என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒட்டுமொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கண்ணன் கால் டாக்சி டிரைவராக உள்ளார். இவரும் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிரியா என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். திருமண பேச்சு ஆரம்பித்த நேரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு முடியும் வரை திருமணம் நடத்த வேண்டாம் என்று காதல் ஜோடி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்ததால் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

    இதன்படி வீட்டின் அருகே இருந்த விநாயகர் கோவிலில் திருமணம் நடந்து உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.2000 பட்ஜெட்டில் திருமணம் முடிந்து விட்டது. இதில் பூமாலை, அர்ச்சனை பொருட்கள் உள்பட அனைத்தும் அடங்கும். பெண் வீட்டார் சார்பில் 2 பேர், ஆண் வீட்டார் சார்பில் 3 பேர் மற்றும் மணமக்கள் 2 பேர் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்தே சென்று திருமணம் முடிந்த பிறகும் நடந்தே வீடு திரும்பி விட்டனர்.
    பஸ் போக்குவரத்து தொடங்கியதாக எண்ணி வெளியூர் செல்வதற்காக காரைக்குடி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    காரைக்குடி:

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்களின் வசதிக்காக மட்டும் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒரு பஸ்சில் 20 அரசு ஊழியர்கள் என பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது என எண்ணிய பொதுமக்கள் நேற்று வெளியூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை என அறிந்ததை தொடர்ந்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து காரைக்குடி அரசு போக்குவரத்து பணிமனையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொது போக்குவரத்தை தொடங்க அரசு இன்னும் உரிய அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் பொதுமக்கள் பஸ் நிலையங்களில் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து அரசு, பொதுமக்களுக்கு விரிவான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும் பொது போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டாலும் கூட 50 சதவீத பயணிகளை மட்டும் பஸ்சில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள 700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள 700 குடும்பங்களுக்கு சமூக ஆர்வலரும் மேகா புளுமெட்டல் நிறுவனருமான மேகவர்ணம் தனது சொந்த செலவில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.

    இதில் கிராம அம்பலக்காரர் சசி பாண்டித்துரை, முத்துராமலிங்கம், காளைலிங்கம், ராமகிருஷ்ணன், மருதுபாண்டியன், பாலசுப்பிரமணியம், கலைச்செல்வம், இருளப்பன், ராஜசேகர், சுப்பிரமணி, சீமான் ஜெகதீஷ், பிரபாகர், இன்பசேகரன், பில்லப்பன் மனோகரன், புகழேந்தி, ராஜேந்திரன், மாயழகு, போஸ், பாண்டி செல்வம், சிலம்பரசன், கமலதாசன், ராஜதுரை, அகிலன் மற்றும் ஜெயங்கொண்டம் நிலை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெகன், வினோத் கண்ணா, சேவுகமூர்த்தி, செல்வம், திரவியம், ஞானசேகரன் மற்றும் மல்லாக்கோட்டை இளைஞர்கள் கலந்துகொண்டனர். இவர் ஏற்கனவே மல்லாக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் பழுது பார்த்தல் உள்ளிட்டவைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்புவனம் அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் காவேரி(வயது 39), கணேசன்(49), சிவகணேசன்(42). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது புதூர் பஜனைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(24) என்பவர் அங்கு வந்து, தனக்கும் மது தரும்படி கேட்டார். இதில் தகராறு ஏற்பட்டு காவேரி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜயை குத்தினார். இதில் காயம் ஏற்பட்ட அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சிவகணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் கத்தி குத்துப்பட்ட அஜய், திருப்புவனம் வைகையாற்றில் கடந்தாண்டு வாலிபரை கொலை செய்து புதைத்த வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மானாமதுரையில் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு 8-ம் வகுப்பு மாணவி வழங்கியதை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடு நிலைப்பள்ளியில்  8-ம் வகுப்பு படிக்கும் மாணவி சந்தியா தனது பெற்றோர் வழங்கிய தொகையை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்தார். 

