என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கபட்டுள்ளது
- 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
2023-2024ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில், 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்து, அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லை. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர்
- இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
- திருவேங்கைவாசல் ஊராட்சியில் சொந்த நிதியில் 6 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் வழங்கினார்
- மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த வளையன்வயல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேருக்கு சைக்கிள்களை தனது சொந்த நிதியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களுக்கு சென்றார். அப்போது, வளையன்வயல் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் வடமலாப்பூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்கிறோம்.
பத்தாம் வகுப்பு என்பதால் நடந்து சென்று படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, சைக்கிள் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர், பள்ளி சென்று படிக்க ஏதுவாக பத்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களூக்கு தனது சொந்த நிதியிலிருந்து சி.வி.பி. பவுண்டேசன் மூலமாக 6 சைக்கிள்களை வழங்கினார். மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- தனியாருக்கு நிகராக அரசு பள்ளி திகழ்கிறது என அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம் கொண்டார்
- சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டது
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமை சட்டதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால்நடை உணவு வகைகளை பார்வையிட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களோடு தீவணப் பயிர்களை கால்நடை வளர்ப்போரிடம் வழங்கினார்.இதனை தொடர்ந்து அமைச்சர் தெரிவித்ததாவது, இன்று தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் விலை கொடுத்து வாங்கக்கூடிய புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை இன்று அரசு அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறது.
எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு, தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் அரசு, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொது மேலாளர் தங்கமணி, மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் பேராசிரியர் மற்றும் தலைவர் புவராஜன், உதவி இயக்குநர் பாபு, ஊராட்சிமன்றத் தலைவர்கள் சோலையம்மாள் சிவக்குமார், முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவரஞ்சனி வினோத்குமார் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கம்பன் கழக போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி சாதனை படைத்துள்ளது
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கம்பன் பெருவிழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தொடர்ந்து 10-வது ஆண்டாக கம்பன் பெருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு அதிக பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.எல்கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் நடத்தப் பட்ட கம்பராமாயணப் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியிலும், கம்பராமாயணப் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியிலும் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அதிக அளவிலான பரிசுகளை வென்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கம்பன் பெருவிழா நிறைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும். கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, திட்டமாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரிரியர்கள் வாழ்த்தினர்.
- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்
- புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விராலிமலை,
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பெறுப்பேற்ற பின்னர் பல்வேறு கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வில் உறுப்பினர்களின் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேகமான பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் சேர்த்தல் பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேர்க்கை படிவங்களை பெற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழக முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பி.கே.வைரமுத்துவும் இணைந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவூரில் உள்ள பெரியநாயகி மக்கள் மாதா மன்றத்தில் இந்த புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்த்தல் படிவங்களை பெற்றுக் கொண்டனர்.
இதைப் பெற்றுக் கொண்ட விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், தன்னலம் பாராது கட்சியின் வளர்ச்சிக்கு இரவு, பகலாக உழைத்த உங்களுக்கு நன்றி என்றும், இதே போல் விறுவிறுப்புடன் செயல்பட்டு வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு இதே போல் இரவு. பகல் பாராமல் உழைத்திட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் முத்தமிழ் செல்வன், சுப்பையா, சாம்பசிவம், பழனியாண்டி, நாகராஜ், திருமூர்த்தி, ஏ.வி.ராஜேந்திரன், பேரூராட்சி செயலாளர் மணிகண்டன் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டையில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மூலம் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகில் தொடங்கிய பேரணியை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது. பேரணியில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், உடல் பாதிப்புகள், குடும்ப சீரழிவுகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர்.
