என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.


    இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.

    சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.

    பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

    மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தேவர் சன்னதி முன்பு சாயாபி ஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
    • வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 5-வது நாளான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.


    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.

    அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அங்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.


    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தம், கந்த சஷ்டி கவசம் பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    • அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்க சுவாமி
    • திரளானவர்கள் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

    திருச்செந்தூர்:

    சேலம் அருகே உள்ள அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்க சுவாமி, மரம், செடி, கொடிகள் வளர்க்க வேண்டும். பசுமையை நேசிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.


    இவர் ஆண்டுதோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்.

    இந்தாண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மணலால் 5 லிங்கம் செய்து லிங்கத்திற்கு முன்பாக ஆழ குழி தோண்டி தன் உடல் முழுவதையும் மணலுக்குள் புதைத்து தலை மட்டும் வெளியே தெரியுமாறு சிவ பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, இயற்கையை நேசிக்க வேண்டும், எல்லோரும் மரம், செடி, கொடிகள் நட வேண்டும் என்பதற்காகவும், உலக மக்கள் எல்லாரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்ததாக கூறினார். சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளானவர்கள் வந்து அவரிடம் ஆசி பெற்று சென்றனர்.

    • நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி திருவிழா 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    3-ம் நாளான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தும், பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி புகழேந்தி நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவில் வளாகம் முழுவதும் நேரில் சுற்றி பார்த்து அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கோவில் வளாகத்தில் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளுக்கு நேரில் சென்று அங்கு தங்கியுள்ள பக்தர்களிடம் குடிதண்ணீர், சுகாதார வளாக வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் கோவில் வளாகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு சென்று அதில் தங்கியுள்ள பக்தர்களிடம் வாடகை குறித்தும், வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அந்த விடுதியில் உள்ள அலுவலரிடம் விடுதியில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி செல்வபாண்டி, நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பஸ்சில் பயணம் செய்த ஆத்தூரை சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
    • மழையால் பஸ் முழுவதும் ஒழுகியது.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆழ்வார் திருநகரி, பெருங்குளம், தென்திருப்பேரை போன்ற பகுதியில் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஆத்தூரில் இருந்து பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம் வழியாக அரசு பஸ் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    பெருங்குளத்தில் பலத்த மழை பெய்ததால் அரசு பஸ் ஒழுகியது. இதனால் பயணிகள் பஸ் இருக்கையில் அமர முடியாமல் எழுந்து நின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன் பஸ்சில் வடிந்த மழை நீரில் நின்று கொண்டிருந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அந்த பஸ்சில் பயணம் செய்த ஆத்தூரை சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், மழையால் பஸ் முழுவதும் ஒழுகியது. நான் கைக்குழந்தையுடன் அந்த பஸ்சில் பயணம் செய்தேன். குழந்தையை வைத்துக்கெண்டு இருக்கவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லை. அந்த பஸ்சில் பின்பக்கம் படிக்கட்டும் இல்லை. மாற்றுப்பஸ் கேட்டு டிப்போ அதிகாரியிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் சரிவர பதில் கூறவில்லை என்றார். அதனால் நாங்கள் நெல்லை செல்ல அந்த பஸ்சில் பயணச்சீட்டு வாங்கி விட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இறங்கவேண்டிய நிலை வந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டதில் நாங்கள் பஸ்சில் இருந்து இறங்கிவிட்டோம்.

    தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள இதுபோல் பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்றார். 

    • கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் கோவிந்தன் (வயது 21). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது படுக்கபத்து பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.

