என் மலர்tooltip icon

    வேலூர்

    7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்த புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதி பக்கிரிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைச் செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்து, கொலை மிரட்டலும் விடுத்தார்.

    ஆனால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவளிடம் கேட்டபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் விக்னேசுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சந்தியா ஆஜராகி வாதாடினார். வழக்கு நடந்து வந்த காலக்கட்டத்தில் விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண்ணை அவர் ஒருசில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.
    தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் இங்கு வசிக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ தமிழின துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது.

    இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் இங்கு வசிக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ தமிழின துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.

    தமிழக மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூக நீதி, சுயமரியாதையுடன் வாழவும், ஊழலற்ற, உண்மையான மக்கள் விரும்பும் ஆட்சி அமைய அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தல் தமிழகத்துக்கு திருப்புமுனையாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதிமுக சார்பில் செந்தில் குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் என்.முகமது நயீம் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    அ.தி.மு.க. வேட்பாளராக ஜி. செந்தில்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க.வை பொருத்தவரை கடந்த 1996-ம் ஆண்டு வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டது. அதனையடுத்து வந்த அனைத்து தேர்தலிலும் கூட்டணி கட்சிக்கு வாணியம்பாடி தொகுதியை ஒதுக்கி வந்தது. இந்த முறையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக என். முகமது நயீம் என்பவர் போட்டியிடுகிறார்.

    அதிமுக வேட்பாளர் ஜி. செந்தில்குமார் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,47,755
    2. அசையும் சொத்து- ரூ. 54,56,127
    3. அசையா சொத்து- ரூ. 1,27,50,000

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் என். முகமது நயீம் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 2,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 2,02,350
    3. அசையா சொத்து- ரூ. 80,50,000

    அ.ம.மு.க. கூட்டணி கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. அதன் வேட்பாளராக வக்கீல் அகமது போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக ஞானதாஸ் என்பவரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேவேந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

    தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது.

    வாணியம்பாடி தொகுதியில் நகர பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையும், பேரூராட்சி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளும் முக்கிய தொழில் பகுதியாக உள்ளன. கிராம பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அரசு சார்பில் தொழிற்சாலை எதுவும் இல்லை.

    வாணியம்பாடி தொகுதி

    இந்த தொகுதியில் வாணியம்பாடி நகரத்தில் 36 வார்டுகள், ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலாபுரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சிகள், திருப்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

    கோரை பாய் தயாரிப்பு

    வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் உள்ளிட்டவை முக்கிய தொழிலாகும்.

    வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், ஆதிதிராவிடர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.வாணியம்பாடி தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப் பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்தம் 361 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுரங்கப்பாதை

    வாணியம்பாடி நகரின் முக்கிய பிரச்சினையான நியூடவுன் சுரங்கப்பாதை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட வேண்டும். வாணியம்பாடி தொகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரிகள் வேண்டும், நிதிகள் ஒதுக்கப்பட்டும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம், தொழிலாளர் நல மருத்துவமனை பணிகள் முடிக்கப்பட வில்லை. வாணியம்பாடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும்.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் உருவாக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை (சிப்காட்) தொடங்கப்பட வேண்டும். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் ரோட்டை ஒட்டியபடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    வாணியம்பாடி தொகுதி

    மூடப்பட்டுள்ள சந்தன எண்ணெய் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பஸ் நிலையத்தை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கிராமப்பகுதிகளில் விரிவாக்கம் செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    1971 அப்துல் லத்தீப்- முஸ்லீம் லீக்
    1977 அப்துல் லத்தீப்- முஸ்லீம் லீக்
    1980 குலசேகரபாண்டியன்- அ.தி.மு.க.
    1984 அப்துல் மஜீத்- காங்கிரஸ்
    1991 இ.சம்பத்- காங்கிரஸ்
    1996 அப்துல் லத்தீப்- தேசிய லீக்
    2001 அப்துல் லத்தீப்- தேசிய லீக்
    2006 அப்துல்பாசித்-முஸ்லிம் லீக்
    2011 கோவி.சம்பத்குமார்- அ.தி.மு.க.
    2016 நிலோபர் கபில்- அ.தி.மு.க.
    கே.வி.குப்பம் அருகே மூக்குத்திக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை எரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
    கே.வி.குப்பம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த பெருமாங்குப்பம் கிராமம், கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி ரகுமணி (வயது 80). சின்னசாமி இறந்துவிட்டதால் ரகுமணி தனியாக வசித்து வந்தார். பெருமாங்குப்பம் கிராமத்தின் அருகில் உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (37). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்.

