என் மலர்
சிவகங்கை
- கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.
- தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ரஞ்சிதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (24) என்பதும், அவர் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதத்துக்கு பாண்டி வேல்முருகன் என்ற தம்பி உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி நதியா (31) மற்றும் அவர்களது குழந்தைகள் 3 பேர் நெடுமரத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பாண்டி வேல்முருகன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது அக்காள் ரஞ்சிதத்துக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடம் நதியா செலவுக்கு பணம் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். இது நதியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே நதியாவுக்கும், நெடுமரத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் நதியா கள்ளக்காதலன் மூலம் ரஞ்சிதத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சூர்யாவிடம் தனது திட்டத்தை தெரிவிக்க நதியா அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு சூர்யா தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்கு சென்று பின்புற சுவர் ஏறி குதித்து மறைந்து இருந்துள்ளார். இரவில் ரஞ்சிதம் பாத்ரூம் செல்வதற்காக வெளியே வந்தபோது சூர்யா அவரது முகத்தையும், வாயையும் பொத்தி கீழே தள்ளி உள்ளார். இதில் அவர் மயங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சூர்யா பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது ரஞ்சிதம் முனங்கும் சத்தம் கேட்டதால் கத்தியை எடுத்து ரஞ்சிதத்தின் கை, கால் நரம்புகளை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நதியாவிடம் சூர்யா கொடுத்துள்ளார்.
நகை-பணத்துக்காக கொள்ளையர்கள் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்துவிட்டு சென்றதுபோல் காட்டுவதற்காக நகை-பணத்தை சூர்யா எடுத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் போலீசாரின் பிடியில் சூர்யா சிக்கியதை தொடர்ந்து அவருக்கு மூளையாக செயல்பட்ட நதியாவையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கில் போலீசார் 5 நாட்களில் குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா இந்த கொலை திட்டத்தை வகுத்துள்ளார். இதில் அவரது கள்ளக்காதலனை ஏவி அவரையும் கொலையாளி ஆக்கிவிட்டார்.
தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதல்கட்டமாக 54 பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து கலெக்டர் தெரிவித்தார்.
- 7 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 839 மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக காரைக்குடி நகராட்சி மற்றும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதன்முதலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக நியமித்துள்ள குழு மற்றும் சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத்த லைவர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, உறுப்பினர்கள், பஞ்சாயத்து கூட்டமைப்பு, தலைமையாசி
ரியர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சிகளில் உள்ள 47 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 2 ஆயிரத்து 812 மாணவர்களும், காரைக்குடி நகராட்சியில் உள்ள 7 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 839 மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் வானதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, அங்கயற்கண்ணி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
சிவகங்கை
மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.
நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.
- பூலாங்குறிச்சியில் அரசு கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
- ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியில் சிவலிங்கம் சிலையை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கல்லூரியின் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்பாக பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
சென்னை வாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பில் பூலாங்குறிச்சி ஊராட்சி சார்பி்ல் ரூ.5.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கணினி மையம், ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொன் முத்துராமலிங்கம் (கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம்), அபிராமி ராமநாதன் (படம் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்), நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் வட்டாட்சியா; திரு.வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருமண விழாவில் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- அரிவாளால் வெட்டிய பிரவீனை கைது செய்யக்கோரி மானாமதுரை -பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்தில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கலந்து கொண்டார்.
அப்போது திருமண வீட்டிலிருந்த மணக்கரையை சேர்ந்த பிரவீன் என்பவர் முன்விரோதம் காரணமாக ஆறுமுகத்துடன் தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை உறவினர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமண விழாவுக்கு வந்த ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டிய பிரவீனை கைது செய்யக்கோரி மானாமதுரை -பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீனை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டம ங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர்-அழகு சவுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் 4 கால பூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. இந்த நிறைவு பெற்று பூர்ணகுதி நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் பங்கேற்றார். விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள், திருப்பணி குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
- 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் 2-ம் சுற்று நேற்று கடைபிடிக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு 16-ந் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) ''அல்பெண்டசோல்'' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 65 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கும், 20-30 வயது உள்ள 67 ஆயிரத்து 637 பெண்களுக்கும் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள் தோறும் சென்று இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இந்த முகாமில் 281 கிராம சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர்கள், 1,277 அங்கன்வாடி பணியாளர்கள், 1,510 பள்ளி மற்றும் கல்லூரி நோடல் ஆசிரியர்கள் மூலமாக அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த முகாமில் 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ- மாணவிகள் அவதி அடைந்துள்ளனர்.
- ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தேவகோட்டை சுற்றியுள்ள கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்தமங்கலம், திருப்பாக்கோட்டை, அதங்குடி, கண்ணங்குடி, சிறுவாச்சி, ஆறாவயல், உஞ்சனை, புதுவயல் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.
தேவகோட்டையில் 10- க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் வந்து செல்ல இந்த பஸ்களை நம்பியே உள்ளனர்.
பெரும்பாலான டவுன் பஸ்களில் டயர்கள் மோசமான நிலையிலும், தரம் குறைந்தும் உள்ளன.இந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ்களின் அவல நிலை குறித்த வீடியோவை அரசு பஸ் டிரைவர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தற்போது தினமும் 5-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு பஸ் வரவில்லை என்றால் அன்று மாணவ, மாணவிகள் விடுமுறை தான் எடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடுகளுக்கு செல்ல மாலை நேரத்தில் பஸ் இல்லாததால் சில நாட்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இது பற்றி அரசு போக்குவரத்து கழக பணியாளர் கூறுகையில், ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இலவச பயணத்தால் டவுன் பஸ்களில் வசூல் குறைவாக இருக்கிறது.
இதனால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு படி குறைவாக வருவதால் டவுன் பஸ்களை இயக்க ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. உடனடியாக ஆட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.அரசு டவுன் பஸ்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.
- கல்லல் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான பசு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
கீழப்பூங்குடி சிவாச்சாரியார் நேரு தலைமையில் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் 3-ம் கால பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகளுடன் கும்ப கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, ஊர் பொதுமக்கள் சார்பில் கும்ப மரியாதை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவில் கீழப் பூங்குடி, மேலப்பூங்குடி, புதுவட்டி, கொடுங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்னர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்
- சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது விநியோகத் திட்டத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது சனிக்கிழமையான நாளை (10-ந் தேதி) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கும் வகையில், தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மனுச் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மானாமதுரையில் வ.உ.சி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மானாமதுரை நகரில் பல இடங்களிலும் வ.உ.சி உருவப்படங்கள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆர்.சி தெரு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் வ.உ.சி. படத்துக்கு முன்பு பொங்கல் வைத்து படைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கால்பிரிவு கிராமத்தில் 23-வதுஆண்டாக வ.உ.சி. மன்றம் சார்பில் வ.உ.சிதம்பிரம்பிள்ளை பிறந்தநாள் விழா நடந்தது. விழாவை கிராமம் முழுவதும் வீதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வ.உ.சி. உருவப்படத்துக்கு பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்புவனம் நகரில் வ.உ.சி. பேரவை, வெள்ளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் ஒன்றியப் பகுதிகளிலும் மற்றும் ஏராளமான கிராமங்களில் வ.உ.சி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி வ.உ.சி. சிலைகள், படங்களுக்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
- வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்
- வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தலைமை ஆசிரியையைக் கொன்று, 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர்.
அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்ததில், வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ரஞ்சிதம் அணிந்திருந்த 20 பவுன் நகைகளும் காணவில்லை என்பதால் பணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதில், வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.