    அவர் கோவிந்தனிடம் ஒரு முகவரி குறித்து கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் முகவரி கேட்ட வாலிபரை சத்தம் போட்டு விரட்டினார். பின்னர் அந்த வாலிபர் 20-க்கும் மேற்பட்டவர்களுடன் கோவிந்தன் வீட்டுக்கு சென்றார். அங்கு கோவிந்தன் வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக சமரசம் பேசுவதற்காக படுக்கபத்து பகுதியை சேர்ந்தவர்கள் சாதரக்கோன்விளையை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரை அழைத்து சென்றனர். கோவிந்தன், அவரது தந்தை சிவன் ஆகியோரை வரவழைத்து மணிகண்டன் சமரசம் பேசினார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் சிவனை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே கோவிந்தனின் தங்கை முத்துலட்சுமிக்கும் (19), அழகப்பபுரத்தை சேர்ந்த வெயிலுமுத்துவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தலை தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துலட்சுமி தனது கணவருடன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை அவர் வீட்டருகே சென்றபோது மணிகண்டனின் தம்பியான தாஸ் (24) என்ற வாலிபர் அங்கு வந்தார். அவர் முத்துலட்சுமியை ஓடஓட விரட்டி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடியதாஸ் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அண்ணனை வெட்டிய கோவிந்தன் குடும்பத்தில் யாராவது ஒருவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்து எதிர்பார்த்து காத்திருந்தேன். நேற்று மாலை கோவிந்தன் வீட்டு அருகே கத்தியுடன் சென்றேன். அப்போது அங்கு ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்த நான், அந்த வழியாக கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்துகொண்டிருந்த முத்துலட்சுமியை பார்த்தேன்.

    அவரும் கோவிந்தன் குடும்பத்தில் ஒருவர் தானே என்று அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, கத்தியுடன் அவரை நோக்கி ஓடினேன். அவர் என்னை பார்த்து பயந்து ஓடினார். ஆனாலும் விடாமல் துரத்தி சென்று கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • 7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது.

     

    காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனையும் நடைபெற்று பின்னர் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

     

    திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி. 

    திருவிழாவின் தொடக்கமாக கோவில் தக்கார் அருள் முருகனிடம் தாம்பூல தட்டு வழங்கிய காட்சி. 

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30-க்கு விஸ்வ ரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடை பெறுகிறது.

    மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபி சேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும்-தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பக்தர்கள் விரதம் இருப்பதற்காக கோவில் வெளி கிரி பிரகாரங்களில் 18 இடங்களில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பரப்பளவில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியதையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அங்கு குவிந்து வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    தற்காலிக குடில்களிலும், கோவிலுக்கு சொந்தமான விடுதிகள், தனியார் விடுதிகள், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள மடங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    சஷ்டி திருவிழாவையொட்டி நடைபெறும் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி பக்தர்களுக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதி, தற்காலிக பஸ் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவைகள் சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கடலோர காவல் படையினரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காவல்துறை சார்பில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராள மானோர் திரண்டனர். இன்று காலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திரு விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 12நாட்கள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா முதல் நாளான நாளை அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார்.

    7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்தி நாதருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க தேரில் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெற்று பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் பல்வேறு அபிஷேக பொருட்க ளால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது.

    தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.

    இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.

    9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.



    விரதம் இருக்கும் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே 18 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.
    • பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிவதும், சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதும் வழக்கம்.

    இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மாலையில் அமாவாசை தொடங்குகிறது. இதனால் வழக்கம் போல் நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது.

    2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. ஆனாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருகின்றனர். 

    • ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர்.
    • இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.

    கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகளை விற்பனை அதிகமாக நடக்கும்.

    வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று காலை முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதுகுறித்து ஆடு வாங்க வந்த வியாபாரி உதயகுமார் கூறும்போது, ''எட்டயபுரம் சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலையும் கடந்தாண்டை விட அதிகமாகவே உள்ளது. ரூ.7ஆயிரம் விலையுள்ள ஆடு ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    எட்டயபுரம் சந்தைக்கு இந்தஆண்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகம் வந்துள்ளனர். ஆடுகளின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. 10 கிலோ எடையுள்ள குட்டியை ரூ.10 ஆயிரம் வரை சொல்கின்றனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.

    • குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.
    • மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வாத்தியார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை குடோன் உள்ளது.

    இந்த குடோனில் தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.


    இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. குடோனில் யாரும் இல்லாததால், தீ விபத்தை பார்த்த நபர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

    இதனால் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், டி.சி.டபிள்யூ. தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த அனைத்து மரக்கட்டைகளும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகியது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×