. விபத்தில் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவர் பெரம்பலூர் மாவட்டம் வரகூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (38),லோடுமேன்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் (22),மற்றும் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த செல்வராஜ் (55) அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

    இதுகுறித்து அறிந்த திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    • போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் இதனை மாவட்ட கலெக்டர் பழனிக்கு பரிந்துரை செய்தார்.
    • சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). இவர் கடந்த 6-ந் தேதி கொந்தமூர் மேல்நிலை பள்ளி அருகே சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

    இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் வைப்பதற்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாசிடம் கிளியனூர் போலீசார் அனுமதி கேட்டனர்.போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் இதனை மாவட்ட கலெக்டர் பழனிக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி அனுமதி அளித்ததின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை.
    • முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார்கார்டை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    தி.மு.க.தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. பா.ம.க.விற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம். அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

    பாசனதிட்டங்களை நிறைவேற்றாத ஆட்சியாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.காமராஜர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டி. எம். சி. கொள்ளளவுகூட இல்லை.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலுங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 -ம் ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ 2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான். முல்லை பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வருகிற 28-ந் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன். முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.

    அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன்-2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சாதாரண ரெயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (வயது42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ெஹ.ச்.டி. படிப்பை முடித்துள்ளார்.

    2009 யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது.

    பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

    ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியுமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட பா.ம.க., விரும்புவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் தெரிவித்தார். அதே சமயம் அந்த தொகுதியில் போட்டியிட, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வை அடுத்து பா.ஜ.க. பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று பலம் வாய்ந்த கூட்டணி உருவானது. எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது;-

    ஆந்திரா, ஒடிசா போன்ற 96 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பா.ம.க. வலியுறுத்தி வருகிற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார், ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காலம் கடத்தாமல், தமிழ்நாடு அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

    சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும், விடாமல் பேசி வருவது பா.ம.க. தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை தி.மு.க. அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவில்லை.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணைகட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார்.

    தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் ஒருவாரத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுபடுத்தலாம். போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர். ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதாக கூறும் போலீசார், ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை அழிக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்
    • மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, 22 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் சார்பாக நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலை இந்து அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டுமென ஒரு சிலர் கடந்த 2 ஆண்டுக்கு முன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மரக்காணம் திரவுபதி அம்மன் கோவிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. இருந்த போதும் கடந்த ஆண்டு வழக்கம் போல 22 நாள் திருவிழா நடைபெற்றது.


    இந்த நிலையில் இந்த ஆண்டின் சித்திரை மாத பஞ்சமி திதி அன்று தேர்தல் நடைமுறை விதிகள் இருந்ததால் கொடியேற்று விழா நடைபெறவில்லை. இதனால் ஒரு மாதம் கழித்து இன்று வைகாசி மாத பஞ்சமி திதியில் கொடியேற்று விழா நடத்த பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துனர்.

    இதற்கு இந்து அறநிலையத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கோவில் திருவிழாவின் கொடியேற்று விழாவை தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் மரக்காணத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு கொடியேற்று விழா இன்று நடைபெறுமா? அல்லது நிறுத்தப்படுமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • பலத்த காற்றுடன் மழை பெய்தது.
    • வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சி:

    கடந்த சில தினங்களாக செஞ்சி பகுதியில் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திடீரென கருமையாக மேகம் சூழ்ந்தது.

    அதனைத் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. மேலும் செஞ்சி கூட்ரோடு பகுதியில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சரிந்து விழுந்தது. கோடைக்காலம் என்பதால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியது. செஞ்சி கமிட்டிக்கு இன்று விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேற்று திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த வியாபாரிகளின் நெல் மூட்டைகள் உட்பட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.


    ஏற்கனவே வியாபாரிகளின் நெல் முட்டைகள் குடோனில் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். எனவே வியாபாரிகளின் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூர் என்ற கிராமத்தில் இடி விழுந்து ஆறுமுகம் என்பவரது 3 எருமை மாடுகள் பரிதாபமாக இறந்தன. செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் இருந்த சிமெண்ட் சீட் போட்ட வீடு காற்றில் விழுந்ததால் உள்ளே சிக்கி கொண்டிருந்த அலமேலு (வயது 80) கஸ்தூரி (வயது 20) ஆகியோரை செஞ்சி தீயணைப்பு வீரர் முருகன் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் விரைந்து அவர்களை மீட்டனர்.

    ×