என் மலர்
சிவகங்கை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா கண்டனூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் காசியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கலையரசி (வயது 56) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
மகன், மகள் வெளியூரில் இருப்பதால் கலையரசி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 15 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராமு மகன் முத்துக் கிருஷ்ணன் (வயது 55). இவர் மோட்டார் பழுது பார்க்கும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ராஜகம்பீரத்தில் மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தனியார் செங்கல் சேம்பர் கம்பெனியில் உள்ள கிணற்றில் இருந்த மோட்டாரில் பழுது ஏற்பட்டு இருந்ததை சரி செய்ய முத்துக்கிருஷ்ணன் மற்றும் 2 பேர் சென்றுள்ளனர்.
அப்போது சுமார் 50 அடி ஆழத்திற்கும் மேற்பட்ட அந்த கிணற்றில் முதலில் முத்துக்கிருஷ்ணன் மட்டும் இறங்கி மோட்டாரை கழற்றி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது விஷவாயு தாக்கி முத்துக்கிருஷ்ணன் மயங்கி கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப்பார்த்த மற்ற 2 பேரும் கிணற்றில் இறங்காமல் மானாமதுரை போலீசாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.
பின்னர் பலியான முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு செங்கல் சேம்பர் கம்பெனி நிர்வாகத்தினர் ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று சடலத்துடன் அங்கேயே போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சேம்பர் நிர்வாகத்தினர் உறுதியளித்ததை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் மக்கள்நல பணியாளராக வேலை பார்த்தவர் சுமதி (வயது35). இவரது கணவர் கண்ணன், கோவையில் ஓட்டல் தொழிலாளியாக உள்ளார்.
இதனால் சிறுமடை கிராமத்தில் கணவர் வீட்டாருடன் சுமதி வசித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கோவிலை சுத்தம் செய்ய போவதாக சுமதி கூறி சென்றார்.
இந்த நிலையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் தீக் காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக சேர்ந்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சுமதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது ஒரு வாலிபர் வழிமறித்தார்.
அவர் சக்திவேலை மிரட்டி பணம் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த பகுதியில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு வழிப்பறி செய்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவன் சிவகங்கை நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தார்.
விசாரணையில் அவனது பெயர் ஆகாஷ் (22) என்பதும் ஏற்கனவே 3 வழிப்பறி வழக்குகள் அவன் மீது இருப்பதும் தெரிய வந்தது.
சிவகங்கை:
தேவகோட்டை தாலுகா ஈக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 65). இவர் அந்தப்பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் சுப்பையாவின் வழிமறித்து பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சுப்பையாவை சட்டைப்பையில் இருந்த செல்போன் மற்றும் ரூ. 1,500-ஐ பறித்தனர்.
அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது சுப்பையா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.
அக்கம், பக்கத்தினர் திரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். விசாரணையில் அவர்களது பெயர் பாண்டியராஜன் (34), கண்டிப்பட்டி புதூர், ராஜூ (36) வெட்டிவயல் என தெரியவந்தது.






