search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தனிமை முகாமில் தங்க பயந்து பஸ்சில் இருந்து இறங்கி ஓடிய தொழிலாளர்கள்

    16 பேருடன் அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் தாங்களும் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என அஞ்சினர். மானாமதுரை அருகே வந்தபோது டிரைவரை கட்டாயப்படுத்தி பஸ்சை நிறுத்தினர். பின்னர் 16 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.

    மானாமதுரை:

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த 23 பேர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே சாலையோர ஓட்டல் நடத்தி வந்தனர். ஊரடங்கு காரணமாக இவர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    அந்த மாநில அரசு தனியார் பஸ் மூலம் 23 பேரை தமிழகத்திற்கு அனுப்பியது. நேற்று அதிகாலை சிவகங்கை மாவட்ட எல்லைக்கு பஸ் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த 7 பேர் இறக்கி விடப்பட்டனர். அவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து 16 பேருடன் அந்த பஸ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டது. பஸ்சில் இருந்தவர்கள் தாங்களும் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவோம் என அஞ்சினர். மானாமதுரை அருகே வந்தபோது டிரைவரை கட்டாயப்படுத்தி பஸ்சை நிறுத்தினர். பின்னர் 16 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பினர்.

    பஸ் டிரைவர் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், இடைக் காட்டூர், ராஜகம்பீரம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி 10 பேரை பிடித்து தனிமை முகாமுக்கு அனுப்பினர். 6 பேரை தேடும் பணி நடந்து வந்தது.

    மானாமதுரை அருகே 6 பேர் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது 6 தொழிலாளர்களும் காரில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

    அவர்களை எச்சரித்த போலீசார் பார்த்திபனூர் அருகே உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×