என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலத்தவர்கள் வருகையால் கொரோனா பாதிப்பு திடீரென இன்று 31-ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்காக முக்கிய இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதனால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. வேலூர் மாவட்டத்திலும் தினந்தோறும் தொற்று ஒற்றை இலக்கில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ஆனால் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24-ந்தேதி 20 பேருக்கும், 25-ந்தேதி 17 பேருக்கும், 26-ந் தேதி 11 பேருக்கும், நேற்று 17 பேருக்கும் என இருந்தது. ஆனால் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில்தான் இருந்து வருகிறது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அதிகளவில் சிகிச்சைக்காக ரெயிலில் வருகின்றனர்.

    ரெயில் பயணம் செய்யும் அவர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கும்பல் கும்பலாக வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்போது தொற்று உறுதியாகிறது.

    இன்று மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கையில் 15 பேர் வெளிமாநிலத்தவர்கள் தான். அவர்களுடன் தொடர்புடைய அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முககவசம் அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும்’ என்றனர்.
    திருச்சி அருகே நள்ளிரவில் இரண்டாவது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி எம்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு (வயது 38). இவரது மனைவி உஷா (30). இரண்டாவது மனைவியான இவருக்கு மித்ராஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

    முதல் மனைவி ரேணுகா 2 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து பிரபு 2-வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு இரட்டைக் குழந்தைகளான 10 வயதில் தேவா என்ற மகனும் தேவி என்ற மகளும் உள்ளனர்.

    பிரபு, துறையூரில் லோடு ஆட்டோ டிரைவராக பணி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் துறையூரில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர், மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. இதையடுத்து அதனை தொடர்பு கொண்டு பேசிய பிரபு, சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என மனைவியிடம் கூறி விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு முழுக்க காத்திருந்த உஷாவிற்கு, அதிகாலை பிரபு ரோட்டில் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.

    இதைக்கேட்டு உஷா அலறியடித்துக்கொண்டு ஓடினார். ஆலத்துடையான்பட்டியிலிருந்து எம்.ஜி.ஆர். காலனி செல்லும் சாலையில் பிரபு ரத்தக்காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவலளித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், முசிறி டி.எஸ்.பி. தமிழ்மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    முதுகு, நெஞ்சு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்களுடன் பிரபு படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதற்கிடையே திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பிரபுவின் மனைவி உஷா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    திருச்சியிலிருந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடும்ப பிரச்சனையா அல்லது தொழில் போட்டியால் ஆட்டோ டிரைவர் பிரபு கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    காட்பாடி அருகே மகளிர் குழுக்களிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள நபார்டு வங்கி கட்டுப்பாட்டிலுள்ள வங்கி மூலம் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த வங்கியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுவினருக்கு பல லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜமுனாமரத்தூர் ஏரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (வயது61) மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் தாட்சியாயினி (39), செல்வி (47) வினோதினி, ராஜம்மாள் ஆகியோர் மகளிர் குழுக்களிடம் பணத்தை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரை மகளிர் குழுக்களிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.

    ஆனால் இந்த பணத்தை வங்கியில் கட்டவில்லை. வங்கி ஊழியர்கள் மகளிர் குழுக்கள் கடனுதவி குறித்து தணிக்கை செய்தனர்.அப்போது கோவிந்தன் மற்றும் அவரது தொண்டு நிறுவன நிர்வாகிகள் சேர்ந்து ரூ.34 லட்சத்து 73 ஆயிரத்து 287 வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக காட்பாடி வங்கி மேலாளர் லோகநாதன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், தாட்சியாயினி, செல்வி ஆகியோரை கைது செய்தனர். வினோதினி, ராஜம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    இதை பெறுவதற்கு 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் வாயிலாக 9-ம் வகுப்பும், அதற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 0452-2529695-ல் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளான அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள கானாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அரக்கோணம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. விடிந்த பிறகும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

    நேற்று ஒரே நாளில் மழையால் வேலூர் மாவட்டத்தில் 105 வீடுகள் இடிந்தன. இதில் 9 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. இதுவரை பருவமழையால் இடிந்த வீடுகள் எண்ணிக்கை 860 ஆக உயர்ந்துள்ளது. மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 38 முகாம்களில் 3 ஆயிரத்து 914 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் அனைத்து தகுதிகளும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

    பொன்னையாற்றில் 3 ஆயிரத்து 863 கன அடியும் பாலாற்றில் 11,787 கனஅடி வெள்ளம் பாய்ந்து செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆறுகளில் வேடிக்கை பார்க்க, குளிக்க பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது பல இடங்களில் மழை பெய்தது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நேற்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள வந்தவாசி, செய்யாறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 82 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மழை நீர் அதிகம் உள்ள இடங்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு சென்றுள்ள நிலையில் மேலும் சிலர் நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மீண்டும் பெய்த கனமழையால் திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் மயமாகவே காட்சி அளிக்கிறது.