    இன்று பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதனிடம் தான் உண்டியல் மூலம் சேமித்து வைத்திருந்த ரூ. 1048-ஐ கொடுத்து கொரோனா நிவாரண நிதியாக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு இணைய தளம்  மூலம் ரூ.1,048 அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் இச்செயலை ஆசிரியர்கள் பாராட்டினர்.
    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரை சேர்ந்த 8 பேர் மும்பையில் இருந்து நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களை அதிகாரிகள் மாவட்ட எல்லையில் தடுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 41 வயதுடையவரும், அவரது 36 வயது மனைவிக்கும், இவர்களது 9 வயது மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவர்களுடன் வந்த 43 வயதுடையவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன்மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.
    16 பேருடன் அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் தாங்களும் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என அஞ்சினர். மானாமதுரை அருகே வந்தபோது டிரைவரை கட்டாயப்படுத்தி பஸ்சை நிறுத்தினர். பின்னர் 16 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.

    மானாமதுரை:

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 23 பேர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே சாலையோர ஓட்டல் நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அந்த மாநில அரசு தனியார் பஸ் மூலம் 23 பேரை தமிழகத்திற்கு அனுப்பியது. நேற்று அதிகாலை சிவகங்கை மாவட்ட எல்லைக்கு பஸ் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த 7 பேர் இறக்கி விடப்பட்டனர். அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து 16 பேருடன் அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் தாங்களும் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என அஞ்சினர். மானாமதுரை அருகே வந்தபோது டிரைவரை கட்டாயப்படுத்தி பஸ்சை நிறுத்தினர். பின்னர் 16 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.

    பஸ் டிரைவர் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், இடைக் காட்டூர், ராஜகம்பீரம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து தனிமை முகாமுக்கு அனுப்பினர். 6 பேரை தேடும் பணி நடந்து வந்தது.

    மானாமதுரை அருகே 6 பேர் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது 6 தொழிலாளர்களும் காரில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

    அவர்களை எச்சரித்த போலீசார் பார்த்திபனூர் அருகே உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    காரைக்குடியில் உள்ள சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடைக்குள் புகுந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    காரைக்குடி:

    காரைக்குடி கீழத்தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. இதன்பேரில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி குடிமைப்பொருள் தாசில்தார் அந்தோணி ராஜ் ஆகியோர் அந்த ரேஷன் கடையில் திடீர் சோதனை நடத்த சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அந்த கடையின் பொறுப்பாளர் பாலு, ரேஷன் கடையை பூட்டி விட்டு தலைமறைவானார். இதையடுத்து அவரை அதிகாரிகள் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு நேற்று முன்தினம் சீல் வைத்தனர். அதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 42) சீல் வைக்கப்பட்ட ரேஷன் கடையின் பக்கவாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகளை அகற்றிவிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை பிடித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் அதிகாரிகள் அந்த கடையை திறந்து ஆய்வு நடத்தியபோது பொருட்களின் இருப்பு குறைவாக உள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடையின் பணியாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஜெயகுமாரை கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்தனர். படிப்படியாக அனைவரும் வீடு திரும்பினர்.

    கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கொரோனா பாதித்த பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி திரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் வசித்து வந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஊரடங்கு காரணமாக விளைந்த வெள்ளரிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடைக்காலத்தை முன்கூட்டியே கணக்கிட்டு விவசாயிகள் தங்களது நிலத்தில் வெள்ளரி விதையை அதிகஅளவில் விதைப்பு செய்தனர். தற்போது அவை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கும் நிலையில் உள்ளது.