    திருட்டு வழக்கு தொடர்பாக சிறை சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரகுமணி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த குமார் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ரகுமணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறி பணம்தர மறுத்துவிட்டார்.

    பின்னர் இதுகுறித்து ரகுமணி தனது உறவினர் ஆலங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயகோபி என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூதாட்டியிடம் குமார் மீண்டும் பணம் கேட்டுள்ளார். அப்போதும் ரகுமணி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த குமார், மூதாட்டியின் தலையை சுவரில் மோதியும், தரையில் அடித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டி ரகுமணி அணிந்திருந்த அரை பவுன் மூக்குத்திகளை கழற்றிக் கொண்டார்.

    பின்னர் கொலையை மறைக்க பழைய துணிகளை மூதாட்டி உடல்மீது போர்த்தி, அங்கிருந்த பாமாயிலை ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    வழக்கம்போல பாட்டியை பார்ப்பதற்காக நேற்று காலையில் ஜெயகோபி வந்துள்ளார். அப்போது வீடு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பாட்டி எங்கோ வெளியே சென்றுள்ளார் என்று காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் சந்தேகப்பட்டு வீட்டைத் திறந்து பார்த்தார்.

    அப்போது ரகுமணி கொலைசெய்யப்பட்டு அரைகுறையாக எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் மூதாட்டியின் தம்பி மருமகன் ஜெயகோபி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார்.

    மேலும் ரகுமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மூக்குத்திக்காக மூதாட்டியை கொலை செய்து எரித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காட்பாடி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்று தி.மு.க.வேட்பாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.
    வேலூர்:

    காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காட்பாடி தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீக்கராஜபுரம், ஏகாம்பரநல்லூர், மருதம்பாக்கம், கத்தாரிகுப்பம், பள்ளேரி, கொண்டகுப்பம், முகுந்தராயபுரம், லாலாபேட்டை போன்ற பல்வேறு ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்பாடி தொகுதியில் நான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடுகிறேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் இருண்டு காணப்படுகிறது. இதற்கான விடிவு காலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏற்படபோகும் ஆட்சி மாற்றமே.

    தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும். சிப்காட் பகுதியில் பெல் நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப் பட்டவர்களின் குடும்பங்களில் ஒருசிலருக்கு வேலை வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதன் மூலம் உள்ளூர்பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது அவருடன் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், ஒன்றிய பொறுப்பாளர்கள் அக்ராவரம் முருகன், செல்வம், காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.

    துரைமுருகனுக்கு ஆதரவாக தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் தனித்தனியே அந்தந்த பகுதி பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    ‘‘சமூக நீதி அடிப்படையில் நமது கூட்டணி இருக்கிறது. நமது 40 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் மறக்கக் கூடாது.

    வன்னியர்களை போன்று இன்னும் பல சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். பா.ம.க., புரட்சி பாரதம் கட்சியின் கொள்கையும் சமூக நீதிதான்.

    நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம். அதற்கு ஒரு படி தான் இந்த கூட்டணி. இது பலமான கூட்டணி.

    இந்த ஆட்சி பெண்களுக்கு அமைதி தரும் ஆட்சி. கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நான் உங்களை பார்க்க முடியவில்லை. இப்போது வந்திருக்கிறேன். நானும் உங்களோடு துள்ளிக்குதிக்க ஆசையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்து செயல்படுகிறார்.

    வேலூர்:

    பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வேலூர் மண்டித்தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-

    இந்த தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கும், வியாபாரியான மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போர். இதில், விவசாயி வெற்றி பெற வேண்டும்.

    அதற்கு அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்-அமைச்சராக நம்மில் ஒருவரான விவசாயி வந்துள்ளார்.

    அவரின் ஆட்சி தொடர வேண்டும். அ.தி.மு.க. மக்களாட்சி, தி.மு.க. மன்னராட்சி. மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் மன்னராட்சியில் அவரின் வாரிசுதான் அடுத்து மன்னராக வர முடியும். தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு புரிந்து செயல்படுகிறார்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண்களை பாதுகாக்கவும், முன்னேற்றவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர்.

    கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களின் கஷ்டங்களை போக்க திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கும் திட்டங்கள் வெறும் அறிவிப்பாக தான் இருக்கும். வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றதைபோன்று, அனைத்து சமுதாய மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனித்தனியாக இடஒதுக்கீடு வழங்கப்படும். பா.ம.க. சார்பில் வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

    மு.க.ஸ்டாலின் தி.மு.க.வை பீகாரை சேர்ந்த பிரசாந்த கிஷோரிடம் பலகோடிக்கு அடகு வைத்து விட்டார். அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி, இடஒதுக்கீடு, வரலாறு, கணக்கு என்று எதுவும் தெரியாது. ஆனால் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற வெறி மட்டும் அவரிடம் உள்ளது.