    மழை வெள்ளம் வடிந்து சில நாட்கள் வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பெய்த மழை காரணமாக சென்னை மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள்.

    எப்போது மழை வெள்ளம் வடியும் என்று காத்திருந்த மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் வெயிலும் அடித்தது. இதனால் மழை நீர் வேகமாகவும் வடிந்தது.

    ஆனால் மீண்டும் சென்னை மக்களை வாட்டி வதைக்கும் வகையில் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி உள்ள தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் முடங்கி உள்ளனர். ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய வெள்ளம் வடிவதற்கு 2 வாரத்துக்கு மேல் ஆகி விட்டது.

    இந்த நிலையில் மீண்டும் வெள்ளம் தேங்கி இருப்பது சென்னை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வெள்ள நீர் வடிவதற்கு மேலும் 2 வாரங்கள் ஆகிவிடும் என்பதால் அதுவரை மழை வெள்ளத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் பலர் விழி பிதுங்கி உள்ளனர்.

    மழை நீர் அதிகம் உள்ள இடங்களில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு சென்றுள்ள நிலையில் மேலும் சிலர் நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    மழை நீர் வடிந்த பிறகே மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.

    வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கர் மேஸ்திரி, சுப்பிரமணியன், திருப்பதி, சுந்தரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொழிலாளர் சட்ட தொகுப்புகள் கைவிடவேண்டும். பீடி தொழில் முறைசாரா கட்டுமானம் ஆட்டோ, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச பென்‌ஷன் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க உறுதி செய்ய வேண்டும்.

    கொரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு காப்பீடு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.
    திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த நித்யானந்தா(வயது 38). இவர் திருத்தணி எல்லையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அதேபோல் திருத்தணி அருகே முருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன்(40). இவர் முருகம்பட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் முருகம்பட்டு கிராமம் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் எதிரில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஓட்டல் உரிமையாளர் நித்யானந்தா திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். கன்னியப்பன் திருத்தணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த நித்யானந்தாவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
    வேலூர் மார்க்கெட்டிற்கு இன்று தக்காளி வரத்து அதிகமானதால் விலை ஓரளவு குறைந்தது. கிலோ ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையானது.

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.100-யை தாண்டி விற்பனையானது.

    இதனைத் தொடர்ந்து காட்பாடி காங்கேயநல்லூர் ரோட்டில் உள்ள பசுமை பண்ணை அங்காடியில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பசுமை பண்ணை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 69-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

    வேலூர் மார்க்கெட்டிற்கு இன்று தக்காளி வரத்து அதிகமானதால் விலை ஓரளவு குறைந்தது. கிலோ ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையானது.

    நேதாஜி மார்க்கெட்டில் (ஒருகிலோவிற்கு) கத்தரி ரூ.100, வெண்டைக்காய் ரூ.100, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.

    தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
    பாங்காக்:

    தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான  "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

    இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன்  கூறியதாவது:-

    தாய்லாந்தில் உள்ள பிட்சா  நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல் பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன்  கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம்.

    சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக  மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார்.

    கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும். பாலாடைக்கட்டியுடன்  கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது.  ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு  கூடுதலாக ரூ. 225  வசூலிக்கபடும்.

    கஞ்சா பீட்சா

    அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள்.

    தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால்  அபராதமும் சிறைவாசமும் விதிக்கப்படலாம்.  தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை  வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டேரி ஏரி நிரம்பியது. பொதுமக்கள் பூஜைகள் செய்து வரவேற்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நகரை ஒட்டி பாலமதி, பள்ள இடையம்பட்டி, நாயக்கனேரி மலைகளில் இருந்து மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் மழைநீரை சேகரித்து ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் ஏறத்தாழ 106 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரியை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கியது. அதுதான் தற்போதுள்ள ஓட்டேரி ஏரி.

    நாயக்கனேரி மலையில் இருந்து ஊற்றுத்தண்ணீர் பெருக்கெடுத்து குளவிமேடு, வாணியங்குளம் கிராமம் அருகே செல்லும் நீரோடை வழியாக வந்து இந்த ஏரியில் சேருகிறது.

    ஓட்டேரி ஏரி நிரம்பியதும் உபரிநீர் பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்கு செல்லும். பின்னர் அங்கிருந்து தொரப்பாடி ஏரிக்கு செல்லும். இவ்வாறு செல்லும் இணைப்பு கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இத்தகைய நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்றும் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஓட்டேரி ஏரி கடந்த 2015-ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது கடைசியாக முழுமையாக நிரம்பி வழிந்தது. அதன் பிறகு 5 முறை வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்த போதும் ஓட்டேரி ஏரி வறண்டே காணப்பட்டது.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை ஏரி நிரம்பி, ஒரு பகுதியில் கோடிப்போக தொடங்கியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர். சிலர் வருணபகவானை வழிபட்டனர்.

    சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து ஏரியை பார்த்துச் செல்கின்றனர். சிலர் செல்போனில் செல்பி எடுத்தும், இளைஞர்கள் பலர் ஏரியில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
    தூத்துக்குடி:

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இல்லாத அளவில் காயல்பட்டினத்தில் ஒரேநாளில் 306 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதேபோல் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், வைப்பாறு, கோவில்பட்டி, கடம்பூர், கீழ அரசரடி, எட்டயபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளிலும் அதிகனமழை பெய்தது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேரகன் நகர், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் முட்டளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன்புரத்தில் 4 தெருக்களிலும் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. அமுதா நகர், சிதம்பர நகர், ராஜீவ் நகர், பாரதி நகர், முனியசாமி புரம், ராஜகோபால் நகர், அண்ணா நகர், நிகிலேசன் நகர், சி.என்.டி. காலனி, லூர்தம்மாள்புரம், செயின்ட் மேரீஸ் காலனி, ஆரோக்கியபுரம், டூவிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் விடிய விடிய அவர்கள் கண் விழித்து தூங்க முடியாமல் தவித்தனர். அவர்கள் வேலைகளுக்கும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

    காயல்பட்டினத்தில் இடியுடன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக சுலைமான் நகர், பார்க்கர் காலனி, உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு, காட்டு தைக்கா தெரு, அருணாசலபுரம், கொம்புதுரை உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

    தொடர்ந்து கொம்புதுரை பகுதியில் வசித்து வந்த மீனவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். காயல்பட்டினம் பஸ் நிலையம், பொது நூலகம், கால்நடை மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது.

    சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு கிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்த பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வருவாய் துறையினர் சென்று அங்குள்ளவர்களை மீட்டு அரசு பள்ளியில் தங்க வைத்தனர். கூவை கிணறு, கோமானேரி பகுதியை சேர்ந்தவர்கள் முன்எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு கழுங்கு விளையில் தங்கவைக்கப்பட்டனர்.

    சாத்தான்குளம் நகரில் முதலூர் ரோடு, இட்டமொழி, பஸ் நிலையம் பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. நடுவக்குறிச்சி பகுதியில் சாலையோரம் உள்ள புளியமரம் மழையால் சாய்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் தவிசயாபுரம், அமுதுண்ணாகுடி சாலையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள கண்மாய் நிரம்பி மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது.

    புங்கவர்நத்தம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவில் அருகே உள்ள கண்மாய் முற்றிலும் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் முட்டளவு தேங்கி நிற்பதால் நோயாளிகளை பார்க்க உறவினர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இன்று காலை பணிக்கு சென்ற டாக்டர்கள், நர்ஸ்கள் இருசக்கர வாகனங்களில் சென்றபோது தண்ணீரில் மூழ்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

    இதனால் பலர் கார்கள் மூலமும், வாடகை ஆட்டோக்கள் மூலமும் மருத்துவமனைக்கு சென்றனர். இதே போல் பணி முடிந்து திரும்பியவர்களும் இதேபோல் வீடுகளுக்கு சென்றனர்.

    கனமழை காரணமாக தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நேற்று மாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12 மணிக்கும், இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 3.20 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    சென்னையில் இருந்து இன்று காலை வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமாக கீழுர் ரெயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் இன்று மழை காரணமாக 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலூர் ரெயில் நிலையத்தில் பயணிகளை இறக்கியது.

    கனமழை காரணமாக திருச்செந்தூர்- நெல்லை சாலையில் அங்கமங்கலம் பகுதியில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட கலெக்டர், பொதுப் பணித்துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டவர்கள் விரைந்து சென்று துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இன்று காலை முதல் அங்கு போக்குவரத்து சீரானது.

    ஆனால் குரும்பூர்- ஏரல் சாலையில் நேற்று மாலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆத்தூரை சுற்றி மாற்று பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது. குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் நிரம்பி மறுகால் பாய்வதால் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.

    நாசரேத் பஜார் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

    திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது. கோவில் கிழக்கு பகுதியில் உள்ள கிரி பிரகாரத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியது. பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகா மண்டபத்திற்குள் தண்ணீர் செல்லவில்லை. கோவில் நாழிகிணறு நிறுத்தத்தில் இருந்து கார் செல்ல முடியாத அளவு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. எனினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர் நகர் பகுதியில் உள்ள டி.பி. ரோடு, காமராஜர் சாலை, ரத வீதிகள், சபாபதிபுரம் தெரு, ஜீவா நகர், அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    பகத்சிங் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. உடனடியாக மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ., வருவாய் துறையினர், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் இன்று திருச்செந்தூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது.


    ×