என் மலர்
நீங்கள் தேடியது "Rameshwaram Fishermens Strike"
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
- மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.
கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 11-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 10-வது நாளாக ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. வேலைநிறுத்தத்தால் இதுவரை ரூ.15 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். 10 நாட்களாக நீடிப்பதால் வருமானமின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும். எனவே இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். வேலைநிறுத்தம் வாபஸ் பெறாவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்களின் விடுதலை கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தங்கச்சிமடம் ரெயில் தண்டவாளத்தில் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ராமேசுவரம்-தாம்பரம் ரெயில் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் அதன் பின் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனிடையே இலங்கை சிறையில் உள்ள பாம்பன் நாட்டு படகை மீனவர்கள் ஒன்பது பேருக்கு தலா ரூ.3.50 கோடி (இலங்கை பணம்-இந்திய மதிப்பில் ரூ.ஒரு கோடி) கூடிய அபராதத்துடன் விடுதலை செய்து புத்தகம் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் பாம்பன் பகுதி மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
- வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.
மண்டபம்:
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (23-ந்தேதி) மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற நான்கு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதை கண்டித்து, ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினா் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதைத்தொடர்ந்து இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை 23, 24-ந்தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க போவதில்லை. மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் கச்சத்தீவு திருவிழாவுக்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.
விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரனுக்கு நேற்று கச்சத்தீவு சர்ச் விழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்கள் பிரச்சனையால் இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா புறக்கணிக்கப்பட்டது தமிழக பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
மண்டபம்:
ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களது படகுகளை சிறைபிடிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 4-ம் தேதி மிக்கேல் ராஜ், நிஜோ ஆகியோருக்கு சொந்தமான 2 விசை படகுகளில் 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் ரிபாக்சன், ராஜபிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 பேரை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் 14 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 19-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ரபீக் உத்தரவிட்டார். இதையடுத்து 14 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். சகாயம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 14 மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்ததை கண்டித்தும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இன்று (7-ந் தேதி) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.






