என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறுகிறது
காரைக்குடி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய- மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம் நோய் தொற்று பரவலை தடுக்க முழு வீச்சில் களத்தில் இறங்கியது.
சிவகங்கை மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து திருப்பத்தூர், இளையான்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து படிப்படியாக வீடு திரும்பிவிட்டனர்.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 22 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் கூறுகையில், பச்சை மண்டலத்துக்கான அறிவிப்பு இதுவரை வரவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். சமூக இடைவெளியை கடைபிடித்தல் முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.






