என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • சொத்து தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சண்முக நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 45), தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த தமிழ்செல்வன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் தமிழ்செல்வன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.



    • தந்தை வாங்கிய ரூ.50 ஆயிரத்திற்கு சிறுமி கடத்தப்பட்டார்
    • நிதிநிறுவன ஊழியர் கைது செய்யபட்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இயங்கி வரும் பிரபல நிதி நிறுவனத்தில் மருதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வனத்து ராஜா (வயது 32) என்பவர் மாதாந்திர தவணையில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தவணைத்தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் பெரிய சூரியூரை சேர்ந்த தங்கம் மகன் விக்னேஷ் (27) என்பவர் பணம் வசூலிப்பதற்காக மருதூரில் உள்ள வனத்து ராஜா வீட்டுக்கு சென்று உள்ளார்.

    அப்போது வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் ஜனனி (11) கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு விக்னேஷ் தனது நிதி நிறுவனத்துக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்த வனத்து ராஜா, தனது மகளை காணாமல் தேடிய போது நிதிநிறுவன ஊழியர் அவரை அழைத்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கீரனூர் போலீசாரிடம் தனது மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

    இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் தலைமையிலான போலீசார் சிறுமியை கடத்தி வைத்திருந்த நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கிருந்து சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். இதையடுத்து, சிறுமியை கடத்தி சென்ற விக்னேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடன் தொகையை செலுத்தாததால் தொழிலாளியின் மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகினர்
    • தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டறியும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தில் இருந்து தடயவியல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதேபோல் 180-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் 13 பேரிடம் டி.என்.ஏ. பாிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர். அவர்கள் பரிசோதனைக்கு விருப்பமில்லை என தெரிவித்ததோடு, அவர்கள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதில் 8 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

    மேலும் வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அதன்படி வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பான சம்மன் 8 பேருக்கும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டது.

    • கடையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் செல்போன்களை திருடி சென்றனர்.
    • இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரப்பகுதிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 செல்போன் கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலை தங்களது கடையை திறக்க சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைக்க மர்ம ஆசாமி முயற்சி செய்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பிருந்தாவனம் பகுதியில் நிஜாம் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு போயிருந்தது.

    அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட போது மா்ம ஆசாமி ஒருவர் கடையின் உள்ளே புகுந்து செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் தான் மற்ற 3 கடைகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல்-தொழில் நுட்பக்கல்லூரியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடபட்டது
    • இதில் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை,

    மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நு ட்பக்கல்லூரி யில் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது. மவுன்ட்சியோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் ஜெய பரதன் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ஜெயசீலன் மேற்பார்வையின் கீழ் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் சுய முன்னே ற்றத்திற்கான அர்ப்ப ணிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களை ஒன்றி ணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த சர்வதேச யோகாதினம் அமைந்தது. வாழ்க்கையை நேர்மறை யாக மாற்றுவதற்கும் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கும் யோகாவின் ஆற்றலை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்தது. உடற்கல்வி இயக்குனர், செல்வகண்ணன் நன்றி தெரிவித்தார்.

    • ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார்
    • ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதியை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி வித்யா (வயது 27). இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கோபு வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் போது வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த பொருட்களை வித்யா எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வித்யா மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதே ஆன பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கீரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை:

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று கீரமங்கலம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


    • கோவிணிகிடங்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா கோவிணிகிடங்கு கிராமத்தில் உள்ள மகாலிங்கமூர்த்தி, ஜெகதாம்பாள், விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து லோகநாத அய்யங்கார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடபட்டுள்ளது
    • இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இப் பெருவிழாவின் தொடக்க நாளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எழுச்சி உரையாற்றுகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.சென்னை பாரதி பாஸ்கர் பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

    தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா சம்பத்குமார், துணைத் தலைவர் எம் ஆர் எம் முருகப்பன், துணைப் பொருளாளர் கறு. ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர்கள் முனைவர் முருகையன், காடுவெட்டி குமார் மற்றும் விழாக் குழு உறுப்பின ர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன், முனைவர் மாரியப்பன், கவிஞர் நிலவை பழனியப்பன் , அனுராதா சீனிவாசன், காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள கற்பக விநாயகா கலையரங்கத்தில் மாநில சட்டஅமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மவுண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஒவ்வொரு விளையாட்டுகளிலும் 2-ம் பரிசைப் பெற்றனர். இறகுபந்து விளையாட்டில் மாவட்ட அளவில் முதல் மற்றும் 3-ம் பரிசுகளை தட்டிச்சென்றனர். இந்த ஆண்டு மவுண்ட்சீயோன் கல்லூரி மாணவர்கள் 7 விளையாட்டு பிரிவுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மவுண்ட்சீயோன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினர். மாணவர்களின் விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் விளையாட்டில் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பாராட்டினர். மேலும் மாணவர்களின் முழுத்திறனையும் அடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் அயராது முயற்சி செய்து வரும் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் செல்வகண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
    • விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்று தங்களது வங்கி கணக்கில் அதற்கான தொகையை பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை அரசு கிட்டங்கிகளுக்கு அனுப்பாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் மழையிலும் வெயிலிலும் தற்போது அடிக்கும் சூறைக்காற்றிலும் நெல்மணிகள் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். பல்வேறு காரணங்களைச் சொல்லி கொள்முதல் செய்வதை தாமதப்படுத்தாமல் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கணபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து கடந்த 3 நாட்களாக நான்கு கால யாக பூஜைகள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்

    ×