    சட்டசபையில் அடிக்கடி மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்கிறார். எதிர்கட்சி தலைவராக செயல்பட முடியாத மு.க.ஸ்டாலினால் முதல்-அமைச்சராக எப்படி செயல்பட முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் நேருக்குநேர் சந்திக்கும் சோளிங்கர் தொகுதி கண்ணோட்டம்.
    பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் ஆகியோர் நேருக்குநேர் சந்திக்கும் சோளிங்கர் தொகுதி கண்ணோட்டம்.

    திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை தொகுதி களுக்கு நடுவில் சோளிங்கர் தொகுதி உள்ளது.

    சோளிங்கர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் காட்சி அளிக்கிறார். இதனால் இப்பகுதி சிம்மபுரம் என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு சோழர்கள் ஆட்சி புரிந்ததால் சோழபுரம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் சோளிங்கர் என அழைக்கப்பட்டு வருகிறது.

    பா.ம.க. சார்பில் அ.ம. கிருஷண்ன், காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.முனிரத்தினம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கார்த்திக் ராஜா, நாம் தமிழர் சார்பில் யு.ரா. பாவேந்தன், அமமுக சார்பில் என.ஜி. பார்த்திபன்.

    பாமக வேட்பாளர் அ.ம. கிருஷண்ன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 2,71,12,100
    3. அசையா சொத்து- ரூ. 70,00,000

    காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 31,57,450
    2. அசையும் சொத்து- ரூ. 35,78,61,239
    3. அசையா சொத்து- ரூ. 15,08,19,000

    சோளிங்கர் பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பெரிய மலை மீது யோக நரசிம்ம லட்சுமி சாமி கோவிலும், சின்ன மலை மீது யோக ஆஞ்சநேயர் சாமி கோவிலும் உள்ளது.

    கார்த்திகை மாதத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 லட்சம் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

    சோளிங்கர் தொகுதி

    மேலும் டி.வி.எஸ். நிறுவனம், அரசு மருத்துவமனை, அதிகமான சத்திரங்கள் உள்ளன. பனப்பாக்கத்தில் புலியும், மயிலும் பூஜை செய்து வழிபட்ட வரலாற்று சிறப்புமிக்க மயூரநாதசாமி கோவில் உள்ளது.

    சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் சோளிங்கர் ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகள், நெமிலி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் மற்றும் சோளிங்கர் பேரூராட்சி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி, பேரூராட்சி, பனப்பாக்கம் பேரூராட்சி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கி உள்ளது.

    சோளிங்கர் தொகுதி

    தமிழகத்தில் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி இங்கு உள்ளது. சோளிங்கர் தொகுதியில் முக்கிய தொழில் நெசவு தொழில், விவசாயம் சிறந்து விளங்குகிறது. தனியார் தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன.

    அரக்கோணம் தாலுகா இரண்டாகப் பிரித்து நெமிலியில் புதிய தாலுகா அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சோளிங்கர் தொகுதியில் வன்னியர், முதலியார், ஆதிதிராவிடர், யாதவர், முஸ்லிம், செட்டியார், நாயுடு, கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர். 

    மொத்த வாக்காளர்கள்: 2,75,532 
    ஆண்கள்: 1,35,256 
    பெண்கள்: 1,40,266 
    மூன்றாம் பாலினத்தவர்: 10 பேர் உள்ளனர்.

    சோளிங்கர் தொகுதி

    1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை அ.தி.மு.க.வும், தலா ஒருமுறை தி.மு.க.வும், த.மா.கா.வும், தே.மு.தி.க.வும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 2019-ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

    2016ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த என்.ஜி. பார்த்திபன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.முனிரத்தினம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் என்.ஜி. பார்த்திபன் வெற்றி பெற்றார்.

    சோளிங்கர் தொகுதி

    இந்த நிலையில் என்.ஜி. பார்த்திபன் டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றதால் நீதிமன்றம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜி.சம்பத் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அசோகன் தோல்வியடைந்தார். 

    சோளிங்கர் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சோளிங்கரில் புதிதாக தாலுகா அலுவலகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அரசு சார்பில் கட்டிடம் கட்டித்தர வேண்டும். சோளிங்கரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தேசிய தர சான்றிதழ் தரப்பட்ட மருத்துவமனையாக இருந்தும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அல்லது சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ரோப்கார் திட்டப்பணிகள் 15 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    சோளிங்கர் தொகுதி

    சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் காலணி தொழிற்சாலை அமைத்து 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோளிங்கர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சோளிங்கர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க இப்பகுதியில் புறவழிச்சாலையில் உருவாக்கித் தரவேண்டும்.