    சிவகங்கையை அடுத்த இடையமேலூர் பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று பாசனம் மூலம் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த வெள்ளரி விளைந்து அறுவடை செய்யும் நேரத்தில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் காட்டு விலங்கு மற்றும் பறவைகள் வெள்ளரியை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் வெள்ளரி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயி பூச்சி கூறியதாவது:- 

    ஆண்டுதோறும் கோடைக்காலத்தை கணக்கிட்டு குறைந்த செலவில் அதிக லாபத்தை தரும் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து 40 நாட்கள் பராமரிப்பு செய்தாலே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

    தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் இரவு நேரத்தில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் முயல்கள் மற்றும் பகல் நேரத்தில் திரியும் மைனா உள்ளிட்ட பறவைகள் இந்த வெள்ளரிக்காயை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து இல்லாமல் விற்பனைக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் உள்ளது. இதனால் வெள்ளரிக்காயை உள்ளூர் பகுதியில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது இந்த பகுதியில் 1 வெள்ளரிக்காய் ரூ.1-க்கு தான் வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர். இதனால் இந்த ஆண்டு செலவு செய்த தொகைகூட கிடைக்காத நிலையில் உள்ளோம். வெள்ளரி சாகுபடியால் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது32). இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்காக சாக்கோட்டை போலீஸ் சரகம் மணியாரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன்(45) என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்துள்ளார் .நாட்கள் பல கடந்தும் சுப்பிரமணியன் ராமலிங்கத்தை அனுப்ப எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

    இதுகுறித்து ராமலிங்கத்தின் புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது கடந்த 2013-ம்ஆண்டு சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சுப்பிரமணியன் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். அதன்பின் வழக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் 7 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று அதிகாலை சாக்கோட்டை போலீசார் சுப்பிரமணியத்தை அவரது வீட்டில் கைது செய்தனர்.

    இதேபோன்று சாக்கோட்டை போலீஸ் சரகம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீதாராமன், சீதா லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் தாய் இறந்த பிறகு அவரது நகையினை சீதாராமன் வைத்துக்கொண்டாராம். இதுகுறித்து இருவருக்கும் தகராறு முற்றவே சீதாராமன், சீதாலெட்சுமணனை அரிவாளால் வெட்டி உள்ளார்.

    இதுகுறித்து கடந்த 2017-ம் ஆண்டு சாக்கோட்டை போலீசார் சீதாராமனை கைதுசெய்தனர். இந்த வழக்கில் சீதாராமன் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சீதாராமனை சாக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் உத்தரவின்பேரில் வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    சிவகங்கை நகர்ப்ப குதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர்ப்ப குதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பொது மக்களுக்கு ஓரக்கசாயம் மற்றும் பத்து கிராம் பாக்கெட் சுவாசப்பொடி ஆகியவற்றை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து இடங்களிலும் இருந்து வருவதால் இந்தக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை பல்வேறு கட்ட தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.

    அந்தவகையில் மேலும் பொதுமக்களுக்கு நோய் தாக்காமல் இருக்க ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமான ஒன்றான நோய் எதிர்ப்புச்சக்தி ஒவ்வொருவரின் உடம்பிலும் இருக்கும் வகையில் அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றன.

    தொடர்ந்து சித்தா மருத்துவத்துறையின் மூலம் கபசுரக்குடிநீர், நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஓரக்கசாயம் மற்றும் சுவாசப்பொடி வழங்கப்படுகிறது.

    ஓரக் கசாயம் ஒவ்வொருவரும் 10 எம்எல் வீதம் 3 நாள் பருக வேண்டும். சுவாசப்பொடியை தொண்டைப்பகுதியில் வைத்து உமிழ்நீராகப் பருக வேண்டும். உடம்பிலுள்ள சளி, இருமல் நீங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வழங்கும் சித்தா மருத்துவத்துறையின் மருந்துகளை முழுமையாக பயன்படுத்தி நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் இராசி இயற்கை உணவுகள் பயிற்சி மையம் மூலம் ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்ட ஓரக்கசாயம் மற்றும் சுவாசப் பொடியினை கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, சிவகங்கை நகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ராசி இயற்கை உணவுகள் பயிற்சி மைய மேலாளர்கள் சரவணன், ராஜரீகா, சமூக ஆர்வலர் அயோத்தி, சிவகங்கை அரண்மனை இளைய மன்னர் மகேஷ் துரை, கூட்டுறவு விற்பனை பண்டகச்சாலை சங்கத் தலைவர் ஆனந்தன், சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×