எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Published on

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.

கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகளை விற்பனை அதிகமாக நடக்கும்.

வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று காலை முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

இதுகுறித்து ஆடு வாங்க வந்த வியாபாரி உதயகுமார் கூறும்போது, ''எட்டயபுரம் சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலையும் கடந்தாண்டை விட அதிகமாகவே உள்ளது. ரூ.7ஆயிரம் விலையுள்ள ஆடு ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

எட்டயபுரம் சந்தைக்கு இந்தஆண்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகம் வந்துள்ளனர். ஆடுகளின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. 10 கிலோ எடையுள்ள குட்டியை ரூ.10 ஆயிரம் வரை சொல்கின்றனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com