என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது சில கட்டுபாடுகளுடன் செயல்படும் மளிகை கடை, ஓட்டல்கள் பேக்கரி, டீக்கடை மற்றும் செட்டிநாடு திண்பண்டமான முறுக்கு, சீப்பு சீடை போன்ற விற்பனை செய்யும் கடைகளில் காலாவதியான உணவு வகைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
இதில் பன், கேக், பிஸ்கட், கூல் டிரிங்ஸ் வகைகள், வாட்டர் பாட்டில்கள், லேஸ், மிச்சர், முறுக்கு, வத்தல், வெல்லம், பருப்பு வகைகள் விற்பனை தேதி முடிந்து விற்பனைக்கு வைத் திருந்தனர். காலாவதியான இந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆட்டு இறைச்சி கடைகளில் நகராட்சி முத்திரை இல்லாத கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நகராட்சியில் ஒப்படைத்து அழித்தனர்.
பாதுகாப்பு பணியில் காவல் உதவி கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், ராமச்சந்திரன், காவலர்கள் ஆரோக்கியம், இளங்கோ மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டனர்.
காரைக்குடி:
பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிவ கங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் 13 லட்சம் பேர் கெரோனாவால் பாதிக்கப்பட்டு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைதான் முக்கிய காரணமாகும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வரும். வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு பாக்கி வைத்துள்ள மல்லையாவின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளோம்.
நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, நடிகை ஜோதிகா போன்றோர் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். ஊரடங்கு முடிந்ததும் இவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் நோய் தொற்று பரவலை தடுக்க முழு வீச்சில் களத்தில் இறங்கியது.
சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து திருப்பத்தூர், இளையான்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து படிப்படியாக வீடு திரும்பிவிட்டனர்.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 22 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், பச்சை மண்டலத்துக்கான அறிவிப்பு இதுவரை வரவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். சமூக இடைவெளியை கடைபிடித்தல் முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாதுரையில் செயல்படும் வைரம் அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் சஞ்சை தலைமையில் ஒருங்கிணைந்து முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் அரசு அனுமதியுடன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 300 ஏழைகளுக்கு அறுசுவை உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தினமும் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பிரியாணி, முட்டை, வாழை பழத்துடன் வாகனத்தில் ஏற்றி கொண்டு ஏழை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். 45-வது நாளாக இன்றும் உணவு வழங்கினர்.
இதுபற்றி அரிமா சங்க தலைவர் சஞ்சை கூறியதாவது:-
உலகை புரட்டி போட்ட கொரோனா ஊரடங்கால் ஏழை மக்கள், முதியோர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். பசியுடன் யாரும் இருக்ககூடாது என தினமும் மானாமதுரை பஸ் நிலையம், ரெயில் நிலைய ரோடு, மெயின் பஜார், வாரச்சந்தை, நான்கு வழிச்சாலை, மூங்கில் ஊரணி, சிப்காட், சிவகங்கை ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கி வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பு மானாமதுரையைச் சுற்றியுள்ள ஏழை-எளிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கி உள்ளோம். பொதுமக்கள் இதனை பாராட்டி தற்போது உணவு தயாரிக்க அரிசி வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி வடபகுதியில் ஏழைகள் 500 பேருக்கு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 45 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்பட்டன. இதனால் தான் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. பொது முடக்கத்தின் போது மதுபானக் கடைகளை தினமும் 2 மணி நேரம் திறந்து வைத்திருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது.