    சோளிங்கர் பகுதியை சுற்றுலா மையமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும். சோளிங்கர் பகுதியில் அமைக்கப்பட்ட அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தி போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். இங்கு நெசவுத் தொழில் அதிக அளவில் உள்ளதால் தொழிலாளர்களுக்கான ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சோளிங்கர் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தேர்தல் வெற்றி

    சோளிங்கர் தொகுதி
    சோளிங்கர் தொகுதி

    1957 பக்தவச்சலம் காங்
    1962 பொன்னுரங்க முதலியார் காங்
    1967 அரங்கநாதன் தி.மு.க
    1971 பொன்னுரங்க முதலியார் நிறுவன காங்
    1977 ராமசாமி அ.தி.மு.க.
    1980 கோபால்  அ.தி.மு.க.
    1984 சண்முகம் அ.தி.மு.க.
    1989 முனிரத்தினம் காங்
    1991 முனிரத்தினம் காங்
    1996 முனிரத்தினம் த.மா.கா
    2001 வில்வநாதன் அ.தி.மு-.க
    2006 அருள்அன்பரசு காங்
    2011 மனோகர் தே.மு.தி.க.
    2016 என்.ஜி.பார்த்திபன் அ.தி.மு.க.
    2019 ஜி.சம்பத் அ.தி.மு.க. (இடைத்தேர்தல்)
    இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் சு. ரவி அதிமுக சார்பில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை விசிக வேட்பாளர் கவுதமசன்னா எதிர்த்து போட்டியிடுகிறார்.
    அதிமுக வேட்பாளர் சு. ரவி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 10 ஆயிரம்
    2. அசையும் சொத்து- ரூ. 19,16,761
    3. அசையும் சொத்து- ரூ. 3,75,000

    விசிக வேட்பாளர் கவுதமசன்னா சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 15,000
    2. அசையும் சொத்து- ரூ. 2,82,808.53

    அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்த நகரம். 1977 முதல் அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி தனிதொகுதியாக உள்ளது. 1952 தொடங்கி இதுவரை 14 சட்ட மன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது சென்னையின் அருகிலுள்ள தொகுதியாக உள்ளது.

    அரக்கோணம் தொகுதி

    அரக்கோணம் பகுதியில் இருந்து சென்னைக்கு ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் ஆண்டிற்கு ரூ.6 கோடி வருவாய் ஈட்டும் மிகப்பழமையான ரெயில் நிலையமாக அமைந்துள்ளது இப்போது இன்னும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் புதிய ரெயில் நிலையம் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    அரக்கோணத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பிரமாண்டமான தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய கடற்படை கண்காணிக்கும் மிக வலிமையான ராஜாளி கடற்படை விமான தளம். தென்னிந்திய அளவில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை தளமும் இந்த தொகுதியில் உள்ளது. 

    அரக்கோணம் தொகுதி

    ஆதிதிராவிடர்கள், வன்னியர், முதலியார் சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். அரக்கோணம் தொகுதியில் இதுவரை 7 முறை தி.மு.க.வும், 5 முறை அ.தி.மு.க.வும், 2 முறை காங்கிரஸ் கட்சியும், ஒரு முறை சுயேட்சையாகவும் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

    தொழிற்சாலை என்று பார்த்தால் டயர் தொழிற்சாலை, ராம்கோ சிமெண்ட் சீட் ஆலை, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலை என பல தொழிற்சாலைகள் இந்த தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    அரக்கோணம் தொகுதி

    தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 226511. பேர் இதில் ஆண் வாக்காளர் எண்ணிக்கை 110327, பெண் வாக்காளர் 116167 பேர் எனவும் 17 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

    அரக்கோணம் நகராட்சி, தக்கோலம் பேரூராட்சி மற்றும் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 கிராம ஊராட்சிகள் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சிகள் சோளிங்கர் ஒன்றியத்தின் ஊராட்சிகள் கொண்டதாக உள்ளது. 

    அரக்கோணம் தொகுதி

    1951 ஆண்டிலிருந்து சட்ட மன்ற தேர்தலை சந்திக்கும் தொகுதியாக இருந்தாலும் 3 ஆண்டிற்கு முன்னர்தான் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய தொகுதியாகவே உள்ளது. இந்த தொகுதியின் நீண்டகால கோரிக்கையாக பலவற்றை இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதில் குறிப்பாக ரெயில் நிலையம் வழியாக பஸ் சேவை, கடுமையான போக்குவரத்து நெரிசலால் தினமும் காந்தி ரோடு விரிவாக்கம் செய்வது முடங்கி கிடக்கும் சிட்கோ, அரசு தொழிற்பயிற்சி நிலயத்தை மீட்பது.

