என் மலர்
ராமநாதபுரம்
- 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து திடீரென இடிந்து விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரமக்குடி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பரமக்குடியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு பரமக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இப்பகுதிகளில் அதிகளவில் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் உள்ளன. தொடர் மழையால் மண்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தன. இந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் பலியானார். அதன் விபரம் வருமாறு:-
பரமக்குடி அருகே மேலாய்க்குடி யாதவர் குடியிருப்பில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 6 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
பால்ராஜ் தனது குடும்பத்தினருடன் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது மண்சுவர் விழுந்தது. உடனே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம்:
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு வேளையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பயணம் செய்வதற்கான பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (வயது 28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் என்ற ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68) என்பதும், சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முறையான பாஸ்போர்ட் இன்றி சட்ட விரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்த தங்கச்சிமடம் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் அவர்கள் படகில் தப்பிச்செல்ல உதவி செய்தவர்கள் யார், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றும் தங்கச்சிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
- பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின.
மண்டபம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த புயல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் அடுத்ததாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அறிவிப்பின்படி, இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசும். அதன் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டராகவும், அதிகபட்சம் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீனவர்கள் முன்கூட்டியே எடுத்துள்ளனர்.
மீன்பிடிக்க ஏற்பட்டுள்ள தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிப்பு, இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்பிடி தொழில் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
- கடந்த 3-ந்தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் தற்போது 8 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மண்டபம்:
ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
- மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
- சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.
- விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
- 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மரத்தில் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் அரசு அனுமதி அளித்த குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-1983 விதிகளை பின்பற்றாமல் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பொருத்தப்பட்ட 4 மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதை கண்டறிந்த ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
அதனை மீறி அந்த 4 விசைப்படகுகளில் 2 படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் அதிகாரிகள் கடலில் சோதனை நடத்தினர். அப்போது அந்த 2 படகுகளை கண்டுபிடித்து அதில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தொழில் முடக்கத்துடன் வழக்குப்பதிவு செய்து படகை பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தினர்.
ராமேசுவரம் மீன்வளத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ளதால் வழக்கு முடியும் வரை இந்த படகை அதன் உரிமையாளர் எடுக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் மீன்பிடி துறை
முகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின்கள் பயன்படுத்தும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி எச்சரித்து உள்ளார்.
- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
- கடுமையாக தாக்கி, படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் 2 படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடுமையாக தாக்கி, வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும், படகுகளை மோத வைத்து சேதம் ஏற்படுத்தியதாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் சுமார் 75 பேருக்கு மேல் சிறையிலும் 32 மீனவர்கள் நீதிமன்ற காவலிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
- தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிடுவதற்காக தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. சற்று தூரம் தள்ளி லாரி நின்றதும் அதிலிருந்த 3 பேரும் கீழே குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான முதலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), லோகநாதன் என்ற கபில் (27), மதுரசேகர் (31) ஆகிய 3 பேரும் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த மணல் கடத்தலுடன் தொடர்புடைய முதலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, அவரது மகன் மனோஜ், கார்த்திக், கந்தபாண்டி, விக்னேஷ், கபில், ராமர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
- கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
- ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு குறிப்பாக 7 மாவட்டங்களில் இன்று 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில் 95 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் சின்னத்தால் கடந்த 4 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
ராமேசுவரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின.
இதில் பாம்பன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
பாம்பன் தெற்குவாடி, லைட்ஹவுஸ் தெரு கடலோரத்தில் உள்ள மீனவர் குடிசை வீடுகள், அலைகளால் மோசமாக சேதமாகியது.
வங்கக் கடலில் உருவான புயலால் நேற்று மதியம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த 24-ந்தேதி முதல் ராமேசுவரம் தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் தடை விதித்தனர். அந்தத் தடை இன்றுவரை நீடித்து வருகிறது. இன்று புயல் கரையை கடக்கும் பட்சத்தில் நாளை மண்டபம் மற்றும் பாம்பன் தெற்கு பகுதியில் மீனவர்கள் கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
மீன் பிடிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரம், பாம்பன் மண்டபம் பகுதியில் சுமார் 1,600 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
பெஞ்சல் புயல் எதிரொலியாக கடந்த ஒரு வார காலமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
- தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது.
- அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
மண்டபம்:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. வட கிழக்கு பருவ மழையுடன் புயலும் சேர்ந்ததால் தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் மேக வெடிப்பு காரணமாக ஒரே நாளில் 44 செ.மீ. மழை பதிவானது.
ராமேசுவரத்தை புரட்டிப்போட்ட இந்த மழை பாதிப்பில் இருந்து மக்கள் சற்று மீண்டு வந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை எதிரொலியாக பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் மீன்பிடி இறங்குதளங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடுமையான பனி மூட்டத்துடன் பலத்த மழையும் பெய்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடியது.
அரிச்சல் முனை, தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம், கோதண்டராமர் கோவில், ராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது.
குந்துகால் முதல் குரு சடைதீவு வரையில் இயக்கப்படும் சுற்றுலா படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அக்னிதீர்த்தக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் உயர்ந்தது.
தனுஷ்கோடி, குந்துகால் கடல் பகுதி, பாம்பன் ஆகிய இடங்களில் அலைகளின் சீற்றம் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அதிலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பல மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்து தாக்கியது.
சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மீண்டும் கடலில் இழுக்கப்பட்டன. அத்துடன் கடற்கரையை ஒட்டிய மீனவர் குடியிருப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் புயலால் ராமேசுவரம் கடலில் இன்று மணிக்கு 55 முதல் 63 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதற்கேற்க இன்று காலை முதலே பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 60 கி.மீ. வேகத் தில் சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் கடற்கரை வெறிச்சோடியது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.