என்னைப் பொருத்தவரை பூரண மதுவிலக்கு என்ற கொள்கையானது உலகம் முழுவதும் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும். பொது முடக்கத்தால்தான் குற்றச் சம்பவங்கள் குறைந்தன. மதுபானக்கடைகள் திறப்பால் மட்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க வில்லை. மதுவை தடை செய்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மானாமதுரை:
மானாமதுரை கெங்கை நகர், கலைகூத்துநகர், மாரியம்மன் நகர் ஆகிய பகுதியில் வெளியூர்களில் சர்க்கஸ் தொழில் செய்யும் குடும்பங்கள் வின்சென்ட் நகர், சன்னதி புதுகுளம் கலைநகர் மற்றும் காட்டு நாயக்கன்குடியிருப்பு ஆகிய பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதுதவிர மானாமதுரை வைரம் அரிமா சங்கத்தினர் தினமும் 300 பேருக்கு உணவு வழங்குகின்றனர். அவர்களையும் பாராட்டி 200 கிலோஅரிசியும் வழங்கி சேவை சேய்து வருகிறார்.
கடந்த 30 வருடமாக சமூகத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களை கண்டறிந்து சிறுதொழில் செய்ய வங்கி கடன் உதவி 15 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சியால் மானாமதுரை அருகே அழகாபுரி கிராம மக்கள் எலிகறி சாப்பிட்டு வாழ்ந்து வந்ததை அரசுக்கு தெரிவித்து வீடுகள் கட்டவும் தொழில் செய்து வாழவும் சேவை செய்தேன்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பின்தங்கிய மக்களுக்கு மாலை நேர கல்வி மையம் ஏற்படுத்தி அடிப்படை கல்வியும் கிடைக்க ஏற்பாடு செய்து உள்ளேன். ஊரடங்கு காலம் முடிந்த உடன் அரசு அனுமதி பெற்று ஏழை-எளிய மக்களுக்கு விதிமுறைகள்படி இலவச மருத்துவ சேவை செய்ய திட்டமிட்டு உள்ளேன் என்றார்.
காரைக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் பாரம்பரிய மிக்க வகையில் வீடுகளில் பதிக்கும் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளில் டைல்ஸ் தயாரிக்கும் பணியில் சுமார் 300 முதல் 400 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் மிகவும் அழகானதாகவும் இருப்பது மட்டுமல்லாமல் அவற்றால் எவ்வித பக்க விளைவும் இல்லாதது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்த பகுதியில் அதிகமாகவும், தரமானதாக கிடைப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் போன்று வேறு எங்கும் தயாரிக்க முடியாது.
மேலும் இங்குள்ள மண் மற்றும் தண்ணீர் ஆகியவை தனித்தன்மையாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ்கள் தரமானதாகவும், அனைவரையும் எளிதில் கவரும் வகையில் உள்ளது. இந்த டைல்ஸ் தயாரிக்கும் பணிக்கு இங்குள்ள வாரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மண்ணை சேர்ப்பதால் இந்த டைல்ஸ் பதிக்கும் வீடுகளில் கோடைகாலத்தில் குளுமையாகவும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் டன் டைல்ஸ்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்க நிலையில் இருந்தது.
இதுதவிர இந்த தொழிலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இல்லாததால் கடுமையான வறுமையில் இருந்து வந்தனர். இந்தநிலையில் ஊரடங்கில் கட்டுமான தொழிலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் இருந்து வருவது வழக்கம். தற்போது ஆத்தங்குடி அருகே புதுக்கோட்டை மாவட்டம் கோனாப்பட்டு பகுதிக்கு முன்பாக மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்கள் வர முடியாமல் தற்போது இந்த தொழில் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பணி மீண்டும் மந்தமான நிலையில் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து இந்த பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் உரிமையாளர் பெத்ராஜ் கூறியதாவது:- ஆத்தங்குடியில் 40-க்கும் மேற்பட்ட டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் இந்த டைல்ஸ் உலகம் முழுவதும் பெயர் பெற்றதாக விளங்கி வருகிறது. இந்த பணியில் ஆத்தங்குடி, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிவகங்கை மாவட்ட எல்லையான பழைய ஆத்தங்குடி பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அங்கிருந்து வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தற்போது கம்பெனியில் மொத்தம் 6 தொழிலாளர்களை கொண்டு வேலை செய்து வருகிறேன். இந்த பாதையை திறந்து விட்டால் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து இந்த பணியை பார்க்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் அடைக்கப்பட்ட எல்லை பாதை பகுதியை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