    அரக்கோணம் தொகுதி

    அரக்கோணம் ரெயில் நிலையம் சென்னையின் நுழைவு வாயிலாக இருப்பதால் ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் எனவும் அரசு மருத்துவ மனையில் இன்னும் அதிகமாக வசதிகள் செய்யவேண்டும் என எதிர்பார்கின்றனர்.


    தேர்தல் வெற்றி

    அரக்கோணம் தொகுதி

    1951 பக்தவத்சலு நாயுடு- சுயே
    1957 சடையப்ப முதலியார்- காங்கிரஸ்
    1962 ராமசாமி- தி.மு.க.
    1967 ராமசாமி- தி.மு.க.
    1971 பலராமன்- தி.மு.க.
    1977 வி.கே.ராசு- அ.தி.மு.க.
    1980 விஜயசாரதி- அ.தி.மு.க.
    1984 வி.கே.ராசு- தி.மு.க.
    1989 வி.கே.ராசு- தி.மு-.க.
    1991 லதாபிரியக்குமார்- காங்கிரஸ்
    1996 தமிழ்செல்வன்- தி.மு.க.
    2001 பவானி கருணாகரன்- அ.தி.மு.க.
    2006 ஜெகன்மூர்த்தி- தி.மு.க.
    2011 சு.ரவி- அ.தி.மு.க.
    2016 சு.ரவி- அ.தி.மு.க.

    2016 தேர்தல்

    சு.ரவி- அ.தி.மு.க.- 68,176
    ராஜ்குமார்- தி.மு.க.- 64,015
    அற்புதம்- பா.ம.க.- 20,130
    கோபிநாத்- வி.சி.க.- 5,213
    விஜயன்- பா.ஜ.க.- 2,021
    சுதாகர்- பி.எஸ்.பி.- 1,614
    சரவணன்- நாம்தமிழர்- 1,038
    நோட்டா- 2,049
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.

    மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 10-க்கும் குறைவான நபர்களே தினமும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 25 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 222 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர். 352 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் தொகுதியில் 24 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

    வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 21 பெண் வேட்பாளர்கள், 95 ஆண் வேட்பாளர்கள் என்று மொத்தம் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதிகபட்சமாக குடியாத்தம் (தனி) தொகுதியில் 28 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் பெறப்பட்ட மனுக்களை வேட்பாளர்கள் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று முன்தினம் பரிசீலனை செய்தனர்.

    வேலூர் தொகுதியில் 24 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 4 பேரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    காட்பாடி தொகுதியில் பெறப்பட்ட 22 மனுக்களில், 17 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 5 மனுக்கள் தள்ளுபடியானது.

    அணைக்கட்டு தொகுதியில் 23 மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் 19 பேர் வேட்புமனு அளித்திருந்தனர். அவற்றில் 10 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடியானது.

    குடியாத்தம் (தனி) தொகுதியில் பெறப்பட்ட 28 மனுக்களில் 7 மனுக்கள் தள்ளுபடியானது. 21 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஆக மொத்தம் 116 வேட்புமனுக்களில், 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கு இன்றைய தினமே (திங்கட்கிழமை) கடைசிநாளாகும்.

    அதைத்தொடர்ந்து தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தி அளிக்கப்படும் என அணைக்கட்டு தொகுதி தி.மு.க வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.
    வேலூர்:

    அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட புத்தூர், பொய்கை, சத்தியமங்கலம், இலவம்பாடி, மருதவள்ளிபாளையம், வல்லண்டராமம் வசந்தநடை, செதுவாலை, விரிஞ்சிபுரம், இறைவன்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குடிசை கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தால் 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசம் என கூறுகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நீங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்தீர்கள். ஆனால் அப்போது உதவி செய்யாத அரசு ஆட்சிக்கு வந்தால் உதவி செய்கிறேன் என இப்போது கூறுகிறது. அப்போதே கொடுக்க முடியாதவர்கள் இப்போது எப்படி கொடுப்பார்கள்.

    கொரோனா ஊரடங்கின்போது 3 மாதங்களாக அணைக்கட்டு தொகுதி முழுவதும் 18 ஆட்டோக்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு, ஆட்டோ டிரைவர்களுக்கு என் சொந்த செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தி அறிவிக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்தவற்றை கண்டிப்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவார். எனவே நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

    பிரசாரத்தின் போது அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் குமரபாண்டியன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் மலர்விழி லோகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×