- ஆலங்குடி கே.ராசியமங்கலத்தில் கிணற்றில் விழுந்த கன்றுகுட்டி தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது
- சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில் கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்த பெரியநாயகி என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலின் போது அப்பகுதியில் உள்ள, ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக சுமார் 60 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றில், பெரியநாயகிக்கு சொந்தமான கன்றுக்குட்டி தவறி விழுந்து விட்டது. பொதுமக்கள் மீட்க முயற்சி செய்து பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆலங்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது
- மேலும் விபரங்களுக்கு 04322 222187 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீரதீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்லபல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஐவர்ஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா ரோடு, பெரியமேடு, சென்னை-600 003 எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் 28.06.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04322 222187 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வீரதீர செயல் புரிந்த பெண்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அறந்தாங்கி அருகே 800 ஆண்டு பழமையான சிதிலமடைந்த சிவன் கோவிலில் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
- பிரதிஷ்டை செய்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோனேரியேந்தல் கிராமத்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று இருந்து வந்துள்ளது. அது காலப்போக்கில் இயற்கை சீற்றத்தினாலும், அன்னியர்கள் படையெடுப்பினாலும் சிதையுண்டு, சாமி சிலைகள் ஆங்காங்கே சிதறி மண்ணுக்குள் புதைந்துள்ளது. இதனால் கோவில் பல ஆண்டுகளாக வழிபாடற்று கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் கருவேல மரங்களை சுத்தம் செய்வதற்காக காட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே சிவாலயம் இருந்ததற்கு அடையாளமாக சிவலிங்கம் உள்ளிட்ட கற்சிலைகள் ஆங்காங்கே மண்ணில் புதைந்து கானப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்த கோவை அரண் பணி அறக்கட்டளையைச் சேர்ந்த சிவனடியார்கள், கோனேரியேந்தல் கிராமத்திற்கு வந்தனர். பின்னர் அங்கே சிதையுண்டும், மண்ணில் புதைந்தும் கானப்பட்ட சிவலிங்கம், ஆவுடை, நந்தீஸ்வரர் உள்ளிட்ட சிலைகளை மீட்டனர்.
மேலும் மிகவும் அரிதான 8 கைகளை உடைய போர் தெய்வமான நிசும்பசூதினி எனும் காளிதேவி சிலையையும் கண்டெடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளை பச்சரிமாவு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்து மூன்றரை அடி உயர லிங்கத்தை ஆவுடையில் பொருத்தி அமர்த்தினர். அதே போன்று மற்ற சிலைகளையும் பீடத்தில் அமர்த்தினர். பின்பு தேவார பதிகங்களை தமிழ் முறைப்படி பாராயணம் செய்து, லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கிராம மக்கள் தெரிவிக்கையில் மிகவும் பழமையான சிவலிங்கத்தை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரண் பணி அறக்கட்டளையினர் முழுக்க முழுக்க உதவி செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கான தற்காலிக பந்தல் அமைத்து தரவும் உள்ளனர். எனவே தமிழக அரசு தலையிட்டு, இயற்கை சீற்றத்தாலும், அன்னியர்கள் படையெடுப்பினாலும் சிதைந்து போன கோவிலுக்கு கருவறை மற்றும் அர்த்தமண்டபம் கண்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
- ஆலங்குடியில் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் கவிஞர்கள் நேசன்மகதி மற்றும் ரமா ராமநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆலங்குடி,
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இலக்கிய பேரவை தலைவர் அ.க. முத்து தலைமை வகித்தார். செயலாளர் பாபு ஜான், பொருளாளர் கருணாகரன், கௌரவ ஆலோசகர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவிஞர்கள் நேசன்மகதி மற்றும் ரமா ராமநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் (ஓய்வு) ராஜசேகரன், தலைமை ஆசிரியர் வின்சென்ட், முருகேசன், முத்துராமன் கருப்பையா, மரம்சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மரம் வளர்ப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
- மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள சிட்டங்காட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குறுங்காடு திட்டத்தை, மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் குறுங்காடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எந்த மரக்கன்றுகளும் பழுதாகாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைத்தும் மரமாக வேண்டும், நன்கு வளர்ந்து மரமாகி பயன்தர மேலும் என்னென்ன, செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கேட்டறிந்ததோடு, தேவையான அறிவுரையும் அவர் வழங்கினார். திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, அத்திட்டத்திற்கான பணிகள் செவ்வனே நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்து வரும், அமைச்சர் மெய்யநாதனின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.






